Saturday, July 23, 2011

தமிழ் கற்றோம்

தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவில் ஒரு மாணவர் வாசிக்கும் கவிதை.

தந்தை தாய் கைப் பிடித்துக்
கலவர முகத்துடனே
நாலு வயதில் வந்தோம்
தமிழ்ப் பள்ளியினை நாடி

வணக்கம் கூறி வரவேற்றார்
வடிவாக ஆசிரியரும்
வணங்கி வரம் பெற்றதுபோல்
கற்றோம் தமிழை நாம்

ஆனா முதல் அகேனம் வரையும்
கானா முதல் னானா வரையும்
காணாத பல எழுத்தும் வாயில்
பூராத புது ஒலியும்
பழகினோம் பார்த்தோம்
எழுதியும் வந்தோம்

மொழி மட்டும் படிக்கவில்லை
தமிழ்ப் பள்ளியில் நாம்
தமிழ்ப் பண்பாடும் பழக்கமும்
வழக்கமும் அறிந்தோம் நாம்

புலம் பெயர்ந்து வந்த நாம்
புறம்பாகத் தேர்ச்சி பெற்றோம்
புலவர் பலர் வளர்த்து விட்ட
என்றும் புதுத் தமிழ் மொழியில்

கற்றது நல் தமிழ்
நம் பெற்றோர்க்குத் தந்தது
நன் மக்கள் எனும் பட்டம்
பெருமையாகப் பேசிக்கொள்வர்
எம் பெற்றோர் எம்மைப் பற்றி
தமிழ் தெரிந்த பிள்ளைகள் எம்
பிள்ளைகள் என்று நாளும்

முழுநேரக் கல்வியோ
புகுந்த மொழி மூலம்
மூச்சு விடுவதுமே
அம்மொழியில் என்றிருக்க
இரண்டரை மணித்துளிகளில்
இனிதாய்க் கற்றுவந்தோம்
தாய் மொழியாம் தமிழ் மொழியை

ஆண்டுகள் பத்து
கடந்து விட்ட இந்நிலையில்
தமிழ் தெரிந்த தமிழராகத்
திரும்பிப் பார்க்கிறோம்
கடந்து வந்த பாதையை நாம்
அன்பான பெற்றோரே
ஆசிரியரே தோழர்களே
அனைவருக்கும் நன்றிகள்
வாழ்த்துகள் வணக்கங்கள்

செயபால் 2010

2 comments:

அம்பாளடியாள் said...

என் தமிழ்த்தாய் உறவு உங்களுக்கு எனது முதல் வணக்கம்.
புலம்பெயர் மண்ணில் பல சிரம்மங்களுக்கு மத்தியில் எம்
சிறார்களின் விடாமுயற்சியினால் தாய்மொழி கற்றுத் தேர்ச்சியடைவது
எத்தனை சிரமம் என்பதை நான் நன்கு உணர்வேன் .அந்தவகையில்
இங்கு ஒரு சிறுவன் அதன் அனுபவத்தையும் பயனையும் அழகிய
கவிதைவடிவில் தந்துள்ளமை அருமை!...வாழ்த்துக்கள் அந்த சிறுவனுக்கு.
மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு.

Jeyapalan said...

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
இக் கவிதை ஒரு மாணவன் சொல்வதற்காக நானே எழுதியது.