Tuesday, December 20, 2011

அங்காடித் தெரு

திரைப்பட ஆய்வு செய்யத்
திராணி இல்லை
திரைக்கதை சாற்றும் உண்மை
திக்கற்றோர் நிலை

பல படங்கள் பார்த்து விட்டோம்
சில படங்கள் பதித்து விடும்
முத்திரை குத்தி
காஞ்சிவரம் அங்காடித்தெரு
பறித்ததோ நித்திரையை

நல்லதாய் ஒளிர்கிறது
வல்லரசாய் மிளிர்கிறது
வாய்கிழியக் கூவி விற்று
வக்கணையாய்ப் பதவி பெற்று
வந்ததெல்லாம் சுருட்டிக்கொண்டு
வண்ண வண்ண அரசுகளும்
வால்பிடிக்கும் அமைச்சுகளும்
வதைத்தெடுக்கும் ஊழியரும்
வலையமைப்பாய்த் தொடரும்
அநியாய அட்டூளியம்
அறுதியிட்டு நிற்கையேல்
அலைக்களியும் அப்பாவிச் சனம்

காவலரே கேவலமாய்க்
காசுக்கு வாய் பிளந்தால்
பாதகங்கள் செய்வோரைப்
பார்ப்பதுவும் யாரோ
பாவிகள் முறையீட்டைக்
கேட்பதுவும் யாரோ

உடனடியாய்த் தீர்வு தேட
இதுவொன்றும் மழையில்லை
தீர்வொன்றும் குடையுமில்லை

மனிதர்கள் மாறுவதும்
மனங்களை மாற்றுவதும்
மந்திரத்தால் நடந்துவிடா
மாற்றங்கள் தேவையென்றே
நற்குணங்கள் பிஞ்சிலேயே
போதிக்கத் தொடங்கிவிட்டால்
பாதி மக்கள் திருந்திடுவர்
நயமாக வாழ்ந்திடுவர்
-செயபால், மே 16, 2010

Tuesday, December 13, 2011

பாடகர்கள் ஜெயச்சந்திரன் - மது பாலகிருஸ்ணன்

1. மலரோ நிலவோ மலை மகளோ
2. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு



3. மஞ்சள் நிலாவுக்கு
4. ஆடி வெள்ளி தேடி வந்து
5. எங்கெங்கும் அவள் முகம்
6. சித்திரச் செவ்வானம் சிவக்கக் கண்டேன்
7. தவிக்குது தயங்குது ஒரு மனது
8. ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்



போன்ற பல சிறந்த பாடல்களைப் பாடிய ஒரு அதிசயப் பாடகர் ஜெயச்சந்திரன். யேசுதாசிடம் இல்லாத ஒரு கவர்ச்சி அவர் குரலில் உண்டு. மெல்லிய சோகம் இழையோடும் பாடல்களை இவர் பாடும் போது அந்தப் பாடல்கள் பெரும் புகழடைந்திருந்தன.

இப்பொழுதெல்லாம் இவர் பாடல்கள் வருவதில்லை, வயதாகி விட்டது. இப்படிப்பட்ட பாடகருக்குப் பிறகு யார் வருவார் என்று ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடம் தீர்ந்த்து போல் ஒரு உணர்வு இந்தப் பாடலைக் கேட்டால் வரும். அந்தப் பாடல்,அபியும் நானும் படத்தில் உயிரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் பாடல்

வா வா என் தேவதையே - பொன்
வாய் பேசும் தாரகையே



படம் பார்க்கும் போது இது ஜெயச்சந்திரனின் இன்னொரு சிறந்த பாடல் என்று எண்ணிக் கொண்டிருந்தவேளை அதைப் பாடியவர் மது பாலகிருஸ்ணன் என்று அறிந்த போது அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டென்று நம்ப வைத்தது.

ஜெயச்சந்திரன் ரசிகர்களுக்காக இங்கே சில பாடல்கள்
http://mp3.tamilwire.com/p-jayachandran.html

Thursday, August 25, 2011

தாண்டவக்கோனே - கவர்ந்து போனாரே 2

காசு பணம் தேடிச் சென்றோம் தாண்டவக்கோனே - நாம்
கோடி சுகம் நாடிச் சென்றோம் தாண்டவக்கோனே

ஓடி ஒளிந்தே பறந்தோம் தாண்டவக்கோனே - நம்
தாயகத்தையே துறந்தோம் தாண்டவக்கோனே

பட்டழிந்தோம் கெட்டழிந்தோம் தாண்டவக்கோனே - நாம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம் தாண்டவக்கோனே

கட்டுக் காவல் கலைந்த நாட்டில் தாண்டவக்கோனே - அவர்
தட்டி பிரித்தே நுழைந்தார் தாண்டவக்கோனே

காடு பறி போனதண்ணே தாண்டவக்கோனே - சுடு
காடும் பறி போனதண்ணே தாண்டவக்கோனே

வீடு பறி போனதண்ணே தாண்டவக்கோனே - அட
நாடே பறி போனதண்ணே தாண்டவக்கோனே

ஏர் உழுத ஈர நிலம் தாண்டவக்கோனே - எங்கள்
ஏழை மக்கள் பாச நிலம் தாண்டவக்கோனே

கார் சூழ்ந்த கானகங்கள் தாண்டவக்கோனே - எல்லாம்
வேரோடே போனதண்ணே தாண்டவக்கோனே

மிச்ச சொச்ச சொந்த மெல்லாம் தாண்டவக்கோனே - அங்கே
பச்சைப் புழுவாய்த் துடித்தார் தாண்டவக்கோனே

பட்டி கட்டிக் கமஞ் செய்தார் தாண்டவக்கோனே - இன்று
பட்டிக்குள்ளே அடை பட்டார் தாண்டவக்கோனே

குஞ்சு குரால் பிஞ்செல்லாம் தாண்டவக்கோனே - அங்கே
பஞ்சையாய்ப் போனதண்ணே தாண்டவக்கோனே

கஞ்சிக்கே காவடியாம் தாண்டவக்கோனே - நாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே தாண்டவக்கோனே

வஞ்சகர்கள் காலமெல்லாம் தாண்டவக்கோனே - ஓர்நாள்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே தாண்டவக்கோனே

பொன்விளையும் புஞ்சை எல்லாம் தாண்டவக்கோனே - விரைந்து
வந்தமருங் கையிலோர் நாள் தாண்டவக்கோனே

Friday, August 19, 2011

தண்ணீர் போற்றுதும்

தண்ணீர் போற்றுதும்

பருகத் தண்ணீர்
பாய்ச்சத் தண்ணீர்
சோறுகறி எல்லாம்
காய்ச்சத் தண்ணீர்

கழுவத் தண்ணீர்
குளிக்கத் தண்ணீர்
நீந்தத் தண்ணீர்
துவைக்கத் தண்ணீர்

பயிர் விளையத் தண்ணீர்
உயிர் வாழத் தண்ணீர்
எத்தனை அதிசயம்
எத்தனை அற்புதம்
பாரீர் பாரீர்
தண்ணீர் பாரீர்

தின்னும் தொண்டை அடைத்தால் -அதை
இழக்க வேண்டும் தண்ணீர்
மேலும் விக்கல் எடுத்தால் - அதை
தடுக்க வேண்டும் தண்ணீர்

பயன்பட மட்டுமா தண்ணீர்
பயப்பட வேண்டாமா

மூழ்கினால் இறப்பு
பேரலையாக அடிப்பு
கொதிநீராக அவிப்பு
எனக் கொல்லவும்
செய்யும் இவ் அப்பு

ஆக்க அழிக்க
மட்டுமா தண்ணீர்
அழகாய் இரசிக்கவும்
அழகு தண்ணீர்

மழையின் அழகு
மனதைக் கவரும்

வெள்ளம் பாய்ந்துள்
மனதை வருடும்

நதியாய்ப் பாய்ந்து
அழகாய் நடக்கும்

குளமாய்க் கடலாய்
மனதை நிறைக்கும்

அலையாய் அடித்து
மனதை வெளுக்கும்

நீர் வீழ்வாய் வீழ்ந்து
மனக் கர்வம் அடக்கும்

வான வில்லாய்த் தோன்றி
விண்ணை அளக்கும்

வண்ணம் கூடத்
தண்ணீர் தானே

திண்மமாய்த் திரவமாய்
வாயுவாய் வடிவெடுத்து
எடுக்கும் வடிவிலெல்லாம்
கொடுக்கும் கொடை தண்ணீர்

இறந்தவர் கடன்தீர்க்க
ஒரு முழுக்கு
கோவிலைத் தொடக்க
குட முழுக்கு
துடக்குக் கழிக்க
ஒரு முழுக்கு
மூடக் கொள்கைக்கும்
இல்லை நீ விலக்கு

தண்ணீர் போல் தாராளம்
யார்க் குண்டு ஏராளம்
ஆதலால் நீவிர்
தண்ணீர் போற்றுதும்
தண்ணீர் போற்றுதும்

-செயபால்

Saturday, July 23, 2011

தமிழ் கற்றோம்

தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவில் ஒரு மாணவர் வாசிக்கும் கவிதை.

தந்தை தாய் கைப் பிடித்துக்
கலவர முகத்துடனே
நாலு வயதில் வந்தோம்
தமிழ்ப் பள்ளியினை நாடி

வணக்கம் கூறி வரவேற்றார்
வடிவாக ஆசிரியரும்
வணங்கி வரம் பெற்றதுபோல்
கற்றோம் தமிழை நாம்

ஆனா முதல் அகேனம் வரையும்
கானா முதல் னானா வரையும்
காணாத பல எழுத்தும் வாயில்
பூராத புது ஒலியும்
பழகினோம் பார்த்தோம்
எழுதியும் வந்தோம்

மொழி மட்டும் படிக்கவில்லை
தமிழ்ப் பள்ளியில் நாம்
தமிழ்ப் பண்பாடும் பழக்கமும்
வழக்கமும் அறிந்தோம் நாம்

புலம் பெயர்ந்து வந்த நாம்
புறம்பாகத் தேர்ச்சி பெற்றோம்
புலவர் பலர் வளர்த்து விட்ட
என்றும் புதுத் தமிழ் மொழியில்

கற்றது நல் தமிழ்
நம் பெற்றோர்க்குத் தந்தது
நன் மக்கள் எனும் பட்டம்
பெருமையாகப் பேசிக்கொள்வர்
எம் பெற்றோர் எம்மைப் பற்றி
தமிழ் தெரிந்த பிள்ளைகள் எம்
பிள்ளைகள் என்று நாளும்

முழுநேரக் கல்வியோ
புகுந்த மொழி மூலம்
மூச்சு விடுவதுமே
அம்மொழியில் என்றிருக்க
இரண்டரை மணித்துளிகளில்
இனிதாய்க் கற்றுவந்தோம்
தாய் மொழியாம் தமிழ் மொழியை

ஆண்டுகள் பத்து
கடந்து விட்ட இந்நிலையில்
தமிழ் தெரிந்த தமிழராகத்
திரும்பிப் பார்க்கிறோம்
கடந்து வந்த பாதையை நாம்
அன்பான பெற்றோரே
ஆசிரியரே தோழர்களே
அனைவருக்கும் நன்றிகள்
வாழ்த்துகள் வணக்கங்கள்

செயபால் 2010

Saturday, July 16, 2011

தமிழ் கேட்டேன், ஒரு மாணவனாக

அம்மாவிடம் என் அறிமுகம் கேட்டேன்
அப்பாவிடம் நான் அறிவுரை கேட்டேன்

பள்ளி செல்லும் ஆசையில் கேட்டேன் - தமிழ்ப்
பள்ளி என்ற சொல்லைக் கேட்டேன்

ஆனா ஆவன்னா முதலில் கேட்டேன்
அழகு தமிழில் பாடல் கேட்டேன்

சுவை மிகு கதைகள் நிறையக் கேட்டேன்
முத்தமிழ் மூலம் கலைகள் கேட்டேன்

அவ்வையின் ஆத்திசூடி கேட்டேன்
வள்ளுவன் தந்த திருக்குறள் கேட்டேன்

பாட்டுக்கொரு கவி பாரதி கேட்டேன்
பாரதிதாசன் பாடலும் கேட்டேன்

தொல்காப்பியத்தில் இலக்கணம் கேட்டேன் - பல்
ஆயிரமாண்டுப் பழமை கேட்டேன்

இலக்கியம் இயற்றும் யாப்புக் கேட்டேன்
யாப்பைக் காத்த சங்கம் கேட்டேன்

இன்னும் படிக்கும் ஆவலில் கேட்டேன்
உயர்தர வகுப்பும் உண்டெனக் கேட்டேன்

கற்றது கையளவாமெனக் கேட்டேன்
பென்னம் பெரிய கைகள் கேட்டேன்

விட்டது உலகளவாமெனக் கேட்டேன்
சின்னஞ் சிறிய உலகம் கேட்டேன்

அம்மா அப்பா வாழ்த்துக் கேட்டேன்
ஆசிரியர்கள் ஆசியும் கேட்டேன்

அன்புடன் இப்போ வணக்கம் கேட்பேன்
வாழ்நாள் முழுக்கத் தமிழைக் கேட்பேன்

செயபால் 2011

Saturday, December 04, 2010

ஆயிரத்தில் இரு வார்த்தைகள்

"எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன... ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!"  - ஆயிரத்தில் ஒரு வார்த்தை

இது யூனியர் விகடனில் வந்திருக்கும் ஒரு செய்தியின் கடைசி வரி. எழுதியவருக்கு பாராட்டுகள். அற்புதமான வரிகள். செய்தி கீழே.
லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..

இந்த ஆறரைக் கோடியில் சில மக்கள் கோடியிற் சிலர் போல் இங்கே செயற் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

தங்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்ட போலீசாரைப் பார்த்து, "உங்களுக்கு உணர்வே இல்லையா... யாருக்காக யாரை விரட்டுகிறீர்கள்...?" என்றனர் கோபத்துடன்.

-  ஆயிரத்தில் ஒரு வார்த்தை
செய்தி கீழே.
கோவையில் தமிழ் உணர்வாளர்கள் ஆவேசம்

Friday, January 29, 2010

கவர்ந்து போனாரே

காசு பணம் தேடிச் சென்றோம்
கோடி சுகம் நாடிச் சென்றோம்
ஓடி ஒளிந்தே பறந்தோம்
தாயகத்தையே துறந்தோம்


பட்டழிந்தோம் கெட்டழிந்தோம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம்
கட்டுக் காவல் கலைந்த நாட்டில்
தட்டி பிரித்தே நுழைந்தார்


காடு பறி போனதண்ணே - சுடு
காடும் பறி போனதண்ணே
வீடு பறி போனதண்ணே -அட
நாடே பறி போனதண்ணே


ஏர் உழுத ஈர நிலம்
ஏழை மக்கள் பாச நிலம்
கார் சூழ்ந்த கானகங்கள்
வேரோடே போனதண்ணே


மிச்ச சொச்ச சொந்தமெல்லாம்
பச்சைப் புழுவாய்த் துடித்தார்
பட்டி கட்டிக் கமஞ் செய்தார்
பட்டிக்குள் அடை பட்டார்


குஞ்சு குரால் பிஞ்செல்லாம்
பஞ்சையாய்ப் போனதண்ணே
கஞ்சிக்கே காவடியாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே


வஞ்சகர்கள் காலமெல்லாம்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே
பொன்விளையும் புஞ்சை எல்லாம்
வந்தமருங் கையிலோர் நாள்

Tuesday, January 19, 2010

முதற் கவிதை

வருவேன் ஐந்து மணிக்கு
என்று சொன்னாய் எனக்கு
வராத தேனோ அதற்கு
எதற்கு என்மேல் பிணக்கு

ஐந்தோ ஆறாகித் தொடர
கண்ணோர ஆறும் பெருக
எங்கே இருக்கிறாய் நீ
இங்கே இறக்கிறேன் நான்

சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் செய்யாது ஆண்பிள்ளை
வந்தினிச் சொல்லும் பல பொய்யை
வரா திருந்தாலும் பெருங் கவலை

Friday, January 08, 2010

இராச இராச சோழன்

எந்தையரை மறந்து
வந்தவரைப் போற்றி
மொந்தை மதுவுண்டு 
மந்தைகளாய் வாழாமல்

செந்தமிழன் பேரரசன்
இராச இராச சோழ மன்னன்
பெருமை கூறும் காணொளியில
கண்டறிவோம் நம் பெருமை

Video 1
Video 2
Video 3
Video 4
Video 5
Video 6

Thursday, January 07, 2010

கனவா காவியமா

 கனவா காவியமா

கண் முன்னே விரிந்த தேசம்
கனவா கண்களே

புதிய கரிகாலன் ஆண்ட தேசம்
கனவல்லக் கண்களே

சோழப் புலிக் கொடிகள் பறந்த தேசம்
கனவா கண்களே

வீரப்புலிப் படைகள் கண்ட தேசம்
கனவல்லக் கண்களே

காந்தி கண்ட கனவுத் தேசம்
கனவே கண்களே

அக் கனவை நனவாக்கும் ஈழம்
கனவல்லக் கண்களே

இதைப் பார்த்துப் பார்த்துப் பூத்ததெல்லாம்
கனவா கண்களே

பொறா மனங் கொண்டோர் சூழ்ச்சியெல்லாம்
கனவல்லக் கண்களே

அற வழி பிறழ்ந்து அழித்தவர்கள்
கனவா கண்களே

அன்பு ஈழத்தை உடைத்தவர்கள்
கனவல்லக் கண்களே

நம் விண்ணுயர்ந்த எழுச்சி எல்லாம்
கனவா கண்களே

எம் கண் முன்னே கவிழ்ந்ததுவுங்
கனவல்லக் கண்களே

பெருங் காவியமே தோன்றியதும்
கனவா கண்களே

மறு சோழமாகி நின்ற ஈழம்
கனவல்லக் கண்களே

புறநானூறு புகட்டா வீரம்
கனவா கண்களே

புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே

Tuesday, November 17, 2009

என்ன தான் காரணம்

என்ன தான் காரணம்
என்ன தான் காரணம்
எம் காலை வாரிவிட
என்ன தான் காரணம்
தமிழக அரசுக்கு
என்ன தான் காரணம்
தமிழனைத் தவிக்க விட
என்ன தான் காரணம்

ஈழ மாந்தர் இன்னுயிரை
இனவரக்கன் குடித்த போது
அழியு முயி ரதை விடவும்
ஆட்சியு மரச கட்டிலும்
உறவுஞ் சொகுசுமே
காத்திடப் போராட
என்ன தான் காரணம்
எம் காலை வாரிவிட
என்ன தான் காரணம்

தன்னை நம்பி வந்தோரை
தவிக்க விட்டுத் தப்பாமல்
தன் மானந் தன் சபதம்
தனக்கென்ற கொள்கை
யெல்லாம் விட்டுவிட்டு
முன்னே வந்த தானைத்
தலைவனெங்கே - அவன்முன்னே
தரங்கெட்ட தலைகள் நீங்களெங்கே

பத்தோடு பதினொன்றாய்ப்
பத்தாம் பசலிகள்
பதுங்கி ஒழித்திருந்தால்
பாதகமேயில்லை ஐயா
பத்துத் தலையிருந்தால்
பத்துத் தண்டவாளத்தில்
பத்து ரயில் மறித்திடும்
பலங்கொண்ட நீயின்று
தவிக்க விட்டதேனையா
தனிக்க விட்டதேனையா

மனச் சாட்சி உறுத்தலையோ
மனதாரப் பொய் பேச
மண்ணுக்குட் போன பின்பும்
மாறாத வடு வந்து
மண்ணாண்ட உன்னையும்
உன்மக்கள் தன்னையும்
மதிப்புக் கெடுத்திடுமே
மானங் கெட்டிடுமே

காலை வாரிக்
கோலை ஓச்சக்
கேவலமாய் இல்லையா
காரணந்தான் என்னையா

Thursday, October 15, 2009

நீரிழிவு

நீரிழிவு
-------

அள்ளினாள் மனைவி
ஆசையாற்  சீனியை
கொட்டவே எண்ணினாள்
கொண்டவன் கோப்பியில்
கொட்டமுன் நிறுத்தினாள்
கொஞ்சமாய்ப் போடவே
நப்பியா இல்லையே
அவனுக்கு நீரிழிவு

Wednesday, October 14, 2009

கண்ணனின் கீதையும், கண்ணீரில் ஈழமும்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகும்

இதுவே உலக நியதி

இந்த வரிகள் எல்லாம் எங்களில் பலருக்கு மிகவும் பழக்கமாகி விட்ட கண்ணனின் கீதையின் சாராம்சத்திலிருந்து சில வரிகள்.அனேகமானவர்களின் வீடுகளில் இந்த வாசகங்கள் காணப்படுகின்றன. வெறும் கண்ணன், அருச்சுனன் படமாக வீடுகளின் சுவர்களில் தொங்காமல் பெரும் பிரபஞ்ச உண்மையை உணர்த்தி நிற்கும் அதி உன்னத வார்த்தைகள். இப்போது ஏன் நான் இவற்றை ஊருக்கு உரைக்க வேண்டும்?

ஈழத்தின் துயரங்களைத் தாங்க முடியாது அவதிப்பட்ட நேரங்களில் எங்கோ விறைத்துப் பார்த்து மனத்தினுள்ளேயே குமுறிய நாட்களில் சுவரில் தட்டுப்பட்ட படத்திலிருந்த வாசகங்கள் கவலையைக் குறைக்க உதவி செய்தன. எக் காலமும் பொருந்தும் இத் தத்துவம் எம் மனக் கவலையைப் போக்கும் எனபதில் என்ன சந்தேகம்?

வன்னியின் வதை முகாம்கள் இன்று யாருடையனவோ
அவை நாளை வேறொருவனுடையவையாகி விடும்
நாளை மறுதினம் அவை மற்றொருவனுடையதாகும்

இதை எண்ணும் போது நல்லதும் கெட்டதும் எப்பொழுதும் ஒருவருக்கே சொந்தமாகாது என்பதும் இன்று அழுவோர் நாளை சிரிப்பதும், இன்று கொக்கரிப்போர் நாளை மக்கரித்துப் போவதும் கண் கூடே தெரியும் போது தானகவே அமைதி பிறக்கிறது.

எத்தனை கண் கூடான உதாரணங்களைப் பார்த்து விட்டோம். நமது மண் கூட எத்தனை முறை எத்தனை கைகள் மாறி விட்டது. அத்தனை மாற்றங்களின் போதும், எத்தனை வதை முகாம்கள், சித்திர வதைக் கூடங்கள், துரோகிகள், முதுகில் கத்தி செலுத்துவோர் இருந்திருக்கக் கூடும். யார் யார் வதை பட்டு இருப்பார்கள். யார் யார் கொக்கரித்திருப்பார்கள்.

உலக நாடுகளையே உற்றுப் பார்த்தால் அண்மைக் காலங்களில் ஒரு ஐம்பது ஆண்டுகளாகத் தானே துன்பமில்லாத வாழ்க்கையைப் பல உலக நாடுகள் முன்னெடுத்து நிற்பதைப் பார்க்கிறோம். அதிலும் பல நாடுகளில் மக்கள் துயரம் இன்னமும் காணப்படுகின்றனவே. இவற்றைப் பார்த்துத் தான் நாம், நமக்குங் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடி நம்மைத் தேற்றிக் கொள்கிறோம்.

மன்னராட்சிக் காலங்களில் இன்னும் மோசமான வாழ்ககையைத் தானே அந்தந்த நாடுகளின் ஏதோ ஒரு வகை மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். உதாரணமாக சோழ மன்னராட்சிக் காலத்தில் பாண்டிய, சேர நாடுகளும் அதன் மக்களும் எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கக் கூடும். அதே போல், பாண்டிய, சேர மன்னர்கள் கோலோச்சிய காலங்களில் சோழர் மற்றும் இதர நாட்டு மக்களில் பலர் பல விதத் துன்பங்களில் தானே வாழ்ந்திருப்பர். எல்லாமே ஒரு காலச் சக்கரத்தின் பயணத்தில் கண்ணனின் வாசகங்களை அனுசரித்துச் சென்றவை தானே. காலச் சக்கரம் சில சம்பவங்களை வேகமாகக் கடந்து விடுகிறது, சில சம்பவங்களை மெதுவாகக் கடந்து விடுகின்றது.

உலகின் நாகரீகத்தில் சிறந்து விழங்கிய எகிப்து நாட்டைப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஆண்ட பேரரசர்களைப் பற்றி வாசிக்கும் போது இந்த நிலையில்லாமை மிகத் துல்லியமாக விளங்கி விடும். பெரும் பாலான பேரரசர்கள் 15 – 20 ஆண்டுகளுக்குத் தான் தம் ஆட்சிகளை வெற்றிகரமாக நடாத்தி யிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் பெரும் அழிவுகளுடன் தான் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இவற்றோடு ஒப்பிடும் போது நம் நாடு ஒரு 20 – 25 வருடங்களுக்காவது நல்ல ஆட்சியில் இருந்ததுவே.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது கண்ணனின் கீதை மொழியின் ஆழம் புரிகிறது. இன்று வதம் செய்யும் கொடியவர்களின் அந்தம் தெரிகிறது. வதம் செய்யும் கொடியவர்களின் கொக்கரிப்புக்குத் துணை போகும் மகா கொடியவர்களின் காலம் முடியும் நாள் கண்ணனின் கீதை வழி தெரிகிறதே. இவர்கள் வீழும் போது ஈழம் வாழும். வன்னி நிமிரும். நாளை நமதே.

Monday, July 27, 2009

"தமிழ்" நாடெனும் மாயை - 2

கல்வி

கல்வித்துறையும் தமிழகமும் மிகப் பிரபலமான ஒரு சர்ச்சைப் பொருள். அங்கே என்ன நடக்கிறது? கல்வித் துறை எப்படித் “தமிழ்” நாடெனும் மாயை நாட்டில் இருக்கிறது என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம்.

தாய் மொழியில் ஒரு குழந்தைக்குக் கல்வி அவசியம் என்பதைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரையப்பட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கின்றன. அது தமிழக மற்றும் இதர மாநிலங்களின் செவியிலேற மறுப்பது எல்லோருக்குந் தெரிந்த விடயமே. ஊருக்கு உபதேசம் உனக்கல்லடிப் பெண்ணே என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. இருந்தும் பார்ப்போம். தமிழ் நாட்டில், தமிழ் வழிக் கல்விக் கூடங்கள் அருகி வருவதும், ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் அதிகரித்து வருவதும் இப்போது நாம் கண் கூடாகக் கண்டு வரும் ஓர் அவல நிலை. தம் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களிற் படிப்பதால், தமது நிலை மற்றவர்களை விட ஒரு படி மேல் என்று நினைக்கும் பாமரர்கள் தம் பணத்தை யிழந்து தவிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆங்கில மொழிக் கல்விக் கூடங்களில் கற்பதால் நல்ல கல்வி கிடைக்கிறது என்றும் பலர் நம்புகிறார்கள். பல இடங்களுக்குச் சென்று உத்தியோகம் பார்த்து மேல் நிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தால் பலர் ஆங்கில வழிக் கல்வியை நாடுகிறார்கள். இதில் ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்காக ஆங்கில வழியில் நம் முழுக் கல்வியையும் ஏன் கற்க வேண்டும்? ஆங்கில அறிவை நன்கு வளப்படுத்த ஒரு மேலதிக பயிற்சியாகவே ஆங்கில வழிக் கல்வியை ஆரம்பக் கல்வி யிலிருந்தே கடைப் பிடிக்கிறார்கள்.

இது தவறான ஓர் அணுகு முறை. அரசனை நம்பிப் புருசனைக் கை விட்ட கதை போல் ஆகி விடும் இந்த அணுகு முறை. ஓர் பள்ளியில் பயிலும் 1000 பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் ஓர் உயர் பதவி பெறப்போகுந் தொகையினர் ஒரு 10 பேர் தான். மிகுதி 990 பேரும் ஆங்கில வழிக் கல்வியாற் சாதிக்கப் போவது நிறைய அல்ல. அத்தோடு, தம் தாய் மொழியாம் தமிழில் புலமை யற்றவர்களாக தூய தமிழைத் தெரியாதவர்களாக தமிழைத் தொலைத்த தமிழர்களாக சமுதாயத்தில் வலம் வரப் போகிறார்கள். இத்தகையவர்கள் வாழும் நாடு எப்படித் தமிழ் நாடு ஆகும். இது ஒரு மாயைத் தமிழ் நாடல்லவா? சாதிக்காமல் விட்டவை மிக அதிகமாக இருக்கலாம். எத்தனை யெத்தனை கவிச் சக்கரவர்த்திகளையும், கதாசிரியர்களையும், காவியங்களையும், நீதி நூற்களையும், இசைப் பாடல்களையும் இழந்து விட்டோமோ யார் கண்டது?

தமிழ் மொழிக் கல்வியையோ தமிழ் கற்பதையோ ஆதரிக்கதவர்கள், இன்னொரு வாதத்தையும் நம் மக்கள் முன் வைக்கலாம். அதாவது, நாம் தமிழர்கள், பிறந்து வளரும் சூழல் தமிழ் மக்கள் மத்தியில், இப்படியிருக்கையில் எங்களுக்குத் தமிழ் தானகவே வந்து விடும். அதை ஏன் தனியாகக் கற்க வேண்டும் என்பது தான் அந்த வாதம். ஆனால் தானாக வருந் தமிழ் சரியான தமிழல்லாது ஒரு கொச்சைத் தமிழேயென்பதைப் பலர் புரிந்து கொள்கிறார்களில்லை. தமிழ் கற்றவர்கள் பேசும் தமிழுக்கும் கல்லாதவர்கள் பேசும் தமிழுக்கும் இருக்கும் வேறுபாடு மிக அதிகம் என்பதை நாம் இலகுவில் காண முடியும். ஒரு சிறு உதாரணம். ஊரில் எல்லோரும் பாவிக்கும் சில சொற்களை நான் தவிர்க்கப் பார்த்த போது அந்த முயற்சி ஒரு திருவினையாகியது. “இஞ்ச வா”, “என்ர பந்து” போன்ற சொற்களை நான் சரியாகப் பாவிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தில், இங்கே என்றும் என்னுடைய என்றும் மட்டுமே என் கூட இருப்பவர்கள் மத்தியில் நான் தொடர்ந்து பாவித்து வந்தேன். இந்தப் பாவனை கொஞ்ச நாட்களில் பலரிடம் வந்து விட்டது. இப்படித் தூய தமிழை நாம் மக்கட் தமிழாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. அத்தோடு, 1980 வரையிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ் ஒலிபரப்பாளர்கள் பேசிய தமிழ் நல்ல தமிழ். அதன் மூலம், ஒலிபரப்புத் துறையும், அறிப்புத் துறையும் நல்ல தமிழில் இயங்க வழி கோலியவர்கள் அந்தக் கால அறிவிப்பாளர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

தமிழ் மொழியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாயமாகப் பிள்ளைகளுடன் தூய தமிழிற் தான் பாடம் நடத்த வேண்டும். “ஏன் இண்டைக்குப் பிந்தி வந்தாய்?” என்று கேட்பதை, “இன்றைக்கு” என்று பாவிக்க வேண்டும். இவை ஆசிரியர் பயிற்சியில் முதற் பாடமாகச் சொல்லித் தர வேண்டியது. சமுதாயத்தை உருவாக்குவதில் முதலாவது இடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். இவர்கள் காட்டும் வழியில் தான் நாளைய மக்கள் தோன்றுகிறார்கள். இந்த ஆசிரியர்கள் சரியாகவும் தரமாகவும் தமிழைக் கற்றுக் கொடுத்தால் தமிழ் நாடென்பது மாயை இல்லாமல் உயிர்ப்போடு வாழுமே. இது தமிழ் நாட்டிற்கு மட்டும் பொருந்துவது அல்ல. எங்கெங்கே எல்லாம் தமிழ் அமுலாக்கம் தேவைப் படுமோ அங்கெங்கே யெல்லாம் இந்தக் குறைபாடுகள் இல்லாம்ல பார்த்துக் கொள்ள வேண்டும்.

Thursday, July 23, 2009

"தமிழ்" நாடெனும் மாயை - 1

இந்திய உப கண்டத்தில் மொழி வாரியாக அமைக்கப்பட்ட நிர்வாகப் பிரிவுகளில் தமிழ் மொழியை முன்னிலைப் படுத்தி அமைந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இது ஒரு தனி இறைமையுள்ள அல்லது விரும்பினால் பிரிந்து செல்லக் கூடிய உரிமையுள்ள ஒரு பிரதேசம் அல்ல. இந்தியா என்ற இறைமையுள்ள நாட்டின் சிறிதளவு அதிகாரப் பரவலாக்கமுள்ள ஒரு அலகே தமிழ் நாடு. இந்தியாவின் 22 அளவிலான மற்றைய மாநிலங்களும் இது போன்றவையே. அனேகமான மாநிலங்கள் எல்லாமே தத்தம் மொழிகளின் வளர்ச்சி, உயர்வு மற்றும் மொழியின் இருப்புக் கருதி மொழி வாரியாக அமைந்தனவே. இப்படியாக அமைந்த மாநிலங்களில் மொழி வளர்ச்சி மற்றும் இருப்பு என்பன எப்படிப் பட்ட நிலையில் உள்ளன? தமிழ் நாடு, தமிழர் நாடு, தமிழர் நாம் என்று கூறிக் கொள்ளும் தமிழகம் எப்படி இருக்கிறது என்று இங்கு பார்ப்போம்.

அரசு:
முதலில் தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்குகிறாதா அல்லது தமிழை இழக்கிறதா என்பதை நோக்குவோம்.

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். அந்த ஆட்சி மொழி எவ்வளவுக்கு ஆட்சி செய்கிறது என்பது சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய விடயம். ஆட்சி எங்கே தொடங்குகிறது? அது சட்ட சபையுடன் ஆரம்பிக்கிறது. தமிழ் நாடு சட்ட மன்றத்தில் ஓரளவு தூய தமிழில் பேசுகிறார்கள் மன்றும் தமிழில் இயங்குகிறது, மகிழ்ச்சியே. சட்ட மன்றத்திற்கு வெளியே வந்தால்? தமிழ் நாட்டு அரச உயரதிகாரிகளில் 90 வீதமானவர்களுக்குச் சரளமாகத் தமிழில் எழுத, வாசிக்க மற்றும் பேசக் கூடிய புலமை இல்லவேயில்லை. இந்த உயரதிகாரிகளிற் பலர் தமிழ் மொழி மூலம் தமது கல்வியை ஓரளவிற்கேனும் கற்றவர்களோ அல்லது தமிழை ஒரு பாடமாகத் தம் பாடவிதானத்தில் கொண்டவர்களோ அல்லது தமிழில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களோ இல்லை. இன்னும் பார்த்தால், இவர்களிற் பலர் இந்தியா என்ற கூட்டுப் பொங்கல் நிலையால் வந்த பிற மாநிலக்காரர்கள். இவர்கள் தமிழ் மொழிக்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்ப் புலமை குறைந்த தமிழர்களும், தமிழ்ப் புலமையற்ற பிற மாநிலக்காரர்களும் அதிகாரிகளாகப் பதவியேற்று எப்படித் தமிழ் மக்களின் குறை நிறைகளை நிவிர்த்தி செய்ய முடியும்? தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளை, சிக்கல்களை இப்படிப் பட்ட அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள நல்ல தொடர்பு மொழி அவசியமல்லவா?

மொழி புரியாத சிக்கலில் ஏற்படும் விளைவுகள் தான் எல்லோரும் அறிந்ததே. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும் சப்பானும் மோதிக்கொள்ள நேர்ந்தது கூட ஒரு தகவல் தொடர்பின் தவறான புரிதலே என்பது எல்லோருக்குந் தெரியும். இருந்தும், எங்கள் நாடுகளில் யார் மக்களைப் பற்றி அதிகம் பொருட்படுத்துகிறார்கள். அதை விடுவோம். தமிழ் நாட்டு அதிகாரிகளை மீண்டும் பார்ப்போம்.

அதிகாரிகள் ஆங்கிலத்தில், இந்தியில் அல்லது அவர்களது தாய் மொழியில் புலமையுடையவர்களாக இருப்பார்கள். தமிழக மக்களோ தமிழில் கருமம் ஆற்ற நினைப்பார்கள். இந்நிலையில், அதிகாரிகள் அரை குறைக் கொச்சைத் தமிழில் கடமையாற்ற முனைவார்கள். அதிகாரிகளின் கொச்சைத் தமிழைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும் பொது மக்களோ அரை குறைக் கொச்சை ஆங்கிலத்திற்கோ வேறு மொழிக்கோ தாவ முயல்வார்கள். தமிழர் தமிழுடன் ஓரிரு ஆங்கில வார்த்தகளையும் சேர்த்துத் தம் கருமம் பெறுகையில், தமிழில் ஆங்கிலம் கலப்பது தவிர்க்க முடியாததாகின்றது. உதாரணமாக, குமார் சார் என்றும் குமார்ஜி என்றும் தொடங்கி, லெப்ட், ரைட், கலர் போன்ற சொற்களுடன் தமிழர் ஆரம்பிப்பார். இதைப் பார்த்த அரச உத்தியோகத்தர்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுதலான ஆங்கில வார்த்தைகளையோ மற்ற மொழி வார்த்தைகளையோ புகுத்த முனைவார். இவ்வாறு சீரழிவு தொடர்கிறது. அதிகாரியினதும் இவரைப் போன்றவர்களினதும் கொச்சைத் தமிழோ தமிழுக்குப் புது வடிவம் கொடுக்க முனைந்து ஒருவகை நாகரீகத் தமிழாக உருவெடுக்கிறது. தமிழும் புது வடிவம் பெறும். அந்த வடிவத்தை அழகு என்று எண்ணும் அப்பாவித் தமிழரும் அதைப் பின்பற்றித் தமிழின் அழிவில் பங்கு பெறுகிறார்கள். நல்ல தமிழைப் பேசுவோர்கள் நாட்டுக் கட்டைகள் அல்லது பண்டிதர்கள் என்று பழிக்கப்பட்டு இழிவு படுத்தப் படுகிறார்கள்.

ஆங்கிலம் போன்ற வேறு மொழிகளில் கலந்து கொள்ளும் பிற மொழிக்காரர்களின் தூய்மையற்ற பாவனைகள் மூலம் அந்த மொழிகளைப் பிழையாகக் கையாள்கிறார்கள். ஆனால் அம் மொழிகளின் சொந்தக்காரர்கள் தம் மொழித் திறைமையாலும் மொழிப் பற்றாலும் தம் மொழி கொச்சைப் பட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தமிழிலும் தமிழரிலும் காணப்படாத ஒரு குறைபாடு. இது பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

தமிழ் கொச்சைப் படுத்தப் படும் இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசு, தனது தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்கச் செய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும். முதலில், அரச அதிகாரிகள் நியமனத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளைச் செப்பனிட வேண்டும். தமிழ் நாட்டில் கடமை புரிய வரும் ஒவ்வொருவரும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயமாக்க வேண்டும். மத்திய அரச நியமனமானாலென்ன, மாநில அரச நியமனமானாலென்ன தமிழகத்தில் கடமை புரிவோருக்குத் தமிழிற் தேர்ச்சி இருக்க வேண்டும் என்ற முன் நிபந்தனையை மிகக் கடுமையாக அமுல் படுத்துவதற்கு தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு அதிகாரம் இல்லையென்றால், அந்த அதிகாரத்தைப் போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள் 60 களில் இந்தி எதிர்ப்பில் காட்டிய வீராப்பை இத்தகைய விடயங்களிலும், தமிழ் மொழி வழிக் கல்வியையும் தமிழ்க் கல்வியையும் கண்டிப்புடன் அமுலாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும். இப்பொழுதாவது அக்கறையுடன் செயலாற்ற வேண்டும்.

பின்னர், இந்தத் தமிழ் நாடெனும் மாயை கல்வித் துறையில் எப்படிச் செயல்லாற்றுகிறது என்பதைப் பார்ப்போம்.

Wednesday, May 27, 2009

விஜய ராஜேந்தரின் உருக்கமான பாடல்

தமிழகத்தின் 75% மக்களுக்கு ஈழத் தமிழரின் வரலாறும் வாழ்வும் பற்றிய விபரம் மிகக் குறைந்த அளவிலேயே தெரிந்திருக்கிறது. இந்தப் பாடல் மூலமாக அதி குறைந்தது அண்மைய இன அழிப்பு யுத்தத்தைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டும். பொறுப்பான தமிழக ஊடகங்கள் அந்த வரலாற்றைத் தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ராஜேந்தருக்கு நன்றி.

Monday, May 18, 2009

பேரிடி தான் வீழ்ந்ததோ

மே 18, 2009 இன் பேரிடி:

பேரிடி தான் வீழ்ந்ததோ
பெருந் துன்பஞ் சூழ்ந்ததோ
சூதர்கள் சூழ்ச்சிகளால்
சுய வுரிமை செத்ததோ

எலி வீடே யானாலும்
தனி வீடே யாமென்னும்
தமிழீழ மண் ணிங்கே
குருதியிலே முழுகியதோ
தன்னிறைமை தன்னையின்று

மனித நேயம் பேசிக் கொண்டு
மனித நேயம் சாகடித்த
மனித ரல்லா நாடரங்கில்
மனித மேமாண் டதின்று

பாண்டவர் படாத பாடா
யூதர்கள் படாத கேடா
காதகர்கள் காரியங்கள்
கவிழ்ந்து விழுங் காலம் வரும்

மாண்ட தொகை மாந்தருயிர்
மீண்டும் எழுந்தே யுயர்
மானமிகு மண்ணில் வர
மாதவம் நாம் செய்திடுவோம்
மறவர்களைச் செதிக்கிடுவோம்

Monday, March 30, 2009

ஈழத் தமிழரும் இனவழிப்பும்

அடக்கு முறையினர் ஆட்சியும்
ஆக்கிர மிப்புச் சூழ்ச்சியும்
இனவழிப்புப் போர்வெறியும்
ஈனக்கொலை காரரும்
உன்மத்தக் கயவரும்
ஊளயிடும் நரிகளும்
எக்காளப் படைகளும்
ஏவல் செய் நாய்களும்
ஐந்தாம் படைப் பேய்களும்
ஒற்றுமை மறுக்கவும்
ஓர்மமாய்க் கொல்லவும்
ஔவை சொன்னதல்ல
இஃதிங்கு தினந் தினமே

வலியோரே ஆழ்வதுவும்
எளியோரை அழிப்பதுவும்
புரையோடிய புண்ணாக
புதைந்திருக்கு மனிதத்தில்

பாகுபாடு பார்த்து நிற்கும்
பாவி மனிதன் பாசறையில்
செப்பட்டை அடியுடனும்
செங்குருதி வெறியுடனும்
உச்சக் கட்டச் செயல் வடிவம்
அப்பட்ட அ நாகரீகம்
இனவழிப்பு இனவழிப்பு

சிவப்பு இந்தியர்
சிதைந்து போனதும்
கறுப்பு அடிமைகள்
கண்ணீரில் வாழ்ந்ததும்
கன நூறு வருடக்
கல்லினும் திண்ணிய
கனவான் மார்களின்
கைங்கரியம் அன்றோ
ஏனென்று கேட்க
ஆருமே இல்லாது
கெட்டழிந்து போனதன்றோ
கெட்டழிந்து போனதன்றோ

அன்று தொட்டு
இன்று வரை
தொன்று தொட்ட
தந்திரமாய்த்
தொடர்ந்து வருமழிவரக்கன்
கையிலின்று அகப்பட்டுச்
சின்னா பின்னமாகச்
சிதறி ஓடுது
சன்னமும் குண்டும்
சரமாரியாய் வரவதில்
சிக்கிச் சாகுது
ஈழத் தமிழினம்
வாழத் தவிக்குது
வாழ்ந்த தமிழினம்

வெட்டை வெளியில்
அட்டை போட்டு
அடக்கி அழிக்குது
சிங்கள அரசு
அழிந்து போகுது
அழியாத் தமிழினம்

ஏனென்று கேள்வி கேட்க
ஏராளம் பேருண்டு
கேட்டுக் கொள்வதறற்கு
ஒன்றேனுங் காதுண்டோ

தந்தை மண்ணாம் தமிழகம்
கை கொடுக்கத் துடிக்கையில்
விந்தை மண்ணை ஆளும் கை
விரல் காட்டித் தடுக்குது

புலம் பெயர்ந்த சொந்த பந்தம்
பலம் கொண்டு நித்த நித்தம்
தினந் தோறும் போராட்டம்
நிற்காத ஆர்ப்பாட்டம்
பல வடிவில் செய்து கொண்டு
மன்றிலெங்கும் நீதி கேட்பு
மனுக்களெல்லாம் தள்ளுபடி

இன்று எளியோன்
நாளை வலியோன்
என்று நிலை மாறி விடும்
எம் துயரும் மாறி விடும்
மாறி விடும் அந்நேரம்
நாம் செய்யோம் இனவழிப்பு
செய்திடுவோம் புதிய பூமி
மானிடத்தை உயர்த்திப் பாடி

Wednesday, March 04, 2009

பிடி சாபம்

பிடி சாபம்

அரச படையினர் தாயைக் கட்டி வைத்து அவர் கண் முன்னாலாயே 14 வயதுச் சிறுமி மேல் பாலியல் தாக்குதல்.
இதற்கு நீதி கேட்டமைக்காக,அடுத்த நாளே, அதே அரச படை வீணர்களால் அந்தத் தாய் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப் பட்டார். இந்தக் கொடுமையை அந்தப் பெண்ணின் கணவனை அடித்துக் கட்டி வைத்து விட்டு அவர் கண் முன்னே செய்தார்கள்.

சன நாயக நாடொன்றில் இது நடந்தால் நீதி மன்றில் நீதி கிடைக்கும்.
சன நாயகமற்ற நாடென்றால், அங்கும் கூட, தலை போயிருக்கலாம், தண்டனை கிடைத்திருக்கலாம்.
ஆனால் இது நடந்திருப்பதோ சிறீ லங்காவில். இங்கே செய்தவன் சிங்களவன், செத்தவன் தமிழன் என்றால் என்ன தீர்ப்பு?
குறைந்த பட்சம் லங்கா ரத்னா விருது கிடைக்கலாம்.

என்ன கொடுமை இது?
எந்த யுகத்தில் நாம் வாழ்கிறோம்?
5000 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் விட்டோமா?
நாமும் அந்த யுகத்துக்கே போய் எம் தீர்ப்பை வழங்குவோம்.

இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கும், அவர்களுக்குப் பொறுப்பாக இருக்கும் அனைத்து மட்ட உயரதிகாரிகளுக்கும் உயர்ந்த பட்சத் தண்டனையாக எது பொருந்துமோ அது வந்து சேர நம் சக்தியெல்லம் திரட்டிச் சாபமிடுவோம். பிடி சாபம்.
இந்தக் கொடுமையை இன்னும் விசாரிக்காமலிருக்கும் அந்த அரசிற்கும் சாபம். பிடி சாபம். நாசமாய்ப் போவீர்களாக.பிடி சாபம்.
பிடி சாபம்.

செய்தி இங்கு காண்க
சாரம் இதோ:

STF kills mother of raped girl in Batticaloa
[TamilNet, Tuesday, 03 March 2009, 11:04 GMT]
Sri Lankan Special Task Force (STF) commandos who had sexually assaulted a 14-year-old Tamil girl Sunday in Vellaave’li police division, again went to the girl’s house Monday between 8:00 p.m and 9:00 p.m where they assaulted her father first and then severely tortured her mother before killing and dumping her body in the well as punishment for complaining against the STF with Batticaloa police for raping her daughter. The father was held bound while the commandos beat the mother to death, the neighbors said.