Wednesday, July 01, 2020

நிறவெறி

பென்னம்பெரும் பூமி சின்னஞ்சிறி தாச்சு
வண்ணம் நிறை மாந்தர் எங்கும் வதிவாச்சு
வெள்ளை பெரிதென்று எண்ணுகிற நச்சு
கொள்ளை யிடுகிறதே நிறமக்கள் மூச்சு

மதமென்றும் மொழியென்றும் நிறமென்றும் இனமென்றும்
பரந்துவாழ் மக்களிலே காண்பதொரு பொருட்டல்ல
பெரிதென்றும் சிறிதென்றும் படுத்துவது பண்பல்ல
சார்புநிலைத் தத்துவத்தில் பெரிதென்றும் பெரிதுமல்ல

மனிதரிலே கிளைவிட்ட பல்வேறு குழுமங்கள்
பலமிக்க கூட்டத்தால் தாழ்த்தியே வீழ்த்திவிடும்
புரையோடிப் புழுத்திருக்கும் பாகுபாட்டுப் பேய்தன்னை
துடைத்தழித்து வீறுநடை நாம் போடவேண்டாமோ

நிறங்களின் கோலம் அழகென ரசிப்போரே
மனிதரில் தோல்நிறம் கண்டு வெறுப்பு ஏனோ
வெள்ளை உயர்வென வண்ணம் மிதிப்பீரோ
சிந்தை சிதைந்த பேதமைப் பேயரே

எந்தவொரு பாகுபாடும் வெறிகொண்டு திமிறயிலே
வெந்தழியும் நாடுகளும் பண்பாடும் மனிதமுமே
இந்த நிலை மாறிவிட நற் தலைமை எழுந்தோங்கி
துணிவோடு வழிகாட்ட மக்களதைப் பின்தொடர்வார்

குறைவென்று மற்றவரைக் கொடுமைப்படுத்தும் வலி
தமக்கே நிகழுவதாய்க் கொஞ்சமெண்ணிப் பார்த்தாலே
கொடிதினிநாம் செயலாகா என்றுணர்ந்து குறுகுவரே
கொலைவரையே சென்றுவிடும் நிறவெறியைத் தகர்ப்பாரே

பாகுபாடு பேசாத அனைவரையும் நேசிக்கும்
கல்வியினைப் பிள்ளைகட்குப் புகட்டிநாம் வளர்த்தாலே
மனிதநேயம் வளர்ந்துவிடும் இனவெறியும் அழிந்துவிடும்
இந்த அவனி வந்தவர்கள் இன்பமாய் வாழ்ந்திடுவர்

ஆக்கம்: . செயபாலன், 2020

பேராதனை 80

வானுயர் மலைகள் சூழ் கண்டி மாநகரம்
ஞானியர் விளையும் பேராதனை வளாகம்

ஆவலாய் விஞ்ஞான பீடமதிற் சேர்ந்து
கல்வியும் கேள்வியும் சிறக்கவென வெண்ணி
எண்பதாம் ஆண்டார்கள் வருகிறார் பிந்தி
விடுவிடென நுழைகிறார் எண்பத்து ஒன்றில்

விடுதிகளிற் புகுந்தவுடன் தொடங்கியது பகிடிவதை
விரிவுரைகள் கேட்கமுதல் விதவிதமாய்க் கண்டுகேட்டோம்
வெட்கத்தைக் கொன்றார்கள் கூச்சத்தை வென்றார்கள்
வெட்கமே வெட்கித் தலை குனிய வைத்தார்கள்

இடம்புதிது வளம்புதிது முகம்புதிது என்றாக
காலை உணவுக்குக் கடைவாசல் தேடி வந்து
பாண் பாகையாய் பரிப்பெக்காய் என்று கேட்டு
பழகினோம் புதியவற்றைப் பலதரப்பு மக்களுடன்

படித்தோம் கிழித்தோம் சிரித்தோம் களித்தோம்
சுற்றுலாக்களும் சென்றோம் சுத்தினோம் நாடளாவி
பத்தியம் தவறியதால் பாதியிலே வயிற்றோட்டம்
கபரணக் காட்டினிலே கலக்கி அடித்ததடா

அடிக்கின்ற அடியினிலே கழிப்பறையா தேடநேரம்
அங்கங்கே நிப்பாட்டி அவசர நிவாரணம்
அந்த அவத்தையிலும் அடித்தானே ஒரு பகிடி
மருசிறா இடம் மச்சான் அமத்தி வாசியடா

வழிபடவும் விழிபடவும் மலைமீது வீற்றிருக்கும்
குறிஞ்சிக் குமரனிடம் வெள்ளிகளில் பொடி நடை
போகமுதல் கேட்டிடுவான் சோறா சோட்டீற்சா
அதற்கேற்ப வயிற்றிலிடம் ஒதுக்கிவிட வேண்டுமன்றோ

பேராதனை வந்தும் பேடு தேடியோரும் உண்டு
தேடியவர் சிலருக்கு விழுந்தும் விட்டுதுகள்
போட்டவர்க்கு நீராட்டு அல்விஸ் குட்டையிலே
போடாதோர் தாமாக ஏன் குதித்தார் தெரியலையே

கலைவிழாக்கள் என்றாலே எம் பங்குமென்று முண்டு
மேடையிலே ஏறிடுவோம் பாட்டுக்கும் கூத்துக்கும்
அழற்பட்டோர் ஒலிவாங்கி பறித்தே எறிந்தாலும்
விடாது நம் கச்சேரி நடாத்தி முடித்தவர் நாம்

 தென்னிலங்கை நம்வாசம் எண்பது களிலென்றால்
எண்பத்து மூன்றுதனைக் கண்டவரில் நாமுமுண்டே
பண்பாடு தொலைத்தோரால் பலமாகத் தாக்குண்டோம்
பட்டதனாற் பழகிவிட்டோம் தடை தகர்த்து வாழ்வதற்கே

பல்லாண்டு போனதுவே நம்பயணம் புறப்பட்டு
நடுவழியில் இரு நண்பர் பிரிந்திட்டார் நமைவிட்டு
இப்போது செல்கின்றோம் பின்னாளில் நீர் வாரும்
என்றெண்ணிப் போய்விட்டார் மறக்கேலா தோழர்கள்

பசுமரத்து ஆணி போல பதிந்துவிட்ட நினைவுகளை
பலதடவை இரைமீட்டு பகிர்ந்து மகிழ்கின்றோம்
பாண்மனோ கினிகூரு ஜிம்கலி டோப்பென்று
பட்டப் பெயர்கள் பல மறக்காமல் உரைக்கின்றோம்

பட்டப்பெயர் கொண்டோம் பட்டங்களும் பெற்றோம்
பல்வேறு திசைகளிலே தூக்கி எறியப்பட்டோம்
இருந்தாலும் இடைக்கிடையே  கூடிக் களிக்கின்றோம்
இளைய நினைவுகளை இனிதே சுமக்கின்றோம்

செயபாலன் 2020

Tuesday, June 02, 2020

சுத்தும் சில்லு

இளவயதில் மத்தியானம்
கோப்பை தட்டிக்கூப்பாடு
சாப்பாட்டுக் கம்மாவிடம்
இப்போதும் அது தொடரும்
என்னிடமே என் மகவு

Sunday, May 24, 2020

காதல் யோகா

காதல் யோகா செய்யுங்காலை
காணுகின்ற சுகமோ கொள்ளை
தாகந் தீர்க்குந் தண்ணீர்போலே
போகந் தூர்க்கும் மருந்து வில்லை

முன்னைப் பொழுதில் உன்னை நானும்
எண்ணிப் பார்க்கும் போதே இன்பம்
உந்தன் பெயரை எழுதிப் பார்த்து
சிந்தை சிலிர்த்துக் கிறங்கி வீழும்

நானிருக்கும் இடங்களிலே நீயிருந்தால் துள்ளும்
அருகில் நீயும் நடந்து சென்றால்
இடித்து மாளும் இதயம்
இத்தனைக்கும் நீயாரோ நான் யாரோவன்றோ

சொல்லிவிட வேண்டும் அன்பை
நல்ல ஒரு நாளில்
எள்ளி நீயும் நகைத்து விட்டால்
கொள்ளியன்றோ என்னில்

காத்திருந்து பூத்தன என் கண்கள் இரண்டும்
கனிந்தது ஓர்நாளில் என் காதல் வசந்தம்
கைக்கு வந்த காதலினால் பேரானந்தம்
வாழ்க்கையிலே முக்கிய மான அங்கம்

செயபாலன்  2020 மே 22

Friday, April 24, 2020

கொரொனா வைரசு நியதி




கோவிட் 19 வைரசால் 
புது நியதி

திங்கள் வருது
ஒரு நாள் பிந்தி
வெள்ளி வருது
ஒரு நாள் முந்தி
இடையில் இருப்பது
ஒரு நாள் மட்டும்
என்ன மாயம்
வாரமிங்கு 
சுருங்கியதேனோ

மேலும்

சனியும் வருது
ஒரு நாள் முந்தி
ஞாயிறு வருது
ஒரு நாள் பிந்தி
இடையில் கிடைத்தன
மேலிரு நாட்கள்
என்ன மாயம்
வாரவிறுதி 
நீண்டதுமேனோ

கோவிட் வைரசு
வந்து தாக்குது
வேலையில் நாட்கள்
குறைந்து போச்சுது
இதுவே இனிமேல்
புதிய வழமை

புரட்டிப் போட்டது
ஞாலத்தையே
குழப்பிப் போட்டது
சீலத்தையே

======
குறிப்பு:
இக் கவிதை பிறந்தது முதலில் ஆங்கில மூலத்தில். பின்னர் தான் தமிழில் அது பெருப்பிக்கப்பட்டது.
இதோ ஆங்கில மூலம்:

Monday for me 
One day late
Friday for me
One day soon
In between is 
Just three days
This is Covid
Nineteen week


Friday, April 10, 2020

கடை பிடிக்க வேண்டும்


கடை பிடிக்க வேண்டும்

கடைப்பிடிக்க வேண்டியதைக்
கடை பிடிக்க வேண்டுமென்று
கடை பிடித்துத் தமிழழிவைக்
கூவி விற்பார் சிலரிங்கு

முறையாகத் தமிழ் கற்றுச்
சொற்புணர்ச்சி அறிந்துகொண்டு
இலக்கணமாய் எழுதிவர
இயலவில்லைச் சிலருக்கு

சாகாதோ தமிழென்று
கொலை வெறியோடொரு கூட்டம்
காத்திருக்கும் வேளையிலே
அவருக்குக் கைகொடுத்துக்
களமிறங்கிப் பணியாற்றும்
கோடாலிக் காம்புகளின்
கோலமதைப் பாருங்கள்


ஊக்கிகள்:
கட்டி போட்டாயா
கேள்வி பட்டு
கடைபிடித்து
அடைப்பட்டு

Tuesday, February 04, 2020

Lean Tamil Easy

எளிய முறையில் தமிழ் கற்போம் என்ற ஒரு காணொளிப்பதிவு ஏற்றம் காண்கிறது.
தேவையானோர்க்குப் பயன் தர வேண்டும்.







https://www.youtube.com/channel/UCG3mBMLePj98gHAoUk7YEgA/


Saturday, January 11, 2020

தேசிய வாதம் – நாம் தமிழரா?

தேசிய வாதம் – நாம் தமிழரா?

மனிதர்கள் இயல்பாகவே இடம் பெயர்ந்து கொண்டு இருப்பவர்கள். அரசியல், பொருளாதார, சமூக அழுத்தங்களால் மக்கள் இடம் பெயர்வதும் பெயர்ந்த இடங்களிலேயே நிலையாகி விடுவதும் காலங் காலமாக நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு இடங்களிலும் மக்களின் மொழியாக இருக்கும் மொழி, அவ் விடங்களுக்கு இடம் பெயர்ந்த மக்களின் மொழியாகி விடுவது இயல்பே. இவ்வாறு ஒரு இடத்தில் பெரும்பான்மையோரால் புரிந்து கொள்ளப்படும் நிலையிலிருக்கும் மொழியை வந்தோர் ஏற்றுக் கொள்வதும் காலப் போக்கில் அவர்களுக்கும் அதுவே தாய் மொழியாகி விடுவதும் நிகழும்.

தமிழ் நாட்டிற்குப் பல் வேறு கால கட்டங்களில் பல் வேறு மக்கள் பல் வேறு காரணங்களால் குடியேறி வந்திருக்கிறார்கள். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கட்டங் கட்டமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி வந்தவர்கள், வருபவர்கள் ஓரிரு தலைமுறைகளுக்குத் தம் மொழியைத் தம்முள் வைத்திருப்பார்கள். காலப் போக்கில் உள்ளூர் மொழியே அவர்களுக்கும் தாய் மொழியாகி விடும் நிலைமை தான் எங்கும்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கொண்டு வந்த மொழியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஒன்று, உள்ளூர் மக்களுடன் கலந்து, கலப்பு மக்கள் உருவாகி விடுவது இன்னொன்று.

எது எப்படியோ, மக்களோடு மக்களாக ஓர் அடையாளத்தின் பேரால் வந்தோரும், இருந்தோரும் இணைந்து இருக்கும் போது அது ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகமாகும். இதைக் குலைக்க நினைப்பது நல்லதல்ல.

தமிழ்நாட்டினர், தமிழர்களாக மொழி அடையாளம் ஒரு மக்களாக உணரப்படுவது ஒரு சிறப்பு. இந்த அடையாளத்திற்கு யார் உரித்து உடையவர்கள் அல்லது அற்றவர்கள் என்று பிரிவினை செய்வது தவறு.
பல நூற்றாண்டுகள் கடந்த பின்னருங்கூட சிலரின் பூர்வீகங்களைத் தேடித் துருவி, அவர்கள் தற்போது கொண்டிருக்கும் அடையாளத்திற்கு உரியவர்கள் அல்ல என்று பிரித்துப் பார்ப்பது ஒரு பண்பாடற்ற செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது போல், தமிழர்  யார் என்று அறிவதற்கு நதிமூலம் ரிசிமூலம் ஆய்ந்து சென்று அடையாளம் காணப்படுவது ஒரு குறுகிய மனப்பான்மையான பழக்கமாகும்.

நானும் இந் நாட்டான் தான், நானும் தமிழன் தான் என்று உணர்வோடு தலை நிமிர்த்துபவர்களை எல்லோரும் மதிக்க வேண்டும். அவ்வாறு போற்றாமல் பிரிவினைகளைத் தூண்டுவதால் தீங்கு நேரிடும் என்பதற்குப் பல சான்றுகள் நம் கண் முன்னே உள்ளன.

உதாரணமாக, திராவிடம் பேசிய அரசியற் கட்சிகள் முன் வைத்த சில வாதங்களால், பலர் அன்னியப் படுத்தப்பட்டு அவர்களின் தமிழ் அடையாளம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. இது அம் மக்கள் மனதில் கூட ஒரு குழப்ப நிலையத் தோற்றுவித்துத் தாமே தம்மைத் தனிமைப்படுத்தி வாழத் தலைப்பட ஏதுவாகியிருந்தது. தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் பெரும் பங்காற்றிய உ.வே. சாமிநாதையர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் சிறப்பை யார் மறுக்க முடியும்?

இப்போது தமிழ்த் தேசியம் உத்வேகமடைந்து திராவிடம் என்று ஆரம்பித்த போக்கையும் தள்ளி விட்டு, இன்னும் குறுகி, தமிழரைத் தமிழரே ஆள வேண்டும் என்று பேசப்படுகிறது. தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டான் ஆள வேண்டும் என்று முழங்கினால் எவ்வளவு பலமாக இருக்கும்? உலகின் பல நாடுகளை உற்றுக் கவனித்தால் நாம் இவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.

திராவிடக் கட்சிகளில் இருந்த, இருக்கும் வைகோ, கலைஞர் போன்றோரைத் தமிழரல்லாதவர் என்று சொல்வது சரியல்ல. வான்புகழ் வள்ளுவனுக்கு வானுயர் சிலை வைத்த கலைஞர், தமீழ மக்கள் நலன் கருதிப் பல செயலாற்றிய வைகோ, விசயகாந்த் போன்றோரை நாம் அன்னியப்படுத்துவதா? எண்ணற்ற மனிதர்களின் பெயர்கள் ஞாபகம் வருகிறதே. உள்ளத்தால் உணர்வால் தமிழரென்று உணர்ந்து செயற்பட்டவர்களைக் காயப்படுத்துவது தவறு.

“தமிழர் மட்டும்” என்று இப்பொழுது பிளவுபடும் மக்கள், நாளை, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று தம்முள்ளே மேலும் பிளவுபட்டு சிதைந்து விட மாட்டார்களா? சிதைந்திருந்து கெட்டதும் வரலாறு தானே.

மாபெரும் இராச்சியங்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்நாட்டைப் பிரித்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒருவரையொருவர் கொன்று வென்று தானே வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட விளைவுகள் எம்முன்னே நின்று எம்மை நோக்கிக் கை கொட்டிச் சிரிக்கவில்லையா? உதாரணத்திற்கு ஒன்று; மலையாளம் தமிழ் பேதம்.

எல்லா மக்களிடையேயும் நல்லவரும் தீயோரும் இருக்கிறார்கள். இல்லா விட்டால் எட்டப்பன், காக்கை வன்னியன் போன்றோர் எப்படி உருவாகிறார்கள்? அவர்களும் தமிழர் தானே? கோபம், துரோகம், உயிர்ப் பயம், தீராப் பகை, மித மிஞ்சிய சுயநலம் போன்ற குணங்கள் மக்களைத் தம்மிடையே பிரித்துத் தீயவர்களாக்கி விட்டது தான் வரலாறு.

நாம் மட்டும் தான் தமிழரென்று கூவித் திரியும் நாங்கள் எங்கள் குடும்பங்களில் உறவுகளில் காலங் காலமாகக் கலந்திருக்கும் பிறரைப் புறந்தள்ளி விட்டோமா? இந்தத் தனித் தமிழ் அடையாள வாதம் நம்மைப் பிரித்துப் பிரித்து உதறி உதறி இறுதியில் ஓரிருவரில் மட்டும் எஞ்சி நிற்கும். ஏனெனில் இங்கே எந்த ஒரு இனமும் தனியாக இல்லை. பல மக்களின் கலப்பாகவும் கலவையாகவுமே எல்லோரும் உள்ளார்கள்.

இந்தப் பிரிவினை தேடுபவர்கள் கடைசியில் உண்மைய உணரும் போது காலம் கடந்து விடும்.

தோளோடு தோள் கொடுத்து ஒன்றாகப் பயணிக்கும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் அன்னியப் படுத்தப்பட்டு விலக்கி நிற்க வைக்கப்படும் நாளில் மீதமிருக்கப் போவது வெறும் வெறுமையும், தோல்வியும், வெறுப்பும் விரக்தியும் தான்.
ஆகவே நாமெல்லரும் தமிழர் என்ற உணர்வால் ஒன்றுபட்டு உயர்வடைய வேண்டும்.

தமிழ் மொழியும் அதன் சிறப்பு, தொன்மை, பண்பாடு என்பவையும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக மிக முக்கியம். ஆனால் அதன் பேரால் தமிழரையே சொத்தை பிரித்தெடுப்பது இழிவு. நாம் எல்லாம் தமிழரென்ற உணர்வை அனவருக்கும் ஊட்டி உணர்த்தி வளர்த்தெடுத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து முன்னேற வேண்டும்.

Friday, January 03, 2020

வந்தாரை வாழ வைக்கும் நம்மூர்

வந்தாரை வாழ வைக்கும் நம்மூர்


தமிழகம், வந்தாரை வாழ வைக்கும் இடமென்று அம் மக்கள் அடிக்கடி பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். இதை உற்று நோக்கி நம் ஈழநாட்டின் நிலையையும் யோசித்து எம்மிடையே ஈழநாட்டவராக வாழ்ந்த பலரைப் பற்றி எண்ணிய போது நமக்கும் வந்தாரை வாழவைக்கும் பண்பிருப்பதை உணர முடிந்தது.

கோவில்களில் பூசைசெய்ய வரவழைக்கப்பட்டவர்கள், வியாபார நோக்கில் வந்தவர்கள், கலைகளைக் கற்பிக்க வந்தவர்கள் என பலதரப்பட்டவர்கள் தமிழரோடு தமிழ் பேசி வாழ்ந்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, கேரளா போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள் சிங்களவரோடு சேர்ந்து வாழ்ந்தும் வருகிறார்கள்.
ஆகவே இலங்கையும் வந்தாரை வாழவைக்கும் ஒரு இடம் தான்.

Thursday, January 02, 2020

ஒட்டாவா தமிழ்ப்பள்ளி

ஒட்டாவா தமிழ்ப்பள்ளி

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
அந்தக் காலப் பழமொழி அது
அன்று தொட்டு இன்று வரைக்கும்
தமிழர் பெயர்வார் எந்தக் கரைக்கும்

கல்வி செல்வம் வேலைவாய்ப்பு
தீயோர் குலைக்கும் பாதுகாப்பு
தேடப்படும் திரவியமாய்
தேடி வந்தார் கனடாவை

ஐம்பது அறுபது ஆண்டுகளாய்
ஐம்பதோ அறுபதோ தலைக்கணக்காய்
வந்த மக்கள் பல்கிப் பெருக
குழந்தைகளும் பிறந்தனவே

குழந்தைகளும் தமிழ் கற்க
முப்பதுதாண்டு முன்னர் கூடி
ஆரம்பித்தார் கல்விக்கூடம்
ஒட்டாவா தமிழ்ப் பள்ளி

சினஞ்சிறிய பிள்ளைகட்கு
தன்னார்வலர்த் தொண்டர்கூடி
சிறிய அளவில் தொடங்கியதே
சீரிய தமிழ்ப் பள்ளிக்கூடம்

சிலரோடு சில வகுப்பாய்
தொடங்கிய தமிழ்க்கல்விக்கூடம்
நூற்றுக்கணக்கில் மாணவராய்
பூத்துக் குலுங்கும் பூங்காவாய்

புது நாட்டின் புது மொழிகள்
மூளையிலே ஆதிக்கங்கள்
இருந்தும் தமிழை நன்கு கற்று
தமிழினிலே தேர்ச்சி பெற்றார்

தமிழைக் கற்று மொழியின் வேரில்
தழைத்து நிற்கும் தமிழ்ப்பண்பாட்டை
தலையாய்ப் பேணி இனிதாய் வாழும்
தமிழர் தமக்குத் துணையாய் நிற்கும்

ஒட்டாவா தமிழ்ப் பள்ளி
வாழ்க வாழ்க வாழ்கவே

Wednesday, January 01, 2020

பனி பூத்த நீர்

ஆர்ப்பரிக்கும் ஆறு
அடங்கிக்கிடக்குது பாரு
அடியிலே ஓடுது
இன்னும் ஆறு
நீறு பூத்த  நெருப்பல்ல
பனி பூத்த நீர்


மரக்கறி

கரட்சம்பல் முதலெடுத்தேன்
கத்தரிக்காய் அடுத்தெடுத்தேன்
நீட்டு நீட்டு முருங்கைக்காய்
குழம்புக்கறியும் எடுத்தேன்

வட்ட வட்ட வெண்டிக்காய்
பாற்கறியில் சிறிதெடுத்தேன்
வாழைப்பொத்தி வறையும் கூட
விருப்புடனே நானெடுத்தேன்

பாகற்காய் குழம்புக்கறி
பக்கத்தில் பருப்புக்கறி
அதுக்கப்பாற் கீரைக்கறி
வதக்கி வைத்த வெந்தயக்கறி

இத்துணையாய் மரக்கறிகள்
விதவிதமாய் நாடோறும்
விருப்புடனே பரிமாறும்
என் வீட்டுக்காரியோர்
வித்தகி தானே சொல்