Sunday, April 14, 2019

பகுதி 5: முள்ளந்தண்டு பாதிப்பு

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


இந்த முண்ணான் சிதைவு சில நோய்களாலும் ஏற்படலாம். முண்ணானை பாதுகாக்கும் முள்ளந்தண்டு எலும்புகள் ஒன்றோ, இரண்டோ உடைந்து விலகி முண்ணானை அழுத்தி, சிதைவடையச் செய்யலாம். டிஸ்க் விலகியே மேற்கூறிய பாதகத்தைச் செய்யலாம்.

மேலிருந்து விழுந்து, விபத்தில் அடிபட்டு இருக்கும் ஒருவருக்கு இப்படி நேரலாம். அல்லது நேரவைப்பதற்கு ஏற்கனவே உடைந்த, விலகிய துண்டுகள் தருணம் பார்த்து இருக்கலாம். பாதிக்கப்பட்டவர் வலியால் அவதியுறுவார். அவரை நாம் தூக்குவதாலோ, எழுப்பி நிறுத்துவதாலோ இருக்க வைப்பதாலோ உடைந்து விலகிய துண்டுகளுக்கு நாம் சந்தர்ப்பம் கொடுத்துவிடுவோம். முண்ணான் சிதைவுறும்.

பாதிக்கப்பட்டவர் படுக்கை நிலையிலேயே இருக்கவேண்டும். குப்புறப்படுத்தியிருந்தால் நல்லது. அவரை மெதுமெதுவாக பக்கவாட்டாக படுத்தநிலையிலேயே பலகை அல்லது கை ஸ்ரெச்சர் (hand stretcher) ஒன்றுக்கு மாற்றி வைத்தியசாலையை நாடவேண்டும். அங்கு நமது செயற்கை ஏழாம் அறிவு - X-Ray, உடைவு, விலகல் என்பதற்குரிய விடை சொல்லிவிடும். உடைவு, விலகல் இல்லையென்றால் வலி போன்ற விடயங்களை குறைக்கும் வழி இறுதியில் சொல்லப்படும்.

இதற்கும் மேலாக, எலும்பு, டிஸ்க் விலகல், முண்ணான் பாதிப்பு என்று எது இருந்தாலும் அவற்றை எலும்பு, முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் (orthopedic surgeon) நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் (neurosurgeon) என்று இருவரோ அல்லது ஒருவரோ கையாள்வார்கள். அவர்களுக்கும் தெளிவாக பாதிப்பை அறிந்து கொள்ள இருக்கவே இருக்கிறது செயற்கை எட்டாம் அறிவு - C.T. scan - அதற்கு மேல் செயற்கை ஒன்பதாம் அறிவை கொண்டிருக்கின்றது. M.R.I.

முண்ணானில் அல்லது நரம்பில் ஏற்படும் பாதிப்பு, சிகிச்சை மூலம் பழைய நிலைக்கு திரும்பும் என்பது கேள்விக்குறி போடவேண்டிய விஷயம். எதிர்காலத்தில் செயற்கை பத்தாம் அறிவு வந்து (Aliens) ஏலியன்களுடன் கலந்து பேசி, புதியமுறை மூலம் பாதிக்கப்பட்டவர் நூறு சதவீதம் குணமடைந்தால், உலகில் படுக்கையிலும், தள்ளுவண்டியிலும் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானவர்கள் மகிழ்ச்சியடையவார்கள்.
அடுத்து வரவிருப்பது கண்டல் காயங்கள்

No comments: