Thursday, June 22, 2006

குறையொன்றும் இல்லையே - திருத்தம்

"எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
"

இது ஒரு பாரதியார் பாடல். இந்தப் பாடலை ஒரு திரைப்படத்தில் கொண்டு வந்தார்கள் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர். பாரதியாரின் பாடலில் இருந்த "கண்ணன்" என்ற பெயரை "ரங்கன்" என்று மட்டும் மாற்றி எழுதியிருந்தார் கவிஞர் கண்ணதாசன். பாரதியாரின் பாடலைக் கண்ணதாசனின் பாடல் என்று அந்தப் பாடலின் இசைத்தட்டில் அந்த நாளில் எழுதியிருந்தார்களாம். அது அந்தத் திரைப்படக் காரர்களின் பிழையே அல்லாது கணணதாசனின் பிழையல்ல. இது போலப் பலர், பலரின் பாடல்களை ஒரு வேடிக்கைக்காக மாற்றி எழுதுவதும் உண்டு. உதாரணமாக "இரண்டு மனம் வேண்டும்" என்ற பாடலை "இரண்டு ரொட்டி வேண்டும்" என்று மாற்றி எழுதிப் பாடியதைக் கேட்டிருக்கிறேன்.

அத்தகைய ஒரு மாற்றி எழுதும் நோக்கம் எனக்கும் வந்தது. பாடல் மிகப் பிரபலமான ஒன்று. அதனால் தயக்கம்.

அந்தப் பாடலை நான் முதன் முதலில் அறிந்தது, அப் பாடலைப் பற்றித் தெரியாமலேயே. ஒரு நாள் திரு. ஏ. வி. ரமணன் அவர்களின் சப்த சுவரங்கள் நிகழ்ச்சியொன்றின் ஒளி நாடாவைக் குடும்பதாருடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிகழ்ச்சி, கண் தெரியாதவர்களுக்கானது. அவர்கள் பாடுவதைப் பார்க்கக் கவலையாக இருந்தது. மிகத் திறமைசாலிகள் நன்றாகப் பாடினார்கள். அவர்களை வர்த்தக ரீதியில் உபயோகித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பலர் முன்னேற்றலாமே என்று ஒரு ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எல்லோரும் பாடி முடித்துப் பரிசுகளும் வழங்கப்பட்ட பின்னர், திரு. ஏ. வி. ரமணன் அவர்கள் அந்தக் கலைஞர்களை தன் இரு பக்கத்திலும் அழைத்து வைத்துக்கொண்டு ஒலிவாங்கியைத் தூக்கிப் பாடத் தொடங்கினார். கண்களில் கண்ணீர் ஆறாய் ஓட நானும் என் மனைவியும் உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் பாடல் தான்:

"குறையொன்றும் இல்லை
மறை மூர்த்திக் கண்ணா
குறையொன்றும் இல்லைக் கண்ணா
குறையொன்றும் இல்லைக் கோவிந்தா"


பாடியவர் கூட அழுகையை அடக்க முடியாமல் அழுதே பாடினார். பாடலின் இனிமை, கருத்துச் செறிவு, பாடிய சூழல், பாடகரின் உணர்ச்சிப் பிரவாகம் என்று எல்லாமே எம்மை அடிமை கொண்டு விட்டன. நேரம் போதாமையால் அவர் பாடியது ஓரிரு வரிகளே தான். அன்றிலிருத்து அந்தப் பாடலைப் பற்றிப் பலரிடம் கேட்டு அதன் புகழ் மிக்க வரலாறு அறிந்து, இசைத் தட்டுக்களையும் வாங்கி எப்போதும் இரசித்து கொண்டே இருக்கின்றோம்.

அண்மையில் ஒரு வலைப்பூவில் (http://kelpidi.blogspot.com/2006/06/blog-post_17.html) இந்தப் பாடலை ஒரு அன்பர் இட, பல அன்பர்கள் அப் பாடலின் புல்லாங்குழல், சாக்சபோன் இசை வடிவங்களையும் பின்னூட்டாகத் தந்திருந்தார்கள். கேட்டு மெய் மறந்து விடுகிறோம்.

அத்தகைய பாடலை மூதறிஞர் இராஜாஜி ( அவர் பெயர் ராஜா ஆக இருக்குமோ? இந்தி மரியாதைச் சேர்ப்புத்தான் ஜி யோ?) அவர்கள் அழகாக எழுதி விட, இசை அரசி திருமதி சுப்புலட்சுமி அம்மாள் அருமையாகப் பாடிவிட நாமெல்லாம் தேடித் தேடி இரசிக்கின்றோம்.

வாழ்க அவர்கள் புகழ்.

இப்பொழுது என் கதைக்கு வருவோம். அதாவது, அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றுவது, இந்தப் பாடலை முருகன் மேல் பாடினாலும் மிகப் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணமே. பாடலின் பல வரிகள் முருகனுக்கும் ஒத்துப் போகக் கூடியவை. அவ் வரிகளில் வரும் மலை, குன்றம், மறை போன்றவை முருகனுடனும் மிகத் தொடர்புடயவை தானே. அதனால் இந்தப் பாடல் வரிகளில் சில மாற்றங்கள் செய்து கந்தனைப் பாட முடியுமே. முருகனா கண்ணனா, சைவமா வைணவமா என்ற குறுகிய நோக்கமெல்லாம் எனக்கு இல்லை. மனதில் தோன்றியது, முயற்சி செய்கிறேன். பிழையென்று நினைக்கவில்லை. பாடலை மாற்றிப் பார்ப்போம் என்ற முயற்சியின் விளைவே இது. யாரும் குறை கூறாதீர்கள். பாடலைப் பார்ப்போம்.

குறை ஒன்றும் இல்லை மறைதேர்ந்த கந்தா
குறை ஒன்றும் இல்லைக்  கந்தா
குறை ஒன்றும் இல்லைக்  கடம்பா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் முருகா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
க்
குறை ஒன்றும் இல்லை மறைதேர்ந்த கந்தா
வேண்டியதைத்  தந்திட வேல்முருகன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைதேர்ந்த கந்தா
மலையப்பா மால்மருகா குமரேசா குகனேசா

மயிலேறி  வருன்றாய் வேலா  - உன்னை
வேண்டுவோர் குறை தீர்க்க  விரைந்தோடி வாராய்
வாராயோ  எனுங் கவலை எனக்கில்லை
க் கந்தா
குன்றின் மேல் ஆண்டியாய்  நிற்கின்ற குமரா
குறை ஒன்றும் இல்லை மறைதேர்ந்த கந்தா

மலையப்பா மால்மருகா குமரேசா குகனேசா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
சிலையாக
க் கோவிலில் நிற்கின்றாய் வேலவா
யாதும் மறுக்காத முருகையா - உன் நெஞ்சம்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் தானே 

என்று இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை வடிவேலா  கந்தா

மலையப்பா மால்மருகா குமரேசா குகனேசா

என்னால் பாட முடியாதாகையால் இதோ உங்களுக்காக இனிமையான் சாக்சபோன் இசையில் இப்பாடல்
Kurai onrumillai - Kadri Gopalnath

Monday, June 12, 2006

மனிதரா மதியிலாப் பதர்களா

அல்லைப் பிட்டியின்
அவலக் குரல்
ஓயமுன் எழுந்தது
வங்காலை வன்துயர்
எங்காலை சொல்வது
எம்காலை எப்படி
விடியுமென்று

கயவர் வந்தனர்
காமுகம் புரியவே
கார்முகங் கொண்டு
கயவர் வந்தனர்

தாயையும் சேயையும்
தந்தையையும் தனயனையும்
குத்திக் கிழித்துக் குதறிக்
கொலை செய்த பின்

சந்தையிலே தொங்கும்
மந்தை மாமிசம்போல்
தொங்க விட்டுச் சென்ற
அந்த மனித மாமிசங்கள்
மனிதரா மதியிலாப் பதர்களா?

மிருகச் செயல் புரிந்தாரென்றால்
மிருகங்கள் செயலிழந்து கெஞ்சும்
இது நாம் செய்வதில்லை
நம்மை இவரோடு சேர்க்காதீரென்று

புல்லர்களே என்றால்
புல்லினம் குறை சொல்லும்
தம் பேரையிழுக்க
வந்தது பேரிழுக்கென்று

என்னவென்று அழைக்க - மண்டையில்
ஏதுமற்ற அரக்கரை
நீங்களும் ஒரு தாய் மக்களா?
நாளை மக்களைப் பெறும் மக்கரா?

ஜெயபால் 2006-06-12