Saturday, April 13, 2019

பகுதி 4 - விபத்துகளும் காயங்களும்

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.
அடிபடுதல் - விழுதல் - மோதுதல் - விபத்துக்கு உட்படுதல் etc
இவற்றில் ஏதாவது நடந்து, இரத்தம் சிந்தும் காயங்கள், ஏதும் ஏற்படாமல் இருந்தால் 'அப்பாடா, தப்பியாச்சு...' என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் ஏற்படும்.
ஆனால், தாக்கத்திற்கு ஆளான உடலின் பகுதி வீங்கலாம், வலி ஏற்படலாம், சூடாகலாம். சிவப்போ, வேறு நிறமோ ஆகலாம். இவை அத்தனையும் சேர்ந்தே வரலாம்.
இங்கு குறிப்பிடப்போவது மேற்கூறிய பிரச்சினைகளை இலகுவாகவும், விரைவாகவும் குறைக்கின்ற முறை.
ஆனால், அடிபடுதல் போன்ற மேற்கூறிய சமாச்சாரங்கள் உடலின் எந்தப்பகுதியில் நிகழ்ந்தது - பாதிக்கப்பட்டது என்பதில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும். அப்படியெனும்போது - முதலில் வருபவர்கள் தலை, முதுகுத்தண்டு, முதுகெலும்பு என்பன.

தலை அடிபடுதல்

தலை பாதிக்கப்பட்டு - சிறிய மயக்கமோ அல்லது பெரிய மயக்கமோ, தனியாக வாந்தியோ, அல்லது மயக்கத்துடன் வாந்தியோ ஏற்பட்டால் - உடனடியாக நோயாளி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். அத்துடன், அவரது தலை உடலின் மேற்பகுதியுடன் சேர்த்து 30-45 பாகை உயர்த்திப் பிடித்தவாறு வைத்திருத்தல் வேண்டும். இதனை மற்றவர்களின் மடி அல்லது தலையணை மூலம் செய்யலாம்.

வைத்தியசாலையில் குறைந்தது 48 மணித்தியாலங்கள் வைத்திய கண்காணிப்பில் இருக்கவேண்டும். தலை உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதா? என்பதில் மற்றவர்கள் மறந்தாலும், நீங்கள் கவனமெடுப்பது நல்லது. மற்றவற்றை வைத்திய சேவையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மயக்கம், வாந்தி இல்லாது தலை பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சையை நீங்களே செய்து கொள்ளலாம். ஆனால், அடிபட்டவர் குழந்தையோ, பெரியவரோ, அவரது பாதிக்கபட்ட இடத்தை உடனே நமது கையால் கசக்குவதும், நோவு தீர்க்கும் எந்த வித கிறீம் அல்லது ஜெல் போட்டு உரஞ்சுவதும் பாதிப்பை பலமடங்கு கூட்டும். வலி குறைந்து, வீக்கம் (swelling) குறைந்து சாதாரணநிலைக்கு வரும் காலம் கூடும். இதற்கான தீர்வு உடலின் ஏனைய பாகங்களில் உண்டாகும் பாதிப்புகளில் எடுக்கவேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை முடிந்தவரை சுருக்கமாக பார்த்த பின், கூறப்படும்.

முதுகெலும்பு

முள்ளந்தண்டு விடயத்தை அனாடமி, பிஸியோலொஜி பாடங்களெல்லாம் சேர்த்து விளக்கமுற்பட்டால் இன்னொரு மகாபாரதமாகி வியாசர் கோபிப்பார். அதைவிட இன்னும் பாடங்களா? என்று நீங்கள் கோபிப்பீர்கள். முடிந்தவரை சுருக்கிக்கொள்கிறேன்.

முதுகெலும்பு, நம் கைபிடி சைஸை விட சற்று குறைவான பருமனில் உள்ள எலும்புத்துண்டுகளால் ஆனது. அவை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் சிறிய பருமனில் உள்ள டிஸ்க் எனும் சற்று தடித்த தட்டு வைக்கப்பட்டு , மேலும் தசைகள்  ligament எனப்படும் நார்களால் வலுவான முதுகெலும்பாக அமைந்து உடற்கூட்டை அமைப்பதில் தனது தொழில்களில் ஒன்றாக கொண்டுள்ளது.
ஒவ்வொரு முதுகெலும்புத் துண்டுகளும் தங்களது டிஸ்க் அமைந்துள்ள பாகத்தை விட்டு பின்பக்கமாக மீதிப் பாகங்களைக்கொண்டு துவாரமொன்றை அமைக்க, அது அடுக்கப்படும்போது, துவாரங்கள் எல்லம் சேர்ந்து குழாய் அமைப்பொன்று உருவாக்கப்படுகின்றது. இக்குழாய் மண்டையோட்டின் கீழே உள்ள துளையுள் தொடர்பாயுள்ளது. 
மண்டையோட்டினுள் மூளை உள்ளது என சிறுவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மூளை இல்லாதவனுக்கும் தெரியும். 
நரம்புக்கலங்கள் பலசேர்ந்து, விசேட அமைப்புகள் பல அமையப்பெற்று மண்டையோட்டை நிரப்பிக் கொண்டிருக்கும் மூளையிலிருந்து நரம்புகளும் அவற்றின் இணைப்புக்கலங்களும் சேர்ந்து, வாழையின் நடுப்பகுதித் தண்டுபோல், மண்டையோட்டின் கீழ் துவாரத்தினூடாக - அதாவது மண்டையோட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து, நமது முதுகெலும்புக் குழாய்க்குள் நுழைந்து, இடுப்பு முள்ளந்தண்டுவரை செல்கின்றது. இது முண்ணான் (spiral cord) என பெயர் கொண்டுள்ளது. (சீரான புடலங்காய் அல்லது முருங்கைக்காய் என்று உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.)


நமது உடம்பின் அனைத்துப்பகுதியிலிருந்தும் நரம்புகள் இந்த முருங்கைக்காய் முண்ணானுடன் தொடர்பு கொள்ள, இந்த முண்ணானிலிருந்து நரம்புகள் வெளிவந்து உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல -நரம்புகளின் வலைப்பின்னல் உடம்பு முழுவதும் உள்ளது.
சூடாக உள்ளதா? குளிரா ? பூச்சி ஊர்கின்றதா? நுளம்பு (கொசு) கடிக்கின்றதா? ஊசி குத்துகின்றதா? etc போன்ற உணர்வுகள், கை, கால் அசைவு, உடம்பு அசைவு போன்றவற்றை இந்த நரம்புகள், முண்ணான், மூளை என்பன இணைந்து செய்கின்றன.
ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதிக்கப்பட்டால், அதற்குரிய பகுதியில் உணர்வுகள், அசைவுகள் நம்மிடமிருந்து விடைபெறும். இதையும் விட முண்ணானின் பகுதி ஒரு மட்டத்தில் பாதிக்கப்பட்டால், சிதைவடைந்தால், அந்த மட்டத்திற்கு  கீழே உள்ள உடற்பகுதி எல்லாமே இயக்கம், உணர்வு என்பவற்றை இழந்துவிடும்.

இந்த முண்ணான் சிதைவு சில நோய்களாலும் ஏற்படலாம். முண்ணானை பாதுகாக்கும் முள்ளந்தண்டு எலும்புகள் ஒன்றோ, இரண்டோ உடைந்து விலகி முண்ணானை அழுத்தி, சிதைவடையச் செய்யலாம். டிஸ்க் விலகியே மேற்கூறிய பாதகத்தைச் செய்யலாம். 
அடுத்து வரவிருப்பது - முதுகெலும்பு பாதிப்பு

No comments: