Tuesday, August 20, 2019

மறந்திடுமோ நெஞ்சம்

பேரவையின் 32-ஆம் தமிழ் விழா மலருக்குத், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளில் யாம் எழுதிய கவிதை ஒன்று.

இக்கவிதையானது, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது இடம்பெற்ற துயரச் சம்பவத்தை நினைவு கூரும் முககமாக எழுதப்பட்டுள்ளது.

மறந்திடுமோ நெஞ்சம் 

அமுதென்ற தமிழுக்கு
அளவில்லாத் திருவுக்கு
அழகுசேர்க் கும்முகமாய்
ஆராய்ச்சி மாநாடு

வண. பிதா தனிநாயகம்
தொடக்கி வைத்த கூட்டங்கள்
தொடராகி நான்காகி
எழுபத்திநாலு தன்னில்
இடம்பெற்ற தீழத்தில்

தமிழ் மரபுத் திங்களாம்
தை பிறந்த வேளையிலே
அனைத்துலக அறிஞரும்
ஆர்வலரும் பார்வையரும்
ஆசையாய்க் களிகொள்ள
இறுதி நாள் நிகழ்ச்சியன்று
முத்தவெளி முன்றலிலே

முத்து முத்தாய்ப் பேச்சுகளும்
அணியணியாய்க் கலை நிகழ்வும்
நடந்துகொண்டு இருக்கையிலே
மக்களிடை புகுந்ததொரு
காவலர்கள் வண்டி
வழிவிடக் கேட்டு நின்றார்
கூட்டத்தை மிண்டி

எள் விழுந்தால் எண்ணையாகும்
அந்தப் பெருங் கூட்டத்தில்
எப்படித்தான் வழி விடுவார்
எக்காள மிட்டோர்க்கு

குழப்பமே நோக்கமாகக்
கொண்ட தீயோர்களுக்கு
வழி கிடைக்கா வலி சேர்ந்து
வன்முறையைக் கட்டவிழ்க்க
வழியொன்று கிடைத்ததுவே

கூட்டம் கலைக்கவென்று
கண்ணெரிக்கும் புகைக்குண்டும்
இடையிடையே நிசக்குண்டும்
பீறிட்டுப் பாய்ந்திடவே
கலங்கிய மக்களெல்லாம்
பதறியோடச் சிதறியோட
அங்கு அரங்கேறியது
அமிலமான அவலமொன்று

பாய்ந்துசென்ற குண்டுகளால்
உயிரோடு அறுபட்ட
மின்கடத்திக் கம்பிகளும்
விழுந்தனவே உயிர்தப்ப
ஓடிய எம் மக்கள் மேல்

மின்தாக்கிச் சிலர் மடிந்தார்
புண்பட்டுப் பலர் விழுந்தார்
நெரிபட்டு மிதிபட்டு
உடல்கெட்டு உயிர்கெட்டு
துயரத்தில் முடிந்ததந்த
அனைத்துலகத் தமிழாய்வு
நான்காவது மாநாடு

நலிந்துகெட்ட மாந்தருக்காய்
நாவெழுப்ப யாருமில்லை
நாதியென்றும் ஏதுமில்லை
நீதியொன்றும் சேரவில்லை

வீழ்ந்தவர்க்கு நினைவுக்கல்
நிறுவிடத்தான் முடிந்ததம்மா
எம்மக்கள் நினைவைவிட்டு
அத்துயரும் போய்விடுமா 


செயபாலன், ஏப்ரல் 9, 2019

நன்றி:  https://fetna.org/fetna-2019-souvenir/?fbclid=IwAR3Wn6jf8vSlZfudkiGJk40D6jcIST3tGmdWsNR-J9BBxHbnt7_91xIlE7Q


No comments: