மே இருபத்தொன்பது
இரண்டாயிரத்தாறு
உலகெலாம் பாயுது
உரிமைக்குரலாறு
துடித்துப் போன உடன் பிறப்புகள்
தூங்கவில்லை நாமென்று
தூக்கிப் பிடிக்குது
துயர்ச் செய்தி மட்டைகளை
புலம் பெயர்ந்த தமிழர்க்குப்
புகலிடம் தந்து காத்த
புகுந்த நாடுகளில்
சுதந்திர வீடுகளில்.
பெண்டுகளும் பிஞ்சுகளும்
பழசாப்போன பஞ்சுகளும்
பேதமின்றிக் கோரமாகக்
கொல்லப் படவும்
கொடுமைப் படவும்
பார்த்தும் பாராதிருக்கும்
பலநாட்டு மக்களே!
மன்னரே!
என்ன இந்த மெளனம்?
கொலையைப் பார்த்தும்
குரவை இல்லையா?
கொன்றது யாரென்று
கண்டு கொண்டால் தான்
திறக்கும் உன் குரல்வளையா?
நல்ல நியாயம் இது
நலிந்தவர்க்கு உதவாதது
மனிதமும் சாக முன்
மனதைத் திறந்து விடு
தந்தை மண்ணே தமிழகமே
நீயுமா காக்கிறாய் மெளன மொழி?
இன்று எழாவிடில் என்று எழுவாய்?
இழவு விழுந்தபின் தான்
வந்துநிற் பாயோ?
சொந்தச் சகோதரர் நாம்
துன்பத்தில் சாகிறோம் - இதைச்
சொல்லிக் காட்டப்
பாரதியா வேண்டும்?
சாத்வீக ஆதரவுக்கே
சனநாயகத்தில் பயமா
உணர்ச்சிகளைக் காட்டக் கூட
உரிமையில்லையா அண்ணா
உங்கள் உணர்வுகளை
உறங்க விடாதீர் - எங்களை
உயிரோடே உறையவிடாதீர்
நாமொருநாள் வெல்வோம்
உரிமைகளைக் கொள்வோம்
அன்று ஊதுவோம் சங்கு
வென்று விட்டோம் என்று
-ஜெயபால்
Monday, May 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment