Tuesday, April 16, 2019

பகுதி 6 - கண்டல் காயங்கள்

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

கண்டல் – contusion

இனி அடிபட்ட, தாக்குப்பட்ட அவயங்களுக்கு வருவோம். அவயங்களில் வலி வீக்கம் என்பன இருந்தால், சிலரது அனுபவ ஏழாம் அறிவே முறிவு உள்ளது அல்லது இல்லை என்றே சொல்லி விடும். அதற்கு மேலே எக்ஸ்றே எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

ஏதோவகையில் முறிவு இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டால் --தசையோ, முள்ளந்தண்டோ, நெஞ்சோ, முதுகோ அவயங்களிலோ வலி, வீக்கம் இருந்தால் அந்த இடத்தை  முடிந்தவரை அசையாமல் ஓய்வில் வைத்திருப்பது நல்லது. உடனடியாக அந்த இடத்தை கசக்குவதோ, உரஞ்சுவதோ, நோவு தீர்க்கும் தைல வகைகள் பூசுவதோ கூடாது.
ஐஸ் பை மாத்திரம் பிடிக்கவேண்டும். 3- 5 நிமிடங்களுக்கு Ice pack ஐ பாதிக்கப்பட்ட இடத்திற்கு மேலாகவும் சுற்றியும் மெதுவாக தடவ வேண்டும். இதனை பாதிக்கப்பட்ட நேரத்திலிருந்து 3- 4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவை செய்யவேண்டும். அடுத்ததாக பாதிக்கப்பட்டபகுதி, தலையணைகளின் உதவியுடனோ, எப்படியோ ஓரளவு உயரமாக வைக்கப்படல் வேண்டும்.

ஐஸ் துண்டுகளை சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டால் அதுதான் ஐஸ் pack ஐஸ் கட்டிகள் இல்லாவிட்டால் குளிர் தண்ணீர் கூட பயன்படுத்தலாம்.
இப்படிச் செய்ய வலி, வீக்கம் குறைந்து கொண்டே வரும். 48 மணித்தியாலங்களுக்குப் பிறகு இருக்கும் வலியை குறைக்க சூடான ஒத்தடம் கொடுக்கலாம். அதனையும் ஒரு நாளைக்கு 3 - 4 தடவை விட்டு விட்டு  செய்யலாம். ஒத்தடம் சுடு நீராகவோ அல்லது சுடு சோறாகவோ இருக்கலாம். நோவு தீர்க்கும் தைலம் பாவிக்கலாம். ஆரம்பத்தில் அழுத்தி மசாஜ் பண்ணாமல் படிப்படியாக அழுத்தம் கூட்டலாம். உங்கள் வீட்டில் infrared lamp இருந்தால் ஒத்தடத்திற்குப் பதிலாக அதன்மூலம் சூடு பிடிக்கலாம்.  தைலம் gel போட்டு உருவி விடுவதாயிருந்தால் மேல்நோக்கி அதாவது உங்கள் இதயம் எங்கிருக்கின்றதோ அந்த திசையில் உருவ வேண்டும். எனவே கழுத்து தலை என்று வரும்போது கீழ்நோக்கி உருவ வேண்டும். இந்த விதியை மீறவேண்டாம். மேலும் வலி, நீக்கம் என்பன குறைந்துவிட்டால் உங்கள் சிகிச்சையை நிறுத்தலாம்.

சிலசமயங்களில் தாக்குதலுக்கு அல்லது பாதிப்புக்கு உள்ளான இடம் வலி வீக்கத்துடன் இருந்தும் காயம் இல்லாது இருந்தாலும் தோலின் கீழே இரத்தம் கசிந்து, நீலமாக அல்லது சற்று கறுப்பாக அல்லது இரண்டும் கலந்தோ, உலக வரைபடத்தில் காணப்படும் நாடுகளின் வடிவமாகவோ அல்லது வட்டமாக இருக்கும். இது contusion (கண்டல்) எனப்படும்.
எப்படியிருந்தாலும் அடிபட்ட இடத்திற்கு உடனேயே ஐஸ் (ice pack) சிகிச்சை    4-5 நிமிடங்களுக்கு, 3-4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவையாக இரண்டு நாட்களுக்கு செய்ய வேண்டும். பின்பு மெல்லிய சூடு ஒத்தடம்.
4-5 நாட்களுக்குப் பிறகு நோவு தீர்க்கும் தைலம் போட்டு contusion உண்டான இடத்தின் விளிம்பைச் சுற்றி 25-30 தடவைகள் சற்று அழுத்தி (மசாஜ்) உருவ வேண்டும். 3-4 தடவை தினமும் செய்ய வேண்டும். இப்படிச் செய்கையில் அந்த contusion வரைபட அளவு சிறிதாகி மறையும். அது மறைந்த பின்பும் அவ்விடம் தோற்றத்தில் எல்லாம் சரியாக இருந்தாலும், உள்ளே தடிப்பாக அல்லது இறுக்கமாக இருக்கலாம். அதனையும் அழுத்தி மசாஜ் பண்ணி சரியான திசையில் உருவி இல்லாமல் செய்யவேண்டும். அது கடைசிவரை இல்லாமல் போகுமட்டும் மசாஜ் செய்யவேண்டும். இது மிக முக்கியம்.

கீழ்வரும் பிறர் கூற்றுக்களைப் படியுங்கள்.
  • 'முச்சக்கரவண்டி குடைசாய்ந்து, கம்பி தொடையில் பலமாக அடிபட்டு, நோவெல்லாம் வந்து சுகமாகி ஐந்தாறு வருஷம்...'
  • 'கிரிக்கெட் பந்து தொடையில் பட்டு, கண்டிச்சு எல்லாம் சரியாகி மூன்று வருஷத்திற்கு மேல்...'
  • 'படியில் ஏறும்போது சறுக்கி விழுந்து படியின் விளிம்பு தொடையில் அடித்து, கஷ்டப்பட்டு, சரியாகி நீண்டகாலம்...'
இவை என் அனுபவப் பாதையில் சந்தித்த பல நோயாளர்களில் சிலரின் முன்கதைச் சுருக்கங்கள்.

அவர்கள் எல்லோருமே தொடையில் மயலோமா (myeloma), ஒஸ்டியோமா (osteoma) என புற்று நோயின் அவதாரங்களில் ஒன்றை கொண்டிருந்தனர்.
கால் இழந்து, எலும்பு துண்டாகி வெட்டியெடுக்கப்பட்டு, புற்றுநோய் வேறு இடங்களுக்கு வியாபித்து என்று பல்வேறு நிலைகளில் அவர்கள் இருந்தனர்.
தொடையில் அடிபடுவதற்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தமோ அல்லது ஒப்பந்தமோ நான் அறியேன். நான் சந்திக்காத இதே போன்ற ஆட்கள் உலகில் எத்தனையோ நானறியேன்.
ஆனால் நீங்கள் அறிந்து - இப்படியான அடிபடுதல் - தாக்குதல் உங்களுக்காவது - மற்றவர்களுக்காவது விசேடமாக தொடையில் நிகழ்ந்தால் ஐஸ் - பின்பு சூடு - மஜாஜ் செய்து எந்த தடிப்போ - கட்டியோ இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம்.

கடைசியில் ஐஸ் விடயமொன்று.

ஐஸ் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த இளஞன் ஒருவன் தவறுதலாக விழுந்து, ஐஸ் தரையில் பலதடவை உருண்டு, பிரண்டு எழும்ப, இடது தோளில் பலத்த அடி. வீட்டில் தாங்கமுடியாத வலி வீக்கத்தால் அவதிப்பட்டு, நகரத்திலேயே பெயர்பெற்ற எலும்பு, முறிவு சத்திரசிகிச்சை நிபுணரிடம் சென்றான். அவர் திருப்பித் திருப்பி கையை பரிசோதித்து விட்டு, 'முறிவு ஏதும் இல்லை. 3 -4 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை 5 நிமிடம் வரை, தடவிக்கொண்டிருங்கள், தடவிய பின்பு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, மீண்டும் மீண்டும் பாவியுங்கள். சரியாகிவிடும்.' என்று , ஐஸ் பை (ice pack) ஒன்றைக் கொடுக்க, அவன் முறைப்புடன் பீஸ் கொடுத்ததெல்லாம் சரித்திரங்கள்.
அடுத்து வரவிருப்பது - காற்று

No comments: