Wednesday, August 16, 2006

யாருமே அர்ச்சகராக வேண்டாம்

எங்கள் கோவில்களில், சாமியிடம் ஆசி பெறப் பூசாரியிடம் மனுக் கொடுக்கும் வழக்கம் ஒரு நகைச்சுவை தான். அதிலும் பெரிய நகைச்சுவை, பெயர், ஊர், நட்சத்திரம், குலம், கோத்திரம் எல்லாம் சொல்லிக் கேட்பது. நல்ல காலம் தபால் முகவரி கேட்பதில்லை. கேட்டால், ஆசியை வீட்டு விலாசத்திற்கே அனுப்பி வைப்பார்கள். என்ன இது பைத்தியக் காரத்தனம். கேட்பவருக்கும் வெட்கமில்லை சொல்லி ஆசி வேண்டுபவருக்கும் வெட்கம் இல்லை. இதற்கு ஒரு அர்ச்சகர். அதற்கொரு சாதி. வெட்கக்கேடு.
இப்ப என்னடா என்றால் அந்த அர்ச்சகராகும் தகுதிக்குச் சாதி தேவையில்லை என்ற அறிவிப்பு. பின்னர் அதற்குத் தடை.
எங்கே போகிறது மனித நாகரீக வளர்ச்சி?

அர்ச்சகரே தேவையில்லை.

அதை விட்டு விட்டு ஏதேதோ எல்லாம் செய்துகொண்டு நேரம் சக்தி பணம் என்பவற்றை வீணாக்குகிறார்கள்.

கடவுளை வணங்கு
நடுவில் நிற்கும்
அர்சசகரை அகற்று

Monday, August 14, 2006

எப்படிப் பாடுவீரோ


தேவாலயந் தகர்ந்தது
செஞ்சோலை சிதறியது
சோலையின் தளிர்கள்
கருகின தீய்ந்தன
கயவர்தம் காட்டுக்
கடும்போக்கில்

ஐநாவே ஐயா நாட்டோரே
அனைத்துலகச் சட்டங்கள்
அழித்தோரைச் சாடாவோ
அல்லது
அழித்தவர் குருக்களோ

பாடுவீரோ சரணம்
பலியானது புலிகள் என்று

பாடுவீரோ பல்லவி
பக்கத்திற் சென்று பார்க்கப்
பாதுகாப்பு இல்லை என்று

பாடுவீரோ மங்களம்

பேசுவீர் பேசுவீர்
பேதங்கள் களைவீர்
பேசியதன் செயல்வடிவம்
பேய்வடிவில் பெறுவீர் என்று

பாடுவீரோ
எப்படிப் பாடுவீரோ


செயபால், 2006/08/14