Monday, March 25, 2019

நோய் - தவிர்ப்பும் தீர்வும்

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

அறிமுகம்


இவ்வுலகில் ஒவ்வொரு நேரத் துணிக்கையிலும், கோடிக் கணக்கான உயிர்கள் அழிவுறுகின்றன. அதேபோல் கோடிக்கணக்கான உயிர்கள் உலகின் மடிக்குள் வருகின்றன. அவற்றுள் மனித உயிர்களும் அடங்கும்.

ஒவ்வொரு சிசுவும் முழு உருவாக்கம் பெற்று சாதிக்கப் போகின்றதோ, உலகிற்கு போதிக்கப் போகின்றதோ அல்லாது வீட்டையோ, நாட்டையோ பாதிக்கப்போகின்றதோ தெரியாது.

ஆனால் தெரிந்த உண்மை என்னவென்றால், சிசு பிறக்கும் போதே போராடத் தயாரகிக் கொண்டே பிறக்கின்றது, என்பதுதான். சிசு பிறந்தவுடன் அழுவதே தனது சுவாசப்பைகளை விரியவைக்கும் போரட்டத்தினால்தான். பின் குப்புற விழவும், தவழவும், எழுந்து நிற்கவும் போராடித்தான் வெற்றியீட்டுகின்றது. வளர, வளர போராட்டங்கள்தான். சிலருக்கு போராட்டங்கள் கூடலாம். சிலருக்கு குறையலாம். சிலருக்கு கொஞ்சமாகவே போராட்டங்கள் அமையலாம். ஆனால் ஒரேயொரு போராட்டத்தை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் எதிர்கொண்டே ஆகவேண்டும். நமக்கு ஏற்படும் நோய்களுக்கான போராட்டம்தான் அது.

நோய்களை இல்லாது செய்யவோ, தடுக்கவோ அல்லது குறைக்கவோ வெவ்வேறு வகையான வைத்திய முறைகள் உலகில் உள்ளன. அவற்றில் பிரதான இடம் வகிப்பது வெஸ்டர்ன் மெடிசின் எனப்படும் மேல்நாட்டு வைத்திய முறை. கீழ்நாட்டு வைத்தியங்களான ஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனானி, நாட்டுவைத்தியம் இன்னும் ஏதேதோ உள்ளன. நாட்டுக்கு நாடு வெவ்வேறு வைத்தியங்கள் உள்ளன. 

வெவ்வேறு சிகிச்சை முறைகள் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் எல்லா நோய்களையும் அவை தீர்க்கின்றனவா என்பது அறியப்படாத விடயம். ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் பிரதான இடத்தை வகிப்பது மேல்நாட்டு வைத்திய முறையே. அதன் விஸ்தீரணம் மிகப் பெரியது. மேல்நாட்டு வைத்தியமுறை தனியார் வைத்திய சாலைகளாக உருவெடுத்து , இன்று பெரிய வியாபாரத் தளமாக மாறியுள்ளது. இன்னொரு விடயம் என்னவென்றால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கிராமங்களிலும், நகரங்களின் மறைவான பகுதிகளிலும் இருந்து கொண்டு, தராதரமற்ற போலி வைத்தியர்கள் மக்களை ஏமாற்றி சிகிச்சை செய்து, பணம் சம்பாதிக்கின்றார்கள். சுகாதாரத் துறையை மேம்படுத்துகிறோம், மேம்படுத்தி விட்டோம் எனக் கூறுபவர்கள், தகுந்த நடவடிக்கைகள் மூலம் இவர்களைத் தடுப்பது, பிடிப்பது போன்ற விடயங்களைச் செய்யாமலிருப்பது என்பதெல்லாம் வேறுவிடயங்கள். 

இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் நமக்கு வருகின்ற சில பல நோய்களை தடுப்பது, குறைப்பது, தீர்ப்பது என்பது. அவற்றை இயற்கையின் உதவியுடன் நாமாகவே செய்யலாம். எவரது உதவியும் இல்லாமல், எமக்கோ மற்றவர்களுக்கோ சிகிச்சை செய்யலாம்.
இப்போது உணவுகளையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் தேகாரோக்கியத்திற்காக பழைய முறைக்கு மாற்ற வேண்டுமென சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல விடயங்கள் தான் ஆனால் அந்த உணவுகள் தான் நமக்கு கிடைப்பது பெரும் பாடாக இருக்கின்றது. எனது விடயங்கள் அந்தப் பக்கமாக போகாது என்பதை இங்கு முதலில் குறிப்பிட விரும்புகிறேன். 

சிகிச்சை முறைகளை சொல்ல முன்னர் நான் யார் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். நான் ஒரு பிஸியோதெறபிஸ்ட் (Physiotherapist). 45 வருட அனுபவம் என்னிடம் ஒட்டி இருக்கின்றது. ஆயிரக்கணக்கானதோ அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளிகளுடனோ தொடர்புபட்டிருக்கின்றேன்.
அத்துடன் இன்னும் என்னென்னவோ என்னிடம் சேர்ந்து, நான் மேலே சொன்னவாறு சில, பல உடல் ரீதியான பிரச்சினைகளை நம்மாலே தீர்த்துக் கொள்ளலாம் என்கிற அறிவை உங்களுக்கு தரலாம், நீங்களும் பயன் பெறலாம்.மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்பதற்காக இதனை எழுதுகிறேன். இதுவே எனது இலக்கு. 

No comments: