Wednesday, September 03, 2025

ஒன்பது - ஒன்பான் - தொண்டு

அண்மையில் வளர் என்ற காலாண்டிதழ் ஒன்றிற்கு எழுதிய கட்டுரை: 


ஒன்பது - ஒன்பான் - தொண்டு

ஒன்பது என்ற எண்ணைக் குறிக்குஞ் சொல் ஒரு குழப்ப நிலையைத் தமிழிற்குத் தந்துள்ளது. இந்த நிலை எல்லோரும் அறிந்த ஒரு தகவல். பலரும் விசனப்படும் ஒரு விடயமும் கூட. இதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

எண்பது என்றால் எட்டு பத்து 80 ஆனால் ஒன் பது என்றால் அது 90 என்றல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால் அது வினோதமான  9.

இதே போல் தொண்ணூறு என்னும் போது அது ஒன்பது பத்தைக் குறிக்கிறது 90. 

தொண்ணூறு = தொண்   நூறு (9x100=900) போல் ஒலித்துக் குழப்பத்தை விளைவித்து 90 ஆகவே இருக்கிறது. உற்று நோக்க: எண்ணூறு = எட்டு நூறு (8x100). அப்படியே தொள்ளாயிரமும். 

இது காலங் காலமாக பழகி விட்டவர்களுக்குப் பெரிய தொல்லை இல்லை. ஆனால் உற்று நோக்கினால் குற்றம் போல் இருக்கிறது.

இந்தக் குழப்பத்தோடு தான் தமிழ் இருக்க வேண்டுமா? நாம் இதற்கு என்ன செய்யலாம்? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்த எண்களின் பயன்பாடு காலங் காலமாக எப்படி இருந்தது. அதற்கான ஆய்வாக எங்கள் புகழ் பெற்ற பழந்தமிழ் நூல்கள் வாயிலாக ஆய்வோம்.

ஒன்பது 

ஒன்பது என்பது தொல்காப்பியத்தில், பல இடங்களில் காணப்படுகிறது.

தொல்காப்பியத்தில் இருந்து ஒரு பாடல்:

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்(று)

ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே

ஒன்பது என்ற சொல் சிலப்பதிகாரத்திலும் உண்டு

ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்தவன் - சிலப்பதிகாரம்

இதே குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றிலும் உண்டு

ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த - அகநானூறு

ஒன்பான் 

ஒன்பான் என்ற சொல் சிலப்பதிகரத்தில் ஒன்பதைக் குறித்து ஓரிடத்தில் வருவதைப் பார்ப்போம்.

அதிரா மரபின் யாழ் கை வாங்கி

மதுர கீதம் பாடினள் மயங்கி

ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி

பொருள்:

விருத்தி என்றால் உடற் பயிற்சியின் ஒரு வகை. ஒன்பான் விருத்தி என்றால் ஒன்பது ஆசனங்கள். ‘தலைக்கண் விருத்தி' என்றால் ஒன்பதில் முதலாவதான பத்மாசனம் ஆகும். பத்மாசனமாகிய இருக்கை அமைத்துக்கொண்டு மாதவி யாழ் வாசித்தாளாம்.

தொல்காப்பியத்திலும் பல இடங்களில் ஒன்பான் என்று ஒன்பதைக் குறிப்பிடப்படுவதை பார்க்கலாம்.

தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும்  ஒன்பானும் உண்டு, ஒன்பதும் உண்டு.

மேலும் ஒன்பான் என்பது இந்த நூல்களில் ஒன்பது என்பதை கவி நயத்திற்காகவும், இலக்கண நயத்திற்காகவும் புகுத்தப்பட்ட வடிவமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. தொல்காப்பியத்தில், சில இடங்களில் ஐந்தன், எட்டன் என்ற குறிப்புக்களைப் பார்க்கும்போது, ஒன்பான் என்பதும் அப்படியே ஒன்பது என்பதன் செல்லப் பெயரோ என்று தோன்றுகிறது.

மேலும், ஒன்பான் என்ற சொல் சங்க இலக்கிய நூல்களில் இடம்பெறவில்லை. 

தொண்டு

தொல்காப்பியத்தில் தொண்டு என்ற சொல் ஒன்பதைக் குறித்து உள்ளது.

மெய் பெறு மரபின் தொடை வகைதாமே

ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ஞூற்றொடு

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று ஒன்பஃது என்பது 

ஒன்பதை மேலே வைத்த பத்துக் குறை எழுநூற்று ஒன்பது என்று வரும்.

அத்துடன், தொண்டு என்ற சொல் ஒன்பதைக் குறிக்கு முகமாக சங்க கால இலக்கியங்களிலும் காணப்படுகிறது. பரிபாடலில் வரும் ஒரு பாடல் இதோ.

பாழ் என கால் என பாகு என ஒன்று என

இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என

ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என  - பரிபாடல்

சிலப்பதிகாரத்தில் தொண்டு என்ற சொல்லைக் காண முடியவில்லை. 

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் என்பவற்றில் குறிப்பிடப்படும் தொண்டு, அதே சம காலத்தில் குறிப்பிடப்படும் ஒன்பது என்ற நிலையை வைத்து, நாம் உய்த்தறிவது யாதெனில், ஒன்பது நுழையும் காலம் தொல்காப்பியக் காலத்தில் நடைபெறுகிறது.

தொல்காப்பியக் காலம், சங்ககாலம் வரை இருந்த தொண்டு சிலப்பதிகாரத்தில் இடம்பெறாததைக் கொண்டு ஒன்பதின் ஆட்சி பலப்படுத்தப் பட்டுவிடுவதை அவதானிக்கலாம். தொண்டு வழக்கொழிந்து போனதையும் காணலாம்.

தொண்ணூறு

தொல்காப்பியத்தில் ஒன்பானிற்கும்  ஒன்பதிற்கும் ஒரு தொடர்பு உருவாவது பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. ஆனால் “ஒன்பஃது” இலிருந்து தொண்ணூறு உருவாகும் முறை விபரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்

எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்

முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி

ஒற்றிய தகரம் றகரம் ஆகும்

இதன் விளக்கமாவது: 

ஒன்பஃது இல் இருக்கும் ஒகாரத்தில் தகாரம் ஒற்றும். இதில் தொ ஆரம்பம்.

பின்னர் ணகாரம் இரட்டும். இப்போ தொண்ண் என்று வருகிறது.

மேலும், 

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி

ஒற்றிய தகரம் றகரம் ஆகும்

இது தொண்ணூறு என்பதைக் கொடுக்கிறது என்று விளக்குகிறார் தொல்காப்பியர். நீட்டி முடக்கி அளிக்கப்பட்டுள்ள விளக்கம் இது.

இதை ஒரு வரைவிலக்கணமாக நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அக்கால வழக்கில் இருந்த அந்தச் சிக்கலுக்கு தொல்காப்பியர் கொடுத்த ஒரு விளக்கமாக எடுக்கலாம்.

தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவை சங்கப் பாடல்களிலோ, தொல்காப்பியத்திலோ, சிலப்பதிகாரத்திலோ வேறு இடங்க்களில் காணப்படவில்லை.

இலத்தீன்/உரோமன் எண் பாதிப்பு

உரோமன் எண்களில் 4 என்பது  IV என்றும்,  9 என்பது  IX என்றும் எழுதப்படுவது நாம் அறிந்ததே. இங்கே 4 என்பது “ஒன்று குறை ஐந்து” எனவும் 9 என்பது “ஒன்று குறை பத்து” எனவும் கொள்ளப்படலாம். இது ஒரு எச்சரிக்கையோடு கூடிய நெகிழ்ச்சி முறை. இந்த நெகிழ்ச்சியைக் கருத்திற் கொண்டு, தமிழில் ஒன்று குறை பத்து என்பதை ஒன்பது என்று அழைத்திருக்கலாம். ஆனால் இந்த நெகிழ்ச்சியை 4 இல் செய்யவில்லையே!. மேலும், இந்த நெகிழ்ச்சி முறை காணப்படும் உரோமன் எண்கள் அவற்றை உச்சரிப்பில் காட்டவில்லை. இதை கூகிளில் தேடிப் பார்க்கலாம்.


Roman Numeral

Latin

English

I

unus (oo-nus)

one

II

duo (du-oh)

two

III

tres (trays)

three

IV

quattuor (kwuht-tu-ohr)

four

V

quinque (kween-kweh)

five

VI

sex (sehks)

six

VII

septem (sehp-tehm)

seven

VIII

octo (ohk-to)

eight

IX

novem (noh-wehm)

nine

X

decem (deh-kehm)

ten

என்னவாயினும், தமிழின் சிறப்பைக் கருதி, ஒன்பது - 9, தொண்ணூறு - 90, தொள்ளாயிரம் - 900 என்ற உபயோகம் தவிர்க்கப்படுவது நல்லது

மாற்றுச் சிந்தனை

இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்பது என்ற தற்கால வழக்கத்தை நாம் கைவிட வேண்டும். 

ஒன்பான் என்பது ஒன்பது என்பதன் ஒரு சேர்மானத்தோடு கூடிய ஒரு சொல்லே. அதனால், ஒன்பான் என்பதும் கைவிடப்படலாம்.

ஆக நாம் எங்கள் பெருமைமிகு “தொண்டு” என்ற சொல்லைப் புழங்குவதற்கு முன்வருவோம்.

தொண்டு என்பதன் வடிவங்களை அறிமுகப்படுத்துவோம்.

9 = தொண்டு

90 = தொண்பது

900 = தொண்ணூறு

9,000 = தொள்ளாயிரம்

90,000 = தொண்பதாயிரம்

900,000 = தொண்ணூறாயிரம் அல்லது தொண்டு இலட்சம்

9,000,000 = தொண்டு மில்லியன் அல்லது தொண்பது இலட்சம்

இப்படியாக உபயோகிக்க, மேலும் சில எடுத்துக்காட்டுகள் இதோ.

19 = பத்தொண்டு

29 = இருபத் தொண்டு

91 = தொண்பத்தொன்று

92 = தொண்பத்திரண்டு

99 = தொண்பத் தொண்டு

109 = நூற்றித் தொண்டு

199 = நூற்றித் தொண்பத் தொண்டு

190 = நூற்றித் தொண்பது

909 = தொண்ணூற்றித் தொண்டு

999 = தொண்ணூற்றித் தொண்பத்தொண்டு

செயற்படுத்தல்

தமிழ் மொழியை அரச மொழியாகக் கொண்ட நாடுகளுக்கான விண்ணப்பம்.

இந்தப் பரிந்துரைப்பை அரசுகளும், தொடர்பான அமைச்சுகளும் கவனத்தில் எடுத்துத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் புழங்கும் இடங்கள் எங்கும் அந்த அரசுகளும் அமைச்சுகளும் இதை ஒருமுகமாகச் செயற்படுத்த வேண்டும்.

தமிழ் நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய அதிகாரம் கொண்ட நாடுகளுக்கு இந்த வேண்டுகோளை வைப்போம். அவர்கள் ஒரு கூட்டு நடவடிக்கையாக இதைக் கையாண்டு, செயற்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். 

இது நடைமுறைக்கு வந்ததும் எல்லோரும் பின்பற்றுவோம். அரச அதிகாரமில்லாத இடங்களில் உள்ள தமிழ் அமைப்புகள், பாடசாலைகள் அரச அறிவிப்புகளை ஏற்று நடக்க முன்வர வேண்டும்.

எல்லோரும் ஒருங்கிணைந்து இதை முன்னெடுத்தால், தமிழிற் புகுந்து கொண்ட  இந்தக் குறையை நீக்கி விடலாம். 



Saturday, March 29, 2025

தமிழ்ச் சாதி

 ஈழம் - தமிழ் நாடு

சாதி நிலை


சாதி அமைப்பைப் பேணுவதற்காகவோ, அதை ஞாயப்படுத்துவதற்காகவோ இதை எழுதவில்லை. சமூகத்தில் இருக்கும் பிரிவுகளையும் அவற்றால் விளைந்த ஏற்றத் தாழ்வுகளையும் அந்த அடுக்கு வரிசையில் எங்கிருந்தாலும் அதனுள் காணும் பேதங்களையும் பார்த்த விரக்தியில் எழும் பதிவு இது. 


தொழிலால் அடையாளம் காணப்பட்டவர்கள், பின்னர் பிறப்பால் அந்த அடையாளத்தில் அடக்கப்பட்ட போது இந்தச் சாதி அமைப்பு சமுதாயத்தில் நிலைத்து விட்டது. அதில், மேலும், உயர்ந்தோர் என்றும், தாழ்ந்தோர் என்றும் அடுக்கி வைத்ததால் இந்தச் சாதிய அமைப்பில் அகப்பட்டவர்கள் படும் பாடுகள் சொல்லி மாளா. 


இந்திய மற்றும் இலங்கையின் தமிழர்கள் பல்வேறு சமூகவியல், பண்பாட்டு வரலாற்றுப் பார்வைகளில் இணைந்தாலும், அவர்கள் வாழும் பிரதேசங்களில், குறிப்பாக தமிழ் நாட்டிலும் ஈழத்திலும், சாதி அமைப்புகளுக்கான வேறுபாடுகள் உள்ளன. இந்த இரு பிரதேசங்களிலும் உள்ள சாதி அமைப்புகள் பொதுவாக ஒரே அடிப்படையைப் பின்பற்றினாலும், அவை சமூகத் தன்மைகள், வரலாற்று சூழ்நிலைகள், அரசியல் சூழல்களில் உள்ள வேறுபாடுகளால் வேறுபடுகின்றன.


தமிழர்கள் தங்களின் சமூகத்தில் மிகப் பெரிய ஆதிக்கத்தைக் கொண்டிருந்த இந்திய சனாதன மரபுகளைக் கையாளும் மக்களாக இருக்கின்றனர். தமிழ் நாட்டின் சாதி அமைப்பும், இலங்கையிலும், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சமூகக் கட்டமைப்புகளை உள்ளடக்கியது. தமிழ் நாட்டின் சாதி அமைப்புகள் பெரும்பாலும் இந்து சமயக் கருத்துக்களில் அடிப்படையை கொண்டிருக்கும் போதிலும், இரு பிரதேசங்களிலும் அவை வெவ்வேறு வரலாற்றுப் பின்னணிகளால் மாறியுள்ளன.


ஈழத்தில் உள்ள சமூகம் தமிழ் சமூகவியல் பார்வையில் குறிப்பிடத்தக்கது. இங்கு சாதி அமைப்புகள் பல்வேறு வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. சாதி சமூகம் குறிப்பாக பெரும்பாலும் வெள்ளாளர், கரையார், முக்குவர், பள்ளர், நளவர், கோவியர், நட்டுவர், தட்டார், கொல்லர், சாண்டார், அம்பட்டர், வண்ணார், சிவியார், பறையர், செட்டியார், பிராமணர் மேலும் பல சிறிய சாதிப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.


  • வெள்ளாளர்: இந்தச் சாதி சமூகத்தில் மிகப்பெரிய இடம் பெற்றது. வேளாண்மை மற்றும் நில உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இது ஈழத்தில் மிகவும் முக்கியமான சமூகமாக விளங்குகிறது.

  • கரையார்: மீன்பிடி பணி சார்ந்தவர்கள்.

  • முக்குவர்: கிழக்கு மாகாணத்தில் நில உடமையாளர்களாகவும் வேளாண்மையும் செய்பவர்களாகவும் உள்ளனர்,  மீன்பிடியும் உண்டு.

  • பள்ளர், நளவர், சாண்டார்: கள்ளிறக்கும் வேலையை பிரதானமாகச் செய்தவர்கள். வேளாண்மைக் கூலிகளாகவும் வேறு தொழில்களும் செய்பவர்கள். இவர்கள் இந்தியாவின் நாடார், ஈழவர் சமூகங்களுக்கு ஒப்பானவர்கள்.

  • கோவியர்: கோவிலுக்கும், கோவிலைச் சார்ந்தவர்களுக்கும் சேவகம் செய்யும் தொழிலுக்கானவர்கள். இப்பொழுது அந்த நடைமுறை இல்லை.

  • நட்டுவர்: தவில், நாதசுரம் இசைக்கலைஞர். 

  • கொல்லர்: (இரும்பு வேலை), தட்டார்: (பொற் கொல்லர்), கன்னார்: (பித்தளை போன்ற உலோக வேலை), தச்சர் (மர வேலை)

  • அம்பட்டர், வண்ணார்: தலைமயிர் திருத்துவோர், துணி துவைப்போர்.

  • சிவியார்: அரச குடிகளுக்கு சிவிகை சுமந்த வழித்தோன்றல்கள்.

  • செட்டியார்: இந்தியாவிலிருந்து வந்த வியாபாரிகள்.

  • பிராமணர்: இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கோவில் பூசகர்கள்.

  • குயவர்: மட்பாண்டம் செய்பவர்கள்.

  • பறையர்: பறை இசைக்கருவி இசைப்பவர்கள், செருப்புத் தைத்தல், மற்றும் துப்புரவுத் தொழில் செய்தவர்கள்

  • பண்டாரம், தவசி: கோவில் வேலைகளில் சம்பத்தப்பட்டவர்கள்.


இவை தவிர, பல சிறு சமூகங்கள் வெளியில் தெரியாத பிரிவுகளுடன் ஏனையவருடன் கலந்து விட்டனர்.


இந்தச் சாதிகளில் இப்பொழுது, பெரும்பாலானவர்கள், தம் அடையாளத் தொழில்களை விட்டு எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள்.


தமிழ் நாடு: சிறிது வேறுபட்ட அமைப்பு


தமிழ் நாடு, இந்தியாவின் முக்கிய மாநிலமாக, பல்வேறு சாதி அமைப்புகளைக் கொண்டுள்ளது. இங்கு பல்வேறு மதம், பழமையான பண்பாடுகள், கட்சி அரசியல், ஊர்த் திருவிழாக்கள் மற்றும் மதப் பரம்பரைகள், இவை அனைத்தும் சாதி அமைப்பின் பிரிவுகளாகக் கையாளப்பட்டுள்ளன.


  • பிராமணர்: இந்தச் சாதி, தமிழ் நாடு சமூகம் முழுவதிலும் அதிக கருத்துக்களையும் மதக் கட்டளைகளையும் கொண்டவர்கள். அவர்கள் பொதுவாக ஆன்மிகத்திலும், கோவில் பூசாரிகளாகவும், அறிவியலிலும் தம்மைப் புகுத்திக் கொண்டவர்கள்.

  • வெள்ளாளர்: இந்தச் சாதி சமூகத்தில் மிகப்பெரிய இடம் பெற்றது. வேளாண்மை மற்றும் நில உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு பிரிவுகள் உண்டு. பிள்ளை, முதலி, உடையார் போன்ற பிரிவுகள் தங்களை மேலும் தனித்துவமாகக் காட்டத் தலை தூக்கியவை

  • தேவர்: படையணியும் வேளாண்மையும் இவர்களின் பாரம்பரிய தொழில்கள். இவர்களும் கள்ளர், மறவர், அகமுடையார் என்ற மூன்று பிரிவுகள் ஒன்றிணந்து உருவாக்கப்பட்ட குழு. ஈழத்தில் இவர்கள் வேளாளருக்குள் சேர்ந்து விட்டனர்.

  • மீனவர்: செம்படவர், கரையார் என்று உள்ளவர்கள். ஈழத்தில் இருக்கும் உயர் நிலை தமிழகத்தில் இல்லை.

  • வன்னியர்: இவர்கள் சமூகத் தொண்டுகள் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இவர்களும் ஈழத்தில் வேளாளருக்குள் சேர்ந்து விட்டனர்.

  • பறையர்: பறை இசைக்கருவி இசைப்பவர்கள், செருப்புத் தைத்தல், மற்றும் துப்புரவுத் தொழில் செய்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அடிப்படை வேலைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டவர்கள்.

  •  செட்டியார்: இந்த சமூகங்கள் வணிகத்தில் மற்றும் வர்த்தகத்தில் முன்னணி வகித்துள்ளன. இவர்கள் பெரும்பாலும் வணிகதுறையில் மிகவும் சாதனையாளர்களாக இருந்து வருகிறார்கள்.

  • நாடார்: கள்ளிறக்கும் தொழிலைச் செய்தவர்கள். இப்போது வர்த்தகத்திலும் முன்னணி வகிக்கிறார்கள். ஈழத்தில் இவர்கள் நளவர், பள்ளர் இரண்டிற்கும் ஒப்பிடப்படக் கூடியவர்கள்.

  • வண்ணார், அம்பட்டர், தட்டார், கொல்லர், தச்சர், குயவர் போன்றவர்களும் உண்டு.


ஈழம், தமிழ் நாடு: ஒப்பீடு


ஈழம் மற்றும் தமிழ் நாட்டின் சாதி அமைப்புகளில் சில முக்கியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.


1. சமூக பரம்பரை மற்றும் வரலாற்று வித்தியாசங்கள்: தமிழ் நாடு சாதி அமைப்புகள் பாரம்பரியமாக பெரும்பாலும் வேளாண்மை, ஆதிகால ஆட்சிகளின் கீழ் சமூக கட்டமைப்புகளுக்கு உட்பட்டிருந்தது. ஈழத்தில் அதேபோல், இலங்கைத் தமிழர்களின் சமூக கட்டமைப்பு வழக்கமாக வேளாண்மை மற்றும் கடல் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.


2. அரசியல் மற்றும் பண்பாடு: தமிழ் நாடு, 20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் போன்ற சமூக மாற்றப் பணிகளுக்கு மையமாக இருந்தது. இவை சாதி மற்றும் சாதி ஒழிப்புக்கான வழிமுறைகளைத் திறந்துவிட்டன. ஆனால், ஈழத்தில் ஆட்சியாளர்களின் தாக்கம் மற்றும் தமிழ் இளைஞருக்கான விடுதலைப் போராட்டங்கள் மட்டுமே முக்கியமான அரசியல் அமைப்புகளாக நிலைத்திருந்தன.


சுருக்கமாக, ஆனால் கவலையுடன் கூறப்பட வேண்டியது:

ஈழம் மற்றும் தமிழ் நாடு ஆகியவற்றின் சாதி அமைப்புகள் இரண்டும் தமிழ் சமுதாயத்தின் வெட்கப்பட வேண்டிய அங்கமாக இருக்கின்றன. வரலாற்று, சமூக மற்றும் அரசியல் பலவீனங்களான இவை, இவ்விரு பிரதேசங்களின் சமூகம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் கொடுமையாகவும் இருக்கின்றன. 


அதிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பல வடிவங்களிற் காணப்படுகின்றன. இந்தக் கொடுமைகளும் துயரங்களும் ஒழிய வேண்டின், எல்லோரும் ஒன்றாகப் பாடுபட்டு, பாகுபாடுகளைக் களைய வேண்டும்.


சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் 

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

சாதி மதங்களைப் பாரோம் – பாரதியார்


சாத்திரம் பலபேசும் சழக்கர் காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் –  அப்பர்


சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

 ஆதமிலி நாயேனை..   - மாணிக்கவாசகர்


பறைச்சி யாவது ஏதடா? பனத்தி யாவது ஏதடா?

இறைச்சி தோல் எலும்பிலும் 

இலக்கம் இட்டு இருக்குதோ…  —      சித்தர் சிவவாக்கியார்



சாதி என்பது ஒரு வசதியான வசதி பலருக்கு. அதுவே வசதி மறுக்கும் வசதியீனம் ஏனையோருக்கு.

Caste is a convenient convenience for some and an inconvenient inconvenience for others.