Tuesday, April 19, 2005

பெயரில் நளினம் - நீரோ

ஒரு கணனி மென்பொருளுக்குப் பெயர் வைக்கும் போது எவ்வளவு நயமாகச் சிந்தித்திருக்கிறார்கள் என்று வியந்ததில் விளைந்தது இது.

நீரோ என்று ஒரு மென்பொருள். சிறுவட்டுக்கள் பதியும் ஒரு மென்பொருள். இந்த வட்டுப் பதியும் முறையை ஆங்கிலத்தில் எரித்தல் எனும் பொருள் பட அழைப்பார்கள். எரிப்பதோடு சம்பந்தப் பட்ட பிரபலம் யார்? நீரோ, ஞாபகமா? உரோமாபுரி எரியும் போது பிடில் வாசித்த மன்னன். ஆகா, இதை விட நல்ல பெயர் ஒரு எரிக்கும் (பதியும்) மென்பொருளுக்குக் கிடைக்குமா? வாழ்க நீரோ!!!!

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விசயம், நீரோ உரோமாபுரியை எரித்தவன் அல்ல. எரிந்து கொண்டிருக்கும் நகரைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்த ஒருவன். இசைப் பித்தனா அல்லது முழுப் பித்தனா அல்லது வேறு ஏதுமா தெரியாது.

ஆனால் தொடர்பு படுத்திப் பெயரைக் கொடுத்து விட்டார்கள்.
“Nero Burning Rom” என்பது தான் பெயர்.
Rome இற்குப் பதில் ROM. - ROM stands for Read Only Memory
மிக அழகாகச் சிந்தித்துக் கொடுக்கப்பட்ட பெயர்.

எங்கள் வாழ்வில் அறியப்பட்ட எரிவு நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் நினைவுக்கு வருபவை:

புராண இலங்கையை எரித்த அனுமான்
மதுரையை எரித்த கண்ணகி
மன்மதனை எரித்த சிவன்

ஈழத்தில் எங்கள் கண் முன்னே எரிந்தவை:

அரக்கர்கள் எரித்த யாழ் நூலகம் (தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் 80 களில்)
அரக்கர்கள் எரித்த சன்னதிமுருகன் தேர் (3 முறை எரிந்தது)
அரக்கர்கள் 83ல் எரித்த உயிர்கள் (உயிருடன் எரிக்கப் பட்டதால்)
அரக்கர்கள் என்றென்றும் எரிக்கும் தமிழர் கடைகள், வீடுகள்

எரித்தது யாரென்பது உள்ளங்கை நெல்லிக் கனி. ஆதலால் அவர்கள் பெயரைப் போடவில்லை.

எதையெழுதத் தொடங்கினாலும் எம் துயர் சம்பந்தமில்லாமல் சிந்தனையை ஓட்டுவது மிகக் கடினமே.