Saturday, July 23, 2011

தமிழ் கற்றோம்

தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவில் ஒரு மாணவர் வாசிக்கும் கவிதை.

தந்தை தாய் கைப் பிடித்துக்
கலவர முகத்துடனே
நாலு வயதில் வந்தோம்
தமிழ்ப் பள்ளியினை நாடி

வணக்கம் கூறி வரவேற்றார்
வடிவாக ஆசிரியரும்
வணங்கி வரம் பெற்றதுபோல்
கற்றோம் தமிழை நாம்

ஆனா முதல் அகேனம் வரையும்
கானா முதல் னானா வரையும்
காணாத பல எழுத்தும் வாயில்
பூராத புது ஒலியும்
பழகினோம் பார்த்தோம்
எழுதியும் வந்தோம்

மொழி மட்டும் படிக்கவில்லை
தமிழ்ப் பள்ளியில் நாம்
தமிழ்ப் பண்பாடும் பழக்கமும்
வழக்கமும் அறிந்தோம் நாம்

புலம் பெயர்ந்து வந்த நாம்
புறம்பாகத் தேர்ச்சி பெற்றோம்
புலவர் பலர் வளர்த்து விட்ட
என்றும் புதுத் தமிழ் மொழியில்

கற்றது நல் தமிழ்
நம் பெற்றோர்க்குத் தந்தது
நன் மக்கள் எனும் பட்டம்
பெருமையாகப் பேசிக்கொள்வர்
எம் பெற்றோர் எம்மைப் பற்றி
தமிழ் தெரிந்த பிள்ளைகள் எம்
பிள்ளைகள் என்று நாளும்

முழுநேரக் கல்வியோ
புகுந்த மொழி மூலம்
மூச்சு விடுவதுமே
அம்மொழியில் என்றிருக்க
இரண்டரை மணித்துளிகளில்
இனிதாய்க் கற்றுவந்தோம்
தாய் மொழியாம் தமிழ் மொழியை

ஆண்டுகள் பத்து
கடந்து விட்ட இந்நிலையில்
தமிழ் தெரிந்த தமிழராகத்
திரும்பிப் பார்க்கிறோம்
கடந்து வந்த பாதையை நாம்
அன்பான பெற்றோரே
ஆசிரியரே தோழர்களே
அனைவருக்கும் நன்றிகள்
வாழ்த்துகள் வணக்கங்கள்

செயபால் 2010

Saturday, July 16, 2011

தமிழ் கேட்டேன், ஒரு மாணவனாக

அம்மாவிடம் என் அறிமுகம் கேட்டேன்
அப்பாவிடம் நான் அறிவுரை கேட்டேன்

பள்ளி செல்லும் ஆசையில் கேட்டேன் - தமிழ்ப்
பள்ளி என்ற சொல்லைக் கேட்டேன்

ஆனா ஆவன்னா முதலில் கேட்டேன்
அழகு தமிழில் பாடல் கேட்டேன்

சுவை மிகு கதைகள் நிறையக் கேட்டேன்
முத்தமிழ் மூலம் கலைகள் கேட்டேன்

அவ்வையின் ஆத்திசூடி கேட்டேன்
வள்ளுவன் தந்த திருக்குறள் கேட்டேன்

பாட்டுக்கொரு கவி பாரதி கேட்டேன்
பாரதிதாசன் பாடலும் கேட்டேன்

தொல்காப்பியத்தில் இலக்கணம் கேட்டேன் - பல்
ஆயிரமாண்டுப் பழமை கேட்டேன்

இலக்கியம் இயற்றும் யாப்புக் கேட்டேன்
யாப்பைக் காத்த சங்கம் கேட்டேன்

இன்னும் படிக்கும் ஆவலில் கேட்டேன்
உயர்தர வகுப்பும் உண்டெனக் கேட்டேன்

கற்றது கையளவாமெனக் கேட்டேன்
பென்னம் பெரிய கைகள் கேட்டேன்

விட்டது உலகளவாமெனக் கேட்டேன்
சின்னஞ் சிறிய உலகம் கேட்டேன்

அம்மா அப்பா வாழ்த்துக் கேட்டேன்
ஆசிரியர்கள் ஆசியும் கேட்டேன்

அன்புடன் இப்போ வணக்கம் கேட்பேன்
வாழ்நாள் முழுக்கத் தமிழைக் கேட்பேன்

செயபால் 2011