Friday, April 07, 2006

தமிழ் இசை - மக்கடா !!!!!

குமுதம் வார இதழில் 2006.1.4 அன்று வந்த வாலியின் கவிதை இது.

சில்லென
சீதத்தில் -
சென்னை நனையும்
மார்கழி
மாதத்தில் -

காலை மாலை
காதுகளுக்குச் .....

சுகமழிக்கும் - தம்புராவின்
சுதிசுத்தம்;
ஜல் ஜல் என்று - சதங்கையின்
ஜதிசத்தம்!

= = =

ஆம்;
ஆங்காங்கு -
ஆரம்பம்
ஆகிவிட்டது ....
என்றும்
எங்கள்
இசை விழா -
எனச்சொல்லும்
இசைவிழா!

= = =

அண்ணா பெயரில்
அமைந்திருக்கும்
பன்னாட்டு விமான
நிலையத்தில்
பார்க்கலாம் ...
வெளிநாட்டிலிருந்து
வந்து -
இறங்குகின்ற
இசைப்பிரியர் கூட்டம்;
வருடா
வருடம் - இந்த
வண்ணமிகு
சென்னை - அதற்கு
வேடந்தாங்கலாட்டம்!

= = =
பட்டு நூலும் -
பாட்டு நூலும் -
ஒரு சேர
ஓர்ந்த ....

வள்ளல் நல்லி
வழங்கலாம் சல்லி;
அவர் கொடுக்கும்
ஆக்ஸிஜனால் -
நிமிர்ந்து நிற்கலாம்
நீட்டிப்படுத்திருந்த சபா;

ஆனால் -
அங்கே போய்க் -
காது கொடுத்துக்
கேட்டுப் பாருங்கள் ஒரு தபா!

= = =

தியாகையர்;
தீட்சிதர்;
ஸ்யாமா சாஸ்திரி;
ஸ்வாதித் திருநாள்;
அன்னமாசார்யா;
புரந்தரதாசர்;

இவர்கள்
இயற்றிய பாக்கள்
விரும்பி இசைக்கும்
வித்வான்கள் நாக்கள்;

ஆம்;
அவர்களது நாவில் ....

தெலுங்கு - பூமரமாய்க்
குலுங்கும்;
கன்னடம் - புரிந்திடும்
நன்னடம்:
சம்ஸ்கிருதம் - சாற்றும்தன்
சம்த்காரம்;
மலையாளம் -
காட்டும்தன்
கலையாழம்!

= = =

கர்நாடக சங்கீதத்தின்
காவலர்களாகிய - இந்தக்
கலாநிதிகளின் நாக்குகளில்
கச்சேரி முடியக் கால்மணி
முன்பு ...
அருணாசலக்கவி;
அருணகிரிநாதர்;
பாரதியார்;
பாரதிதாசன்;

இன்னோரன்ன தமிழ்க் கவிகள்
இடம் பெறுவர் -
துளித்துளியாக; அதுவும்
துக்கடா என்று;
தமிழா! அதற்கும்
தலயாட்டும்
உன்னை - இந்த
மண்
தூற்றாதா
'நீயொரு
மக்கடா!' என்று?

தமிழ்நாட்டில்
தமிழ் வீட்டில்
தமிழ்ப்பாட்டுக்கு மேடையில்லை - எனில்
தமிழனைப் போல் சோடையில்லை!

= = =

கன்னடியர்
கன்னடத்தின் பால் -
காட்டும்
காதலால் ....

'பெங்களூரு' என ஆகப் போகிறது
பெங்களூர்; அதற்கு -
எழுச்சி என்று பெறக்கூடும்
எங்களூர்?

= = =

என் குறிப்பு:

இது ஒன்றும் புதிதாகச் சொல்லப் படவில்லை. ஆனால் இன்னமும் இருக்கே என்ற ஆதங்கம் தான். திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், தமிழ் சங்கீத வித்துவான்கள் திருந்த வேண்டும். தமிழ் இசை ரசிகர்கள் திருத்த வேண்டும்.

2 comments:

jeevagv said...

முதலில் இசை என்பது மொழியைக் கடந்தது - தமிழிசை என்று ஒன்றும் கிடையாது - தமிழ்ப்பாடல் என்று வேண்டுமெனால் சொல்லலாம்.

Jeyapalan said...

இசை மொழிக்கு அப்பாற்பட்டது தான். அது ஒரு கலை. இயல் இசை நாடகம் என்ற வகைகளில் அடங்கும் கலை வடிவம். அந்த இசை தமிழில் பாடப் படும் போது தமிழிசை ஆகிறது. மொழியைக் கடந்து, இசை மக்களைச் சென்றடைவது கடினமே. கருவிகள் தவிர மக்கள் இசையை இசைத்து அனுபவிக்க மொழி வேண்டும். அந்த மொழியில் இசை வரும் போது அது அம் மொழி இசையாகிறது. ஆக தமிழில் பாடல்களைப் பாடும் போது அது தமிழிசை ஆகிறது. தமிழிசை என்று ஒன்றும் கிடையாது என்று மொட்டையில் சொல்ல முடியாது. மொழியில்லாமல் இசைக்க வேண்டுமானால் விசிலடிக்க வேண்டியது தான்.