Sunday, May 05, 2019

பகுதி 8: இரத்தமும் காற்றோட்டமும்

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

நாம் உயிரோடு இருக்க நமது உடலெங்கும் எப்போதும் இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் இந்த இரத்தம் இரத்தக்குழாய்கள் மூலம்தான் ஓடுகின்றது. நமது இதயத்திலிருந்து வெளிவரும் பெரிய இரத்தக்குழாய் தன்னிலிருந்து கிளைகளை உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கும் கொடுக்க, அக்கிளைகள் இன்னும் கிளைகளாக பிரிந்து சிறிதாகி, சிறிதாகி மிக நுண்ணிய குழாய்களாக மாற, எமது இரத்தம் எமது உடலின் மிக நுண்ணிய பகுதிகளுக்கெல்லாம் செல்கின்றது. இவ்விரத்தம் ஒரு சிறிய பகுதிக்குக்கூட செல்வதில் தடை ஏற்பட்டால் அந்தப்பகுதி இறந்துவிடும் அல்லது தொழிற்படாது.

குழாய்கள் மூலம் இரத்தத்தை உடலெங்கும் செலுத்தும் தொழிலை இதயம் செய்கின்றது. தனது தொழிலை ஒழுங்காகச் செய்து கொள்ள அதற்கும் இரத்தம் தேவை. அதனை தன்னிடமிருந்து செல்லும் பெரிய குழாயிலிருந்து வெளிவரும் கிளை ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்கின்றது.

சிலருக்கு பிளட்பிரஷர் இல்லை, கொலஸ்ரோல் மட்டம் சாதாரணமானது. போதாக்குறைக்கு சர்க்கரை வியாதியும் இல்லை. ஆனால் திடீரென்று பக்கவாத நோய்க்கு ஆளாவார்கள். இடதோ, வலதோ கை கால் வேலை செய்யாது. அத்துடன் சேர்த்து சிலருக்கு பேச்சு வராது. சிலருக்கு நாம் கூறுவதே விளங்கமுடியாமல் இருக்கும், ... இப்படி பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிலரது வாக்குமூலங்கள் (பக்கவாத நோயாளியின் குடும்பத்தவர்கள் வாயிலாக)

  • 'செயின் ஸ்மோக்கர் தான். புகைப்பதை நிறுத்தி ஆறு வருஷமாச்சு'
  • 'பயிர்களுக்கு அடிக்கும் கிருமிநாசினி கடையில் வருஷக்கணக்கில் வேலை செய்தவர்'
  • 'பக்டரியில் புகை வாற இடத்திலதான் வேல, வேற வருத்தங்கள் வாறல்ல. இடைக்கிடை இருமுவார்'

இவர்களின் CT ஸ்கான் றிப்போட் கூறுவதென்னவென்றால்--
-parietal, frontal, cerebellum, main artery block, branch block, clot...
(செரிபிறம் பறைட்டல், செறிபலம் அல்லது செரிசிறம் புறொண்டல்... மெயின் ஆட்டரி, ப்ளொக்,க்ளொட்)

மூளைக்கு இரத்தம் கொண்டுவரும் இரத்தக்குழாய்களின் கிளைகளில் ஒன்று இரத்தக்கட்டி வந்து அடைத்துள்ளது. இதனால் மூளையின் பகுதி ஒன்று பாதிக்கப்படுகின்றது.  CT scan, நரம்பியல் நிபுணர் இரண்டும் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு  பாதிப்பு ஏற்பட்டு மூன்று மணித்தியாலங்களுள் நோயாளியை கொண்டுசென்றால் இதிலிருந்து மீட்சி பெற வாய்ப்பு உண்டு.
இதே இரத்தக்கட்டி மூளைக்குப் போகாமல், இதய தசைகளுக்கு குருதி வழங்கும், இரத்தக்குழாயின் கிளைகள் ஒன்றுக்கும் சென்று அடைக்கலாம். இதயத்தில் ஒரு சிறு கிளைக்குழாய் அடைத்தால், வேறு கிளைகள் மூலம் குருதிவழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நமக்கு அசாதாரண நிலை எதுவும் ஏற்படாது. ஆனால், நாளடைவில் வெவ்வேறு குழாய்களில் அடைப்பு ஏற்பட, நெஞ்சுவலி, களைப்பு என்று ஏற்பட ECG, ECHO என்று போனால்; அன்ஜியோகிராம் மெயின் பிராஞ்ச் (main branch) 80% அடைப்பு அத்தோடு மூன்று சிறிய குழாய்களில் 100% அடைப்பு என்று முடிவுரைக்கும். அதன்படி bypass க்கு போகலாம், Stent வைக்கப்படலாம்.

இவையெல்லாம் விட்டு சிலருக்கு இதயத்திற்கான பெரிய இரத்தக்குழாய் க்ளொட் - இரத்தக்கட்டியினால் அடைபட்டால் ECG, ECHO எதுவும் தேவையில்லை-- கண்ணீர் அஞ்சலி, பதாதை விடை சொல்லும்.

உங்கள் வயது 35 - 40 க்கு மேலிருந்தால், நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், புகைபிடித்து விட்டிருந்தாலும், அல்லது ஏதாவது சந்தேகம் இருந்தாலோ பொதுவைத்திய நிபுணரையோ அல்லது இதய நோய் சிகிச்சை நிபுணரையோ கலந்தாலோசிப்பதன்மூலம் தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்.  இரத்தக்கட்டி உருவாகாமலிருக்க மாத்திரைகள் தரப்படலாம்.

சர்க்கரை வியாதிக்காரர்கள் புகைபிடிப்பவராக இருந்தால், அவர்களுக்கு சிரங்குகள் ஆறுவது கடினம். அதேசமயம் அவர்களுக்கு  கால்விரல்கள், பாதம் கைவிரல்கள் என்று சிறிய பகுதிகளின் திசுக்கள் இருப்பது அடிக்கடி நடக்கும். இதுதான் கங்கிறீன் gangrene என்பது உருவாகி அந்தப்பகுதியை சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவார்கள். அதாவது விரல்கள் பாதம், முழங்காலுக்குகீழ் என்று எம்மில் அவயவம் இழக்கப்படும். சர்க்கரை வியாதிக்காரர்கள் புகைத்தலை, புகைவரும் இடங்களில் நிற்பதை நிறுத்தியே ஆகவேண்டும்.

சனநெருக்கடி - இடநெருக்கடி  - இன்று விரைவாக பரவிக்கொண்டிருக்க  வீடுகள் தங்களுக்கிடையேயான இடைவெளிகளை குறைத்துக்கொள்வது மாத்திரமின்றி ஒன்றைவிட ஒன்று உயர்ந்து, சில வீடுகளுக்கான காற்றோட்டத்தை குறைத்தே விடுகின்றன. காற்று வீசாவிட்டாலும் இயற்கையாக நாம் அறியாமலே ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு காற்றின் நகர்வு ஒன்று இருந்துகொண்டேயேயிருக்கும்.  இந்த நகர்வுக்கும் தடை ஏற்படும் சமயத்தில்  நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட்டுக்கு இடையிலான விகிதங்கள் மாறும். இந்த நேரத்தில் மின்விசிறியைப் பாவித்தாலும் அரைத்த மாவை அரைப்பதுபோல்  மாறிய விகிதங்கள் அப்படியேதான் இருக்கும்.

நாம் சுவாசிக்கும் சுத்தமான உலர்ந்த காற்றில் ஏறக்குறைய 78% நைதரசனும் 20%ஒட்சிசனும். 0.93% ஆகனும், 0.04% காபனீரொட்சைட்டும் உண்டு. இதில் நைதரசன் எமது சுவாசத்தைப் பொறுத்தமட்டில் அலட்டிக்கொள்ளாத வாயு. ஆகனும் அப்படித்தான். நாம் சுவாசிக்கும்பொழுது, உள்ளெடுக்கும் காற்றில் ஒட்சிசன் அளவு 20% ஆக இருக்கும். வெளிவிடும் காற்றில் காபனீரொட்சைட்டு 0.04% வீதத்திலும் கூடியதாக இருக்கும். காற்று நகராமல் இருந்தால் அக்காற்றில் ஒட்சிசன் சதவீதம் குறைந்து, காபனீரொட்சைட்டின் சதவீதம் கூடுகின்றது. நாம் நிமிடத்திற்கு 15-20 தடவைகள் சுவாசிக்கின்றோம். மணித்தியாலங்களுக்கு எவ்வளவு? நாளுக்கு எத்தனை என்பது உங்கள் கணக்கு.

ஒருவரை காற்றுப்புகாத பெட்டி ஒன்றினுள் வைத்துப் பூட்டினால், அவரைச் சுற்றியுள்ள சாதாரண காற்றின் விகிதம் அவர் சுவாசிக்க சுவாசிக்க மாறிக்கொண்டேவந்து ஒட்சிசன் குறைய, அவர் மயக்கமுற்று முடிவில் இறந்தே போவார்.

கள்ளத்தனமாக ஒரு நாட்டில் இருந்து, இன்னொரு நாட்டிற்கு புலம் பெயர ஆசைப்பட்டவர்கள்  25-30 பேரை உள்வாங்கிக் கொள்ளும் அடைக்கப்பட்ட container அடுத்த நாட்டிற்கு சென்றதும், பிணங்களாய் கொட்டிய செய்திகள் எல்லாம் நாம் அறிந்தவையே.

இயற்கை காற்று வீச்சு குறைந்த இடத்தில் இருப்பவர்களுக்கு ஜலதோசம், தலைவலி, தோல்வியாதிகள் இடைக்கிடையே வரக்கூடும். மேலும் ஆஸ்துமா வியாதி உள்ளவர்களுக்கு அதன் உக்கிரம் கூடும். சிறார்களுக்கு திடீரென உடம்பெல்லாம் திட்டு திட்டாய் தடித்து, சிலவேளை மெல்லிய ஜுரம், அரிப்பும் ஏற்படலாம். வைத்தியசாலையில்  என்ன ஒவ்வாத சாப்பாடு கொடுத்தீர்கள் ஸ்டிரோய்ட் ஊசி போடவேண்டும் என்று சொல்வார்கள்.
நாங்கள் நுளம்பு (கொசு) அறையினுள்ளே வரக்கூடும் என்ற பயத்திலும், திருடர்கள் பயத்திலும் ஜன்னல், கதவுகளை இறுக்கப் பூட்டிக்கொண்டு, தூங்குகின்றோம். மின்விசிறி வேலை செய்தால் போதுமென்று நினைக்கின்றோம். இதுமுன்பு சொன்னதுபோல்...அரைத்தமாவு கதை.  காற்றின் விகிதார குறை.

அறைக்கு இருக்கும் ஜன்னல்கள் பகலிலும் சரி, இரவிலும் சரி திறந்து வையுங்கள். அத்துடன் அதற்கு எதிராகவோ, பக்கவாட்டிலோ வேறு ஜன்னல்கள், கதவுகள் இருந்தால் அவற்றையும் திறந்து வைத்தால் நல்லது. இயற்கை காற்று ஒருவழியால் வந்து, மறுவழியால் நகரும். மின்விசிறியும் சேர்ந்து பாவிக்கலாம்.

திருடர் பயம், நுளம்பு பயம் போக்க உங்கள் அறிவாற்றலை கொண்டு ஏதாவது செய்வீர்கள்.

'இரவு பத்து மணி மட்டும் TV பார்த்துவிட்டு, சிரிச்சு, கதையெல்லாம் கதைத்துவிட்டு,  அறைக் கதவைப் பூட்டிவிட்டு, படுக்கப்போனவர் ஆறரைமணியாகியும் எழும்பி வரவில்லையே எண்டு(என்று)  உள்ளே போய் லைட்டைப் போட்டுப்பார்த்தால் fan வேலை செய்யுது...நான் என்னத்த சொல்லுவன்....ஒண்டும் சொல்லாம கொள்ளாமல் போயிட்டாரே....'
இது இடைக்கிடை நாம் கேட்கின்ற சோகம் கலந்த அழுகுரலின் ஒரு பகுதி...பூட்டிய அறை, காற்றோட்டம் குறைவு...என்பதெல்லாம் உங்களுக்கு விளக்கத் தேவை இல்லை.

அவர், இதயநோய் அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ இருந்திருக்கலாம். அல்லது அவர் ஆரோக்கியமானவராகவும் இருந்திருக்கலாம்.
பூட்டிய ஜன்னல், கதவுகள்தான் அவரது கடைசிமூச்சைக் கண்டிருக்கும். உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை முதலில் நம் கையை மூக்கின் அருகே கொண்டு சென்றுதான் பார்க்கிறோம். உயிருக்கு உயிரான காற்றை (மூச்சு) கொண்டுதான் கணிக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

No comments: