Saturday, January 17, 2026

பாட்டு 53) ஒற்றைப் பனையடி

ஒற்றைப் பனையடி

ஒற்றைப் பனைமரம் இருந்த தெம்மூரிலும்

பாதையில் வழித்தடம் காட்டிடுந் தனிமரம்

வீட்டிலிருந்தெம் மாச்சியின் வீட்டிற்கு

பாதித் தொலைவினில் ஓரமாய் நின்றிடும்


ஆச்சியின் வீட்டுடன் நிற்காது பாதை

கூப்பிடு தூரத்தில் வந்திடுங் கடற்கரை

வெண் மணற்பரப்பினில் கூடிக்காத்திருப்பம்

அலைகள் ஓய்ந்தபின் நீந்திக் களித்திட


எம்மூர்க் கடலிலே அலைகளும் ஓயுமே

மூழ்கிய முருகைக்கல் அணைக்கிப்பாலே

கடல்வற்றும் நேரம் வந்திடும் போது

கல்லணைக்கப்பால் அலைகள் மோதும்


கடலிப்பொழுது இரண்டாய்ப் பிளந்து

குட்டைக்கடலில் எங்கள் நீச்சல்

நீச்சல் முடிந்து வீடு திரும்ப

பாதைக் குறிப்பாய் ஆச்சி வீடு


அதைத் தாண்டிடவே ஒற்றைப்பனையடி

பனையடிப் பேய்க்குப் பலத்த பாட்டடி

பாட்டைத் தணித்து வீட்டினுள் காலடி

எங்கேபோ னாயென்று விழுமினிச் சணலடி


No comments: