Tuesday, April 16, 2019

பகுதி 6 - கண்டல் காயங்கள்

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

கண்டல் – contusion

இனி அடிபட்ட, தாக்குப்பட்ட அவயங்களுக்கு வருவோம். அவயங்களில் வலி வீக்கம் என்பன இருந்தால், சிலரது அனுபவ ஏழாம் அறிவே முறிவு உள்ளது அல்லது இல்லை என்றே சொல்லி விடும். அதற்கு மேலே எக்ஸ்றே எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

ஏதோவகையில் முறிவு இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டால் --தசையோ, முள்ளந்தண்டோ, நெஞ்சோ, முதுகோ அவயங்களிலோ வலி, வீக்கம் இருந்தால் அந்த இடத்தை  முடிந்தவரை அசையாமல் ஓய்வில் வைத்திருப்பது நல்லது. உடனடியாக அந்த இடத்தை கசக்குவதோ, உரஞ்சுவதோ, நோவு தீர்க்கும் தைல வகைகள் பூசுவதோ கூடாது.
ஐஸ் பை மாத்திரம் பிடிக்கவேண்டும். 3- 5 நிமிடங்களுக்கு Ice pack ஐ பாதிக்கப்பட்ட இடத்திற்கு மேலாகவும் சுற்றியும் மெதுவாக தடவ வேண்டும். இதனை பாதிக்கப்பட்ட நேரத்திலிருந்து 3- 4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவை செய்யவேண்டும். அடுத்ததாக பாதிக்கப்பட்டபகுதி, தலையணைகளின் உதவியுடனோ, எப்படியோ ஓரளவு உயரமாக வைக்கப்படல் வேண்டும்.

ஐஸ் துண்டுகளை சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டால் அதுதான் ஐஸ் pack ஐஸ் கட்டிகள் இல்லாவிட்டால் குளிர் தண்ணீர் கூட பயன்படுத்தலாம்.
இப்படிச் செய்ய வலி, வீக்கம் குறைந்து கொண்டே வரும். 48 மணித்தியாலங்களுக்குப் பிறகு இருக்கும் வலியை குறைக்க சூடான ஒத்தடம் கொடுக்கலாம். அதனையும் ஒரு நாளைக்கு 3 - 4 தடவை விட்டு விட்டு  செய்யலாம். ஒத்தடம் சுடு நீராகவோ அல்லது சுடு சோறாகவோ இருக்கலாம். நோவு தீர்க்கும் தைலம் பாவிக்கலாம். ஆரம்பத்தில் அழுத்தி மசாஜ் பண்ணாமல் படிப்படியாக அழுத்தம் கூட்டலாம். உங்கள் வீட்டில் infrared lamp இருந்தால் ஒத்தடத்திற்குப் பதிலாக அதன்மூலம் சூடு பிடிக்கலாம்.  தைலம் gel போட்டு உருவி விடுவதாயிருந்தால் மேல்நோக்கி அதாவது உங்கள் இதயம் எங்கிருக்கின்றதோ அந்த திசையில் உருவ வேண்டும். எனவே கழுத்து தலை என்று வரும்போது கீழ்நோக்கி உருவ வேண்டும். இந்த விதியை மீறவேண்டாம். மேலும் வலி, நீக்கம் என்பன குறைந்துவிட்டால் உங்கள் சிகிச்சையை நிறுத்தலாம்.

சிலசமயங்களில் தாக்குதலுக்கு அல்லது பாதிப்புக்கு உள்ளான இடம் வலி வீக்கத்துடன் இருந்தும் காயம் இல்லாது இருந்தாலும் தோலின் கீழே இரத்தம் கசிந்து, நீலமாக அல்லது சற்று கறுப்பாக அல்லது இரண்டும் கலந்தோ, உலக வரைபடத்தில் காணப்படும் நாடுகளின் வடிவமாகவோ அல்லது வட்டமாக இருக்கும். இது contusion (கண்டல்) எனப்படும்.
எப்படியிருந்தாலும் அடிபட்ட இடத்திற்கு உடனேயே ஐஸ் (ice pack) சிகிச்சை    4-5 நிமிடங்களுக்கு, 3-4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவையாக இரண்டு நாட்களுக்கு செய்ய வேண்டும். பின்பு மெல்லிய சூடு ஒத்தடம்.
4-5 நாட்களுக்குப் பிறகு நோவு தீர்க்கும் தைலம் போட்டு contusion உண்டான இடத்தின் விளிம்பைச் சுற்றி 25-30 தடவைகள் சற்று அழுத்தி (மசாஜ்) உருவ வேண்டும். 3-4 தடவை தினமும் செய்ய வேண்டும். இப்படிச் செய்கையில் அந்த contusion வரைபட அளவு சிறிதாகி மறையும். அது மறைந்த பின்பும் அவ்விடம் தோற்றத்தில் எல்லாம் சரியாக இருந்தாலும், உள்ளே தடிப்பாக அல்லது இறுக்கமாக இருக்கலாம். அதனையும் அழுத்தி மசாஜ் பண்ணி சரியான திசையில் உருவி இல்லாமல் செய்யவேண்டும். அது கடைசிவரை இல்லாமல் போகுமட்டும் மசாஜ் செய்யவேண்டும். இது மிக முக்கியம்.

கீழ்வரும் பிறர் கூற்றுக்களைப் படியுங்கள்.
  • 'முச்சக்கரவண்டி குடைசாய்ந்து, கம்பி தொடையில் பலமாக அடிபட்டு, நோவெல்லாம் வந்து சுகமாகி ஐந்தாறு வருஷம்...'
  • 'கிரிக்கெட் பந்து தொடையில் பட்டு, கண்டிச்சு எல்லாம் சரியாகி மூன்று வருஷத்திற்கு மேல்...'
  • 'படியில் ஏறும்போது சறுக்கி விழுந்து படியின் விளிம்பு தொடையில் அடித்து, கஷ்டப்பட்டு, சரியாகி நீண்டகாலம்...'
இவை என் அனுபவப் பாதையில் சந்தித்த பல நோயாளர்களில் சிலரின் முன்கதைச் சுருக்கங்கள்.

அவர்கள் எல்லோருமே தொடையில் மயலோமா (myeloma), ஒஸ்டியோமா (osteoma) என புற்று நோயின் அவதாரங்களில் ஒன்றை கொண்டிருந்தனர்.
கால் இழந்து, எலும்பு துண்டாகி வெட்டியெடுக்கப்பட்டு, புற்றுநோய் வேறு இடங்களுக்கு வியாபித்து என்று பல்வேறு நிலைகளில் அவர்கள் இருந்தனர்.
தொடையில் அடிபடுவதற்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தமோ அல்லது ஒப்பந்தமோ நான் அறியேன். நான் சந்திக்காத இதே போன்ற ஆட்கள் உலகில் எத்தனையோ நானறியேன்.
ஆனால் நீங்கள் அறிந்து - இப்படியான அடிபடுதல் - தாக்குதல் உங்களுக்காவது - மற்றவர்களுக்காவது விசேடமாக தொடையில் நிகழ்ந்தால் ஐஸ் - பின்பு சூடு - மஜாஜ் செய்து எந்த தடிப்போ - கட்டியோ இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம்.

கடைசியில் ஐஸ் விடயமொன்று.

ஐஸ் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த இளஞன் ஒருவன் தவறுதலாக விழுந்து, ஐஸ் தரையில் பலதடவை உருண்டு, பிரண்டு எழும்ப, இடது தோளில் பலத்த அடி. வீட்டில் தாங்கமுடியாத வலி வீக்கத்தால் அவதிப்பட்டு, நகரத்திலேயே பெயர்பெற்ற எலும்பு, முறிவு சத்திரசிகிச்சை நிபுணரிடம் சென்றான். அவர் திருப்பித் திருப்பி கையை பரிசோதித்து விட்டு, 'முறிவு ஏதும் இல்லை. 3 -4 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை 5 நிமிடம் வரை, தடவிக்கொண்டிருங்கள், தடவிய பின்பு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, மீண்டும் மீண்டும் பாவியுங்கள். சரியாகிவிடும்.' என்று , ஐஸ் பை (ice pack) ஒன்றைக் கொடுக்க, அவன் முறைப்புடன் பீஸ் கொடுத்ததெல்லாம் சரித்திரங்கள்.
அடுத்து வரவிருப்பது - காற்று

Sunday, April 14, 2019

பகுதி 5: முள்ளந்தண்டு பாதிப்பு

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


இந்த முண்ணான் சிதைவு சில நோய்களாலும் ஏற்படலாம். முண்ணானை பாதுகாக்கும் முள்ளந்தண்டு எலும்புகள் ஒன்றோ, இரண்டோ உடைந்து விலகி முண்ணானை அழுத்தி, சிதைவடையச் செய்யலாம். டிஸ்க் விலகியே மேற்கூறிய பாதகத்தைச் செய்யலாம்.

மேலிருந்து விழுந்து, விபத்தில் அடிபட்டு இருக்கும் ஒருவருக்கு இப்படி நேரலாம். அல்லது நேரவைப்பதற்கு ஏற்கனவே உடைந்த, விலகிய துண்டுகள் தருணம் பார்த்து இருக்கலாம். பாதிக்கப்பட்டவர் வலியால் அவதியுறுவார். அவரை நாம் தூக்குவதாலோ, எழுப்பி நிறுத்துவதாலோ இருக்க வைப்பதாலோ உடைந்து விலகிய துண்டுகளுக்கு நாம் சந்தர்ப்பம் கொடுத்துவிடுவோம். முண்ணான் சிதைவுறும்.

பாதிக்கப்பட்டவர் படுக்கை நிலையிலேயே இருக்கவேண்டும். குப்புறப்படுத்தியிருந்தால் நல்லது. அவரை மெதுமெதுவாக பக்கவாட்டாக படுத்தநிலையிலேயே பலகை அல்லது கை ஸ்ரெச்சர் (hand stretcher) ஒன்றுக்கு மாற்றி வைத்தியசாலையை நாடவேண்டும். அங்கு நமது செயற்கை ஏழாம் அறிவு - X-Ray, உடைவு, விலகல் என்பதற்குரிய விடை சொல்லிவிடும். உடைவு, விலகல் இல்லையென்றால் வலி போன்ற விடயங்களை குறைக்கும் வழி இறுதியில் சொல்லப்படும்.

இதற்கும் மேலாக, எலும்பு, டிஸ்க் விலகல், முண்ணான் பாதிப்பு என்று எது இருந்தாலும் அவற்றை எலும்பு, முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் (orthopedic surgeon) நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் (neurosurgeon) என்று இருவரோ அல்லது ஒருவரோ கையாள்வார்கள். அவர்களுக்கும் தெளிவாக பாதிப்பை அறிந்து கொள்ள இருக்கவே இருக்கிறது செயற்கை எட்டாம் அறிவு - C.T. scan - அதற்கு மேல் செயற்கை ஒன்பதாம் அறிவை கொண்டிருக்கின்றது. M.R.I.

முண்ணானில் அல்லது நரம்பில் ஏற்படும் பாதிப்பு, சிகிச்சை மூலம் பழைய நிலைக்கு திரும்பும் என்பது கேள்விக்குறி போடவேண்டிய விஷயம். எதிர்காலத்தில் செயற்கை பத்தாம் அறிவு வந்து (Aliens) ஏலியன்களுடன் கலந்து பேசி, புதியமுறை மூலம் பாதிக்கப்பட்டவர் நூறு சதவீதம் குணமடைந்தால், உலகில் படுக்கையிலும், தள்ளுவண்டியிலும் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானவர்கள் மகிழ்ச்சியடையவார்கள்.
அடுத்து வரவிருப்பது கண்டல் காயங்கள்

Saturday, April 13, 2019

பகுதி 4 - விபத்துகளும் காயங்களும்

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.
அடிபடுதல் - விழுதல் - மோதுதல் - விபத்துக்கு உட்படுதல் etc
இவற்றில் ஏதாவது நடந்து, இரத்தம் சிந்தும் காயங்கள், ஏதும் ஏற்படாமல் இருந்தால் 'அப்பாடா, தப்பியாச்சு...' என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் ஏற்படும்.
ஆனால், தாக்கத்திற்கு ஆளான உடலின் பகுதி வீங்கலாம், வலி ஏற்படலாம், சூடாகலாம். சிவப்போ, வேறு நிறமோ ஆகலாம். இவை அத்தனையும் சேர்ந்தே வரலாம்.
இங்கு குறிப்பிடப்போவது மேற்கூறிய பிரச்சினைகளை இலகுவாகவும், விரைவாகவும் குறைக்கின்ற முறை.
ஆனால், அடிபடுதல் போன்ற மேற்கூறிய சமாச்சாரங்கள் உடலின் எந்தப்பகுதியில் நிகழ்ந்தது - பாதிக்கப்பட்டது என்பதில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும். அப்படியெனும்போது - முதலில் வருபவர்கள் தலை, முதுகுத்தண்டு, முதுகெலும்பு என்பன.

தலை அடிபடுதல்

தலை பாதிக்கப்பட்டு - சிறிய மயக்கமோ அல்லது பெரிய மயக்கமோ, தனியாக வாந்தியோ, அல்லது மயக்கத்துடன் வாந்தியோ ஏற்பட்டால் - உடனடியாக நோயாளி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். அத்துடன், அவரது தலை உடலின் மேற்பகுதியுடன் சேர்த்து 30-45 பாகை உயர்த்திப் பிடித்தவாறு வைத்திருத்தல் வேண்டும். இதனை மற்றவர்களின் மடி அல்லது தலையணை மூலம் செய்யலாம்.

வைத்தியசாலையில் குறைந்தது 48 மணித்தியாலங்கள் வைத்திய கண்காணிப்பில் இருக்கவேண்டும். தலை உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதா? என்பதில் மற்றவர்கள் மறந்தாலும், நீங்கள் கவனமெடுப்பது நல்லது. மற்றவற்றை வைத்திய சேவையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மயக்கம், வாந்தி இல்லாது தலை பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சையை நீங்களே செய்து கொள்ளலாம். ஆனால், அடிபட்டவர் குழந்தையோ, பெரியவரோ, அவரது பாதிக்கபட்ட இடத்தை உடனே நமது கையால் கசக்குவதும், நோவு தீர்க்கும் எந்த வித கிறீம் அல்லது ஜெல் போட்டு உரஞ்சுவதும் பாதிப்பை பலமடங்கு கூட்டும். வலி குறைந்து, வீக்கம் (swelling) குறைந்து சாதாரணநிலைக்கு வரும் காலம் கூடும். இதற்கான தீர்வு உடலின் ஏனைய பாகங்களில் உண்டாகும் பாதிப்புகளில் எடுக்கவேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை முடிந்தவரை சுருக்கமாக பார்த்த பின், கூறப்படும்.

முதுகெலும்பு

முள்ளந்தண்டு விடயத்தை அனாடமி, பிஸியோலொஜி பாடங்களெல்லாம் சேர்த்து விளக்கமுற்பட்டால் இன்னொரு மகாபாரதமாகி வியாசர் கோபிப்பார். அதைவிட இன்னும் பாடங்களா? என்று நீங்கள் கோபிப்பீர்கள். முடிந்தவரை சுருக்கிக்கொள்கிறேன்.

முதுகெலும்பு, நம் கைபிடி சைஸை விட சற்று குறைவான பருமனில் உள்ள எலும்புத்துண்டுகளால் ஆனது. அவை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் சிறிய பருமனில் உள்ள டிஸ்க் எனும் சற்று தடித்த தட்டு வைக்கப்பட்டு , மேலும் தசைகள்  ligament எனப்படும் நார்களால் வலுவான முதுகெலும்பாக அமைந்து உடற்கூட்டை அமைப்பதில் தனது தொழில்களில் ஒன்றாக கொண்டுள்ளது.
ஒவ்வொரு முதுகெலும்புத் துண்டுகளும் தங்களது டிஸ்க் அமைந்துள்ள பாகத்தை விட்டு பின்பக்கமாக மீதிப் பாகங்களைக்கொண்டு துவாரமொன்றை அமைக்க, அது அடுக்கப்படும்போது, துவாரங்கள் எல்லம் சேர்ந்து குழாய் அமைப்பொன்று உருவாக்கப்படுகின்றது. இக்குழாய் மண்டையோட்டின் கீழே உள்ள துளையுள் தொடர்பாயுள்ளது. 
மண்டையோட்டினுள் மூளை உள்ளது என சிறுவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மூளை இல்லாதவனுக்கும் தெரியும். 
நரம்புக்கலங்கள் பலசேர்ந்து, விசேட அமைப்புகள் பல அமையப்பெற்று மண்டையோட்டை நிரப்பிக் கொண்டிருக்கும் மூளையிலிருந்து நரம்புகளும் அவற்றின் இணைப்புக்கலங்களும் சேர்ந்து, வாழையின் நடுப்பகுதித் தண்டுபோல், மண்டையோட்டின் கீழ் துவாரத்தினூடாக - அதாவது மண்டையோட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து, நமது முதுகெலும்புக் குழாய்க்குள் நுழைந்து, இடுப்பு முள்ளந்தண்டுவரை செல்கின்றது. இது முண்ணான் (spiral cord) என பெயர் கொண்டுள்ளது. (சீரான புடலங்காய் அல்லது முருங்கைக்காய் என்று உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.)


நமது உடம்பின் அனைத்துப்பகுதியிலிருந்தும் நரம்புகள் இந்த முருங்கைக்காய் முண்ணானுடன் தொடர்பு கொள்ள, இந்த முண்ணானிலிருந்து நரம்புகள் வெளிவந்து உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல -நரம்புகளின் வலைப்பின்னல் உடம்பு முழுவதும் உள்ளது.
சூடாக உள்ளதா? குளிரா ? பூச்சி ஊர்கின்றதா? நுளம்பு (கொசு) கடிக்கின்றதா? ஊசி குத்துகின்றதா? etc போன்ற உணர்வுகள், கை, கால் அசைவு, உடம்பு அசைவு போன்றவற்றை இந்த நரம்புகள், முண்ணான், மூளை என்பன இணைந்து செய்கின்றன.
ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதிக்கப்பட்டால், அதற்குரிய பகுதியில் உணர்வுகள், அசைவுகள் நம்மிடமிருந்து விடைபெறும். இதையும் விட முண்ணானின் பகுதி ஒரு மட்டத்தில் பாதிக்கப்பட்டால், சிதைவடைந்தால், அந்த மட்டத்திற்கு  கீழே உள்ள உடற்பகுதி எல்லாமே இயக்கம், உணர்வு என்பவற்றை இழந்துவிடும்.

இந்த முண்ணான் சிதைவு சில நோய்களாலும் ஏற்படலாம். முண்ணானை பாதுகாக்கும் முள்ளந்தண்டு எலும்புகள் ஒன்றோ, இரண்டோ உடைந்து விலகி முண்ணானை அழுத்தி, சிதைவடையச் செய்யலாம். டிஸ்க் விலகியே மேற்கூறிய பாதகத்தைச் செய்யலாம். 
அடுத்து வரவிருப்பது - முதுகெலும்பு பாதிப்பு

Saturday, April 06, 2019

பகுதி 3: பதட்டம் தவிர்க்கும் மூச்சுப் பயிற்சி


சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


மூச்சுப் பயிற்சி

உங்களைச் சுற்றியுள்ள சுத்தமான இயற்கைக் காற்றை மூக்கின் மூலமாக, அவசரப்படாமல் மெதுவாக இழுங்கள். முடிந்தவை உள் இழுத்து அதேசமயத்தில் உங்கள்  இடது கை விரல்களில் பெருவிரல் நுனியையும், சுட்டுவிரல் நுனியையும் தொட்டவாறு இருந்தால் நல்லது. இழுத்த காற்றை 4-5 செக்கன்கள் வைத்திருக்க வேண்டும். பின்பு இதுவரைக்கும் சாதரணமாக மூடியிருந்த வாயை திறந்து, காற்றை வாய் மூலமாக வெளியிடுங்கள். அவசரப்படாமல் இதனை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். இதனை 4-5 தடவை செய்யலாம்.

இப்போது எல்லாமே உங்களுக்கு வெளிச்சமாகின்றது. நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்? பக்கத்தில் யார் யார் நிற்கின்றார்கள்? எல்லாமே தெரிய வரும். இப்போது நீங்கள் தளர்வு நிலைக்கு வந்திருக்கின்றீர்கள்.
இன்னுமொரு காட்சிக்கு வருவோம்.

உங்கள் வயதை நாற்பதுக்கு மேல் என எண்ணிக்கொண்டு , இக்காட்சியில் உங்களையே கதாநாயகனாக ஆக்கிக் கொள்கிறேன்.
நீங்கள் ஒரு விடயமாக அலுவலகம் ஒன்றினுள் நுழைகிறீர்கள். ஏற்கனவே, அந்த விடயமாக நான்கு தடவைகளுக்கு மேல் அங்கு போயிருக்கிறீர்கள். விடயம் சரியாவந்த பாடாயில்லை. கடைசியாக ஒரு பத்திரத்தின் மூலப்பிரதி கேட்டு அதையும் கையளித்திருக்கிறீர்கள். எட்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள உங்கள் வீட்டிலிருந்து பேருந்து மூலம் இங்கு வருகின்றீர்கள்.
இப்போது குறிப்பிட்ட ஒரு உத்தியோகத்தரிடம் போய் நிற்கிறீர்கள். ஏற்கனவே பல தடவை, அவரிடம் போயிருந்தும், இப்போது அந்த உத்தியோகத்தர் உங்களிடம் 'என்ன வேண்டும்?' எனக் கேட்கிறார்.
நீங்கள் விடயத்தச் சொல்ல உத்தியோகத்தர் ஒரு கோப்பை எடுத்து, திறந்து பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்கனவே கையளித்த மூலப் பிரதியை கேட்கிறார்.
நீங்கள் ஏற்கனவே தந்துவிட்டதைச் சொல்கிறீர்கள் அவர் மறுக்கிறார். வாக்குவாதம் வலுக்கிறது. உங்களுக்கு ரென்சன் கூடி கோபம் தலைக்கேறுகின்றது. 

ஏற்கனவே உங்களுக்கு பிளட்பிரஷர் அதிகம். பிளட்பிரஷர் கூடுகின்றது. அதிக பிளட்பிரஷரால் உங்களுடைய மூளையில் உள்ள சிறிய இரத்தக்குழாய் வெடிக்கலாம். விளைவு பக்கவாத நோயாளியாக உங்களை சரிந்து விழச் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் சிலசமயம் உங்களை பிணமாகவே மாற்றலாம்.
இது எதுவும் நடக்காமல் கடகட வென அலுவலகத்தை விட்டு வெளியேறி, வீதிக்கு வந்து பேருந்து தரிப்பிடத்தில் நிற்கிறீர்கள். உங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இரண்டு பேருந்துகள் உங்களைக் கடந்து செல்கின்றன. அவை எந்த ஊருக்கு போகின்றன என்று பெயர்ப்பலகையைப் பார்க்காததால் தவறவிடுகிறீர்கள். பக்கத்தில் நிற்பவர் யார் யார் என்று கூட உணராமல், மூளைக்குள் காரியாலயத்தில் நடந்த சம்பவமே நிரம்பியிருக்கின்றது.

இந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், இனிமேலும் தினமும் இடைக்கிடை என்ன செய்ய வேண்டும்.
மூச்சுப் பயிற்சியைச் செய்கிறீர்கள்.
இப்போது எல்லாமே உங்களுக்கு வெளிச்சமாகின்றது. நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள் என்பது புரிகிறது. இப்போதுதான் உணர்கிறீர்கள் உங்கள் குடையையும் இன்னுமொரு சிறிய பையையும் உத்தியோகத்தர் மேசைமேல் மறந்து வைத்துவிட்டு வந்ததை.
மூச்சு விடயத்தை விடாது செய்துகொண்டு காரியாலயத்தினுள் நுழைகின்றீர்கள். நீங்கள் செய்வது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.  உத்தியோகத்தரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள். அவரும் உங்களிடம் 'நான் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதோ இருக்கிறது உங்கள் பத்திரத்தின் மூலப்பிரதி, வேலைப் பழுவில் வேறு இடத்தில் வைத்துவிட்டேன். இன்னும் இரண்டு நாளில் உங்கள் விடயம் பூர்த்தியாக கடிதம் உங்களுக்கு வரும்' என்று புன்னகையுடன் சொல்கிறார்.  தான் எடுத்து வைத்திருந்த குடையையும், சின்ன கைப்பையையும் கொடுக்கிறார். 

நன்றி சொன்ன உங்கள் முகத்தில் புன்னகை. காரியாலயத்தில் இருந்த அனைவர் முகத்திலும் புன்னகை. அவர்களிடம் புன்னகையாலே விடைபெற்று வெளியே வருகின்றீர்கள்.
இப்போது பேருந்தில் வீட்டிற்கு பயணம் செய்யும் நீங்கள் விட்டு விட்டு தேவையான போதெல்லாம் மூச்சுப் பயிற்சி செய்கிறீர்கள். ஆறுதல் அடைகிறீர்கள்.

அந்தக் குடும்பத்தலைவியும் கணவனும் கூட காலைப் பரபரப்புக்கிடையில் வேலை செய்துகொண்டே மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்களானால் அவர்களுக்கு ஏற்பட்ட ரென்சன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

எனவே, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த இலகுவான பயிற்சியை விட்டு விட்டு உங்களால்  நாள்முழுக்க செய்ய முடியும்போதெல்லாம் செய்யுங்கள்.
இவை எல்லாவற்றையும் விட சிலர் தொடர்ச்சியான ரென்சனுக்கு ஆளாகி இருப்பர். அவர்களுக்கு தூக்கமின்மை, கோபம், புலனை ரிவி பார்த்தல், பத்திரிகை வாசித்தல் போன்றவற்றில் செலுத்த முடியாமை, பசியின்மை. தொழிலில் அக்கறை காட்டாமை , சமூகத்தொடர்பை தவிர்த்தல் என்று பல பிரச்சினைகளுடன் இருப்பார்கள். மனநோயாளியான நிலைதான்.

போரிலோ அல்லது அடக்குமுறையாளர்களால் தொடர்ச்சியான சித்திரவதைக்குள்ளானவர்கள், பலாத்கார வன்புணர்வுக்கு உள்ளானவர்கள், குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்கள் அல்லது வேறு ஆட்கள் விபத்தில் அல்லது வேறு வகையில் கொல்லப்படுவதை நேரில் பார்த்தவர்கள் போன்றோர் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாவார்கள்.

இவர்களுக்கு மனோவைத்திய நிபுணர் அல்லது அது பற்றி அறிவுள்ள சாதாரண வைத்தியர் அல்லது ஆற்றுப்படுத்துவோர் என தமிழில் அழைக்கப்படும் கவுன்சிலர், பிஸியோதெறபிஸ்ட் ஆகியோர் கொண்ட குழு வைத்தியம் பார்த்து குணமடையச் செய்வர்.

மூச்சுப்பயிற்சி நீங்களாகவே செய்து உங்களுக்கே பயன் கிடைக்க கூடிய ஒரு வழி.
பயிற்சி செய்கின்றீர்கள்!
ஆறுதல் அடைகிறீர்கள்!

அடுத்து வரவிருப்பது - விபத்துகளும் காயங்களும்