Wednesday, July 26, 2006

இந்தப் பைத்தியக் காரத்தனம் அரசியலரங்கில் மிகவும் அதிகமாகக் காணப்படும் ஒரு சரக்கு. பல நாடுகளில், பல காலமாகப் பாவனையில் இருக்கும் ஒரு தந்திரம். அரசியல் அனர்த்தங்கள், படுகொலைகள், சதி வேலைகள் நடைபெறும் போது உதவிக்கு வருவது இந்தப் பைத்திய மருந்து. அரசியல் சதிகாரர்கள், கொலைகாரர்கள், பாதகர்கள் மாட்டிக் கொள்ளும் போது அவர்கள் சார்புடைய அரசுகள் பதிவியிலிருக்கும் போது அந்த அரசுகள் அவர்களைப் பாதுகாக்கத் தவறுவதில்லை. அதற்கு அவர்கள் பாவிக்கும் அரச தந்திரந் தான் பைத்தியக் காரப் பட்டம்.

சமீபத்திய உதாரணங்களாகக் கொள்ளக் கூடியவை சில. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்றவரைப் பைத்தியம் என்று கூறி விடுதலை செய்யப் பட்டது ஒன்று. அண்மையில் யாழ்நகரில் நீதிபதியின் வாகனத்தைப் பின்தொடர்ந்து தாக்க முற்பட்ட சம்பவத்தில் கைதானோருக்கும் பைத்திய வைத்தியம் பார்க்கும் படலம் ஆரம்பமாகிறது. இப்படிப் பல.

இங்கே நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், பைத்தியம் யாருக்கு என்பது தான். பைத்தியக் காரரை வேலைக்கு வைத்திருப்பவர்களா? அல்லது வேலைக்கு வைத்திருப்பவர்களுக்கும் பைத்தியமா? அல்லது அவர்களையெல்லாம் பதவிக்கு அனுப்பி வைக்கிறோமே எங்களுக்குப் பைத்தியமா?

என்னவோ ஏதோ இந்தப் பைத்தியக்காரப் பதவியால் பலரின் காட்டில் மழை.

Tuesday, July 11, 2006

தேன்கூடு போட்டி - மரணம் தண்டனையா

மரணம் தண்டனையா
===============

தேன்கூடு வைக்குதொரு போட்டி
தலைப்பைப் பாரதொரு ஈட்டி

மரணம் பற்றிநீ யெழுது
தோற்றால் வராது தீது
மரண தண்டனையுந் தராது

மகனே நிறுத்து
மரண தண்டனையா
மீண்டும் சொல்லையா
மரணம் தண்டனையா

மண்ணுலகில் மாந்தர்தம்
மண்ணாளுஞ் சட்டங்களில்
கண்ணாம்பூச்சி காட்டுகிறார்
குற்றம் புரிந்தோர்க்கு
அதியுச்சத் தண்டனையாம்
மரணம் தண்டனையாம்

மரணம் தண்டனையா
யாருக்குத் தண்டனை
தவறு செய்தோர்க்கா
அவனைச் சார்ந்தோர்க்கா
அளிக்குஞ் சான்றோர்க்கா
சாகடிக்குஞ் சேவகர்க்கா

மரணம் தண்டனையா
மனிதம் தப்பிழைக்கிறதா

ஜெயபால், 2006/07/06

Thursday, July 06, 2006

மரணம்

மரணம் --------- மறையாதது மரணம் நிலையானது மரணம் மரிக்காதது மரணம் மவுன நியதியே மரணம் தோன்றிய யாவும் தொடுமொரு நாளில் நிலையான மரணத்தை சரியான தருணத்தில் பிறக்கும் போது கூடவே பிறக்கும் பிறழாக் கணக்கு மரண வழக்கு நுண்ணிய அங்கி முதல் நூறுகோடி அண்டம் வரை நுழைய வேண்டிய வாசலது நுட்ப அதிசயம் சாதலது மரணத்தின் வரவு மர்மத்தில் மர்மம் எப்ப வரும் எப்படி வரும் என்றே தெரியாத தர்மத்தில் தர்மம் ஆண்டவன் படைப்பான் அவனே அழிப்பான் அழிப்புக்குத் துணையாம் மரணமெனும் மறையாம் மரணத்தை வென்றோருமில்லை மரணித்து மீண்டோருமில்லை - இம் மர்மத்தை விளக்கவொரு மார்க்கமும் இங்கில்லை
ஜெயபால், 2006/07/03