Wednesday, May 01, 2019

பகுதி 7: காற்று

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


காற்று என்பது உயிரான விஷயம். அதுவும் சுத்தமான காற்றானது உயிருக்கு உயிரானது. ஆனால் அது உயிரற்ற பொருள் (சடப்பொருள்) உலகத்தில் அனைத்து விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் உயிர் கொடுத்துக்கொண்டிருப்பது. 

நைதரசன், ஒட்சிசன், ஆகன், காபனீரொட்சைட் மிக மிகச் சிறிய அளவில் வேறுசில வாயுக்களையும் சேர்த்து கலவையாக்கி, அந்த வாயுக்களின் கலப்பு விகிதம் கிட்டத்தட்ட மாறாமல் வைத்துக்கொண்டு தூசு, புகை, இரசாயன நெடி போன்றவற்றுடன் கூட்டுறவு வைத்துக்கொள்ளாத காற்று சுத்தமான காற்று. 

கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் வசிப்பவர்கள் இழந்துவிட்ட சொர்க்கம் அது. கிராமப்புறங்களில் தென்னங்காற்று, வேப்பங்காற்று, அரச மரக்காற்று, புளியமரக்காற்று...பூங்காற்று என வெவ்வேறு காரக்டர்களில் சுதந்திரமாக உலாவந்து, எமது ஆரோக்கியம் பேணும் காற்று. 

நகரங்களில் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் இருந்து வரும் புகை, காற்றின் சாதாரண நகர்வையும் மீறி, காற்றை கலப்படக்காற்றாக்கி, நகரை முக்கியமாக பகலில் சூழ்ந்து வீதியோரங்களில் உள்ள வீடுகளில் கடைகளில் இருப்போர், பாதசாரிகள் என பல பேரின் மூச்சுக்காற்றாக அது அமைகின்றது. 

விளைவு - அடிக்கடி ஜலதோசம், இடைக்கிடை தலைவலி, கூடவே தொண்டை அரிப்பு, ஆஸ்துமாவை கூடவே வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதன் உக்கிர தாக்கம் போன்றவை நம்மோடு உறவு வைத்துக்கொள்ள, சிலரை மார்பு நோய் சிகிச்சை நிலையங்களுக்கும், புற்றுநோய் சிகிச்சை நிலையங்களுக்கும் வழிதேடவைக்கும். 
ஆனால் தற்போது இலங்கையில்- வாகனப்புகை பரிசோதனை - புகை இல்லை என்ற சான்றிதழ் - சுற்றுச்சூழல் தூய்மைத்திட்டம் என்று வந்தபிறகு, வாகனப்புகை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இருந்தாலும் வீதியில் இருந்திருந்தாற்போல் சில வாகனகங்கள் செல்லும்போது , மூக்கைப் பொத்த வேண்டியுள்ளது. இவ்வாகனங்கள் ஊழலின் பலகூறுகளில் இரண்டான கையூட்டம், குறுக்குவழி என்பவற்றினூடாக சென்றுவந்திருக்கலாம் என்பது என் எண்ணம். பெரும்பாலான ஆசிய நாடுகள் தங்களுடைய பொதுவான உருவமில்லாத தேசிய அடையாளமாக ஊழலை வைத்திருப்பதால், இதெல்லாம் ஆச்சரியமில்லா விஷயங்களில் ஒன்று.

சிகரெட், பீடி, சுருட்டு புகையை பொது இடங்களில் இருந்தும், பொது போக்குவரத்து  வாகனங்களிலும் இருந்தும் விரட்டிவிட்டோம். நல்ல விடயம். ஆனால் சிலர் சிறார்கள், மற்றவர்கள் இருக்க வீட்டில் புகைக்கிறார்கள். இதனை அவர்கள் வீட்டின் வெளியே வைத்துக்கொள்வது நல்லது. அல்லது புகைத்தலை நிறுத்துவது மிக மிக நல்லது. அவர்கள் யாரும் இல்லையென்று வீட்டினுள் பிகை பிடித்தாலும், அப்புகை சில மணிநேரம் வீட்டினுள்ளேயே அடங்கி இருக்கும். மற்றவர்கள், முக்கியமாக சிறார்கள் சிகரெட்டைத் தொடாமலே புகைபிடிப்பவர்களாகி விடுவார்கள்.

புகை என்றாலே எந்தப்புகை என்றாலும் சிறார்களோ, பெர்யவர்களோ அதனை சுவாசிப்பதை அதாவது புகையில் நிற்பதைத் தவிர்க்கவேண்டும். சிறார்களுக்கு சுவாசப்பை நோய்கள், தோல் நோய்கள் ஏற்பட இடமுண்டு. ஆனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் குருதியில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். அவர்கள் புகைப்பதை நிறுத்தி, பல வருடங்கள் ஆனாலும் இது ஏற்படுகின்றது. சுவாசப்பை நோய்கள், மார்பு புற்றுநோய் எதுவும் வரவில்லையே என்று அவர்கள் திருப்தியடைந்தாலும் இரத்த ஓட்டத்தில் திடீரென்று எந்தச் சமயத்திலும் இக்கட்டிகள் உருவாகலாம். இது எனது நோயாளிகளின் சிகிச்சை அனுபவத்தில் பெற்ற உண்மை.

மருத்துவ அல்லது நமது உடற்தொழிற்பாடு பற்றி அறியாதவர்கள், இனி நான் கூறப்போவதை விளங்கிக் கொள்ள முடிகின்றதா என்பதைப் பாருங்கள். சுருக்கம் மிகமிகச் சுருக்கம்.

No comments: