Monday, August 22, 2005

தமிழை வளைக்காமல் வளர்ப்போம்

அரிச்சுவடி சொல்லித் தந்த வாத்தியார் அ முதல் ஃ வரையும் க முதல் ன வரையும் சொல்லித்தந்தார். உயிரெழுத்து, மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்து என இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்களையும் எழுத வாசிக்கக் கற்றுத் தந்தார். அதற்கு மேல் சில எழுத்துக்கள் சிலரது பெயர்களில் இருந்ததை விளக்க அவர் சொன்னது அப்போது புரியவில்லை. அதாவது வடமொழி எழுத்துக்கள் என்றார் கிரந்தம் என்றார், ஒன்றும் புரியவில்லை ஆனால் தமிழல்லாத எழுத்துக்கள் தமிழில் பாவனையில் இருக்கின்றன என்பது புரிந்தது.

சிறு வயதிலிருந்தே இது என்னை உறுத்தியது. தமிழுக்குள் ஏன் தமிழல்லாத எழுத்துக்கள் புகுந்துள்ளன? புகுந்தது தவிர்க்க முடியாதது தான்; கூடுதல் விளக்கத்திற்கு தேவையானது தான் என்றால் அந்த எழுத்துக்களை ஏன் தமிழோடு இணைக்கவில்லை? அரிச்சுவடிக்குள் புகுத்த முடியாவிட்டால் அதற்கு என்ன தனிச் சுவடி வேண்டிக் கிடக்கு.

சுருங்கி வரும் அகண்ட உலகைத் தமிழுக்குள் அடக்கக் கிரந்தம் தேவை தானா? தமிழ் வளைந்து கொடுக்க வேண்டுமா? அல்லது வளர்ந்து கொழுக்க வேண்டுமா?

தமிழை வளைத்து தரமிழக்க வைக்காமல், அதை வளர்த்து தமிழனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.

தற்கால ஆங்கில மொழியில் புதுப் புதுச் சொற்களை ஆண்டு தோறும் அறிமுகப் படுத்தி அகராதியில் உத்தியோக பூர்வமாக இணைத்து விடுகிறார்கள். இப் புதிய சொற்கள் ஆங்கிலத்தில் புதிதாகத் தோன்றியவையும் பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு வந்தவையும் ஆகும். பிற மொழியில் இருந்து வரும் சொற்களை ஆங்கிலமாகத் தான் சேர்த்துக் கொள்கிறார்கள். சிறந்த உதாரணம், தமிழ். தமிழ் என்ற சொல்லில் உள்ள "ழ்" என்ற எழுத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? முடியாது. அதற்காக அவர்கள் "ழ்" ஐ ஆங்கிலத்தில் உள் வாங்கிக் கொள்ளவில்லை. "ல்" ஐப் பயன் படுத்திவிட்டார்கள். ஆங்கிலத்தை வளைக்காமல் ஒரு புதுச் சொல்லை உருவாக்கி விட்டார்கள். இது தான் தமிழுக்குத் தேவை. கோடிக் கணக்கில் சொற்கள் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரட்டும். அதை தமிழாக்கித் தமிழை வளர்ப்போம்.


தமிழை வளையோம்
தரத்துடன் வளர்ப்போம்
தமிழ் நாடரசே செயலில் காட்டு
தயங் காதுநீ தலைமை யேற்று