Wednesday, May 06, 2015

புலம் பெயர்ந்தோர் மொழி இருப்பு

புலம் பெயர்ந்தோர் மொழி இருப்பு


ஒளி இருப்பு விளங்க அது
பட வேண்டும் பொருள் மீது
பட்ட ஒளி விழ வேண்டும் 
பார்க்கும் கண் கள்மீது

பார்த்தவர் மதி சொல்லும்
பார்த்தது எது என்று
முழு மதியால் உணர்வோமே 
தெரிய வைத்தது ஒளி என்று

ஒளியைப் போல் மொழி துலங்கப்
பேசிப் படித்து எழுதிக் காட்ட
மக்கள் வேண்டும் ஊடகமாய்
காவிச் செல்லக் காவிகளாய்

புலம் பெயர்ந்து வந்தவர்கள்
புலன் இழந்து வீழவில்லை
வந்த இடம் புதிது என்று
வாய் பொத்தி நிற்கவில்லை

புகுந்த நாட்டு மொழியினிலே
புலமை நிலை நிறுத்திவிடு
அத்தோடு தேர்ச்சி பெறு
தமிழ் மொழியில் விரைவாக

இரண்டு மொழி மூன்று மொழி
இளமையிலே கற்ப தெளிது
மானிடரின் மதித் திறனில்
பல மொழிகள் புகுமிலகில்

மொழியார்வம் மிகுந்து விட்டால்
எமையாரும் மிதித்து விடார்
வெறி பிடித்துப் பிதற்றாமல்
வடிவாக வேலை செய்வோம்

நாம் வழங்கா நமது மொழி
நாளைக்கே மறந்துவிடும்
நாள் தோறும் புழங்கினாலோ
நம்மில் நிலை பெற்றுவிடும்

தமிழில் உரை யாடிடுவோம்
தமிழில் உற வாடிடுவோம்
தமிழ் தடக்குப் பட்டு நின்றால்
தெரிந்து கொள்ள முயன்றிடுவோம்

கணினித் தமிழ் யுகத்தினிலே
நமக் கெல்லாம் வலையில் விழும்
தேடிப் பார்க்கக் கூகிள் உண்டு
பகிர்ந்து பேச முகநூல் உண்டு

இத்தனை வாய்ப்பிருந்தும்
வரவில்லைத் தமிழென்றால்
குற்றமது யார் மேலே
குற்றமது யார் மேலே

வீண்புலம்பல் தனை விடுத்து
வீராப்பாய்த் துடித் தெழுந்து
பேசிடுவோம் படித்திடுவோம்
எழுதிடுவோம் நம் தமிழை

நாம் வளர்க்கத் தமிழ் ஒன்றும்
மரமும் அல்ல மகவும் அல்ல
வளர்ந்து நிற்கும் தமிழை நாம்
தினம் புழங்க அது நிலைக்கும்

தமிழ் வாழும் தமிழ் வாழும்
கோடி நூல்கள் கண்ட மொழி
எம்மில் தமிழ் தினம் இணைக்க
தலை நிமிர்ந்து தமிழ் வாழும்


ஒரு ஆண்டு மலருக்காக 2015 இல் எழுதியது

4 comments:

Jayakumar Chandrasekaran said...

அருமை

--
Jayakumar

Jeyapalan said...

jeyakumar varukaikkum paaraaddukkum nanRi.

Jeyapalan said...

நன்றி

Jeyapalan said...

நன்றி