Thursday, May 05, 2005

தூலிப்பூ விழா - Tulip festival

தூலிப்பூத் திருவிழா
===============

கனடாவின் தலை நகரம் ஓட்டவாவில் வருடம் தோறும் மே மாதத்தில் கொண்டாடப் படுகிறது தூலிப்பூ விழா. மிக அழகான சிறப்பான ஒரு திருவிழா. இந்தத் திருவிழாவிற்கும் இரண்டாம் உலகப் போருக்கும் தொடர்பிருக்கிறது.

அதாவது, இரண்டாம் உலகப் போரில் ஒல்லாந்து நாட்டை நாசிப் படைகள் கைப்பற்றிய போது ஒல்லாந்தின் அரசி கனடாவில் தஞ்சம் புகுந்திருந்தார். அந் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறக்க இருந்தது. மகப் பேற்றுக்காக அனுமதிக்கப் பட்டிருந்த வைத்தியசாலை அறையை தற்காலிகமாக ஒல்லாந்து நாட்டுப் பிரதேசமாக அப்போதைய கனடாப் பாராளுமன்றம் பிரகடனப் படுத்தியது. ஏனெனில் பிறக்கப் போகும் குழந்தை ஒல்லாந்து மண்ணில் பிறக்கட்டும் என்று.

1945 மே 6ம் திகதி கனடியப் படைகள் ஒல்லாந்தை நாசிகளிடமிருந்து மீட்ட நாள். நாடு மீட்கப் பட்டு, அரசியும் நாடு மீண்டார். கனடா செய்த இப் பெரிய உதவிக்கு நன்றி செலுத்த நினைத்த ஒல்லாந்து அரசி, பெருமளவு தூலிப் பூக்களை கனடாவுக்கு வருடந் தோறும் அனுப்ப முடிவு செய்தார். அப்படி அனுப்பப் படும் தூலிப் பூச் செடிகளும் பூக்களும் மே மாத முதலிரு வாரங்களுக்கும் ஒரு பூங்காவில் அழகுற நடப் பட்டிருக்கும். இந்த இரு வாரங்களும் வேறு வேடிக்கை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப் பட்டுத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. அது சரி, இது என்ன தூலிப்பூ?

தூலிப்பூ என்பது ஆங்கிலத்தில் Tulip என்று சொல்லப் படுகிறது. இதையே நான் தமிழ்ப் படுத்தியுள்ளேன். சரியான தமிழ் தெரியவில்லை. தமிழில் இந்தப் பூவிற்குப் பெயர் இருக்குமா என்பதும் தெரியவில்லை. உண்மையில் இந்தப் பெயரின் மூலம் துருக்கி மொழி என அறிகிறேன். இந்தப் பூவும் துருக்கியில் இருந்தே கி.பி. 1000 ஆண்டளவில் உலகுக்கு அறிமுகமாக்கப் பட்டதாம். துருக்கிய மொழியில் தூலிப் என்றால் தலைப் பாகை என்று பொருள்.

இந்தப் பூ வசந்த காலத்தில் துளிர்க்கும். ஒரு மாதம் நின்று பிடித்து விட்டு பின்னர் பட்டு விடும். ஆனால் சாகாது. பனிக் குளிர் காலத்தையும் தாங்கி மறு படியும் வசந்த காலத்தில் துளிர்க்கும். பலப் பல அழகிய நிறங்களில் மிக அழகாகப் பூக்கும்.

தூலிப் ஒரு வகைக் கிழங்கிலிருந்தே முளைக்கும். இந்தக் கிழங்கை யுத்த காலத்தில் பஞ்ச நேரத்தில் சனங்கள் சாப்பிட்டும் இருக்கிறார்கள்.

Wednesday, May 04, 2005

சில பழமொழிகள்

பழமொழி சொல்லிப் பிள்ளை வளர்க்காத பெற்றோர் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரையும் போலவே, எனது பெற்றோரும் அவ்வப்போது சொன்னவை இப்பொழுது உறைக்கின்றன. அவற்றில் சில உங்களுடன் பகிர்ந்து கொள்ள.

  • நம்ப நட, நம்பி நடவாதே

  • எல்லோர் நம்பிக்கையையும் நீ பெறும் படியாக நடந்து கொள். ஆனால் எல்லோரையும் நம்பி நடந்து அதனால் ஏமாந்து துன்பத்தைத் தேடிக் கொள்ளாதே

  • கட்டிலில் ஏற முன்னர் காலை ஆட்டாதே

  • இதையொத்த பல பழமொழிகள் உண்டு. அதாவது, கிடைக்க முன் அனுபவிக்க நினைக்காதே. கட்டிலில் ஏற முன் காலை ஆட்டினால் விழுந்து விடுவாயேயல்லாது, சொகுசாக இழைப்பாற முடியாது.

  • ஓடும் புளியம் பழமும் போல் இரு

  • எந்தவொரு விடயத்திலும் ஒட்டி ஊறி விடாதே. புளியம் பழமும் அதன் ஓடும் போல் ஒன்றாக இரு. ஆனால் ஒட்டி இராதே. அதிகம் ஒட்டினால் இழப்புக்களைத் தாங்குவது மகா கடினம்.

  • தோழனோடும் ஏழமை பேசேல்

  • எப்படிப்பட்ட தோழனாயினும், உனது ஏழ்மையையோ பலவீனங்களையோ பகிர்ந்து கொள்வது நல்லதல்ல.

2005-05-04