Wednesday, July 01, 2020

நிறவெறி

பென்னம்பெரும் பூமி சின்னஞ்சிறி தாச்சு
வண்ணம் நிறை மாந்தர் எங்கும் வதிவாச்சு
வெள்ளை பெரிதென்று எண்ணுகிற நச்சு
கொள்ளை யிடுகிறதே நிறமக்கள் மூச்சு

மதமென்றும் மொழியென்றும் நிறமென்றும் இனமென்றும்
பரந்துவாழ் மக்களிலே காண்பதொரு பொருட்டல்ல
பெரிதென்றும் சிறிதென்றும் படுத்துவது பண்பல்ல
சார்புநிலைத் தத்துவத்தில் பெரிதென்றும் பெரிதுமல்ல

மனிதரிலே கிளைவிட்ட பல்வேறு குழுமங்கள்
பலமிக்க கூட்டத்தால் தாழ்த்தியே வீழ்த்திவிடும்
புரையோடிப் புழுத்திருக்கும் பாகுபாட்டுப் பேய்தன்னை
துடைத்தழித்து வீறுநடை நாம் போடவேண்டாமோ

நிறங்களின் கோலம் அழகென ரசிப்போரே
மனிதரில் தோல்நிறம் கண்டு வெறுப்பு ஏனோ
வெள்ளை உயர்வென வண்ணம் மிதிப்பீரோ
சிந்தை சிதைந்த பேதமைப் பேயரே

எந்தவொரு பாகுபாடும் வெறிகொண்டு திமிறயிலே
வெந்தழியும் நாடுகளும் பண்பாடும் மனிதமுமே
இந்த நிலை மாறிவிட நற் தலைமை எழுந்தோங்கி
துணிவோடு வழிகாட்ட மக்களதைப் பின்தொடர்வார்

குறைவென்று மற்றவரைக் கொடுமைப்படுத்தும் வலி
தமக்கே நிகழுவதாய்க் கொஞ்சமெண்ணிப் பார்த்தாலே
கொடிதினிநாம் செயலாகா என்றுணர்ந்து குறுகுவரே
கொலைவரையே சென்றுவிடும் நிறவெறியைத் தகர்ப்பாரே

பாகுபாடு பேசாத அனைவரையும் நேசிக்கும்
கல்வியினைப் பிள்ளைகட்குப் புகட்டிநாம் வளர்த்தாலே
மனிதநேயம் வளர்ந்துவிடும் இனவெறியும் அழிந்துவிடும்
இந்த அவனி வந்தவர்கள் இன்பமாய் வாழ்ந்திடுவர்

ஆக்கம்: . செயபாலன், 2020

No comments: