Saturday, April 06, 2019

பகுதி 3: பதட்டம் தவிர்க்கும் மூச்சுப் பயிற்சி


சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


மூச்சுப் பயிற்சி

உங்களைச் சுற்றியுள்ள சுத்தமான இயற்கைக் காற்றை மூக்கின் மூலமாக, அவசரப்படாமல் மெதுவாக இழுங்கள். முடிந்தவை உள் இழுத்து அதேசமயத்தில் உங்கள்  இடது கை விரல்களில் பெருவிரல் நுனியையும், சுட்டுவிரல் நுனியையும் தொட்டவாறு இருந்தால் நல்லது. இழுத்த காற்றை 4-5 செக்கன்கள் வைத்திருக்க வேண்டும். பின்பு இதுவரைக்கும் சாதரணமாக மூடியிருந்த வாயை திறந்து, காற்றை வாய் மூலமாக வெளியிடுங்கள். அவசரப்படாமல் இதனை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். இதனை 4-5 தடவை செய்யலாம்.

இப்போது எல்லாமே உங்களுக்கு வெளிச்சமாகின்றது. நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்? பக்கத்தில் யார் யார் நிற்கின்றார்கள்? எல்லாமே தெரிய வரும். இப்போது நீங்கள் தளர்வு நிலைக்கு வந்திருக்கின்றீர்கள்.
இன்னுமொரு காட்சிக்கு வருவோம்.

உங்கள் வயதை நாற்பதுக்கு மேல் என எண்ணிக்கொண்டு , இக்காட்சியில் உங்களையே கதாநாயகனாக ஆக்கிக் கொள்கிறேன்.
நீங்கள் ஒரு விடயமாக அலுவலகம் ஒன்றினுள் நுழைகிறீர்கள். ஏற்கனவே, அந்த விடயமாக நான்கு தடவைகளுக்கு மேல் அங்கு போயிருக்கிறீர்கள். விடயம் சரியாவந்த பாடாயில்லை. கடைசியாக ஒரு பத்திரத்தின் மூலப்பிரதி கேட்டு அதையும் கையளித்திருக்கிறீர்கள். எட்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள உங்கள் வீட்டிலிருந்து பேருந்து மூலம் இங்கு வருகின்றீர்கள்.
இப்போது குறிப்பிட்ட ஒரு உத்தியோகத்தரிடம் போய் நிற்கிறீர்கள். ஏற்கனவே பல தடவை, அவரிடம் போயிருந்தும், இப்போது அந்த உத்தியோகத்தர் உங்களிடம் 'என்ன வேண்டும்?' எனக் கேட்கிறார்.
நீங்கள் விடயத்தச் சொல்ல உத்தியோகத்தர் ஒரு கோப்பை எடுத்து, திறந்து பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்கனவே கையளித்த மூலப் பிரதியை கேட்கிறார்.
நீங்கள் ஏற்கனவே தந்துவிட்டதைச் சொல்கிறீர்கள் அவர் மறுக்கிறார். வாக்குவாதம் வலுக்கிறது. உங்களுக்கு ரென்சன் கூடி கோபம் தலைக்கேறுகின்றது. 

ஏற்கனவே உங்களுக்கு பிளட்பிரஷர் அதிகம். பிளட்பிரஷர் கூடுகின்றது. அதிக பிளட்பிரஷரால் உங்களுடைய மூளையில் உள்ள சிறிய இரத்தக்குழாய் வெடிக்கலாம். விளைவு பக்கவாத நோயாளியாக உங்களை சரிந்து விழச் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் சிலசமயம் உங்களை பிணமாகவே மாற்றலாம்.
இது எதுவும் நடக்காமல் கடகட வென அலுவலகத்தை விட்டு வெளியேறி, வீதிக்கு வந்து பேருந்து தரிப்பிடத்தில் நிற்கிறீர்கள். உங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இரண்டு பேருந்துகள் உங்களைக் கடந்து செல்கின்றன. அவை எந்த ஊருக்கு போகின்றன என்று பெயர்ப்பலகையைப் பார்க்காததால் தவறவிடுகிறீர்கள். பக்கத்தில் நிற்பவர் யார் யார் என்று கூட உணராமல், மூளைக்குள் காரியாலயத்தில் நடந்த சம்பவமே நிரம்பியிருக்கின்றது.

இந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், இனிமேலும் தினமும் இடைக்கிடை என்ன செய்ய வேண்டும்.
மூச்சுப் பயிற்சியைச் செய்கிறீர்கள்.
இப்போது எல்லாமே உங்களுக்கு வெளிச்சமாகின்றது. நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள் என்பது புரிகிறது. இப்போதுதான் உணர்கிறீர்கள் உங்கள் குடையையும் இன்னுமொரு சிறிய பையையும் உத்தியோகத்தர் மேசைமேல் மறந்து வைத்துவிட்டு வந்ததை.
மூச்சு விடயத்தை விடாது செய்துகொண்டு காரியாலயத்தினுள் நுழைகின்றீர்கள். நீங்கள் செய்வது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.  உத்தியோகத்தரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள். அவரும் உங்களிடம் 'நான் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதோ இருக்கிறது உங்கள் பத்திரத்தின் மூலப்பிரதி, வேலைப் பழுவில் வேறு இடத்தில் வைத்துவிட்டேன். இன்னும் இரண்டு நாளில் உங்கள் விடயம் பூர்த்தியாக கடிதம் உங்களுக்கு வரும்' என்று புன்னகையுடன் சொல்கிறார்.  தான் எடுத்து வைத்திருந்த குடையையும், சின்ன கைப்பையையும் கொடுக்கிறார். 

நன்றி சொன்ன உங்கள் முகத்தில் புன்னகை. காரியாலயத்தில் இருந்த அனைவர் முகத்திலும் புன்னகை. அவர்களிடம் புன்னகையாலே விடைபெற்று வெளியே வருகின்றீர்கள்.
இப்போது பேருந்தில் வீட்டிற்கு பயணம் செய்யும் நீங்கள் விட்டு விட்டு தேவையான போதெல்லாம் மூச்சுப் பயிற்சி செய்கிறீர்கள். ஆறுதல் அடைகிறீர்கள்.

அந்தக் குடும்பத்தலைவியும் கணவனும் கூட காலைப் பரபரப்புக்கிடையில் வேலை செய்துகொண்டே மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்களானால் அவர்களுக்கு ஏற்பட்ட ரென்சன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

எனவே, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த இலகுவான பயிற்சியை விட்டு விட்டு உங்களால்  நாள்முழுக்க செய்ய முடியும்போதெல்லாம் செய்யுங்கள்.
இவை எல்லாவற்றையும் விட சிலர் தொடர்ச்சியான ரென்சனுக்கு ஆளாகி இருப்பர். அவர்களுக்கு தூக்கமின்மை, கோபம், புலனை ரிவி பார்த்தல், பத்திரிகை வாசித்தல் போன்றவற்றில் செலுத்த முடியாமை, பசியின்மை. தொழிலில் அக்கறை காட்டாமை , சமூகத்தொடர்பை தவிர்த்தல் என்று பல பிரச்சினைகளுடன் இருப்பார்கள். மனநோயாளியான நிலைதான்.

போரிலோ அல்லது அடக்குமுறையாளர்களால் தொடர்ச்சியான சித்திரவதைக்குள்ளானவர்கள், பலாத்கார வன்புணர்வுக்கு உள்ளானவர்கள், குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்கள் அல்லது வேறு ஆட்கள் விபத்தில் அல்லது வேறு வகையில் கொல்லப்படுவதை நேரில் பார்த்தவர்கள் போன்றோர் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாவார்கள்.

இவர்களுக்கு மனோவைத்திய நிபுணர் அல்லது அது பற்றி அறிவுள்ள சாதாரண வைத்தியர் அல்லது ஆற்றுப்படுத்துவோர் என தமிழில் அழைக்கப்படும் கவுன்சிலர், பிஸியோதெறபிஸ்ட் ஆகியோர் கொண்ட குழு வைத்தியம் பார்த்து குணமடையச் செய்வர்.

மூச்சுப்பயிற்சி நீங்களாகவே செய்து உங்களுக்கே பயன் கிடைக்க கூடிய ஒரு வழி.
பயிற்சி செய்கின்றீர்கள்!
ஆறுதல் அடைகிறீர்கள்!

அடுத்து வரவிருப்பது - விபத்துகளும் காயங்களும்

No comments: