Monday, May 29, 2006

உரிமைக் குரலாறு

மே இருபத்தொன்பது
இரண்டாயிரத்தாறு
உலகெலாம் பாயுது
உரிமைக்குரலாறு

துடித்துப் போன உடன் பிறப்புகள்
தூங்கவில்லை நாமென்று
தூக்கிப் பிடிக்குது
துயர்ச் செய்தி மட்டைகளை
புலம் பெயர்ந்த தமிழர்க்குப்
புகலிடம் தந்து காத்த
புகுந்த நாடுகளில்
சுதந்திர வீடுகளில்.

பெண்டுகளும் பிஞ்சுகளும்
பழசாப்போன பஞ்சுகளும்
பேதமின்றிக் கோரமாகக்
கொல்லப் படவும்
கொடுமைப் படவும்

பார்த்தும் பாராதிருக்கும்
பலநாட்டு மக்களே!
மன்னரே!
என்ன இந்த மெளனம்?
கொலையைப் பார்த்தும்
குரவை இல்லையா?
கொன்றது யாரென்று
கண்டு கொண்டால் தான்
திறக்கும் உன் குரல்வளையா?

நல்ல நியாயம் இது
நலிந்தவர்க்கு உதவாதது
மனிதமும் சாக முன்
மனதைத் திறந்து விடு

தந்தை மண்ணே தமிழகமே
நீயுமா காக்கிறாய் மெளன மொழி?
இன்று எழாவிடில் என்று எழுவாய்?
இழவு விழுந்தபின் தான்
வந்துநிற் பாயோ?

சொந்தச் சகோதரர் நாம்
துன்பத்தில் சாகிறோம் - இதைச்
சொல்லிக் காட்டப்
பாரதியா வேண்டும்?

சாத்வீக ஆதரவுக்கே
சனநாயகத்தில் பயமா
உணர்ச்சிகளைக் காட்டக் கூட
உரிமையில்லையா அண்ணா
உங்கள் உணர்வுகளை
உறங்க விடாதீர் - எங்களை
உயிரோடே உறையவிடாதீர்

நாமொருநாள் வெல்வோம்
உரிமைகளைக் கொள்வோம்
அன்று ஊதுவோம் சங்கு
வென்று விட்டோம் என்று

-ஜெயபால்

எங்கே உரிமைக் குரல்?

உலகெங்கும் வாழும் தமிழர் இன்று இலங்கையில் நடைபெறும் அட்டூளியங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று உரிமைக் குரல் எழுப்புகிறார்கள். அந்தக் குரலை பல நாட்டுப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் கூடச் செவி மடுத்து ஆவன செய்வதாகக் கூறி ஒரு ஆறுதலை எங்களுக்குத் தருகிறார்கள்.
ஆனால் எங்கள் தந்தை மண்ணாம் தமிழ் நாடு ஏன் மெளனம் சாதிக்கிறது?
இரத்தம் துடிக்கவில்லையா ஈனப் படுகொலைகளைப் பார்த்த பின்னும்?
பெண்டுகளும், பிஞ்சுகளும், வயோதிபரும் கொல்லப் படுவது தெரியவில்லையா?
எங்கள் தமிழ்ச் சகோதரர்களே, மக்கள் சாவு அவ்வளவு இயல்பானதாகி விட்டதா?
தமிழகமே, இன்று எழாவிடில் என்று எழுவீர்கள்?
சாத்வீக முறையில் உங்கள் உணர்ச்சிகளைக் காட்டக் கூட உங்களுக்கு உரிமையில்லையா?
உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் தடையா?

எனக்குத் தெரியும் தமிழக மக்களின் உணர்ச்சிகள் கொதிப்பது.
ஆனால் என்ன பயம்? உங்கள் உணர்வை உறைய விடாதீர்கள்.
எங்களை உயிருடனே உறைய வைப்பதைப் பார்த்து வாளாவிராதீர்கள்.

Wednesday, May 17, 2006

2006 - விசாகம் (வெசாக்) படு கொலைப் பரிசு

புத்தர் பெருமான் சகலதும் பெற்ற நாளைக் கொண்டாடு முகமாகச் சிங்களப் பெளத்தர்களிடமிருந்து ஈழத் தமிழருக்குக் கிடைத்த வைகாசி விசாகத் திருநாட் பரிசு.

இந்தச் சுட்டியில் இருப்பது அகிலக் கவியின் கவிதை!

என் அழுகை கீழே!!
==================

ஈரற் குலை நடுங்குதையா
ஈனக் கொலை நடக்குதையா
ஈழநல் நாட்டி லெம்
இரத்தம் ஆறாய் ஓடுதையா

இன்றில்லையேல் இன்னொருநாள் - நீ
நின்று பதில் சொல்லிடுவாய்
பண்பு கெட்ட படு கொலைகாரா
பலிக் காதுன் கொலைத் தந்திரம்

அல்லைப் பிட்டியில் ஆறு பேர்
அம் பாறையில் ஐந்து பேர்
அதிலடங்கும் பிஞ்சுகள் பெயர்
அழுதுமுடியுமோ எம் துயர்

கொன்று குவிக்கும் சிங்கள நாடே
இன்றிதைப் பார்த்தும் பாரா விடுத்து
மென்று விழுங்கும் உலகத்தோரே
கன்றைக் கூடக் கொல்லும் கூட்டம்
என்றைக் குத்தான் திருந்தும் ஐயா


-ஜெயபால்

Tuesday, May 09, 2006

சிவாஜியும் ரஜினியும்

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் ரஜினிகாந்த் ஐயும் இணைத்து எழுதப் படும் ஒரு விடயம் அல்ல. சும்மா ஒரு சிந்தனையின் வரி வடிவம்.

சந்திரமுகி படத்தைப் பார்த்த போது அதில் ரஜினியின் பகுதியில் வேட்டையன் பாத்திரம் மற்றப் பாத்திரத்தை விட அள்ளிக் கொண்டு போவது தெளிவு. அதை பார்க்கும் போது யாருக்குமே தோன்றக் கூடிய ஒரு யோசனை, இது போல் ஒரு முழு நீள அரச கதையில் ரஜினி நடித்தால் மிக நல்லாக இருக்குமே என்பது தான். எனக்குத் தோன்றியது, உடனடியாகவே, இயக்குனர் சங்கர் இவரை வைத்து ஒரு அரச கதையை மிகப் பிரமாண்டமாக எடுத்தால் மிக நல்லாக இருக்கும் என்பது தான்.

நான் எதிர் பார்த்தது போலவே சிவாஜி படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. எதிர் பார்த்த அரச கதையாக இருக்குமோ இல்லையோ தெரியவில்லை. வேட்டையன் போல் ஒரு அரச கதையாக இருந்தால், வீர பாண்டிய கட்டப் பொம்மன் போல் ஒரு படத்தை ரஜினியும் தர முடியும். ரஜினியும் சிவாஜியும் தலைப்புச் சரியோ?

Monday, May 08, 2006

தங்கத்தின் தமிழ்ப் பெயர்

தங்கத்தின் தமிழ்ப் பெயர்:


சும்மா தொலைக்காட்சியை முறுக்கிக் கொண்டிருந்த போது, தமிழ்ச் சேவைகளின் பக்கம் சென்ற போது, ஒரு நிகழ்ச்சி தொடங்குகிறது. படையப்பியின் தங்க வேட்டை. நிகழ்ச்சி ஆரம்பத்தில், தங்கம் பற்றிச் சுவையாக(?) சில தகவல்களை அள்ளி வழங்கினார் படையப்பி. தங்கத்திற்கு வெவ்வேறு மொழிகளில் என்ன பெயர் என்றும் அப் பெயர்கள் எப்படி வந்தன என்றும் கொஞ்சம் சொன்னார். அப்படியே தமிழிற்கும் வந்தார்.
அங்கே தான் வந்தது வில்லங்கம்.
தங்கத்தை நம்ம நாட்டில் எப்படி அழைக்கிறோம்? "கோல்ட்" - ஆம், ஆங்கிலச் சொல்லையே சொன்னார்.
ஆ அம்மா!!!!, நெஞ்சு வலித்தது.
அப்படியே "கோல்ட்" என்று பெயர் வரக் காரணம், காரியம், ....., அத்தனை விளக்கங்களும் அந்த ஆங்கிலச் சொல்லுக்குத் தான், தமிங்கிலத்தில் தறித்து விழுத்திக் கொண்டு இருந்தார்.
அப்பா! படையப்பா, ஆறுபடையப்பா!!! முருகனைக் கூப்பிட்டேன்.
நீ தான் மீண்டும் வர வேண்டும் தமிழைக் காக்க என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தொலக்காட்சியை அணைத்து விட்டேன். இப்பொழுது தெரிகிறதா தங்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்று?

வாழ்க தமிழ் வளர்க்கும் தமிழகத் தமிழ்த் தொலைக் காட்சிகள்.

Wednesday, May 03, 2006

ஈழத் தமிழர் இந்தியாவை விரோதியாகக் கருதுகிறார்களா?

ஒரு வலைப்பூத் தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார்கள். அதாவது, ஈழத் தமிழர் ஏன் இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறார்கள் என்று. அது தவறு, ஈழத் தமிழர் எப்போதும் இந்தியாவின் நண்பராகவும் கூட்டு நாடாகவும் இருக்கவே என்றும் விரும்புகிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தி மறுமொழி எழுதியிருந்தேன். அது சரியாகச் சென்றடையவில்லை. அதனால் அதை இங்கே இடுகிறேன்.

ஒரு ஈழத்தவன் என்ற ரீதியில் என் கருத்துக்கள், யார் விரோதி?

1. இந்தியா-பாக். யுத்தத்தின் போது பாக். விமானங்களுக்கு இறங்கு தள வசதி செய்தது அன்றைய சிங்கள அரசு.
2. அண்ணாத்துரை இறந்தபோது அவரின் இறுதிக்கிரியைகளின் ஒலிபரப்பை நேரடி அஞ்சல் செய்தது இலங்கைத் தமிழ் வானொலி.
3. இந்திரா அன்னையார் இறந்த போது, எங்கள் தாயே இறந்து விட்டது போல் துக்கம் அனுஷ்டித்தது ஈழத் தமிழர் மட்டுமே. சிங்களவர் பட்டாசு கொளுத்திக் கொண்டாடியது வேறு.
4.அமைதி படை 87ல் வந்த போது அன்போடு வரவேற்றது ஈழத்தமிழர். அதே நேரத்தில் கொழும்பில் சிங்களச் சிப்பாயால் ராஜீவ் தாக்கப் பட்டது, நட்பினால்!
5. அ.ப. அட்டூளியங்கள் தொடங்கிய போது, சண்டை தொடங்க முதல் இரண்டு பேர் உண்ணாவிரதம் இருந்து இறந்தது பாச மிகு இந்தியாவைப் பகைக்க விரும்பாமல் தான். சண்டை திணிக்கப் பட்ட போது வேறு வழி???
5. சிங்களவரின் இந்திய எதிர்ப்புப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். அது இங்கே தேவையற்றறது