Monday, June 12, 2006

மனிதரா மதியிலாப் பதர்களா

அல்லைப் பிட்டியின்
அவலக் குரல்
ஓயமுன் எழுந்தது
வங்காலை வன்துயர்
எங்காலை சொல்வது
எம்காலை எப்படி
விடியுமென்று

கயவர் வந்தனர்
காமுகம் புரியவே
கார்முகங் கொண்டு
கயவர் வந்தனர்

தாயையும் சேயையும்
தந்தையையும் தனயனையும்
குத்திக் கிழித்துக் குதறிக்
கொலை செய்த பின்

சந்தையிலே தொங்கும்
மந்தை மாமிசம்போல்
தொங்க விட்டுச் சென்ற
அந்த மனித மாமிசங்கள்
மனிதரா மதியிலாப் பதர்களா?

மிருகச் செயல் புரிந்தாரென்றால்
மிருகங்கள் செயலிழந்து கெஞ்சும்
இது நாம் செய்வதில்லை
நம்மை இவரோடு சேர்க்காதீரென்று

புல்லர்களே என்றால்
புல்லினம் குறை சொல்லும்
தம் பேரையிழுக்க
வந்தது பேரிழுக்கென்று

என்னவென்று அழைக்க - மண்டையில்
ஏதுமற்ற அரக்கரை
நீங்களும் ஒரு தாய் மக்களா?
நாளை மக்களைப் பெறும் மக்கரா?

ஜெயபால் 2006-06-12

No comments: