Saturday, July 16, 2011

தமிழ் கேட்டேன், ஒரு மாணவனாக

அம்மாவிடம் என் அறிமுகம் கேட்டேன்
அப்பாவிடம் நான் அறிவுரை கேட்டேன்

பள்ளி செல்லும் ஆசையில் கேட்டேன் - தமிழ்ப்
பள்ளி என்ற சொல்லைக் கேட்டேன்

ஆனா ஆவன்னா முதலில் கேட்டேன்
அழகு தமிழில் பாடல் கேட்டேன்

சுவை மிகு கதைகள் நிறையக் கேட்டேன்
முத்தமிழ் மூலம் கலைகள் கேட்டேன்

அவ்வையின் ஆத்திசூடி கேட்டேன்
வள்ளுவன் தந்த திருக்குறள் கேட்டேன்

பாட்டுக்கொரு கவி பாரதி கேட்டேன்
பாரதிதாசன் பாடலும் கேட்டேன்

தொல்காப்பியத்தில் இலக்கணம் கேட்டேன் - பல்
ஆயிரமாண்டுப் பழமை கேட்டேன்

இலக்கியம் இயற்றும் யாப்புக் கேட்டேன்
யாப்பைக் காத்த சங்கம் கேட்டேன்

இன்னும் படிக்கும் ஆவலில் கேட்டேன்
உயர்தர வகுப்பும் உண்டெனக் கேட்டேன்

கற்றது கையளவாமெனக் கேட்டேன்
பென்னம் பெரிய கைகள் கேட்டேன்

விட்டது உலகளவாமெனக் கேட்டேன்
சின்னஞ் சிறிய உலகம் கேட்டேன்

அம்மா அப்பா வாழ்த்துக் கேட்டேன்
ஆசிரியர்கள் ஆசியும் கேட்டேன்

அன்புடன் இப்போ வணக்கம் கேட்பேன்
வாழ்நாள் முழுக்கத் தமிழைக் கேட்பேன்

செயபால் 2011

No comments: