Wednesday, March 27, 2019

பகுதி 2: நோய் - தவிர்ப்பும் தீர்வும்


சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

அறிமுகம்

பதட்டம் – ரென்சன் (Tension)


ரென்சன் என்றாலே பதட்டம், படபடப்பு, கொந்தளிப்பு, மன அமைதியுடன் இருக்க முடியாத நிலை, மூளை வெவ்வேறு யோசனைகளுக்கு போய்க்கொண்டிருக்க நாம் வேறு செய்கைகளச் செய்வது, இத்தியாதிகளுடன் வேறுபலவும் இருக்கின்றன.

எல்லோரும் உடல், மன தளர்வுடன் ஆறுதலாக இருக்கவே விரும்புகிறோம். அப்போதுதான் நமது செய்கைகள் பிழையின்றியும், தெளிவாகவும் அழகாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தினை பேண இது பல வழிகளில் உதவும்.
ஆனால், வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற கவலை, பயம் ஒரே நேரத்தில் பல அலுவல்களை பார்க்க வேண்டிய நிலைமை, அவசரப்படுதல், ஏன் அதிகூடிய மகிழ்ச்சி கூட எம்மை ரென்சனுக்கு உள்ளாக்குகின்றன. அந்த அமைதி, தளர்வு குலைகின்றன.  வீட்டைப் பூட்டி அரைவாசித்தூரம் வந்தபிறகு, பின்கதவைப் பூட்டினோமா, போன்ற ஐயப்பாடுகள் வருவதும் டென்சனுடன் காரியங்கள் ஆற்றுவதால்தான்.

கணவனும், மனைவியும் வெவ்வேறு இடங்களில் தொழில் புரியும் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு வருவோம். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். காலை நான்கு மணிக்கு குடும்பத்தலைவி படுக்கையை விட்டு எழும்புகிறாள். மனம் அமைதியாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பல வேலைகளச் செய்து முடிக்க வேண்டும். பல்விளக்கல், குளிப்பு எல்லாம் கொஞ்சம் அவசரத்தில் நடக்கின்றது. காலை உணவு, மதிய உணவு தயாரிப்புகள் நடக்கின்றது. காபி தயாரிக்கப்பட்டு கணவர், குழந்தைகள் எழுப்பப்படுகின்றனர்.. முனகிக் கொண்டு அடுத்தபக்கம் திரும்பிப் படுக்கும் மகனை அதட்டி சத்தமிட்டு எழுப்புகிறாள்.

அவளது இதயத் துடிப்பு எண்ணிக்கை சற்று கூடுகின்றது.

அவளது கணவனும் பிள்ளைகளைக் குளிப்பாட்டி உடை அணிவித்து, காரியாலயம் போக அவசரபடுகின்றனர்.

அவருக்கும் இதயத்துடிப்பு சற்று கூடுகின்றது.

இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பியபின் கணவன் ஸ்கூட்டரில் சென்று ட்ரபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு காத்திருக்க, நேரம் போகின்றதென ரென்சன் கூடுகின்றது. மனைவிக்கும் அவசரப்பட்டு வேலையை முடிக்க ரென்சன் கூடுகின்றது.

வீதியில் இறங்கி அவசர அவசரமாக நடந்த அந்த குடும்பத்தலைவிக்கு முன்னால் சிரித்துக் கொண்டு நடந்து சென்ற உறவினர் கூட கண்ணுக்குத் தெரியவில்லை. இடைமறித்து பிச்சை கேட்ட பிச்சைக்காரனை அதட்டி, நெஞ்சு படபடப்புடன் பஸ்ஸில் ஏறுகின்றாள். கடைசியில் கணவன், மனைவி இருவருமே காரியாலயம் சென்று, இருக்கையில் அமர்ந்து நேரம் செல்ல செல்ல இதயத் துடிப்பு சீராகி, பதட்டம் எல்லாம் அடங்கி ஆறுதல் நிலைக்கு வருகின்றனர். மனைவி அப்போதுதான் அந்த பிச்சைக்காரனை அவ்வளவு ஏன் அதட்டினோம் என்று நினைக்கிறாள். சில்லறை கொடுத்திருக்கலாமே என்று நினைக்கிறாள்.

இது சாதரணமாக பல சமயங்களில் நமக்கு உருவாகும் ரென்சன் தானாகவே உருவாகி தானாகவே சாதாரண நிலைக்கு வருகின்றது. இந்த சமயத்தில் நமது இதயத்திற்கு கூடுதல் வேலை வருகின்றது.
நமது இதயம் வருடக்கணக்காக தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றது. உலகில் இப்படி வேலை செய்யும் இயந்திரம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இதயத்தின் வேலைகளை ரென்சன் சமயத்தில் இன்னும் கூட்டுகின்றோம். இப்படி அடிக்கடி கூட்டுவது இதயத்திற்கு நல்லது அல்ல. ரென்சன் அடிக்கடி உண்டாவதைத் தடுக்கவேண்டும்.

ரென்சன் இருக்கும்பொழுது, சிறிய சிறிய விடயங்களுக்கும் மற்றவர்களுடன் கோபப்படுவீர்கள். ஒரு விடயத்தில் புலனை நன்றாகச் செலுத்த முடியாதிருக்கும். உங்களைச் சுற்றியுள்ள ஆட்கள், சூழல் என்பவை உங்களுக்கு தெளிவாகப் புரியாமல் இருக்கும். ஞாபகமறதி கூட இருக்கும். ரென்சன் நீடித்து இருந்தால் இரவில் தூக்கமும் வராது. அல்லது ஒழுங்கான தூக்கமாக இருக்காது.

இப்படிப்பட்ட ரென்சன் எங்களது வாழ்க்கையில் தேவையாகவும் உள்ளது. நாங்கள் மேடையில் பேசும்போதோ, நடிக்கும்போதோ, நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும்போதோ நிகழ்வுகளில் நாமும் பங்குபற்றும்போதோ இப்படியே பல 'போதோ' க்கள் இருக்க - குறிப்பிட்ட அளவு ரென்சன் இவைகளுக்கெல்லாம் நமக்கு வேண்டும். சுருக்கிச் சொல்வதானால் 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழியை இங்கு நான் கொண்டுவர வேண்டியுள்ளது.

இக்கட்டுரையின் முக்கியமான குறிக்கோள்; வைத்தியத்தை நாடாது, பதட்டத்தைத் தவிர்க்கும் முறையொன்றைச் சொல்வதே.

அடுத்து வரவிருப்பது ரென்சன் தவிர்த்தல்

Monday, March 25, 2019

நோய் - தவிர்ப்பும் தீர்வும்

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

அறிமுகம்


இவ்வுலகில் ஒவ்வொரு நேரத் துணிக்கையிலும், கோடிக் கணக்கான உயிர்கள் அழிவுறுகின்றன. அதேபோல் கோடிக்கணக்கான உயிர்கள் உலகின் மடிக்குள் வருகின்றன. அவற்றுள் மனித உயிர்களும் அடங்கும்.

ஒவ்வொரு சிசுவும் முழு உருவாக்கம் பெற்று சாதிக்கப் போகின்றதோ, உலகிற்கு போதிக்கப் போகின்றதோ அல்லாது வீட்டையோ, நாட்டையோ பாதிக்கப்போகின்றதோ தெரியாது.

ஆனால் தெரிந்த உண்மை என்னவென்றால், சிசு பிறக்கும் போதே போராடத் தயாரகிக் கொண்டே பிறக்கின்றது, என்பதுதான். சிசு பிறந்தவுடன் அழுவதே தனது சுவாசப்பைகளை விரியவைக்கும் போரட்டத்தினால்தான். பின் குப்புற விழவும், தவழவும், எழுந்து நிற்கவும் போராடித்தான் வெற்றியீட்டுகின்றது. வளர, வளர போராட்டங்கள்தான். சிலருக்கு போராட்டங்கள் கூடலாம். சிலருக்கு குறையலாம். சிலருக்கு கொஞ்சமாகவே போராட்டங்கள் அமையலாம். ஆனால் ஒரேயொரு போராட்டத்தை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் எதிர்கொண்டே ஆகவேண்டும். நமக்கு ஏற்படும் நோய்களுக்கான போராட்டம்தான் அது.

நோய்களை இல்லாது செய்யவோ, தடுக்கவோ அல்லது குறைக்கவோ வெவ்வேறு வகையான வைத்திய முறைகள் உலகில் உள்ளன. அவற்றில் பிரதான இடம் வகிப்பது வெஸ்டர்ன் மெடிசின் எனப்படும் மேல்நாட்டு வைத்திய முறை. கீழ்நாட்டு வைத்தியங்களான ஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனானி, நாட்டுவைத்தியம் இன்னும் ஏதேதோ உள்ளன. நாட்டுக்கு நாடு வெவ்வேறு வைத்தியங்கள் உள்ளன. 

வெவ்வேறு சிகிச்சை முறைகள் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் எல்லா நோய்களையும் அவை தீர்க்கின்றனவா என்பது அறியப்படாத விடயம். ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் பிரதான இடத்தை வகிப்பது மேல்நாட்டு வைத்திய முறையே. அதன் விஸ்தீரணம் மிகப் பெரியது. மேல்நாட்டு வைத்தியமுறை தனியார் வைத்திய சாலைகளாக உருவெடுத்து , இன்று பெரிய வியாபாரத் தளமாக மாறியுள்ளது. இன்னொரு விடயம் என்னவென்றால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கிராமங்களிலும், நகரங்களின் மறைவான பகுதிகளிலும் இருந்து கொண்டு, தராதரமற்ற போலி வைத்தியர்கள் மக்களை ஏமாற்றி சிகிச்சை செய்து, பணம் சம்பாதிக்கின்றார்கள். சுகாதாரத் துறையை மேம்படுத்துகிறோம், மேம்படுத்தி விட்டோம் எனக் கூறுபவர்கள், தகுந்த நடவடிக்கைகள் மூலம் இவர்களைத் தடுப்பது, பிடிப்பது போன்ற விடயங்களைச் செய்யாமலிருப்பது என்பதெல்லாம் வேறுவிடயங்கள். 

இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் நமக்கு வருகின்ற சில பல நோய்களை தடுப்பது, குறைப்பது, தீர்ப்பது என்பது. அவற்றை இயற்கையின் உதவியுடன் நாமாகவே செய்யலாம். எவரது உதவியும் இல்லாமல், எமக்கோ மற்றவர்களுக்கோ சிகிச்சை செய்யலாம்.
இப்போது உணவுகளையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் தேகாரோக்கியத்திற்காக பழைய முறைக்கு மாற்ற வேண்டுமென சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல விடயங்கள் தான் ஆனால் அந்த உணவுகள் தான் நமக்கு கிடைப்பது பெரும் பாடாக இருக்கின்றது. எனது விடயங்கள் அந்தப் பக்கமாக போகாது என்பதை இங்கு முதலில் குறிப்பிட விரும்புகிறேன். 

சிகிச்சை முறைகளை சொல்ல முன்னர் நான் யார் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். நான் ஒரு பிஸியோதெறபிஸ்ட் (Physiotherapist). 45 வருட அனுபவம் என்னிடம் ஒட்டி இருக்கின்றது. ஆயிரக்கணக்கானதோ அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளிகளுடனோ தொடர்புபட்டிருக்கின்றேன்.
அத்துடன் இன்னும் என்னென்னவோ என்னிடம் சேர்ந்து, நான் மேலே சொன்னவாறு சில, பல உடல் ரீதியான பிரச்சினைகளை நம்மாலே தீர்த்துக் கொள்ளலாம் என்கிற அறிவை உங்களுக்கு தரலாம், நீங்களும் பயன் பெறலாம்.மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்பதற்காக இதனை எழுதுகிறேன். இதுவே எனது இலக்கு. 

Sunday, March 03, 2019

திருக்குறள் வேதத்திலிருந்து வந்ததா?

திருக்குறள் வேதங்களிலிருந்து பெறப்பட்ட அறிவியல் நூல் என்று பறைசாற்றலும், புத்தகம் எழுதுவோருமாக பரபரப்பு வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன இப்பொழுது. 
நாமறிந்த வரைக்கும், நண்பர்கள் பலர் மூலமாகவும், நாம் அறிவது, வேதங்கள் எழுதப்படாத ஒரு தொகுப்பென்பதே. பிரம்மாவிடமிருந்து சீடர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது என்பது தான் நாம் தெரிந்திருப்பது.

பிரம்மா மற்றும் அவரின் சீடர்களுக்கே சரியான விளக்கம் இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்.

இப்படியாகக் கடத்தப்படும் வேதம், காலத்துக்குக் காலம் பிறரிடமிருந்து கற்கும் நல்ல கருத்துக்களையும் உள்வாங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லையே.

விக்கிப்பீடியாவின் தரவின்படி, வேதங்கள் எழுதப்பட்ட காலம் ஒரு 1200 ஆண்டுகள் முன்னர் தான். அப்படியிருக்க, 2500 ஆண்டுகள் பழமையான திருக்குறள் வேதத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமே.

இதோ, விக்கிப்பீடியா சொல்வது: (https://en.wikipedia.org/wiki/Vedas)
Due to the ephemeral nature of the manuscript material (birch bark or palm leaves), surviving manuscripts rarely surpass an age of a few hundred years.[43] The Sampurnanand Sanskrit University has a Rigveda manuscript from the 14th century;[44] however, there are a number of older Veda manuscripts in Nepal that are dated from the 11th century onwards.[45]