Tuesday, October 03, 2017

ஈழ நாடு

இலங்கையில் விடுதலைப் போராட்டக் காலங்களில் (1970 - 2010), ஈழம், ஈழவர், ஈழ  என்ற சொற்கள் மிக அதிகமாகப் புழக்கத்திற்கு வந்திருந்தன.
அதற்கு முன்னர் ஈழ நாடு என்றொரு பத்திரிகை, இலங்கையின் பழைய பெயர் ஈழம் என்ற அளவில் புழக்கத்தில் இருந்தது தான் ஈழம்.


ஈழ மக்களை ஈழவர் என்று அழைத்து மகிழ்ந்தும் இருந்தோம், சில காலம்.
திடீரென, ஈழத்தவர்க்குக் கொஞ்சம் பரந்துபட்ட அறிவு தெளிந்த போது, ஈழவர் என்பதில் ஒரு நிறுத்தல் ஏற்பட்டது. அந்தச் சொல்லை அறவே தவிர்த்து விட்டு இலகுவில் வெளியே வந்து விட்டார்கள். காரணம் என்னவென்றால், கேரளாவில் இருக்கும் ஈழவர் மக்களும் அவர்களின் சமூக நிலையும். ஈழ வேட்கை வீரியர்களிற் பலர் தம்மை ஈழவ இனமாக அடையாளம் காணத் தயாராக இருக்கவில்லை. சாதீயம் முன்னுரிமை எடுத்துக் கொண்டது.


ஆனால், இலங்கை, ஏன் ஈழம் என்ற பெயரால் வழங்கப்பட்டது?

இலங்கை முழுவதுமே சுமார்  ஒரு பத்து இருபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஈழவ மக்கள் வாழ்ந்த நாடாக இருந்திருக்க வேண்டும். அதனால் ஈழ நாடு என்ற பெயர் வந்திருக்கலாம். சேர நாட்டிலும் அவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். கேரளாவில் அவர்களின்  தற்போதைய மக்கட் தொகையைப் பார்க்கும் போது அவர்கள் ஒரு காலத்தில் பெருந்தொகையாக வாழ்ந்த இனமாக இருக்க வேண்டும் என்று கொள்ளலாம். அவ்வாறே அவர்கள் ஈழத்திலும் இருந்திருக்க வேண்டும்.

அந்த ஈழவ மக்கள் பல்கிப் பெருகி அவரிடையே வேற்றுமைகள் உருவாகிக் காலப் போக்கில் அவர்கள் இனப் பெயர்கள் மாற்றமடைந்து இன்னமும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறொரு பெயரால், அவர் அடையாளம் சிதைக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு வாழ்கிறார்கள்.
இப்படிச் சிதைக்கப்பட்டவர்களிற் சிலர்  தமிழகத்தில் வாழ்ந்து வருபவர்கள் (நாடார்). இவர்கள்  இன்னொரு சிதைக்கப்பட்ட பெயரால் அழைக்கபடுகிறார்கள். இந்த மக்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், அவர்கள் ஒரு பெரிய நாடாக ஒரு காலத்தில் விளங்கியிருக்கக் கூடியவர்கள் என்று கொள்ளலாம்.
நளவர், பள்ளர் என்ற இம்மக்களின் வரலாற்றை ஒரு ஆராய்ச்சியாளர், தந்திரமாகவோ அன்றி ஆய்வைச் செவ்வனே செய்யாமலோ, வேறொரு விதமாக 1960/70க களில் வெளியிட்டார். அது முழுக்க முழுக்கத் தவறே. நாடார் (ஈழவரோடு தொடர்பான ஒரு குழு) என்ற குழுவிலிருந்து வந்தவர் நளவர் என்று இலகுவில் கொள்ளாமல், சிங்களரிலிருந்து நழுவி வந்தவர்கள் என்று ஒரு ஆய்வாளர் பிதற்றியிருந்தார்.

இலங்கைக்கு, பின்னர் ஒரு காலத்தில் வந்த ஒடிசாப் பகுதி மக்கள் உள்ளுர் மக்களுடனும் தென்னிந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர்களுடனும் கலந்து இன்னொரு இனம் தோன்றியதும் இப்பொழுது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.

பின்னொரு காலத்தில் 1900 ஆண்டுகளில் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் வேண்டிப் பேச்சுகள் நடைபெற்ற காலங்களில், பிரித்தானிய இலங்கையில் ஒரு மக்கள் கணக்கெடுப்பைச் சாதி வாரியாக எடுத்தார்கள். சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் மக்களில் யாரிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கலாம் என்று நினைத்து எடுத்திருக்கக் கூடும். இந்தக் கணக்கெடுப்பில், தமிழர் மத்தியில் இருந்த புள்ளிவிபரம் வியக்கத் தக்கதாக இருந்தது. ஒடுக்கப் பட்ட மக்கள் என்றிருந்தவர்கள் ஏறக்குறைய 70% ஆக இருந்தார்கள். அதிலும், ஈழவர்க்கு நெருங்கிய இனங்களாக இருந்த இரு பெரும் பிரிவினரும் சேர்ந்து 50% அளவில் இருந்தார்கள் ஈழ நாட்டில்.

No comments: