Thursday, November 09, 2006

இலவசமாய்ப் புத்தகங்கள்

அள்ளு கொள்ளையாகக் குவிந்து இருக்கின்றன அரிய பெரிய தமிழ்ப் புத்தகங்கள். அனைத்தும் ஒருங்குறித் தமிழில் வலையேற்றி இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய வேலை. எவ்வளவு பெரிய தொண்டு.

வாழ்க அவர்கள் சேவை.

நீங்களும் பயன் பெற இங்கே அமத்துங்கள்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

Monday, October 09, 2006

விஜய் வளர்கிறாரா?

நடிகர் விஜயின் வளர்ச்சிக்குச் சில வரிகள்.

அண்மைக் காலங்களில் நடிகர் விஜயின் படங்களை எல்லோரும் விரும்பிப் பார்க்குமளவிற்கு மக்கள் மத்தியில் அவை பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. குழந்தைகள் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக விஜயின் படங்களும் அவரது பாத்திரங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வயதுக் குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பும் ஒரு நடிகராக அவர் வளர்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே. நல்ல திசையில் அவரது தொழில்விருத்தி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர் கவனிக்க வேண்டிய ஒரு மிக முக்கிய விடயமும் உள்ளது.

அண்மையில் அவரது ஆதி, பகவதி, சிவகாசி, மதுர போன்ற படங்களை பார்க்க நேர்ந்தது. படங்களில் அவர் வழக்கம் போலவே நல்ல மனிதனாக வந்து நல்லது செய்கிறார். பாடல்கள், நடனம் என்று குழந்தைகள் விரும்பும் அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் அவர் ஒரு மகா தவறைத் தனக்கும் தெரியாமல் இப் படங்களில் செய்திருப்பது குழந்தைகளின் செயல் மூலம் அவதானிக்கப்படக் கூடியதாக இருந்தது. குழந்தைகள் சண்டைக் காட்சிகளை ரசிக்கிறார்கள். ஆனால் மேற் சொன்ன படங்களில் இருப்பவை, சண்டைக் காட்சிகள் அல்ல கொலைக் காட்சிகள். அவற்றைக் காணக் குழந்தைகள் கிலி கொள்கிறார்கள், வெறுக்கிறார்கள், ஓடி ஒளிக்கிறார்கள். அவ்வளவுக்குப் பயங்கரமான காட்சிகள் அந்தச் சண்டைகள். குழந்தைகளின் அபிமான நடிகர் குழந்தைகளின் மனோ நிலையைப் புரிந்து சண்டை காட்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். வேறு பல படங்களிலும் மகா பயங்கரமான கொலைக் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால், அந்தப் படங்களின் நடிகர்கள் விஜய் போல் குழந்தைகளின் அபிமானம் பெற்றவர்களல்ல. சூர்யா சமீப காலமாக அந்த இடத்தை நெருங்கி வருகிறார், அவரும் இந்தக் கொலைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்தக் குலை நடுங்க வைக்கும் கொலைப் பயங்கரங்களை விஜய் தன் படங்களில் இருந்து நீக்கா விட்டால் அவர் ஒரு ரசிகர் பட்டாளத்தை மிக மலிவாக இழக்கப் போகிறார். இன்றைய குழந்தைகள் தான் அவரை நாளை உச்ச நடிகர் என்ற தானத்திற்கு ஏற்றி வைக்கப் போகிறவர்கள் என்பதை விஜய் கருத்திற் கொண்டு தன் படங்களையும் காட்சிகளையும் தெரிவு செய்ய வேண்டும். காசாசையில், தயாரிப்பளர்களும், இயக்குனர்களும் எப்படிப் பட்ட கதைகளையும் காட்சிகளையும் கொண்டு வருவார்கள். அதைத் தணிக்கை செய்ய வேண்டியது முன்னணிக் கதாநாயகனின் பொறுப்பு. வளரும் நாயகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டதோடு மட்டுமில்லாமல், குழந்தைகள் பார்க்கக் கூடிய படங்களும் வர வேண்டும் என்ற அற்ப ஆசையில் ஒரு எழுத்து.

Wednesday, October 04, 2006

கணினியில் தமிழ் - பகுதி 7



-1- - -2- - -3- - -4- - -5- - -6-



கணினியில் தமிழ் - பகுதி 7

இப்படியாகக் கணினியில் தமிழ் தவழத் தொடங்கி, எழுந்து நடை பயின்று, இன்று ஒருங்குறியாக நிமிர்ந்து நிற்கிறது. பற்பல இணையத் தளங்களும் மென் பொருட்களும் தேடல் இயந்திரங்களும் இப்பொழுது ஒருங்குறி மூலம் மிகப் பிரபலமாகி விட்டன. ஒருங்குறி எழுத்துருக்களை இப்பொழுது கணினியில் அடிப்படையிலேயே சேர்த்தும் விட்டார்கள். இதனால் எல்லோரும் இன்புற்றிருக்க இலகுவாகக் கோலோச்சுகிறது ஒருங்குறி.

இணையக் கடைகள், பிறரின் கணினிகள் போன்றவற்றில் ஈ-கலப்பையோ அல்லது கீ-மானோ இல்லாதவிடத்து, சுடச் சுட ஒருங்குறியில் அல்லது பாமினியில் தமிழை அடிப்பதற்கு உதவியாக திரு. சுரதா யாழ்வாணன் , ஈழம் எழுதி என்ற கருவியையும் இணையத்தில் தந்துளார். அதன் தொடுப்பைப் பின்னாலே தருகிறேன்.

ஒருங்குறித் தமிழ் இப்பொழுது எதிலும், ஏன் எமது வலைப் பூக்களிலுங் கூடக் கோலோச்சுகின்ற போதும், ஆங்காங்கே பல வல்லுனர்கள் கணினியில் தமிழின் இருப்பைச் செம்மை செய்ய அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் கூட டாப் (TAB), டியூன் (TUNE) என்றெல்லாம் பல முனைகளில் ஆய்வுகள் நடக்கின்றன. எல்லாம் நன்மையைத் தமிழுக்கும் தமிழருக்கும் தரட்டும்.

இதுவரை என் தொடரைத் தொடர்ந்து வந்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. இதில் இருக்கும் குறைகள், தவறுகள் என்பவற்றை தயவு செய்து மன்னியுங்கள். அப்படியே, உங்கள் கருத்துக்களை எனக்குப் பின்னூட்டமாகவோ தனி மின்னஞ்சலிலோ தெரிவியுங்கள்.

மீண்டும் நன்றி, வணக்கம்.


பிற் குறிப்பு:

மேலதிகமாக வாசிக்க விரும்புபவர்களுக்காக சில இணையத் தளங்களின் முகவரிகளைக் கீழே தருகிறேன். இவை தவிர மேலும் முகவரிகள் தெரிந்தவர்கள் இங்கே அவற்றை இடுங்கள்.

கீ-மான்:: keyman
ஈ-கலப்பை:: http://thamizha.com/modules/mydownloads
ஈழம் எழுதி :: http://www.suratha.com/eelam.htm
ஒருங்குறி :: http://unicode.org/faq/tamil.html
தகுதரம் :: http://www.tscii.org/
தமிழா :: http://thamizha.com/
விக்கிபீடியா :: http://ta.wikipedia.org
தமிழ்.நெட் :: http://www.tamil.net/
அகத்தியர் மடற்குழு :: http://groups.yahoo.com/group/agathiyar/
அகத்தியர் ஆவணம் :: http://www.treasurehouseofagathiyar.net/
தமிழாராய்ச்சி மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil_araichchi
தமிழாராய்ச்சி :: http://www.araichchi.net/
மெய்கண்டார் மடற்குழு :: http://groups.yahoo.com/group/meykandar/
தமிழுலகம் மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil-ulagam/
உத்தமம் :: http://www.infitt.org/
தமிழ் இணையப் பல்கலைக் கழகம் :: http://www.tamilvu.org/
தமிழ் மின்னூலகம் :: http://tamilelibrary.org/
மதுரைத் திட்டம் :: http://www.tamil.net/projectmadurai/
இதர :: http://www.geocities.com/athens/7444/


-1- - -2- - -3- - -4- - -5- - -6-

Tuesday, October 03, 2006

கணினியில் தமிழ் - பகுதி 6



-1- - -2- - -3- - -4- - -5- - -7-



பகுதி 6

பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, “இயங்கு எழுத்துரு” (dynamic font) என்ற ஒரு விடயம் பாவனைக்கு வந்தது. இதை ஒரு தனியார் நிறுவனம் (bitstream) தயாரித்து வெளியிட்டது. இதன் மூலம் இணையத் தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப் பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப் படையில், பாவனையாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணையத்தளங்களைப் பார்வையிட முடிந்தது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் கருமமாற்ற உருப் பெற்ற வண்ணமிருந்தன.

இவறிற்கெல்லாம் முடிவு கட்டத் தான் நியம வேலையில் பலரும் மூழ்கினர்.
இதிலொன்று தகுதரம். ஆயினும் தகுதரத்திற்கும் சில முரண் கருத்துக்கள் இருந்தன. தமிழ்க் கணினி விற்பன்னர்கள் தகுதர வேலையில் இருக்கும் வேளையில், ஒருங்குறி (unicode.org) என்ற ஒரு அமைப்பு உலக மொழிகள் அனைத்தயும் கணினியில் உள்ளடக்குவதை குறிக்கோளாகக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்து நியமங்களையும் அறிவித்தது. தமிழிற்கும் ஒருங்குறி நியமம் உருப் பெற்றது. இது தகுதரத்தின் நியமத்தை ஒத்திருக்கவில்லை.

இந்தத் தறுவாயில், தமிழக அரசு தமிழின் நியமம் கருதி ஒரு ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டியது. அரச ஆதரவுடன் முன்னெடுக்க ஒரு நியமச் சூத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தது அரசு. தமிழ்நெட்99 (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது. இதை இதர பல நாடுகளின் தமிழ்ப் பிரிவுகளும் அங்கீகரிக்கத் தொடங்கின. இப்பொழுது ஒருங்குறி நியமமே எல்லோராலும் அங்கீகரிக்கப் பட்டு இயல்பாகவே பாவனைக்கும் வந்து விட்டது. தமிழ்நெட் என்னும் தலைப்பில் வருடந்தோறும் மாநாடுகள் நடை பெறுகின்றன. உத்தமம் என்ற ஒரு அமைப்பும் இவற்றோடு சம்பந்தமுடையது.

முரசு அஞ்சல் விசைப் பலகையைத் தொடர்ந்து, கீமான் (keyman) என்னும் விசைப் பலகை, பன் மொழிப் பாவனையாளர்களுக்கு ஒரு நிறுவனத்தால் (Tavultesoft) தயயரிக்கப் பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்தக் கீமான் மூலம் தமிழை அடிப்பதும் இலகுவாக்கம் பெற்றது. இதைப் பாவித்து ஈ-கலப்பை என்ற ஒரு செயலி மூலம் விசைப் பலகைகள் தமிழுக்கு இசைவாக்கம் செய்யப் பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முகுந்தராஜ், அன்பரசன் போன்றோர் இந்தத் துறையில் ஊக்கமாகச் செயற்படுகிறார்கள். இந்த ஈ-கலப்பை இப்பொழுது தமிழா என்ற செயலியில் இலகுவாகக் கிடைக்கிறது. ஈ-கலப்பையில், நாங்கள் அடிப்பதற்கு வேண்டிய எழுத்துருவை, ஒருங்குறி எழுத்துருவா அல்லது தகுதர எழுத்துருவா அல்லது பாமினியா அல்லது ஆங்கிலமா என்று தெரிவு செய்யும் வசதியும் இங்கே உண்டு.

தகுதரம், ஒருங்குறி, கீமான் விசைப்பலகை ஆகியவற்றின் துணையோடு தமிழ் இப்பொழுது இணையத்திலும், நாளாந்தப் பாவனையிலும் பூத்துக் குலுங்குகிறது.

தமிழ்க் கணினி அறிஞர்களையும் தமிழறிஞர்கள் பலரையும் ஒன்று பட வைத்த பெருமை “தமிழ்.நெட்” க்கு உரியது. ஒன்று பட்டது மட்டுமல்ல பல ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளுக்கும் இது வடிகாலாக இருந்தது. ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் ஆக்க பூர்வமாகத் தனித் தனியே பிரிந்து “தமிழ்” என்ற நோக்கைக் கை விடாமல் இன்றும் இயங்குவது கண்கூடு.

தமிழ்.நெட் இல் ஆரம்ப காலம் தொட்டே மிகப் பெரும் பங்காற்றியவர் மலேசிய வைத்தியக் கலாநிதி ஜெயபாரதி அவர்கள். தமிழில் எல்லாத் துறைகளையும் பற்றிச் சரளமாக எழுதி வந்தார். மேலும் அவர் அகத்தியர் என்ற ஒரு யாஹூ மடலாடற் குழுவை ஆரம்பித்து இன்றும் அயராது அரும் பெரும் விடயங்களைப் பற்றி அங்கே எழுதி வருகின்றார். அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் என்பது அவருடைய படைப்புகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். கணினியில் அவரின் தமிழ்த் தொண்டு இன்றும் தொடர்கிறது. இணையம் (Internet), வைய விரி வலை (World wide web) போன்ற தமிழ்ச் சொற்களை எங்களுக்குத் தந்தவர் இவரே.

இது போல் தமிழுலகம், தமிழாராய்ச்சி போன்ற பல குழுக்களும் இப்பொழுது இருக்கின்றன. மேலும், சுமேருவில் வாழ்ந்தவர்கள் தமிழரென்று சுமேருத் தமிழ் பற்றியும் ஆதாரங்களோடு எழுதி வந்தவர் கலாநிதி லோகநாதன் அவர்கள். அவரது எழுத்துக்களை மெய்கண்டார் என்னும் மடலாடற் குழுவில் காணலாம். பல மடலாடற்குழுக்கள் ஒருங்குறியிலும், பல இன்னமும் தகுதரத்தோடும் தகுதர ஆவரங்கால் எழுத்துருவோடும் கோலோச்சிக் கொண்டு இருக்கின்றன.

… அடுத்த பகுதியுடன் முடியும்.


-1- - -2- - -3- - -4- - -5- - -7-

Sunday, October 01, 2006

கணினியில் தமிழ் - பகுதி 5



-1- - -2- - -3- - -4- - -6- - -7-



யாஹூ மடலாடற் குழுக்களுக் கெல்லாம் முன்பே அது தோன்றியது. முரசு அறிமுகமான காலத்தில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலாப்பிள்ளை என்பவர் ஒரு மடலாடற் குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (www.tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழிற் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடல்களைச் செய்தனர். முரசு அஞ்சல் எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது. முரசு அஞ்சலோடு யூடோராவில் வெற்றிகரமாக அமுலுக்கு வந்த எழுத்துரு ஆவரங்கால்.

உலகின் பல பாகங்களிலுமிருந்த பல கணினி வல்லுனர்கள், தமிழ் வல்லுனர்கள் சந்தித்துக் கொள்ள தமிழ்.நெட் ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. கணினியில் தமிழ் - பகுதி 4 இல் குறிப்பிடப் பட்டவர்களும், அதில் இருக்கும் பின்னூட்டில் குறிப்பிடப் பட்டிருப்பவர்களும் இன்னும் பலரும் இதில் ஈடுபட்டிருந்தனர். இதன் மூலம் தமிழின் எழுத்துருவுக்கு ஒரு நியம (standard) நிலையைச் சர்வதேச அங்கீகாரத்துள் கொண்டு வர வேண்டுமென்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒரு புது வேகம் பெற்றது. இதற்கான ஆராய்ச்சிகள், கலந்துரயாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மடலாடற் குழுவூடாகவும், அதற்குப் புறம்பாகவும் மிக்க கரிசனையோடு பலரின் நேரம், பொருட் செலவுகளோடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இவர்களின் ஆராய்ச்சிகளினாலும், செயற்பாடுகளினாலும் தகுதரம் என்ற ஒரு நியமச் சூத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். ஆங்கிலத்தில் தஸ்கி (TSCII) என்று இதை அழைத்தார்கள். இந்த நியமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்துருக்களை நியமப் படுத்த முடிந்தது. ஏற்கனெவே இருந்த சில எழுத்துருக்கள் இந்த நியம வடிவுற்குள் தங்களைக் கொண்டு வந்து மெருகு பெற்றன. நியமம் ஒன்று உருவெடுத்ததால் பெரிய நன்மை ஏற்பட்டது. இந்த நியமத்திலமைந்த எழுத்துரு ஏதாவது ஒன்று எம் கணினியில் இருந்தால், இதே நியமத்திலமைந்த வேறொருரு எழுத்துருவில் எழுதப்பட்டவற்றை வாசிக்கப் பிரச்சனையில்லை.

ஆவரங்கால் எழுத்துருவும் முரசு விசைப்பலகையும் பாவனைக்கு வந்ததும், பலரும் ஆவரங்கால் எழுத்துருவைத் தங்கள் கணினியில் நிறுவி வைத்திருந்தனர். அத்தோடு பல இணையத் தளங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு வந்து கொண்டேயிருந்தன. தகுதரம் வந்து இணைய வேலைகளை இலகுவாக்கியது.
இவை தவிர தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணையத் தளங்கள் பிரபலமாகத் தொடங்கின. விகடன், குமுதம், வீரகேசரி மற்றும் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் பிரபலமாகின. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவை இறக்கம் செய்து கொண்டால் போதும்.

………………… தொடரும்


-1- - -2- - -3- - -4- - -6- - -7-

Saturday, September 30, 2006

கணினியில் தமிழ் - பகுதி 4



-1- - -2- - -3- - -5- - -6- - -7-



முன்பே சொன்னது போல், எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சை உபயோகிப்பதால் இருந்த சிரமங்களைக் கருத்திற் கொண்டு சில மென்பொருட்கள் இப்பொழுது தயாராகத் தொடங்கின. 90 களின் நடுப்பகுதியில், மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகமாக்கினார். இதில் எழுத்துரு, எழுதி, மின்னஞ்சற் செயலி, விசைப்பலகை என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதில் முக்கியமான அறிமுகம் விசைப் பலகை. இந்த விசைப் பலகையைப் பாவித்து நாம் ஆங்கிலமயமான (romanized)தமிழையும் எழுத முடிந்தது. இதில் தமிழ்த் தட்டச்சும், ஆங்கிலமயத் தமிழ்த் தட்டச்சும் சேர்ந்தே இருந்தன. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அம்மா என்று எழுத “ammaa” அல்லது “ammA” என்று தட்டினால் சரி. மிக இலகு. இதில் இன்னொரு விளைவு, தமிழைப் படிக்காத ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூடத் தமிழில் எழுத முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழை திருத்த முடியாதென்பது வேறு விடயம்.

இந்த நேரத்தில் யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சற் செயலி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளி வந்து மின்னஞ்சலிற் தமிழை மேம்படுத்தியது. முரசுஅஞ்சல், இணைமதி, இணைக்கதிர், மைலை, ஆவரங்கால் போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கிய பங்காற்றின. ஆவரங்கால் என்பது ஈழத்தில் ஒரு ஊரின் பெயர். இந்த ஊரைச் சேர்ந்த திரு. ஸ்ரீவாஸ் சின்னத்துரை என்பவர் உருவாக்கிய ஒரு எழுத்துரு தான் இது. இவர்களோடு குறிப்பிடக் கூடிய இன்னும் பலர் இருந்தனர். இவர்களில் எனக்கு ஞாபகம் வரும் பெயர்கள் சில இதோ.

திரு. குமார் மல்லிகார்ஜுன்,
கலாநிதி கல்யாணசுந்தரம்,
திரு. மா. அங்கையா,
திரு. மணிவண்னன்,
திரு. நாகு,
திரு. கலைமணி,
திரு நா. கணேசன்,
திரு. பூபதி மாணிக்கம்,
திரு நா. சுவாமிநாதன்.
(பெயர் மறந்து விட்ட அறிஞர்கள் தயை கூர்ந்து மன்னிக்க)

இவர்கள் இத்தோடு நில்லாமல் தொடர்ந்து தமிழின் கணினி இருப்பிற்கு இன்னமும் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந் நேரத்தில், யுனிக்ஸில் அகரம் என்ற செயலியும், மக்கிண்டாசில் சில்க்கி என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகி விட்டிருந்தன. இவை இப்படியிருக்க இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் எற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான் இணைய யுகம். (Internet era)

இணையத்தில் (internet), வைய விரி வலை (world wide web) 1990 முற்பகுதியில் கோபர் (Gopher), மொசையிக்(Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்களாக உருவாகி இணையத்தின் பாவனயை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது அபிவிருத்தி அடைந்து நெட்ஸ்கேப் (Netscape) பில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே ஆரம்பமாகியது.

இப்பொழுது, சில இணையத் தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. இந்தத் தமிழ் இணையத் தளங்களை உருவாக்குவதில் மிக உதவியாக இருந்தவை முரசு-அஞ்சல் செயலியும் அப்பொழுது தோன்றிய இன்னொரு புரட்சியான தமிழ் மடலாடற் குழுவும் அதனாலேற்பட்ட பெரிய அபிவிருத்திகளும்.

…. தொடரும்


-1- - -2- - -3- - -5- - -6- - -7-

Tuesday, September 26, 2006

கணினியில் தமிழ் - பகுதி 3



-1- - -2- - -4- - -5- - -6- - -7-



தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற் கேற்பப் பாவனையில் வைத்திருந்ததால், ஒருவர் தமிழில் தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும் போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லா விட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். சரி, அனுப்புபவர், பெறுனர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும், வாசிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அதே நேரத்தில், அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளினூடு பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் கடிதம் சரியாகப் போகிறதா என சோதித்துப் பார்க்கும் போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். இதனால் மின்னஞ்சல் மென்பொருட்களும் விசேட எழுத்துருக்களைக் கையாளக் கூடியதாக தம்மை மேம்பாடடையச் செய்ய வேண்டிய தேவையும் எழுந்தது. இப்படியான சிக்கல்களில் சிக்குப் பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு மென்பொருள் தோன்றியது.

“மாதுரி” அல்லது “மதுரை” (Maduri) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வித்தியாசமான வேலையைச் செய்தது. அதாவது ஒரு கோப்பில் தமிழ் ஆக்கங்களை ஆங்கில உச்சரிப்பில் எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு “மாதுரி” கட்டளையை அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பாவனைக்கு வரவில்லை, ஆனால் இலகுவாகச் சின்னச் சின்ன வார்த்தைகளைத் தமிழ்ப் படுத்த இது மிக உபயோகமானது. அத்துடன் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், மாதுரியிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துக்களின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துக்கள். ஆதலால் இவ் வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1991/92 காலப் பகுதியில் சாத்தியமானதாக இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர் யாரென்பது சரியாகத் தெரியவில்லை.
இதன் மூலம் கிடைக்கும் எழுத்துக்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.

__
|_| L L0 ||

இது “படமா” என்ற சொல், கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.

இதிலிருந்த பெரிய குறை, எழுத்துக்கள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் பயமுறுத்தியது தான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பாவனையில் பெரிதாக இடம் பெற முடியாமற் போய்விட்டது.

மின்னஞ்சல் பிரச்சினைகளும் தீர்வு முயற்சிகளும் ஒரு புறம் போய்க்க் கொண்டிருக்க, யூனிக்ஸ் பக்கமும் தமிழ் கணினியில் ஏறிக் கொண்டிருந்தது.
ஐடிரான்ஸ் ( iTrans) என்ற நிறுவனம் தமிழை யூனிக்ஸில் அப்போது (90 களில்) பிரபலமாக இருந்த லேடெக் (LaTex) எழுதியில் தமிழைக் கொண்டு வந்திருந்தது. இதன் மூலம் தமிழில் எழுதுவது சாத்தியமாக இருந்தது. தனிக் கணினி போல் யூனிக்ஸ் கணினிகள் பொது மக்கள் பாவனையில் இல்லாததால், தனிக் கணினியில் தமிழைச் செம்மைப் படுத்தும் முற்சிகளும் அபிவிருத்திகளும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்தன. இக்காலத்தில் ஆராய்ச்சிகள் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின.

........................... தொடரும்


-1- - -2- - -4- - -5- - -6- - -7-

Sunday, September 24, 2006

கணினியில் தமிழ் - பகுதி 2



-1- - -3- - -4- - -5- - -6- - -7-



எழுத்துருக்களில் (fonts) குறிப்பிடத் தக்கதாகவும், பரந்த அளவில் பாவனயில் இருந்தவையாகவும் சிலவற்றைக் குறிப்பிடலாம். மைலை (Mylai), பாமினி (Bamini) போன்றவை பிரபலமாக இருந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன. எழுத்துருவின் பாவனையிலிருந்த ஒரேயொரு சிக்கல் விசைப்பலகை (keyboard) தான்.

கணினியில் இருக்கும் விசைப்பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப்பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. தமிழ்த் தட்டச்சுத் தெரிந்திருந்தவர்களுக்குத் தமிழில் மென்பொருட்களைத் தமிழ் எழுத்துரு மூலம் உபயோகிப்பது இலகுவாக இருந்தது. இதனால் இந்த எழுத்துருக்கள் தமிழர் தாயகங்களில் பிரபலமடைந்தன. அங்கே இருந்த கணினி வல்லுனர்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற எல்லோரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கில மூல மென்பொருட்களிலும் நூறு வீதம் சரியாக ஒத்துழைக்கவில்லை. சில சமயங்களில், சில மென்பொருட்களில் சங்கடங்களும் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பிரயோகங்களான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறவேற்றக் கூடியதாக இருந்தன.

தனித்தனியாகத் தன்தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகளை வலை வேலைப்பாட்டால் இணைத்து கணினிகளையும் அவற்றின் பிரயோகங்களையும் ஒரு படி உயர்த்தி வைத்து மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாகப் பூர்த்தி செய்யத் தொடங்கினோம். இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் கால கட்டத்தில் (90 களில்) தொடர்பாடற் சாதனமாகப் பரிமணிக்கத் தொடங்கின. மின்னஞ்சல் பாவனை பிரபலமாகத் தொடங்கியது. யூனிக்ஸ் (UNIX) இயங்கு முறைக் (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முதலிலேயே இருந்தன. தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சற் தொடர்பாடல் பிரபலமாகத் தொடங்கும் போது தான் தமிழைத் தொடர்பாடலில் பாவிக்கும் தேவை எழுந்தது. தனிப்பட்டோரின் எழுத்துருக்கள் இந்த இடத்தில் கொஞ்சம் இடறத் தொடங்கின.

................................... தொடரும்


-1- - -3- - -4- - -5- - -6- - -7-

Thursday, September 21, 2006

கணினியில் தமிழ் - பகுதி 1

கணினியில் தமிழ் என்ற ஒரு தொடரை எனக்குத் தெரிந்த வரையில் இங்கே தர முயல்கிறேன்.


-2- - -3- - -4- - -5- - -6- - -7-


கணினியில் தமிழ்

- பகுதி 1
கணினி தோன்றிப் பல வருடங்களானாலும், கணினியில் தமிழ் தோன்றியது 1980 களில் தான். அப்பொழுது மேசைக் கணினிகள் முளை விடத் தொடங்குகிற நேரம். முளை விடும் கணினிகளும் தனக்குத் தனக்கெனத் தனியான இயங்கு முறைகளைக் கொண்டிருந்தன. பின்னர் “மக்கின்டாஸ்”, “மைக்ரோசாப்ட்” வகை இயங்கு முறைகளுடன் கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளி வந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி விற்பன்னர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர்.

கணினிகள் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்கள் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.

இவற்றின் ஆதாயங்களைத் தமிழிலும் பெற முயன்ற தமிழ்க் கணினி வல்லுனர்களின் பல முயற்சியிகளில் முதலில் தோன்றிய மென்பொருள் ஒரு ஆவணங்கள் எழுதும் “ஆதமி” என்னும் மென்பொருள். இது 1984 இல் கனடாவில் வதியும் கலாநிதி சிறீனிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அன்னாளில் தமிழ்க் கணினிப் பாவனையாளர்களிடம் பிரபலமாக இருந்தன.

1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு அறிமுகப் படுத்தப் பட்டது. இக்கால கட்டத்தில் எழுத்துருக்களை உருவாக்கப் பல வல்லுனர்கள் சொந்த முயற்சியாக இறங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன.

...............தொடரும்
-2- - -3- - -4- - -5- - -6- - -7-

Friday, September 01, 2006

தாய்மொழி வழிக் கல்வியின் அவசியம்

தாய்மொழி வழிக் கல்வியின் அருமை புரிந்த பலரில் இவர்களும் வருகிறார்கள்.
அவர்கள் செயலூக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

சுருக்கம் என்னவென்றால்:
ஆரம்பப் பள்ளிக்கூடங்களில், கற்கை மொழியைக் கன்னடத்திலிருந்து ஆங்கிலமாக மாற்றிக் கொண்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்பப் பாடசாலைகளின் அரச அங்கீகாரத்தைச் செல்லுபடியற்றதாக்கக் கர்நாடக அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

விரிவாக இங்கே காண்க:

Karnataka nips English in the bud - முளையிலேயே கிள்ளு

கேரளாவும் இணைந்து விட்டது


இதனோடு தொடர்பான எனது ஒரு பதிவு இங்கே


அரசு:
முதலில் தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்குகிறாதா அல்லது தமிழை இழக்கிறதா என்பதை நோக்குவோம். 

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். அந்த ஆட்சி மொழி எவ்வளவுக்கு ஆட்சி செய்கிறது என்பது சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய விடயம். ஆட்சி எங்கே தொடங்குகிறது? அது சட்ட சபையுடன் ஆரம்பிக்கிறது. தமிழ் நாடு சட்ட மன்றத்தில் ஓரளவு தூய தமிழில் பேசுகிறார்கள் மன்றும் தமிழில் இயங்குகிறது, மகிழ்ச்சியே. சட்ட மன்றத்திற்கு வெளியே வந்தால்? தமிழ் நாட்டு அரச உயரதிகாரிகளில் 90 வீதமானவர்களுக்குச் சரளமாகத் தமிழில் எழுத, வாசிக்க மற்றும் பேசக் கூடிய புலமை இல்லவேயில்லை. இந்த உயரதிகாரிகளிற் பலர் தமிழ் மொழி மூலம் தமது கல்வியை ஓரளவிற்கேனும் கற்றவர்களோ அல்லது தமிழை ஒரு பாடமாகத் தம் பாடவிதானத்தில் கொண்டவர்களோ அல்லது தமிழில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களோ இல்லை. இன்னும் பார்த்தால், இவர்களிற் பலர் இந்தியா என்ற கூட்டுப் பொங்கல் நிலையால் வந்த பிற மாநிலக்காரர்கள். இவர்கள் தமிழ் மொழிக்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்ப் புலமை குறைந்த தமிழர்களும், தமிழ்ப் புலமையற்ற பிற மாநிலக்காரர்களும் அதிகாரிகளாகப் பதவியேற்று எப்படித் தமிழ் மக்களின் குறை நிறைகளை நிவிர்த்தி செய்ய முடியும்? தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளை, சிக்கல்களை இப்படிப் பட்ட அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள நல்ல தொடர்பு மொழி அவசியமல்லவா? 

மேலும் வாசிக்க கீழேயுள்ள தொடுப்புகளை நாடுங்கள்

”தமிழ்” நாடெனும் மாயை - 1

"தமிழ்" நாடெனும் மாயை - 2

Wednesday, August 16, 2006

யாருமே அர்ச்சகராக வேண்டாம்

எங்கள் கோவில்களில், சாமியிடம் ஆசி பெறப் பூசாரியிடம் மனுக் கொடுக்கும் வழக்கம் ஒரு நகைச்சுவை தான். அதிலும் பெரிய நகைச்சுவை, பெயர், ஊர், நட்சத்திரம், குலம், கோத்திரம் எல்லாம் சொல்லிக் கேட்பது. நல்ல காலம் தபால் முகவரி கேட்பதில்லை. கேட்டால், ஆசியை வீட்டு விலாசத்திற்கே அனுப்பி வைப்பார்கள். என்ன இது பைத்தியக் காரத்தனம். கேட்பவருக்கும் வெட்கமில்லை சொல்லி ஆசி வேண்டுபவருக்கும் வெட்கம் இல்லை. இதற்கு ஒரு அர்ச்சகர். அதற்கொரு சாதி. வெட்கக்கேடு.
இப்ப என்னடா என்றால் அந்த அர்ச்சகராகும் தகுதிக்குச் சாதி தேவையில்லை என்ற அறிவிப்பு. பின்னர் அதற்குத் தடை.
எங்கே போகிறது மனித நாகரீக வளர்ச்சி?

அர்ச்சகரே தேவையில்லை.

அதை விட்டு விட்டு ஏதேதோ எல்லாம் செய்துகொண்டு நேரம் சக்தி பணம் என்பவற்றை வீணாக்குகிறார்கள்.

கடவுளை வணங்கு
நடுவில் நிற்கும்
அர்சசகரை அகற்று

Monday, August 14, 2006

எப்படிப் பாடுவீரோ


தேவாலயந் தகர்ந்தது
செஞ்சோலை சிதறியது
சோலையின் தளிர்கள்
கருகின தீய்ந்தன
கயவர்தம் காட்டுக்
கடும்போக்கில்

ஐநாவே ஐயா நாட்டோரே
அனைத்துலகச் சட்டங்கள்
அழித்தோரைச் சாடாவோ
அல்லது
அழித்தவர் குருக்களோ

பாடுவீரோ சரணம்
பலியானது புலிகள் என்று

பாடுவீரோ பல்லவி
பக்கத்திற் சென்று பார்க்கப்
பாதுகாப்பு இல்லை என்று

பாடுவீரோ மங்களம்

பேசுவீர் பேசுவீர்
பேதங்கள் களைவீர்
பேசியதன் செயல்வடிவம்
பேய்வடிவில் பெறுவீர் என்று

பாடுவீரோ
எப்படிப் பாடுவீரோ


செயபால், 2006/08/14

Wednesday, July 26, 2006

இந்தப் பைத்தியக் காரத்தனம் அரசியலரங்கில் மிகவும் அதிகமாகக் காணப்படும் ஒரு சரக்கு. பல நாடுகளில், பல காலமாகப் பாவனையில் இருக்கும் ஒரு தந்திரம். அரசியல் அனர்த்தங்கள், படுகொலைகள், சதி வேலைகள் நடைபெறும் போது உதவிக்கு வருவது இந்தப் பைத்திய மருந்து. அரசியல் சதிகாரர்கள், கொலைகாரர்கள், பாதகர்கள் மாட்டிக் கொள்ளும் போது அவர்கள் சார்புடைய அரசுகள் பதிவியிலிருக்கும் போது அந்த அரசுகள் அவர்களைப் பாதுகாக்கத் தவறுவதில்லை. அதற்கு அவர்கள் பாவிக்கும் அரச தந்திரந் தான் பைத்தியக் காரப் பட்டம்.

சமீபத்திய உதாரணங்களாகக் கொள்ளக் கூடியவை சில. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்றவரைப் பைத்தியம் என்று கூறி விடுதலை செய்யப் பட்டது ஒன்று. அண்மையில் யாழ்நகரில் நீதிபதியின் வாகனத்தைப் பின்தொடர்ந்து தாக்க முற்பட்ட சம்பவத்தில் கைதானோருக்கும் பைத்திய வைத்தியம் பார்க்கும் படலம் ஆரம்பமாகிறது. இப்படிப் பல.

இங்கே நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், பைத்தியம் யாருக்கு என்பது தான். பைத்தியக் காரரை வேலைக்கு வைத்திருப்பவர்களா? அல்லது வேலைக்கு வைத்திருப்பவர்களுக்கும் பைத்தியமா? அல்லது அவர்களையெல்லாம் பதவிக்கு அனுப்பி வைக்கிறோமே எங்களுக்குப் பைத்தியமா?

என்னவோ ஏதோ இந்தப் பைத்தியக்காரப் பதவியால் பலரின் காட்டில் மழை.

Tuesday, July 11, 2006

தேன்கூடு போட்டி - மரணம் தண்டனையா

மரணம் தண்டனையா
===============

தேன்கூடு வைக்குதொரு போட்டி
தலைப்பைப் பாரதொரு ஈட்டி

மரணம் பற்றிநீ யெழுது
தோற்றால் வராது தீது
மரண தண்டனையுந் தராது

மகனே நிறுத்து
மரண தண்டனையா
மீண்டும் சொல்லையா
மரணம் தண்டனையா

மண்ணுலகில் மாந்தர்தம்
மண்ணாளுஞ் சட்டங்களில்
கண்ணாம்பூச்சி காட்டுகிறார்
குற்றம் புரிந்தோர்க்கு
அதியுச்சத் தண்டனையாம்
மரணம் தண்டனையாம்

மரணம் தண்டனையா
யாருக்குத் தண்டனை
தவறு செய்தோர்க்கா
அவனைச் சார்ந்தோர்க்கா
அளிக்குஞ் சான்றோர்க்கா
சாகடிக்குஞ் சேவகர்க்கா

மரணம் தண்டனையா
மனிதம் தப்பிழைக்கிறதா

ஜெயபால், 2006/07/06

Thursday, July 06, 2006

மரணம்

மரணம் --------- மறையாதது மரணம் நிலையானது மரணம் மரிக்காதது மரணம் மவுன நியதியே மரணம் தோன்றிய யாவும் தொடுமொரு நாளில் நிலையான மரணத்தை சரியான தருணத்தில் பிறக்கும் போது கூடவே பிறக்கும் பிறழாக் கணக்கு மரண வழக்கு நுண்ணிய அங்கி முதல் நூறுகோடி அண்டம் வரை நுழைய வேண்டிய வாசலது நுட்ப அதிசயம் சாதலது மரணத்தின் வரவு மர்மத்தில் மர்மம் எப்ப வரும் எப்படி வரும் என்றே தெரியாத தர்மத்தில் தர்மம் ஆண்டவன் படைப்பான் அவனே அழிப்பான் அழிப்புக்குத் துணையாம் மரணமெனும் மறையாம் மரணத்தை வென்றோருமில்லை மரணித்து மீண்டோருமில்லை - இம் மர்மத்தை விளக்கவொரு மார்க்கமும் இங்கில்லை
ஜெயபால், 2006/07/03

Thursday, June 22, 2006

குறையொன்றும் இல்லையே - திருத்தம்

"எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
"

இது ஒரு பாரதியார் பாடல். இந்தப் பாடலை ஒரு திரைப்படத்தில் கொண்டு வந்தார்கள் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர். பாரதியாரின் பாடலில் இருந்த "கண்ணன்" என்ற பெயரை "ரங்கன்" என்று மட்டும் மாற்றி எழுதியிருந்தார் கவிஞர் கண்ணதாசன். பாரதியாரின் பாடலைக் கண்ணதாசனின் பாடல் என்று அந்தப் பாடலின் இசைத்தட்டில் அந்த நாளில் எழுதியிருந்தார்களாம். அது அந்தத் திரைப்படக் காரர்களின் பிழையே அல்லாது கணணதாசனின் பிழையல்ல. இது போலப் பலர், பலரின் பாடல்களை ஒரு வேடிக்கைக்காக மாற்றி எழுதுவதும் உண்டு. உதாரணமாக "இரண்டு மனம் வேண்டும்" என்ற பாடலை "இரண்டு ரொட்டி வேண்டும்" என்று மாற்றி எழுதிப் பாடியதைக் கேட்டிருக்கிறேன்.

அத்தகைய ஒரு மாற்றி எழுதும் நோக்கம் எனக்கும் வந்தது. பாடல் மிகப் பிரபலமான ஒன்று. அதனால் தயக்கம்.

அந்தப் பாடலை நான் முதன் முதலில் அறிந்தது, அப் பாடலைப் பற்றித் தெரியாமலேயே. ஒரு நாள் திரு. ஏ. வி. ரமணன் அவர்களின் சப்த சுவரங்கள் நிகழ்ச்சியொன்றின் ஒளி நாடாவைக் குடும்பதாருடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிகழ்ச்சி, கண் தெரியாதவர்களுக்கானது. அவர்கள் பாடுவதைப் பார்க்கக் கவலையாக இருந்தது. மிகத் திறமைசாலிகள் நன்றாகப் பாடினார்கள். அவர்களை வர்த்தக ரீதியில் உபயோகித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பலர் முன்னேற்றலாமே என்று ஒரு ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எல்லோரும் பாடி முடித்துப் பரிசுகளும் வழங்கப்பட்ட பின்னர், திரு. ஏ. வி. ரமணன் அவர்கள் அந்தக் கலைஞர்களை தன் இரு பக்கத்திலும் அழைத்து வைத்துக்கொண்டு ஒலிவாங்கியைத் தூக்கிப் பாடத் தொடங்கினார். கண்களில் கண்ணீர் ஆறாய் ஓட நானும் என் மனைவியும் உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் பாடல் தான்:

"குறையொன்றும் இல்லை
மறை மூர்த்திக் கண்ணா
குறையொன்றும் இல்லைக் கண்ணா
குறையொன்றும் இல்லைக் கோவிந்தா"


பாடியவர் கூட அழுகையை அடக்க முடியாமல் அழுதே பாடினார். பாடலின் இனிமை, கருத்துச் செறிவு, பாடிய சூழல், பாடகரின் உணர்ச்சிப் பிரவாகம் என்று எல்லாமே எம்மை அடிமை கொண்டு விட்டன. நேரம் போதாமையால் அவர் பாடியது ஓரிரு வரிகளே தான். அன்றிலிருத்து அந்தப் பாடலைப் பற்றிப் பலரிடம் கேட்டு அதன் புகழ் மிக்க வரலாறு அறிந்து, இசைத் தட்டுக்களையும் வாங்கி எப்போதும் இரசித்து கொண்டே இருக்கின்றோம்.

அண்மையில் ஒரு வலைப்பூவில் (http://kelpidi.blogspot.com/2006/06/blog-post_17.html) இந்தப் பாடலை ஒரு அன்பர் இட, பல அன்பர்கள் அப் பாடலின் புல்லாங்குழல், சாக்சபோன் இசை வடிவங்களையும் பின்னூட்டாகத் தந்திருந்தார்கள். கேட்டு மெய் மறந்து விடுகிறோம்.

அத்தகைய பாடலை மூதறிஞர் இராஜாஜி ( அவர் பெயர் ராஜா ஆக இருக்குமோ? இந்தி மரியாதைச் சேர்ப்புத்தான் ஜி யோ?) அவர்கள் அழகாக எழுதி விட, இசை அரசி திருமதி சுப்புலட்சுமி அம்மாள் அருமையாகப் பாடிவிட நாமெல்லாம் தேடித் தேடி இரசிக்கின்றோம்.

வாழ்க அவர்கள் புகழ்.

இப்பொழுது என் கதைக்கு வருவோம். அதாவது, அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றுவது, இந்தப் பாடலை முருகன் மேல் பாடினாலும் மிகப் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணமே. பாடலின் பல வரிகள் முருகனுக்கும் ஒத்துப் போகக் கூடியவை. அவ் வரிகளில் வரும் மலை, குன்றம், மறை போன்றவை முருகனுடனும் மிகத் தொடர்புடயவை தானே. அதனால் இந்தப் பாடல் வரிகளில் சில மாற்றங்கள் செய்து கந்தனைப் பாட முடியுமே. முருகனா கண்ணனா, சைவமா வைணவமா என்ற குறுகிய நோக்கமெல்லாம் எனக்கு இல்லை. மனதில் தோன்றியது, முயற்சி செய்கிறேன். பிழையென்று நினைக்கவில்லை. பாடலை மாற்றிப் பார்ப்போம் என்ற முயற்சியின் விளைவே இது. யாரும் குறை கூறாதீர்கள். பாடலைப் பார்ப்போம்.

குறை ஒன்றும் இல்லை மறைதேர்ந்த கந்தா
குறை ஒன்றும் இல்லைக்  கந்தா
குறை ஒன்றும் இல்லைக்  கடம்பா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் முருகா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
க்
குறை ஒன்றும் இல்லை மறைதேர்ந்த கந்தா
வேண்டியதைத்  தந்திட வேல்முருகன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைதேர்ந்த கந்தா
மலையப்பா மால்மருகா குமரேசா குகனேசா

மயிலேறி  வருன்றாய் வேலா  - உன்னை
வேண்டுவோர் குறை தீர்க்க  விரைந்தோடி வாராய்
வாராயோ  எனுங் கவலை எனக்கில்லை
க் கந்தா
குன்றின் மேல் ஆண்டியாய்  நிற்கின்ற குமரா
குறை ஒன்றும் இல்லை மறைதேர்ந்த கந்தா

மலையப்பா மால்மருகா குமரேசா குகனேசா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
சிலையாக
க் கோவிலில் நிற்கின்றாய் வேலவா
யாதும் மறுக்காத முருகையா - உன் நெஞ்சம்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் தானே 

என்று இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை வடிவேலா  கந்தா

மலையப்பா மால்மருகா குமரேசா குகனேசா

என்னால் பாட முடியாதாகையால் இதோ உங்களுக்காக இனிமையான் சாக்சபோன் இசையில் இப்பாடல்
Kurai onrumillai - Kadri Gopalnath

Monday, June 12, 2006

மனிதரா மதியிலாப் பதர்களா

அல்லைப் பிட்டியின்
அவலக் குரல்
ஓயமுன் எழுந்தது
வங்காலை வன்துயர்
எங்காலை சொல்வது
எம்காலை எப்படி
விடியுமென்று

கயவர் வந்தனர்
காமுகம் புரியவே
கார்முகங் கொண்டு
கயவர் வந்தனர்

தாயையும் சேயையும்
தந்தையையும் தனயனையும்
குத்திக் கிழித்துக் குதறிக்
கொலை செய்த பின்

சந்தையிலே தொங்கும்
மந்தை மாமிசம்போல்
தொங்க விட்டுச் சென்ற
அந்த மனித மாமிசங்கள்
மனிதரா மதியிலாப் பதர்களா?

மிருகச் செயல் புரிந்தாரென்றால்
மிருகங்கள் செயலிழந்து கெஞ்சும்
இது நாம் செய்வதில்லை
நம்மை இவரோடு சேர்க்காதீரென்று

புல்லர்களே என்றால்
புல்லினம் குறை சொல்லும்
தம் பேரையிழுக்க
வந்தது பேரிழுக்கென்று

என்னவென்று அழைக்க - மண்டையில்
ஏதுமற்ற அரக்கரை
நீங்களும் ஒரு தாய் மக்களா?
நாளை மக்களைப் பெறும் மக்கரா?

ஜெயபால் 2006-06-12

Monday, May 29, 2006

உரிமைக் குரலாறு

மே இருபத்தொன்பது
இரண்டாயிரத்தாறு
உலகெலாம் பாயுது
உரிமைக்குரலாறு

துடித்துப் போன உடன் பிறப்புகள்
தூங்கவில்லை நாமென்று
தூக்கிப் பிடிக்குது
துயர்ச் செய்தி மட்டைகளை
புலம் பெயர்ந்த தமிழர்க்குப்
புகலிடம் தந்து காத்த
புகுந்த நாடுகளில்
சுதந்திர வீடுகளில்.

பெண்டுகளும் பிஞ்சுகளும்
பழசாப்போன பஞ்சுகளும்
பேதமின்றிக் கோரமாகக்
கொல்லப் படவும்
கொடுமைப் படவும்

பார்த்தும் பாராதிருக்கும்
பலநாட்டு மக்களே!
மன்னரே!
என்ன இந்த மெளனம்?
கொலையைப் பார்த்தும்
குரவை இல்லையா?
கொன்றது யாரென்று
கண்டு கொண்டால் தான்
திறக்கும் உன் குரல்வளையா?

நல்ல நியாயம் இது
நலிந்தவர்க்கு உதவாதது
மனிதமும் சாக முன்
மனதைத் திறந்து விடு

தந்தை மண்ணே தமிழகமே
நீயுமா காக்கிறாய் மெளன மொழி?
இன்று எழாவிடில் என்று எழுவாய்?
இழவு விழுந்தபின் தான்
வந்துநிற் பாயோ?

சொந்தச் சகோதரர் நாம்
துன்பத்தில் சாகிறோம் - இதைச்
சொல்லிக் காட்டப்
பாரதியா வேண்டும்?

சாத்வீக ஆதரவுக்கே
சனநாயகத்தில் பயமா
உணர்ச்சிகளைக் காட்டக் கூட
உரிமையில்லையா அண்ணா
உங்கள் உணர்வுகளை
உறங்க விடாதீர் - எங்களை
உயிரோடே உறையவிடாதீர்

நாமொருநாள் வெல்வோம்
உரிமைகளைக் கொள்வோம்
அன்று ஊதுவோம் சங்கு
வென்று விட்டோம் என்று

-ஜெயபால்

எங்கே உரிமைக் குரல்?

உலகெங்கும் வாழும் தமிழர் இன்று இலங்கையில் நடைபெறும் அட்டூளியங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று உரிமைக் குரல் எழுப்புகிறார்கள். அந்தக் குரலை பல நாட்டுப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் கூடச் செவி மடுத்து ஆவன செய்வதாகக் கூறி ஒரு ஆறுதலை எங்களுக்குத் தருகிறார்கள்.
ஆனால் எங்கள் தந்தை மண்ணாம் தமிழ் நாடு ஏன் மெளனம் சாதிக்கிறது?
இரத்தம் துடிக்கவில்லையா ஈனப் படுகொலைகளைப் பார்த்த பின்னும்?
பெண்டுகளும், பிஞ்சுகளும், வயோதிபரும் கொல்லப் படுவது தெரியவில்லையா?
எங்கள் தமிழ்ச் சகோதரர்களே, மக்கள் சாவு அவ்வளவு இயல்பானதாகி விட்டதா?
தமிழகமே, இன்று எழாவிடில் என்று எழுவீர்கள்?
சாத்வீக முறையில் உங்கள் உணர்ச்சிகளைக் காட்டக் கூட உங்களுக்கு உரிமையில்லையா?
உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் தடையா?

எனக்குத் தெரியும் தமிழக மக்களின் உணர்ச்சிகள் கொதிப்பது.
ஆனால் என்ன பயம்? உங்கள் உணர்வை உறைய விடாதீர்கள்.
எங்களை உயிருடனே உறைய வைப்பதைப் பார்த்து வாளாவிராதீர்கள்.

Wednesday, May 17, 2006

2006 - விசாகம் (வெசாக்) படு கொலைப் பரிசு

புத்தர் பெருமான் சகலதும் பெற்ற நாளைக் கொண்டாடு முகமாகச் சிங்களப் பெளத்தர்களிடமிருந்து ஈழத் தமிழருக்குக் கிடைத்த வைகாசி விசாகத் திருநாட் பரிசு.

இந்தச் சுட்டியில் இருப்பது அகிலக் கவியின் கவிதை!

என் அழுகை கீழே!!
==================

ஈரற் குலை நடுங்குதையா
ஈனக் கொலை நடக்குதையா
ஈழநல் நாட்டி லெம்
இரத்தம் ஆறாய் ஓடுதையா

இன்றில்லையேல் இன்னொருநாள் - நீ
நின்று பதில் சொல்லிடுவாய்
பண்பு கெட்ட படு கொலைகாரா
பலிக் காதுன் கொலைத் தந்திரம்

அல்லைப் பிட்டியில் ஆறு பேர்
அம் பாறையில் ஐந்து பேர்
அதிலடங்கும் பிஞ்சுகள் பெயர்
அழுதுமுடியுமோ எம் துயர்

கொன்று குவிக்கும் சிங்கள நாடே
இன்றிதைப் பார்த்தும் பாரா விடுத்து
மென்று விழுங்கும் உலகத்தோரே
கன்றைக் கூடக் கொல்லும் கூட்டம்
என்றைக் குத்தான் திருந்தும் ஐயா


-ஜெயபால்

Tuesday, May 09, 2006

சிவாஜியும் ரஜினியும்

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் ரஜினிகாந்த் ஐயும் இணைத்து எழுதப் படும் ஒரு விடயம் அல்ல. சும்மா ஒரு சிந்தனையின் வரி வடிவம்.

சந்திரமுகி படத்தைப் பார்த்த போது அதில் ரஜினியின் பகுதியில் வேட்டையன் பாத்திரம் மற்றப் பாத்திரத்தை விட அள்ளிக் கொண்டு போவது தெளிவு. அதை பார்க்கும் போது யாருக்குமே தோன்றக் கூடிய ஒரு யோசனை, இது போல் ஒரு முழு நீள அரச கதையில் ரஜினி நடித்தால் மிக நல்லாக இருக்குமே என்பது தான். எனக்குத் தோன்றியது, உடனடியாகவே, இயக்குனர் சங்கர் இவரை வைத்து ஒரு அரச கதையை மிகப் பிரமாண்டமாக எடுத்தால் மிக நல்லாக இருக்கும் என்பது தான்.

நான் எதிர் பார்த்தது போலவே சிவாஜி படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. எதிர் பார்த்த அரச கதையாக இருக்குமோ இல்லையோ தெரியவில்லை. வேட்டையன் போல் ஒரு அரச கதையாக இருந்தால், வீர பாண்டிய கட்டப் பொம்மன் போல் ஒரு படத்தை ரஜினியும் தர முடியும். ரஜினியும் சிவாஜியும் தலைப்புச் சரியோ?

Monday, May 08, 2006

தங்கத்தின் தமிழ்ப் பெயர்

தங்கத்தின் தமிழ்ப் பெயர்:


சும்மா தொலைக்காட்சியை முறுக்கிக் கொண்டிருந்த போது, தமிழ்ச் சேவைகளின் பக்கம் சென்ற போது, ஒரு நிகழ்ச்சி தொடங்குகிறது. படையப்பியின் தங்க வேட்டை. நிகழ்ச்சி ஆரம்பத்தில், தங்கம் பற்றிச் சுவையாக(?) சில தகவல்களை அள்ளி வழங்கினார் படையப்பி. தங்கத்திற்கு வெவ்வேறு மொழிகளில் என்ன பெயர் என்றும் அப் பெயர்கள் எப்படி வந்தன என்றும் கொஞ்சம் சொன்னார். அப்படியே தமிழிற்கும் வந்தார்.
அங்கே தான் வந்தது வில்லங்கம்.
தங்கத்தை நம்ம நாட்டில் எப்படி அழைக்கிறோம்? "கோல்ட்" - ஆம், ஆங்கிலச் சொல்லையே சொன்னார்.
ஆ அம்மா!!!!, நெஞ்சு வலித்தது.
அப்படியே "கோல்ட்" என்று பெயர் வரக் காரணம், காரியம், ....., அத்தனை விளக்கங்களும் அந்த ஆங்கிலச் சொல்லுக்குத் தான், தமிங்கிலத்தில் தறித்து விழுத்திக் கொண்டு இருந்தார்.
அப்பா! படையப்பா, ஆறுபடையப்பா!!! முருகனைக் கூப்பிட்டேன்.
நீ தான் மீண்டும் வர வேண்டும் தமிழைக் காக்க என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தொலக்காட்சியை அணைத்து விட்டேன். இப்பொழுது தெரிகிறதா தங்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்று?

வாழ்க தமிழ் வளர்க்கும் தமிழகத் தமிழ்த் தொலைக் காட்சிகள்.

Wednesday, May 03, 2006

ஈழத் தமிழர் இந்தியாவை விரோதியாகக் கருதுகிறார்களா?

ஒரு வலைப்பூத் தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார்கள். அதாவது, ஈழத் தமிழர் ஏன் இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறார்கள் என்று. அது தவறு, ஈழத் தமிழர் எப்போதும் இந்தியாவின் நண்பராகவும் கூட்டு நாடாகவும் இருக்கவே என்றும் விரும்புகிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தி மறுமொழி எழுதியிருந்தேன். அது சரியாகச் சென்றடையவில்லை. அதனால் அதை இங்கே இடுகிறேன்.

ஒரு ஈழத்தவன் என்ற ரீதியில் என் கருத்துக்கள், யார் விரோதி?

1. இந்தியா-பாக். யுத்தத்தின் போது பாக். விமானங்களுக்கு இறங்கு தள வசதி செய்தது அன்றைய சிங்கள அரசு.
2. அண்ணாத்துரை இறந்தபோது அவரின் இறுதிக்கிரியைகளின் ஒலிபரப்பை நேரடி அஞ்சல் செய்தது இலங்கைத் தமிழ் வானொலி.
3. இந்திரா அன்னையார் இறந்த போது, எங்கள் தாயே இறந்து விட்டது போல் துக்கம் அனுஷ்டித்தது ஈழத் தமிழர் மட்டுமே. சிங்களவர் பட்டாசு கொளுத்திக் கொண்டாடியது வேறு.
4.அமைதி படை 87ல் வந்த போது அன்போடு வரவேற்றது ஈழத்தமிழர். அதே நேரத்தில் கொழும்பில் சிங்களச் சிப்பாயால் ராஜீவ் தாக்கப் பட்டது, நட்பினால்!
5. அ.ப. அட்டூளியங்கள் தொடங்கிய போது, சண்டை தொடங்க முதல் இரண்டு பேர் உண்ணாவிரதம் இருந்து இறந்தது பாச மிகு இந்தியாவைப் பகைக்க விரும்பாமல் தான். சண்டை திணிக்கப் பட்ட போது வேறு வழி???
5. சிங்களவரின் இந்திய எதிர்ப்புப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். அது இங்கே தேவையற்றறது

Friday, April 07, 2006

சிந்திக்க வைக்கும் சில சாட்டை அடிகள்

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். ஆனால் வந்தார் தமிழராக இருக்கக் கூடாது.
- ஒரு தமிழ்த் தொலைக்காட்சித் தொடரில் வந்தது

தமிழ் இசை - மக்கடா !!!!!

குமுதம் வார இதழில் 2006.1.4 அன்று வந்த வாலியின் கவிதை இது.

சில்லென
சீதத்தில் -
சென்னை நனையும்
மார்கழி
மாதத்தில் -

காலை மாலை
காதுகளுக்குச் .....

சுகமழிக்கும் - தம்புராவின்
சுதிசுத்தம்;
ஜல் ஜல் என்று - சதங்கையின்
ஜதிசத்தம்!

= = =

ஆம்;
ஆங்காங்கு -
ஆரம்பம்
ஆகிவிட்டது ....
என்றும்
எங்கள்
இசை விழா -
எனச்சொல்லும்
இசைவிழா!

= = =

அண்ணா பெயரில்
அமைந்திருக்கும்
பன்னாட்டு விமான
நிலையத்தில்
பார்க்கலாம் ...
வெளிநாட்டிலிருந்து
வந்து -
இறங்குகின்ற
இசைப்பிரியர் கூட்டம்;
வருடா
வருடம் - இந்த
வண்ணமிகு
சென்னை - அதற்கு
வேடந்தாங்கலாட்டம்!

= = =
பட்டு நூலும் -
பாட்டு நூலும் -
ஒரு சேர
ஓர்ந்த ....

வள்ளல் நல்லி
வழங்கலாம் சல்லி;
அவர் கொடுக்கும்
ஆக்ஸிஜனால் -
நிமிர்ந்து நிற்கலாம்
நீட்டிப்படுத்திருந்த சபா;

ஆனால் -
அங்கே போய்க் -
காது கொடுத்துக்
கேட்டுப் பாருங்கள் ஒரு தபா!

= = =

தியாகையர்;
தீட்சிதர்;
ஸ்யாமா சாஸ்திரி;
ஸ்வாதித் திருநாள்;
அன்னமாசார்யா;
புரந்தரதாசர்;

இவர்கள்
இயற்றிய பாக்கள்
விரும்பி இசைக்கும்
வித்வான்கள் நாக்கள்;

ஆம்;
அவர்களது நாவில் ....

தெலுங்கு - பூமரமாய்க்
குலுங்கும்;
கன்னடம் - புரிந்திடும்
நன்னடம்:
சம்ஸ்கிருதம் - சாற்றும்தன்
சம்த்காரம்;
மலையாளம் -
காட்டும்தன்
கலையாழம்!

= = =

கர்நாடக சங்கீதத்தின்
காவலர்களாகிய - இந்தக்
கலாநிதிகளின் நாக்குகளில்
கச்சேரி முடியக் கால்மணி
முன்பு ...
அருணாசலக்கவி;
அருணகிரிநாதர்;
பாரதியார்;
பாரதிதாசன்;

இன்னோரன்ன தமிழ்க் கவிகள்
இடம் பெறுவர் -
துளித்துளியாக; அதுவும்
துக்கடா என்று;
தமிழா! அதற்கும்
தலயாட்டும்
உன்னை - இந்த
மண்
தூற்றாதா
'நீயொரு
மக்கடா!' என்று?

தமிழ்நாட்டில்
தமிழ் வீட்டில்
தமிழ்ப்பாட்டுக்கு மேடையில்லை - எனில்
தமிழனைப் போல் சோடையில்லை!

= = =

கன்னடியர்
கன்னடத்தின் பால் -
காட்டும்
காதலால் ....

'பெங்களூரு' என ஆகப் போகிறது
பெங்களூர்; அதற்கு -
எழுச்சி என்று பெறக்கூடும்
எங்களூர்?

= = =

என் குறிப்பு:

இது ஒன்றும் புதிதாகச் சொல்லப் படவில்லை. ஆனால் இன்னமும் இருக்கே என்ற ஆதங்கம் தான். திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், தமிழ் சங்கீத வித்துவான்கள் திருந்த வேண்டும். தமிழ் இசை ரசிகர்கள் திருத்த வேண்டும்.

Thursday, March 23, 2006

தமிழ்த் திரைப்படம் - கண்ணோட்டம்

அண்மைக் காலப் படங்களில் பலவற்றைக் குடும்பத்தவருடன் சேர்ந்து பார்க்க முடியவில்லையே. அதீத சண்டைக் காட்சிகள், அதில் அடிக்கும் அடிகள் மகா பயங்கரம். அவ்வளவு அடி வாங்கியும் மனிதன் உயிர் பிழைக்க முடியுமா என்ற புதுமைகள். வித்தை காரன் செய்ய வேண்டிய சாகசங்களை ஒரு கதா நாயகன் செய்கிறான். ஆயுதங்களுடன் வரும் பல பேரை பந்தாடுகிறான். விதந்துரைக்கப்பட்ட சம்பவங்கள். ஐயோ விட்டு விடுங்கள். பாடல், காதற் காட்சிகள் சகிக்க முடியவில்லை. இவ்வளவு இருந்தும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படங்களாகச் சில படங்கள் வரத்தான் செய்கின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

காதற் பாடற் காட்சி தவிர ரசித்துப் பார்க்கக் கூடிய படங்கள்:


1. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி: தங்கர்ப் பச்சான் படம், அருமை.
2. ஒரு நாள் ஒரு கனவு: பாசிலின் படம், அருமை. காற்றில் வரும் கீதமே பாடல் ஒன்றே போதும் படத்தின் அழகைச் சொல்ல. விருது பெற வேண்டிய பாடல்.
3. தவமாய்த் தவமிருந்து: சேரனின் இப் படத்தைப் பார்க்கத் தவமிருக்க வேண்டும்.
4. ஆட்டோகிராப்: சேரனின் படம். பாடல்கள் ஆகா, ஓகோ.
5. அழகி: தங்கர்ப் பச்சானின் படம்.
6. வேதம் புதிது
7. சலங்கை ஒலி
8. அந்தமான் காதலி