Wednesday, March 27, 2019

பகுதி 2: நோய் - தவிர்ப்பும் தீர்வும்


சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

அறிமுகம்

பதட்டம் – ரென்சன் (Tension)


ரென்சன் என்றாலே பதட்டம், படபடப்பு, கொந்தளிப்பு, மன அமைதியுடன் இருக்க முடியாத நிலை, மூளை வெவ்வேறு யோசனைகளுக்கு போய்க்கொண்டிருக்க நாம் வேறு செய்கைகளச் செய்வது, இத்தியாதிகளுடன் வேறுபலவும் இருக்கின்றன.

எல்லோரும் உடல், மன தளர்வுடன் ஆறுதலாக இருக்கவே விரும்புகிறோம். அப்போதுதான் நமது செய்கைகள் பிழையின்றியும், தெளிவாகவும் அழகாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தினை பேண இது பல வழிகளில் உதவும்.
ஆனால், வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற கவலை, பயம் ஒரே நேரத்தில் பல அலுவல்களை பார்க்க வேண்டிய நிலைமை, அவசரப்படுதல், ஏன் அதிகூடிய மகிழ்ச்சி கூட எம்மை ரென்சனுக்கு உள்ளாக்குகின்றன. அந்த அமைதி, தளர்வு குலைகின்றன.  வீட்டைப் பூட்டி அரைவாசித்தூரம் வந்தபிறகு, பின்கதவைப் பூட்டினோமா, போன்ற ஐயப்பாடுகள் வருவதும் டென்சனுடன் காரியங்கள் ஆற்றுவதால்தான்.

கணவனும், மனைவியும் வெவ்வேறு இடங்களில் தொழில் புரியும் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு வருவோம். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். காலை நான்கு மணிக்கு குடும்பத்தலைவி படுக்கையை விட்டு எழும்புகிறாள். மனம் அமைதியாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பல வேலைகளச் செய்து முடிக்க வேண்டும். பல்விளக்கல், குளிப்பு எல்லாம் கொஞ்சம் அவசரத்தில் நடக்கின்றது. காலை உணவு, மதிய உணவு தயாரிப்புகள் நடக்கின்றது. காபி தயாரிக்கப்பட்டு கணவர், குழந்தைகள் எழுப்பப்படுகின்றனர்.. முனகிக் கொண்டு அடுத்தபக்கம் திரும்பிப் படுக்கும் மகனை அதட்டி சத்தமிட்டு எழுப்புகிறாள்.

அவளது இதயத் துடிப்பு எண்ணிக்கை சற்று கூடுகின்றது.

அவளது கணவனும் பிள்ளைகளைக் குளிப்பாட்டி உடை அணிவித்து, காரியாலயம் போக அவசரபடுகின்றனர்.

அவருக்கும் இதயத்துடிப்பு சற்று கூடுகின்றது.

இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பியபின் கணவன் ஸ்கூட்டரில் சென்று ட்ரபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு காத்திருக்க, நேரம் போகின்றதென ரென்சன் கூடுகின்றது. மனைவிக்கும் அவசரப்பட்டு வேலையை முடிக்க ரென்சன் கூடுகின்றது.

வீதியில் இறங்கி அவசர அவசரமாக நடந்த அந்த குடும்பத்தலைவிக்கு முன்னால் சிரித்துக் கொண்டு நடந்து சென்ற உறவினர் கூட கண்ணுக்குத் தெரியவில்லை. இடைமறித்து பிச்சை கேட்ட பிச்சைக்காரனை அதட்டி, நெஞ்சு படபடப்புடன் பஸ்ஸில் ஏறுகின்றாள். கடைசியில் கணவன், மனைவி இருவருமே காரியாலயம் சென்று, இருக்கையில் அமர்ந்து நேரம் செல்ல செல்ல இதயத் துடிப்பு சீராகி, பதட்டம் எல்லாம் அடங்கி ஆறுதல் நிலைக்கு வருகின்றனர். மனைவி அப்போதுதான் அந்த பிச்சைக்காரனை அவ்வளவு ஏன் அதட்டினோம் என்று நினைக்கிறாள். சில்லறை கொடுத்திருக்கலாமே என்று நினைக்கிறாள்.

இது சாதரணமாக பல சமயங்களில் நமக்கு உருவாகும் ரென்சன் தானாகவே உருவாகி தானாகவே சாதாரண நிலைக்கு வருகின்றது. இந்த சமயத்தில் நமது இதயத்திற்கு கூடுதல் வேலை வருகின்றது.
நமது இதயம் வருடக்கணக்காக தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றது. உலகில் இப்படி வேலை செய்யும் இயந்திரம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இதயத்தின் வேலைகளை ரென்சன் சமயத்தில் இன்னும் கூட்டுகின்றோம். இப்படி அடிக்கடி கூட்டுவது இதயத்திற்கு நல்லது அல்ல. ரென்சன் அடிக்கடி உண்டாவதைத் தடுக்கவேண்டும்.

ரென்சன் இருக்கும்பொழுது, சிறிய சிறிய விடயங்களுக்கும் மற்றவர்களுடன் கோபப்படுவீர்கள். ஒரு விடயத்தில் புலனை நன்றாகச் செலுத்த முடியாதிருக்கும். உங்களைச் சுற்றியுள்ள ஆட்கள், சூழல் என்பவை உங்களுக்கு தெளிவாகப் புரியாமல் இருக்கும். ஞாபகமறதி கூட இருக்கும். ரென்சன் நீடித்து இருந்தால் இரவில் தூக்கமும் வராது. அல்லது ஒழுங்கான தூக்கமாக இருக்காது.

இப்படிப்பட்ட ரென்சன் எங்களது வாழ்க்கையில் தேவையாகவும் உள்ளது. நாங்கள் மேடையில் பேசும்போதோ, நடிக்கும்போதோ, நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும்போதோ நிகழ்வுகளில் நாமும் பங்குபற்றும்போதோ இப்படியே பல 'போதோ' க்கள் இருக்க - குறிப்பிட்ட அளவு ரென்சன் இவைகளுக்கெல்லாம் நமக்கு வேண்டும். சுருக்கிச் சொல்வதானால் 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழியை இங்கு நான் கொண்டுவர வேண்டியுள்ளது.

இக்கட்டுரையின் முக்கியமான குறிக்கோள்; வைத்தியத்தை நாடாது, பதட்டத்தைத் தவிர்க்கும் முறையொன்றைச் சொல்வதே.

அடுத்து வரவிருப்பது ரென்சன் தவிர்த்தல்

No comments: