இப்பொழுது, தென்னிந்திய இசையாகப் பலர் படிப்பதும் பயிற்சி எடுத்துக் கொள்வதுமான கர்நாடக இசையைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இந்தக் கர்நாடக இசையில் வடமொழியிலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட பாட்டுகள்
மட்டுமே முக்கிய இடம் வகிக்கின்றன. தென்னிந்திய மற்ற மொழிகளை விட தெலுங்கும் வடமொழியும் முதன்மைப் படுத்தப் பட்டிருக்கும் காரணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.
இந்திய வரலாற்றை அறிந்தவர்களுக்கு அந்த வரலாற்றில் வட மொழியின் தாக்கமும் ஆதிக்கமும் வேதங்கள், புராணங்களூடாக வலுப்பெற்றிருப்பதைக் காண முடிந்திருக்கும். வடமொழி மக்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பரந்து வாழ நேர்ந்த காலங்களில், வட மொழியின் தாக்கமும் விரிந்து பரவத் தொடங்கியது. பரந்து கிடந்த பிராந்திய மொழிகளிலும் அம் மொழியினரின் இசை வடிவிலும் வட மொழி கொஞ்சங் கொஞ்சமாகக் கலக்கத் தொடங்கியது. அந்தக் காலத்தின் குருகுலக் கல்வி முறை, வடமொழிப் பாவனையை ஆதரித்துக் காத்த மன்னராட்சி முறை என்பன வடமொழியின் தாக்கம் தடையின்றிப் புகுந்து விளையாட உதவியாக இருந்தன. உள்ளூர் மக்களின் அறியாமையாலும், மன்னர்களின் பொறுப்பற்ற சில செயற்பாடுகளாலும் கலை, கல்வி போன்றவற்றில் முன்னிலையைத் தக்க வைத்த வடமொழியாளர்கள் தம் மொழியின் ஆதிக்கத்தை உறுதியாகவும் வேகமாகவும் உள்ளூரில் வளர்த்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் தம் மொழியின் இருப்பை விரும்பி உள்ளூர் மொழி வளர்ச்சியையும் அதிலிருந்த கலை வடிவங்களையும் தலையெடுக்காமலும் பார்த்துக் கொண்டார்கள். இந்தக் கைங்கரியத்தில் அவர்களுக்குப் பெரிய உதவியாக விளங்கியது அக்கால மக்களின் மதம் பற்றிய நம்பிக்கைகள். இந்த மத நம்பிக்கையையே அடி நாதமாகக் கொண்டது வட மொழியும் அதன் பாடல்களும். இதனால், வடமொழியும் அது சார்ந்த இசைவடிவும் மிக இலகுவில் மதப் பலவீனர்களாக இருந்த பாமரப் பிராந்திய மக்களிடையே திணிக்கப் படக்கூடியனவாக இருந்தன.
மன்னராட்சி நடந்து கொண்டிருந்த கால கட்டங்களில், எல்லா நாடுகளுமே அடிக்கடி வேறு வேறு நாட்டு மன்னர்களின் ஆட்சியின் கீழ் வருவதும் மாறுவதுமாக இருந்தன. இப்படியாக மாறி வரும் மன்னர்கள் தத்தம் மொழியின் பால் ஆதரவாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இவ்வாறாக ஒரு மொழியின் மேல் இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவது இயல்பாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவற்றில் அகப்படாமல் எம்மொழி வந்தாலும் அதற்கெல்லாம் ஈடு கொடுத்து மன்னர்களினதும் மக்களினதும் மத நம்பிக்கையை ஊடகமாக வைத்து வட மொழி தொடர்ந்து ஊடுருவிக் கொண்டேயிருந்தது. இதனாற் சொந்த மொழியில் இசை வளர்ச்சி என்பது சிதைந்து கொண்டே போனது. அவ்வப் பொழுது அந்தந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் நாட்டின் ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காலங்களில் சொந்த மொழியில் இசையின் வளர்ச்சிக்குப் பங்காற்றினாலும் ஒரு முழு வளர்ச்சி என்பது எட்டப்பட முடியாமலேயே இருந்தது.
இந்த ஆட்சிச் சுழலிற் சிக்கியிருந்த தமிழ் அரசுகள் வீழ்வதும் எழுவதுமாக இருந்து வந்தன. எழுந்திருந்த காலங்களில் மதத்தையே ஊடகமாக வைத்துச் சைவத் திருமுறைகளும் வைணவ ஆழ்வார் பாடல்களும் வேறு பல ஆக்கங்களும் தமிழில் இசையோடு அறிமுகமாயின. ஆனாலும் தமிழரசுகள் வீழ்ந்த நேரத்தில் சைவத் திருமுறைகள் அமுக்கப் பட்டதும் பின்னர் ஒரு தடவை அவை குற்றுயிருங் குறையுயிருமாக வெளிக் கொணரப் பட்டதும் நாமெல்லாம் அறிந்ததே.
Sunday, November 09, 2008
இசை - மொழி – தமிழ் :: பகுதி 4 – பிற மொழி ஊடுருவல்
Saturday, November 08, 2008
இசை-மொழி–தமிழ் :: பகுதி 3 - இனிமை
ஒருவரது தாய் மொழியல்லாத மொழியில் இருக்கும் எப்பேர்ப்பட்ட இனிமையான பாட்டும் அவரது தாய் மொழியில் இருக்கும் ஒரு சாதாரணப் பாட்டை விட அவருக்கு இனிமையாக இருக்க முடியாது. ஏனென்றால் அந்தப் பிற மொழிப் பாடலில் அவருள்ளே புகுந்து கொள்வது அப் பாடலின் இனிமையின் ஒரு பகுதியான இசை மட்டுமே. அப் பாடலின் மொழியில் கலந்திருக்கும் கவிச் சுவை அவரைச் சென்றடைவதில்லை. அதனால் அப் பாடலின் முழு இனிமையும் அவருக்குக் கிடைக்காது என்பது வெளிப்படையே.
அந்தப் பாடலின் இசையின் இனிமை அவரைச் சேர்வதற்குக் கூட ஒரு காரணம் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்திய உப கண்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்திய மொழிகளின் அனேகமான எல்லாப் பாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஓசை அடிப்படையிலிருந்து இசைக்கின்றன. ஆகவே, எந்த ஒரு இந்தியப் பாடலின் இசை வடிவமும் எந்த ஒரு இந்தியருக்கும் கேட்கக் கூடியதாக இருப்பது இயற்கையே. இந்த அடிப்படை இசை இந்தியப் பாடல்களிலும், மத்திய கிழக்குப் பகுதிப் பாடல்களிலும் இருப்பதை நாம் காணலாம். அதனால் மத்திய கிழக்குப் பகுதி மக்களின் இசை கூட நமக்குள் தாக்கம் ஏற்படுத்துவது இலகுவே. இதன் அனுபவம் பலருக்கு ஏற்படடிருக்கலாம். ஒரு அன்னிய நாட்டில் தனித்து வசித்த பலர், அரேபிய மொழிப் பாடல்களைக் கேட்கக் கிடைத்திருந்தால் அது ஒரு தனி அனுபவம். இதுவே ஒரு சீன மொழிப் பாடலாக இருந்திருந்தால் அதனால் ஒரு தாக்கத்தை எற்படுத்தியிருக்க முடியாது. இன்னும் அரேபியா - இந்தியா என்பவற்றின் தொடர்பு, வரலாறு சார்ந்த ஒரு துறை. அதை விட்டு விட்டு நம் இசைப் பார்வைக்குத் திரும்புவோம்.
இசை - மொழி – தமிழ் :: பகுதி 2 - மொழி
மனிதனின் கூர்ப்பின் ஒரு கட்டத்தில், அவன் மொழியொன்றைப் பேசத் தொடங்கிய போது, அந்த மொழியின் சொற்களை இசையிற் போட்டு மனித உணர்ச்சிகள் வெளிப்பட்ட போது இசைக்கு ஒரு புது வடிவம் கிடைத்திருந்திருக்கிறது. இசைக் கருவிகளிலிருந்து ஒலிக்கும் இசையாக வெளிப்படும் மனித உணர்ச்சிகள் சொற்களைக் கொண்டு ஒலிக்கும் போது பாடல்கள் இசைக்கத் தொடங்கின. இசைக்காக மொழியில் உருவான பாடல்களும், பாடல்களுக்காக உருவாகும் இசை வடிவங்களும் ஒன்றையொன்று வளர்க்கத் தொடங்கின.
சொற்களும் சொற்றொடர்களும் இசையோடு ஒலிக்க வேண்டுமானால், சொற்றொடர்கள் ஒரு ஒழுங்கில் கோர்க்கப்பட வேண்டுமென்ற கட்டாயம், பாட்டு உருவாக்கத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற அடுத்த கட்ட நிலைக்கு மொழியை எடுத்துச் சென்றது. ஓசை நயம் குன்றாமல் பாடுவதற்கு ஒலி நயத்தோடு கூடிய பாட்டுகள் உருவாகி அவை இசையை மெருகூட்டிய அதே நேரத்தில் மொழியின் வளர்ச்சியில் பாட்டு இயற்றும் துறை உருவாக அவை காரணியாக இருந்தன.
மனிதன் இசைத்தான். அதில் மொழியை இழைத்தான். இசையில் இழைக்கப்பட்ட மொழிக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்து அதன் வளர்ச்சிக்கு அது துணை புரிந்தது. ஒலியாய்த் தொடங்கிய இசை பாட்டாகிப் பல்கிப் பெருகியது.
மனித வளர்ச்சி பல்லாயிரம் வருடங்களூடாகப் பயணிக்கும் போது, மனிதன் பூகோள ரீதியாகப் பிரிந்து பரவத் தொடங்கினான். பிரிந்து பரவிய மனிதன் தான் சென்ற திசைகளில் தன் மொழியையும் திரித்து வழங்கிக் கால ஓட்டத்தில், வெவ்வேறான மொழிகளின் தோற்றத்திற்கும் வித்திட்டான். ஆனால் எல்லா மொழிகளிலும், மனிதனின் இசை வளர்ச்சி தொடர்ந்து கொண்டேயிருந்தது.
இசை - மொழி - தமிழ் :: பகுதி 1 - இசை
இசை பற்றிச் சிந்திக்கும் போது அதன் தோற்றமும் வளர்ச்சியும் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?
மனித இனம் சிந்திக்கத் தொடங்கிய பொழுது அவனோடு இருந்த பறவைகளும் மிருகங்களும் இசையின் தோற்றத்திற்கு உதவியிருக்க வேண்டும். தற்போதிருக்கும் கிளி, மைனா, குயில் போன்ற பறவைகள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கலாம். இப் பறவைகள் எழுப்பும் இனிய ஒலியே மனித இசையின் முதல் உந்து சக்தியாக இருந்திருக்கலாம். கிளியின் இனிய கீக்கீச் சத்தமும், குயிலின் இனிய கூக்கூச் சத்தமும், மைனா போன்ற பறவைகளின் இனிய ஒலிகளும் இசைக்குரிய வித்தாக மனித சிந்தனையில் உருவாகியிருக்க வேண்டும். பறவைகளின் ஒலி காதுக்கு இனிமையாகவும் சிந்தைக்கு இதமாகவும் இருப்பதை மனிதன் உணர்ந்த போது, தானும் அது போன்ற ஒலிகளை எழுப்பி மனித இசையைத் தொடக்கி வைத்திருக்க வேண்டும்.
ஓய்வு நேரங்களில் மனிதன் இவ்வகை ஓசைகளை எழுப்பி அதை மெருகூட்டி இசையை வளர்க்கத் தொடக்கியிருக்க வேண்டும். பறவைகளின் சத்தங்கள் இசையாக ஒலித்த போது அதில் செய்திப் பரிமாற்றமும் உணர்ச்சி வெளிப்பாடும் இருந்ததை மனிதன் கவனிக்கத் தவறியிருக்க மாட்டான். மனிதனின் வெவ்வேறு உணர்ச்சிகளும் அவனது ஒலி இசை மூலம் வெளிப்பட்டு இசைக்கு மெருகு சேர்த்தன. மகிழ்ச்சி, துயரம், கோபம், தனிமை போன்ற உணர்ச்சிகளின் இசை வடிவ வெளிப்பாடு இசையில் வகைகளைக் கொண்டுவரத் துணை புரிந்தன.
Wednesday, November 05, 2008
வரலாறு படைத்தது அமெரிக்கா
வரலாறு படைத்தது அமெரிக்கா
அந்நாட்டை ஆளவந்தார் பராக் ஒபாமா
பலநூறு சாதனைகள் படைத்ததில் இதுவொன்றும்
பத்தோடு பதினொன்றே அல்ல அல்ல
புரையோடிப் போயிருந்த நிறவெறிப்
புண்ணைக் கூடத் தூர எறிந்து விட்டு
மனித நேயம் மிக்கவரும் வாழும்
அமெரிக்கா நாமேயென்று
கொட்டி முழங்குது சங்கு
எட்டி ஒலிக்குது முரசு
ஆம் நம்மால் முடியும் - ஆம்
அமெரிக்காவில் இதுவும் முடியும்
இதுவே இலங்கை
இந்தியா வானால்
நினைக்கவே பதறுது
பாழ்பட்ட நெஞ்சம்
சாதி, சமயம்
இனம், மொழி
கோத்திரம், காத்திரம்
தாங்காத நாத்தமெல்லம்
பார்த்தபின் முடியுமா நம்மால்
மாறுமா நம் சிந்தை
தேறுமா நம் நாடு
நம்மாலும் முடியும்
மனித நேயம் புரிந்து விட்டால்
நம்மாலும் முடியும் – ஆனால்
புரியுமா மனித நேயம்?
Monday, November 03, 2008
இசை - மொழி - தமிழ்
இசையின் தோற்றம், அதன் வளர்ச்சி, தமிழில் அதன் இடம் போன்றவற்றை அலச எண்ணியுள்ளேன். விரைவில் கட்டுரை தொடங்கும். தொடங்கும் வரை
மார்கழிப் பூவே பாடலைக் கேளுங்கள்.
Friday, October 24, 2008
தமிழ்ப் பள்ளிகளில் கடவுள் வாழ்த்து
அவரவர் தமது விருப்பப்படி தமது மத வழிபாடுகளைக் கைக்கொள்வதில் எந்த விதத் தடங்கல்களையும் தமிழர் நிர்வாகங்கள் ஏற்படுத்தவும் கூடாது. மக்களின் மத நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில், தமிழ்ப் பள்ளிகளில் பாடசாலை நாள் ஆரம்பத்தில் கடவுள் வாழ்த்து என்ற பழக்கத்தை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஔவையின் கருத்தோடும் மற்றும் பலரின் மூத்த அறிவுரைகளோடும் கலந்து ஒரு கடவுள் வாழ்த்தை இங்கே செயற்படுத்துவோமா?
கடவுள் வாழ்த்து
அம்மா அப்பா வணக்கம்
ஆசிரியர்களே வணக்கம்
இறையருள் வேண்டி வணக்கம்
ஈதல் செய்யவே இணக்கம்
உலகம் உய்யவே உழைப்போம்
ஊருடன் சேர்ந்தே வாழ்வோம்
எவர்க்கும் உதவத் தயங்கோம்
ஏலாதவரைக் காப்போம்
ஐயந்திரிபறக் கற்போம்
ஒற்றுமை யொன்றே நினைப்போம்
ஓதல் செய்தலை நிறுத்தோம்
ஔடதந் தவிர்க்க முயல்வோம்
(அ)ஃதெலாம் வேண்டி வணக்கம்
வணக்கம் வணக்கம்
மார்கழிப் பூவே ......
மார்கழிப் பூவே ......
என்ற பாடல் மிக இனிமையாக இருக்கிறது. பாடலோ திகட்டாத இனிமை. பகிர்ந்து கொள்ள இதோ.
Tuesday, May 20, 2008
தமிழிசை - புது அனுபவம்
வானொலியை நிற்பாட்டி விட்டு அப்பால் போய் விடுவோம், அதன் பின் எப்படிச் சங்கீதம் எங்களுக்குப் பிடிக்கும்?
புலம் பெயர்ந்த பின், சில கச்சேரிப் பக்கம் சென்று எட்டிப் பார்த்தால் அங்கே புரியாத மொழியில் புரட்டி எடுப்பார்கள், அது எப்படி எங்களுக்கு ஏறும். வழக்கம் போல் ஈழத்து பாடல்களும், தமிழ்த் திரைப் பாட்டுகளும், பக்திப் பாடல்களும் தான் எங்கள் இசை உலகம்.
இப்படி நிலைமை இருக்கையில், அண்மைக் காலங்களில் சில நல்ல கர்நாடக சங்கீத வித்துவான்கள், தமிழில் பல பாடல்களைப் பாடி அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நித்தியசிறீ மகாதேவன்,
சுதா ரகுநாதன்,
ஓ.எஸ். அருண்
என்று பலர் மிக நன்றாகப் பாடி என்னைப் போன்றவர்களைக் கவரத் தொடங்கியுள்ளார்கள். இவர்களின் பாடல்களால் ஈர்க்கப் பட்ட நேரத்தில் அருணா சாயிராம் என்று ஒரு பாடகர் இசை உலகையே கலக்கிக் கொண்டிருப்பது அறிந்து அவர் பாடல்களைக் கேட்டால், அவை எல்லோரையும் அசத்தி அசையாது இருந்து இரசிக்க வைத்திருக்கின்றன.
இந்த அரிய சேவையைப் பலர் YouTube மூலம் உலக இரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருப்பது ஒரு பாராட்டப் பட வேண்டிய விடயம்.
இதோ இங்கே அவரின் சில பாடல்கள் கேட்டுப் பாருங்கள்.
Sunday, April 20, 2008
இன்னொரு சுனாமி


மிகப் பெரிய ஒரு நிலப் பரப்பைக் கடல் கொஞ்சங் கொஞ்சமாக ஆக்கிரமிக்கும் கோலம் நெஞ்சைப் பிழிகிறது. துபாயில், சிங்கப்பூரில் கடலில் தீவுகளைக் கடினப்பட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம், பெரும் நிலப் பரப்பைத் தீவுகளாக்கித் தொலைத்துக் கொண்டிருக்கிறது, கடலில். தற்போதைய தொழில் நுட்பங்களைக் கொண்டு, இந்தப் பிரதேசத்தை நன்கு பாதுகாக்க முடியும். அரசு முயல வேண்டும்.
சேது சமுத்திரச் சிற்பிகளுக்கு ஒரு வேண்டுகோள். சேதுக் கால்வாயையும் வெட்டுவோம், தொப்புள்கொடிப் பாலத்தையும் கட்டி அழியும் நிலப் பரப்பை மீட்கலாமே. கனடாவின், P.E.I.-New Brunswick ( http://www.confederationbridge.com/en/about_the_bridge/ )பாலத்தைப் பர்ர்த்தவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நிறைவேற்றக் கூடிய திட்டமே என்பது புரியும்.
Wednesday, February 20, 2008
உன் மொழியில் பாட மாட்டாயா?
தமிழன் நான் ரசிக்க வேண்டும்.
இதைப் பலர், பல வடிவில் சொல்லி விட்டார்கள்.
வாலியின் கவிதை http://jeyapal.blogspot.com/2006/04/tamil-music.html
பாலசந்தர்/வைரமுத்துவின் குமுறல் சிந்து பைரவி படத்தில்.
எத்தனையோ பத்திரிகைகள் தலலயங்கம் தீட்டி விட்டன.
இங்கே ஒன்று பத்தோடு பன்னிரண்டாக. (நன்றி விகடன்)
இசை மணிகள் சிந்திப்பார்களா?
Friday, June 22, 2007
புளிக்கும் நினைவுகள்
யுத்தம் இல்லாத காலத்தில், இடம்பெயர முன்னர், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தெரு ஓரமாக ஓங்கி வளர்ந்த புளியமரம் ஒன்று. பெரிய கிளைகளைப் பரப்பி மிகவும் விசாலமாக வளர்ந்திருந்தது.

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக் கட்டி
புழுதியையே சட்டையாக அணிந்து திரிந்த காலத்தின் ஒரு பகுதி இந்தப் புளிய மரத்தின் கீழும் எனக்கும் என் தோழர்களுக்கும் கழிந்தது.
வசந்த காலத்தில், புதிய இலைகளுக்கான துளிர் வர ஆரம்பிக்கும். வெளிறிய பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு நிறத்தில் மிக அழகாகத் துளிர்க்கும். கைக்கெட்டிய உயரத்தில் இருக்கும் இந்தத் துளிர்களை சாப்பிட்டவர்களுக்குத் தெரியும் இதன் சுவை. புளியும் இல்லை உவர்ப்பும் இல்லை.
பின்னர் கொஞ்ச நாட்களில், புளியம்பூ பூக்கத் தொடங்கும். பூவும் சாப்பிட நன்றாக இருக்கும். துளிர் போலவே இருக்கும், கொஞ்சம் புளிப்புக் கூடியிருக்கும்.

இன்னும் கொஞ்ச நாட்களில் பிஞ்சு பிடிக்கும். அந்தப் பிஞ்சைச் “சுண்டங்காய்” என்று அழைப்போம். வளைந்து வளைந்து வடிவாகவும் இருக்கும். சுண்டங்காயின் சுவை இன்னும் கொஞ்சம் புளிப்புக் கூடி இருக்கும்.
சில வாரங்களின் பின், சுண்டங்காய் முத்திப் புளியங்காய் என்ற நிலைக்கு வரும். புளிப்பும் முத்தத் தொடங்கியிருக்கும்.

மேலும் சில வாரங்களின் பின், புளியங்காயானது, காய்க்கும் பழத்திற்கும் இடைப்பட்ட பருவமாகிய “செம்பழம்” என்ற நிலைக்கு வரும். இந்தச் சுவை தான் நான் கடித்த ஆப்பிளில் இருந்தது. நல்ல பச்சை நிறத்திலிருந்த புளியங்காய் இப்பொழுது கொஞ்சம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். காயும் கனியத் தொடங்கும், சுவையும் மாறத் தொடங்கும். இப்பொழுது புளியம் பழத்தின் ஓடும் கொஞ்சம் நீக்கக் கூடியதாக இருக்கும். ஓடு நீக்கிய செம்பழம் கொஞ்சம் புளிப்புக் குறைந்தும் இருக்கும்.
இதன் பின் புளியம் பழம் தோன்றும். அதுவும் எங்கள் வாயிலிருந்து தப்பாது. ஆனால், புளியம்பழம் பழம் என்ற பேருக்காகவேனும் இனிக்க மாட்டாதே!!!!!. நாங்களும் இடைக் கிடையே புளியமரச் சொந்தக்காரனிடமும் பேச்சு, திட்டு, எறி வாங்கத் தப்பியதில்லை.

புளியைத் தின்று வாயைப் புண்ணாக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனால் உறைப்புக் கறி சாப்பிட முடியாமல் வீட்டிலும் அகப்பட்டுக் கொளவதும் …….
புளிப்போடு வந்து இனிக்கும் நினைவுகளும் …….
(வலையில் அகப்பட்ட சில படங்களுக்கு நன்றி)
Friday, March 30, 2007
என் வீட்டுப் பூக்கள்
Monday, March 26, 2007
மரம் பற்றியொரு பாடல்
வாழ்க அவர் பணி.
http://www.visvacomplex.com/Maramadhu_MaraththilERi___.html
Tuesday, March 20, 2007
பீத்தல்
1. பீத்தல்: ஈழத்தில் ஓட்டை அல்லது துவாரம் என்ற பொருள் படப் பாவிக்கப் படுகிறது. பீத்தல்ப் பேணி, பீத்தல் சட்டை என்று சொல்லப்படும்.
2. பீத்தல்: பிதற்றல் என்ற சொல்லின் மருவிய வடிவமாகத் தான் தமிழகத்தில் அறியப் படுகிறது என்று எண்ணுகிறேன். ஈழத்தில் இப்படிப்பட்ட பாவனையில்லை என்பது என் விளக்கம். "மதனின் பீத்தல் தெரிகிறது" என்று சொல்லும் போதும், மதன் பிதற்றுவது தெரிகிறது என்றல்லாமல், மதனில் (அல்லது மதனின் அறிவில்) இருக்கும் ஓட்டை தெரிகிறது என்பது தான் விளக்கம்.
அன்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?
Thursday, February 15, 2007
உறைந்து விட்ட நயகரா நீர் வீழ்ச்சி
Tuesday, February 13, 2007
பார்த்த படம்
- வேட்டையாடு விளையாடு - இரண்டு பாடல்கள் கேட்கலாம் (பார்க்கலாம் அல்ல) என்பதைத் தவிர முழு நீள நேர விரயம். குழந்தைகளோடு சும்மா விமானப் பயணத்திற் கூடப் பார்க்கக் கூடாது.
- பொய் - பாலச்சந்தர் படம். குடும்பத்தோடு நெளியாமல் பார்க்கக் கூடிய படம். எல்லோருக்கும் பிடிக்குமோ என்பது சொல்ல முடியாது. எனக்குப் பிடித்துள்ளது.பாடல்களும் பரவாயில்லை
- வரலாறு - பரவாயில்லை, குழந்தைகளுடன் பார்க்க முடியாது. கதையில் பல ஓட்டைகள் உண்டு. நல்ல பாட்டுகளும் உண்டு.
- தாமிரபரணி - குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம். பாடல்கள் நன்றாக உள்ளன.
- டிஷ்யூம் - படத்தின் பெயர் பிடிக்கவில்லையேயயினும், படம் அருமையானது. நல்ல பாடல்கள். நல்ல நடிப்பு.
- மொழி - குடும்பத்தோடு இருந்து பார்த்து மகிழ ஒரு அருமையான படம். நல்ல பாடல்கள், நகைச்சுவை என்று அழகான ஒரு படம்.
- போக்கிரி - விஜயின் பத்தோடு பதினோராவாது குப்பை.
- தீபாவளி - போக்கிரியை விடப் பரவாயில்லாத குப்பை.
- வெயில் - அழுத்தமான கதை, இயற்கையான காட்சிகள். ஆனால் அதை வெறித்த்னச் சண்டைக் காட்சிகளுடனும் வன்ம மனிதர்களுடனும் தந்திருப்பது, படத்தைக் குடும்பத்தோடு பார்க்க முடியாமல் வைக்கிறது. இந்தியாவில், இதை மக்கள் - சிறுவர்கள் - எப்படிப் பார்க்கிறார்கள் என்று எண்ன வைக்கிறது.
Tuesday, January 02, 2007
தேசத்தின் குரல் - இரங்கல்
வாகனங்களால் நிரம்பி வழிந்த தெருக்களில் வாகன நெரிச்சலைக் கட்டுப் படுத்த இலண்டன் பொலிசார் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மக்கள் வெள்ளமோ மண்டபத்தின் வெளியே மலைச் சரிவில் போடப்பட்ட வீதி போல் நெளிந்து நெளிந்து தெரு வரை இருக்க நாமும் அதில் இணைந்து எம் அஞ்சலியையும், வீர தீர வணக்கத்தையும் செலுத்தக் கூடியதாக இருந்தது.
அவர் மறைவிற்கு இரங்கல்:
பறந்து விட்டது பாலா உயிர்
இறந்து விட்டது பண்புப் பயிர்
அணைந்து விட்டது அறிவுச் சுடர்
தொலைந்து விட்டது துருவக் கதிர்
கலங்கி நிற்குது களமாடுந் தலை
கசங்கி நிற்குதுன் கனிவான துணை
குலுங்கி அழுகிற குரல் கேளாயோ
கலங்காது சாவைக் கரம் பற்றியோனே
சேனைத் தலைவன் தேடும் ஆணித் தரம்
சர்வ தேசத்தில் ஒலித்த சிங்கக் குரல்
இராச சாணக்கியத்தில் தேசக் குரல்
பால சிங்கத்தின்பட் டாசுக் குரல்
தேசத்தின் குரல் தாங்கி நிற்கும்
சாணக்கியன் குரல் தூங்கி நிற்கும்
சோகத்திலும் நாம் வேண்டி நிற்பது
தேசப் பெருமகனின் புகழுடல்
Thursday, November 09, 2006
இலவசமாய்ப் புத்தகங்கள்
வாழ்க அவர்கள் சேவை.
நீங்களும் பயன் பெற இங்கே அமத்துங்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
Monday, October 09, 2006
விஜய் வளர்கிறாரா?
அண்மைக் காலங்களில் நடிகர் விஜயின் படங்களை எல்லோரும் விரும்பிப் பார்க்குமளவிற்கு மக்கள் மத்தியில் அவை பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. குழந்தைகள் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக விஜயின் படங்களும் அவரது பாத்திரங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வயதுக் குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பும் ஒரு நடிகராக அவர் வளர்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே. நல்ல திசையில் அவரது தொழில்விருத்தி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர் கவனிக்க வேண்டிய ஒரு மிக முக்கிய விடயமும் உள்ளது.
அண்மையில் அவரது ஆதி, பகவதி, சிவகாசி, மதுர போன்ற படங்களை பார்க்க நேர்ந்தது. படங்களில் அவர் வழக்கம் போலவே நல்ல மனிதனாக வந்து நல்லது செய்கிறார். பாடல்கள், நடனம் என்று குழந்தைகள் விரும்பும் அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் அவர் ஒரு மகா தவறைத் தனக்கும் தெரியாமல் இப் படங்களில் செய்திருப்பது குழந்தைகளின் செயல் மூலம் அவதானிக்கப்படக் கூடியதாக இருந்தது. குழந்தைகள் சண்டைக் காட்சிகளை ரசிக்கிறார்கள். ஆனால் மேற் சொன்ன படங்களில் இருப்பவை, சண்டைக் காட்சிகள் அல்ல கொலைக் காட்சிகள். அவற்றைக் காணக் குழந்தைகள் கிலி கொள்கிறார்கள், வெறுக்கிறார்கள், ஓடி ஒளிக்கிறார்கள். அவ்வளவுக்குப் பயங்கரமான காட்சிகள் அந்தச் சண்டைகள். குழந்தைகளின் அபிமான நடிகர் குழந்தைகளின் மனோ நிலையைப் புரிந்து சண்டை காட்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். வேறு பல படங்களிலும் மகா பயங்கரமான கொலைக் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால், அந்தப் படங்களின் நடிகர்கள் விஜய் போல் குழந்தைகளின் அபிமானம் பெற்றவர்களல்ல. சூர்யா சமீப காலமாக அந்த இடத்தை நெருங்கி வருகிறார், அவரும் இந்தக் கொலைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
இந்தக் குலை நடுங்க வைக்கும் கொலைப் பயங்கரங்களை விஜய் தன் படங்களில் இருந்து நீக்கா விட்டால் அவர் ஒரு ரசிகர் பட்டாளத்தை மிக மலிவாக இழக்கப் போகிறார். இன்றைய குழந்தைகள் தான் அவரை நாளை உச்ச நடிகர் என்ற தானத்திற்கு ஏற்றி வைக்கப் போகிறவர்கள் என்பதை விஜய் கருத்திற் கொண்டு தன் படங்களையும் காட்சிகளையும் தெரிவு செய்ய வேண்டும். காசாசையில், தயாரிப்பளர்களும், இயக்குனர்களும் எப்படிப் பட்ட கதைகளையும் காட்சிகளையும் கொண்டு வருவார்கள். அதைத் தணிக்கை செய்ய வேண்டியது முன்னணிக் கதாநாயகனின் பொறுப்பு. வளரும் நாயகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டதோடு மட்டுமில்லாமல், குழந்தைகள் பார்க்கக் கூடிய படங்களும் வர வேண்டும் என்ற அற்ப ஆசையில் ஒரு எழுத்து.
Wednesday, October 04, 2006
கணினியில் தமிழ் - பகுதி 7
-1- - -2- - -3- - -4- - -5- - -6-
கணினியில் தமிழ் - பகுதி 7
இப்படியாகக் கணினியில் தமிழ் தவழத் தொடங்கி, எழுந்து நடை பயின்று, இன்று ஒருங்குறியாக நிமிர்ந்து நிற்கிறது. பற்பல இணையத் தளங்களும் மென் பொருட்களும் தேடல் இயந்திரங்களும் இப்பொழுது ஒருங்குறி மூலம் மிகப் பிரபலமாகி விட்டன. ஒருங்குறி எழுத்துருக்களை இப்பொழுது கணினியில் அடிப்படையிலேயே சேர்த்தும் விட்டார்கள். இதனால் எல்லோரும் இன்புற்றிருக்க இலகுவாகக் கோலோச்சுகிறது ஒருங்குறி.
இணையக் கடைகள், பிறரின் கணினிகள் போன்றவற்றில் ஈ-கலப்பையோ அல்லது கீ-மானோ இல்லாதவிடத்து, சுடச் சுட ஒருங்குறியில் அல்லது பாமினியில் தமிழை அடிப்பதற்கு உதவியாக திரு. சுரதா யாழ்வாணன் , ஈழம் எழுதி என்ற கருவியையும் இணையத்தில் தந்துளார். அதன் தொடுப்பைப் பின்னாலே தருகிறேன்.
ஒருங்குறித் தமிழ் இப்பொழுது எதிலும், ஏன் எமது வலைப் பூக்களிலுங் கூடக் கோலோச்சுகின்ற போதும், ஆங்காங்கே பல வல்லுனர்கள் கணினியில் தமிழின் இருப்பைச் செம்மை செய்ய அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் கூட டாப் (TAB), டியூன் (TUNE) என்றெல்லாம் பல முனைகளில் ஆய்வுகள் நடக்கின்றன. எல்லாம் நன்மையைத் தமிழுக்கும் தமிழருக்கும் தரட்டும்.
இதுவரை என் தொடரைத் தொடர்ந்து வந்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. இதில் இருக்கும் குறைகள், தவறுகள் என்பவற்றை தயவு செய்து மன்னியுங்கள். அப்படியே, உங்கள் கருத்துக்களை எனக்குப் பின்னூட்டமாகவோ தனி மின்னஞ்சலிலோ தெரிவியுங்கள்.
மீண்டும் நன்றி, வணக்கம்.
பிற் குறிப்பு:
மேலதிகமாக வாசிக்க விரும்புபவர்களுக்காக சில இணையத் தளங்களின் முகவரிகளைக் கீழே தருகிறேன். இவை தவிர மேலும் முகவரிகள் தெரிந்தவர்கள் இங்கே அவற்றை இடுங்கள்.
கீ-மான்:: keyman
ஈ-கலப்பை:: http://thamizha.com/modules/mydownloads
ஈழம் எழுதி :: http://www.suratha.com/eelam.htm
ஒருங்குறி :: http://unicode.org/faq/tamil.html
தகுதரம் :: http://www.tscii.org/
தமிழா :: http://thamizha.com/
விக்கிபீடியா :: http://ta.wikipedia.org
தமிழ்.நெட் :: http://www.tamil.net/
அகத்தியர் மடற்குழு :: http://groups.yahoo.com/group/agathiyar/
அகத்தியர் ஆவணம் :: http://www.treasurehouseofagathiyar.net/
தமிழாராய்ச்சி மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil_araichchi
தமிழாராய்ச்சி :: http://www.araichchi.net/
மெய்கண்டார் மடற்குழு :: http://groups.yahoo.com/group/meykandar/
தமிழுலகம் மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil-ulagam/
உத்தமம் :: http://www.infitt.org/
தமிழ் இணையப் பல்கலைக் கழகம் :: http://www.tamilvu.org/
தமிழ் மின்னூலகம் :: http://tamilelibrary.org/
மதுரைத் திட்டம் :: http://www.tamil.net/projectmadurai/
இதர :: http://www.geocities.com/athens/7444/
-1- - -2- - -3- - -4- - -5- - -6-
Tuesday, October 03, 2006
கணினியில் தமிழ் - பகுதி 6
-1- - -2- - -3- - -4- - -5- - -7-
பகுதி 6
பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, “இயங்கு எழுத்துரு” (dynamic font) என்ற ஒரு விடயம் பாவனைக்கு வந்தது. இதை ஒரு தனியார் நிறுவனம் (bitstream) தயாரித்து வெளியிட்டது. இதன் மூலம் இணையத் தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப் பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப் படையில், பாவனையாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணையத்தளங்களைப் பார்வையிட முடிந்தது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் கருமமாற்ற உருப் பெற்ற வண்ணமிருந்தன.
இவறிற்கெல்லாம் முடிவு கட்டத் தான் நியம வேலையில் பலரும் மூழ்கினர்.
இதிலொன்று தகுதரம். ஆயினும் தகுதரத்திற்கும் சில முரண் கருத்துக்கள் இருந்தன. தமிழ்க் கணினி விற்பன்னர்கள் தகுதர வேலையில் இருக்கும் வேளையில், ஒருங்குறி (unicode.org) என்ற ஒரு அமைப்பு உலக மொழிகள் அனைத்தயும் கணினியில் உள்ளடக்குவதை குறிக்கோளாகக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்து நியமங்களையும் அறிவித்தது. தமிழிற்கும் ஒருங்குறி நியமம் உருப் பெற்றது. இது தகுதரத்தின் நியமத்தை ஒத்திருக்கவில்லை.
இந்தத் தறுவாயில், தமிழக அரசு தமிழின் நியமம் கருதி ஒரு ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டியது. அரச ஆதரவுடன் முன்னெடுக்க ஒரு நியமச் சூத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தது அரசு. தமிழ்நெட்99 (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது. இதை இதர பல நாடுகளின் தமிழ்ப் பிரிவுகளும் அங்கீகரிக்கத் தொடங்கின. இப்பொழுது ஒருங்குறி நியமமே எல்லோராலும் அங்கீகரிக்கப் பட்டு இயல்பாகவே பாவனைக்கும் வந்து விட்டது. தமிழ்நெட் என்னும் தலைப்பில் வருடந்தோறும் மாநாடுகள் நடை பெறுகின்றன. உத்தமம் என்ற ஒரு அமைப்பும் இவற்றோடு சம்பந்தமுடையது.
முரசு அஞ்சல் விசைப் பலகையைத் தொடர்ந்து, கீமான் (keyman) என்னும் விசைப் பலகை, பன் மொழிப் பாவனையாளர்களுக்கு ஒரு நிறுவனத்தால் (Tavultesoft) தயயரிக்கப் பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்தக் கீமான் மூலம் தமிழை அடிப்பதும் இலகுவாக்கம் பெற்றது. இதைப் பாவித்து ஈ-கலப்பை என்ற ஒரு செயலி மூலம் விசைப் பலகைகள் தமிழுக்கு இசைவாக்கம் செய்யப் பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முகுந்தராஜ், அன்பரசன் போன்றோர் இந்தத் துறையில் ஊக்கமாகச் செயற்படுகிறார்கள். இந்த ஈ-கலப்பை இப்பொழுது தமிழா என்ற செயலியில் இலகுவாகக் கிடைக்கிறது. ஈ-கலப்பையில், நாங்கள் அடிப்பதற்கு வேண்டிய எழுத்துருவை, ஒருங்குறி எழுத்துருவா அல்லது தகுதர எழுத்துருவா அல்லது பாமினியா அல்லது ஆங்கிலமா என்று தெரிவு செய்யும் வசதியும் இங்கே உண்டு.
தகுதரம், ஒருங்குறி, கீமான் விசைப்பலகை ஆகியவற்றின் துணையோடு தமிழ் இப்பொழுது இணையத்திலும், நாளாந்தப் பாவனையிலும் பூத்துக் குலுங்குகிறது.
தமிழ்க் கணினி அறிஞர்களையும் தமிழறிஞர்கள் பலரையும் ஒன்று பட வைத்த பெருமை “தமிழ்.நெட்” க்கு உரியது. ஒன்று பட்டது மட்டுமல்ல பல ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளுக்கும் இது வடிகாலாக இருந்தது. ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் ஆக்க பூர்வமாகத் தனித் தனியே பிரிந்து “தமிழ்” என்ற நோக்கைக் கை விடாமல் இன்றும் இயங்குவது கண்கூடு.
தமிழ்.நெட் இல் ஆரம்ப காலம் தொட்டே மிகப் பெரும் பங்காற்றியவர் மலேசிய வைத்தியக் கலாநிதி ஜெயபாரதி அவர்கள். தமிழில் எல்லாத் துறைகளையும் பற்றிச் சரளமாக எழுதி வந்தார். மேலும் அவர் அகத்தியர் என்ற ஒரு யாஹூ மடலாடற் குழுவை ஆரம்பித்து இன்றும் அயராது அரும் பெரும் விடயங்களைப் பற்றி அங்கே எழுதி வருகின்றார். அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் என்பது அவருடைய படைப்புகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். கணினியில் அவரின் தமிழ்த் தொண்டு இன்றும் தொடர்கிறது. இணையம் (Internet), வைய விரி வலை (World wide web) போன்ற தமிழ்ச் சொற்களை எங்களுக்குத் தந்தவர் இவரே.
இது போல் தமிழுலகம், தமிழாராய்ச்சி போன்ற பல குழுக்களும் இப்பொழுது இருக்கின்றன. மேலும், சுமேருவில் வாழ்ந்தவர்கள் தமிழரென்று சுமேருத் தமிழ் பற்றியும் ஆதாரங்களோடு எழுதி வந்தவர் கலாநிதி லோகநாதன் அவர்கள். அவரது எழுத்துக்களை மெய்கண்டார் என்னும் மடலாடற் குழுவில் காணலாம். பல மடலாடற்குழுக்கள் ஒருங்குறியிலும், பல இன்னமும் தகுதரத்தோடும் தகுதர ஆவரங்கால் எழுத்துருவோடும் கோலோச்சிக் கொண்டு இருக்கின்றன.
… அடுத்த பகுதியுடன் முடியும்.
-1- - -2- - -3- - -4- - -5- - -7-
Sunday, October 01, 2006
கணினியில் தமிழ் - பகுதி 5
-1- - -2- - -3- - -4- - -6- - -7-
யாஹூ மடலாடற் குழுக்களுக் கெல்லாம் முன்பே அது தோன்றியது. முரசு அறிமுகமான காலத்தில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலாப்பிள்ளை என்பவர் ஒரு மடலாடற் குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (www.tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழிற் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடல்களைச் செய்தனர். முரசு அஞ்சல் எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது. முரசு அஞ்சலோடு யூடோராவில் வெற்றிகரமாக அமுலுக்கு வந்த எழுத்துரு ஆவரங்கால்.
உலகின் பல பாகங்களிலுமிருந்த பல கணினி வல்லுனர்கள், தமிழ் வல்லுனர்கள் சந்தித்துக் கொள்ள தமிழ்.நெட் ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. கணினியில் தமிழ் - பகுதி 4 இல் குறிப்பிடப் பட்டவர்களும், அதில் இருக்கும் பின்னூட்டில் குறிப்பிடப் பட்டிருப்பவர்களும் இன்னும் பலரும் இதில் ஈடுபட்டிருந்தனர். இதன் மூலம் தமிழின் எழுத்துருவுக்கு ஒரு நியம (standard) நிலையைச் சர்வதேச அங்கீகாரத்துள் கொண்டு வர வேண்டுமென்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒரு புது வேகம் பெற்றது. இதற்கான ஆராய்ச்சிகள், கலந்துரயாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மடலாடற் குழுவூடாகவும், அதற்குப் புறம்பாகவும் மிக்க கரிசனையோடு பலரின் நேரம், பொருட் செலவுகளோடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இவர்களின் ஆராய்ச்சிகளினாலும், செயற்பாடுகளினாலும் தகுதரம் என்ற ஒரு நியமச் சூத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். ஆங்கிலத்தில் தஸ்கி (TSCII) என்று இதை அழைத்தார்கள். இந்த நியமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்துருக்களை நியமப் படுத்த முடிந்தது. ஏற்கனெவே இருந்த சில எழுத்துருக்கள் இந்த நியம வடிவுற்குள் தங்களைக் கொண்டு வந்து மெருகு பெற்றன. நியமம் ஒன்று உருவெடுத்ததால் பெரிய நன்மை ஏற்பட்டது. இந்த நியமத்திலமைந்த எழுத்துரு ஏதாவது ஒன்று எம் கணினியில் இருந்தால், இதே நியமத்திலமைந்த வேறொருரு எழுத்துருவில் எழுதப்பட்டவற்றை வாசிக்கப் பிரச்சனையில்லை.
ஆவரங்கால் எழுத்துருவும் முரசு விசைப்பலகையும் பாவனைக்கு வந்ததும், பலரும் ஆவரங்கால் எழுத்துருவைத் தங்கள் கணினியில் நிறுவி வைத்திருந்தனர். அத்தோடு பல இணையத் தளங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு வந்து கொண்டேயிருந்தன. தகுதரம் வந்து இணைய வேலைகளை இலகுவாக்கியது.
இவை தவிர தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணையத் தளங்கள் பிரபலமாகத் தொடங்கின. விகடன், குமுதம், வீரகேசரி மற்றும் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் பிரபலமாகின. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவை இறக்கம் செய்து கொண்டால் போதும்.
………………… தொடரும்
-1- - -2- - -3- - -4- - -6- - -7-
Saturday, September 30, 2006
கணினியில் தமிழ் - பகுதி 4
-1- - -2- - -3- - -5- - -6- - -7-
முன்பே சொன்னது போல், எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சை உபயோகிப்பதால் இருந்த சிரமங்களைக் கருத்திற் கொண்டு சில மென்பொருட்கள் இப்பொழுது தயாராகத் தொடங்கின. 90 களின் நடுப்பகுதியில், மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகமாக்கினார். இதில் எழுத்துரு, எழுதி, மின்னஞ்சற் செயலி, விசைப்பலகை என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதில் முக்கியமான அறிமுகம் விசைப் பலகை. இந்த விசைப் பலகையைப் பாவித்து நாம் ஆங்கிலமயமான (romanized)தமிழையும் எழுத முடிந்தது. இதில் தமிழ்த் தட்டச்சும், ஆங்கிலமயத் தமிழ்த் தட்டச்சும் சேர்ந்தே இருந்தன. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அம்மா என்று எழுத “ammaa” அல்லது “ammA” என்று தட்டினால் சரி. மிக இலகு. இதில் இன்னொரு விளைவு, தமிழைப் படிக்காத ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூடத் தமிழில் எழுத முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழை திருத்த முடியாதென்பது வேறு விடயம்.
இந்த நேரத்தில் யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சற் செயலி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளி வந்து மின்னஞ்சலிற் தமிழை மேம்படுத்தியது. முரசுஅஞ்சல், இணைமதி, இணைக்கதிர், மைலை, ஆவரங்கால் போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கிய பங்காற்றின. ஆவரங்கால் என்பது ஈழத்தில் ஒரு ஊரின் பெயர். இந்த ஊரைச் சேர்ந்த திரு. ஸ்ரீவாஸ் சின்னத்துரை என்பவர் உருவாக்கிய ஒரு எழுத்துரு தான் இது. இவர்களோடு குறிப்பிடக் கூடிய இன்னும் பலர் இருந்தனர். இவர்களில் எனக்கு ஞாபகம் வரும் பெயர்கள் சில இதோ.
திரு. குமார் மல்லிகார்ஜுன்,
கலாநிதி கல்யாணசுந்தரம்,
திரு. மா. அங்கையா,
திரு. மணிவண்னன்,
திரு. நாகு,
திரு. கலைமணி,
திரு நா. கணேசன்,
திரு. பூபதி மாணிக்கம்,
திரு நா. சுவாமிநாதன்.
(பெயர் மறந்து விட்ட அறிஞர்கள் தயை கூர்ந்து மன்னிக்க)
இவர்கள் இத்தோடு நில்லாமல் தொடர்ந்து தமிழின் கணினி இருப்பிற்கு இன்னமும் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந் நேரத்தில், யுனிக்ஸில் அகரம் என்ற செயலியும், மக்கிண்டாசில் சில்க்கி என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகி விட்டிருந்தன. இவை இப்படியிருக்க இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் எற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான் இணைய யுகம். (Internet era)
இணையத்தில் (internet), வைய விரி வலை (world wide web) 1990 முற்பகுதியில் கோபர் (Gopher), மொசையிக்(Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்களாக உருவாகி இணையத்தின் பாவனயை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது அபிவிருத்தி அடைந்து நெட்ஸ்கேப் (Netscape) பில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே ஆரம்பமாகியது.
இப்பொழுது, சில இணையத் தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. இந்தத் தமிழ் இணையத் தளங்களை உருவாக்குவதில் மிக உதவியாக இருந்தவை முரசு-அஞ்சல் செயலியும் அப்பொழுது தோன்றிய இன்னொரு புரட்சியான தமிழ் மடலாடற் குழுவும் அதனாலேற்பட்ட பெரிய அபிவிருத்திகளும்.
…. தொடரும்
-1- - -2- - -3- - -5- - -6- - -7-
Tuesday, September 26, 2006
கணினியில் தமிழ் - பகுதி 3
-1- - -2- - -4- - -5- - -6- - -7-
தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற் கேற்பப் பாவனையில் வைத்திருந்ததால், ஒருவர் தமிழில் தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும் போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லா விட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். சரி, அனுப்புபவர், பெறுனர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும், வாசிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அதே நேரத்தில், அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளினூடு பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் கடிதம் சரியாகப் போகிறதா என சோதித்துப் பார்க்கும் போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். இதனால் மின்னஞ்சல் மென்பொருட்களும் விசேட எழுத்துருக்களைக் கையாளக் கூடியதாக தம்மை மேம்பாடடையச் செய்ய வேண்டிய தேவையும் எழுந்தது. இப்படியான சிக்கல்களில் சிக்குப் பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு மென்பொருள் தோன்றியது.
“மாதுரி” அல்லது “மதுரை” (Maduri) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வித்தியாசமான வேலையைச் செய்தது. அதாவது ஒரு கோப்பில் தமிழ் ஆக்கங்களை ஆங்கில உச்சரிப்பில் எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு “மாதுரி” கட்டளையை அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பாவனைக்கு வரவில்லை, ஆனால் இலகுவாகச் சின்னச் சின்ன வார்த்தைகளைத் தமிழ்ப் படுத்த இது மிக உபயோகமானது. அத்துடன் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், மாதுரியிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துக்களின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துக்கள். ஆதலால் இவ் வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1991/92 காலப் பகுதியில் சாத்தியமானதாக இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர் யாரென்பது சரியாகத் தெரியவில்லை.
இதன் மூலம் கிடைக்கும் எழுத்துக்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.
__
|_| L L0 ||
இது “படமா” என்ற சொல், கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.
இதிலிருந்த பெரிய குறை, எழுத்துக்கள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் பயமுறுத்தியது தான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பாவனையில் பெரிதாக இடம் பெற முடியாமற் போய்விட்டது.
மின்னஞ்சல் பிரச்சினைகளும் தீர்வு முயற்சிகளும் ஒரு புறம் போய்க்க் கொண்டிருக்க, யூனிக்ஸ் பக்கமும் தமிழ் கணினியில் ஏறிக் கொண்டிருந்தது.
ஐடிரான்ஸ் ( iTrans) என்ற நிறுவனம் தமிழை யூனிக்ஸில் அப்போது (90 களில்) பிரபலமாக இருந்த லேடெக் (LaTex) எழுதியில் தமிழைக் கொண்டு வந்திருந்தது. இதன் மூலம் தமிழில் எழுதுவது சாத்தியமாக இருந்தது. தனிக் கணினி போல் யூனிக்ஸ் கணினிகள் பொது மக்கள் பாவனையில் இல்லாததால், தனிக் கணினியில் தமிழைச் செம்மைப் படுத்தும் முற்சிகளும் அபிவிருத்திகளும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்தன. இக்காலத்தில் ஆராய்ச்சிகள் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின.
........................... தொடரும்
-1- - -2- - -4- - -5- - -6- - -7-
Sunday, September 24, 2006
கணினியில் தமிழ் - பகுதி 2
-1- - -3- - -4- - -5- - -6- - -7-
எழுத்துருக்களில் (fonts) குறிப்பிடத் தக்கதாகவும், பரந்த அளவில் பாவனயில் இருந்தவையாகவும் சிலவற்றைக் குறிப்பிடலாம். மைலை (Mylai), பாமினி (Bamini) போன்றவை பிரபலமாக இருந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன. எழுத்துருவின் பாவனையிலிருந்த ஒரேயொரு சிக்கல் விசைப்பலகை (keyboard) தான்.
கணினியில் இருக்கும் விசைப்பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப்பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. தமிழ்த் தட்டச்சுத் தெரிந்திருந்தவர்களுக்குத் தமிழில் மென்பொருட்களைத் தமிழ் எழுத்துரு மூலம் உபயோகிப்பது இலகுவாக இருந்தது. இதனால் இந்த எழுத்துருக்கள் தமிழர் தாயகங்களில் பிரபலமடைந்தன. அங்கே இருந்த கணினி வல்லுனர்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற எல்லோரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கில மூல மென்பொருட்களிலும் நூறு வீதம் சரியாக ஒத்துழைக்கவில்லை. சில சமயங்களில், சில மென்பொருட்களில் சங்கடங்களும் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பிரயோகங்களான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறவேற்றக் கூடியதாக இருந்தன.
தனித்தனியாகத் தன்தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகளை வலை வேலைப்பாட்டால் இணைத்து கணினிகளையும் அவற்றின் பிரயோகங்களையும் ஒரு படி உயர்த்தி வைத்து மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாகப் பூர்த்தி செய்யத் தொடங்கினோம். இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் கால கட்டத்தில் (90 களில்) தொடர்பாடற் சாதனமாகப் பரிமணிக்கத் தொடங்கின. மின்னஞ்சல் பாவனை பிரபலமாகத் தொடங்கியது. யூனிக்ஸ் (UNIX) இயங்கு முறைக் (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முதலிலேயே இருந்தன. தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சற் தொடர்பாடல் பிரபலமாகத் தொடங்கும் போது தான் தமிழைத் தொடர்பாடலில் பாவிக்கும் தேவை எழுந்தது. தனிப்பட்டோரின் எழுத்துருக்கள் இந்த இடத்தில் கொஞ்சம் இடறத் தொடங்கின.
................................... தொடரும்
-1- - -3- - -4- - -5- - -6- - -7-
Thursday, September 21, 2006
கணினியில் தமிழ் - பகுதி 1
-2- - -3- - -4- - -5- - -6- - -7-
கணினியில் தமிழ்
- பகுதி 1கணினி தோன்றிப் பல வருடங்களானாலும், கணினியில் தமிழ் தோன்றியது 1980 களில் தான். அப்பொழுது மேசைக் கணினிகள் முளை விடத் தொடங்குகிற நேரம். முளை விடும் கணினிகளும் தனக்குத் தனக்கெனத் தனியான இயங்கு முறைகளைக் கொண்டிருந்தன. பின்னர் “மக்கின்டாஸ்”, “மைக்ரோசாப்ட்” வகை இயங்கு முறைகளுடன் கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளி வந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி விற்பன்னர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர்.
கணினிகள் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்கள் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.
இவற்றின் ஆதாயங்களைத் தமிழிலும் பெற முயன்ற தமிழ்க் கணினி வல்லுனர்களின் பல முயற்சியிகளில் முதலில் தோன்றிய மென்பொருள் ஒரு ஆவணங்கள் எழுதும் “ஆதமி” என்னும் மென்பொருள். இது 1984 இல் கனடாவில் வதியும் கலாநிதி சிறீனிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அன்னாளில் தமிழ்க் கணினிப் பாவனையாளர்களிடம் பிரபலமாக இருந்தன.
1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு அறிமுகப் படுத்தப் பட்டது. இக்கால கட்டத்தில் எழுத்துருக்களை உருவாக்கப் பல வல்லுனர்கள் சொந்த முயற்சியாக இறங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன.
...............தொடரும்
-2- - -3- - -4- - -5- - -6- - -7-
Friday, September 01, 2006
தாய்மொழி வழிக் கல்வியின் அவசியம்
அவர்கள் செயலூக்கத்திற்குப் பாராட்டுக்கள்.
சுருக்கம் என்னவென்றால்:
ஆரம்பப் பள்ளிக்கூடங்களில், கற்கை மொழியைக் கன்னடத்திலிருந்து ஆங்கிலமாக மாற்றிக் கொண்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்பப் பாடசாலைகளின் அரச அங்கீகாரத்தைச் செல்லுபடியற்றதாக்கக் கர்நாடக அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
விரிவாக இங்கே காண்க:
Karnataka nips English in the bud - முளையிலேயே கிள்ளு
கேரளாவும் இணைந்து விட்டது
இதனோடு தொடர்பான எனது ஒரு பதிவு இங்கே
அரசு:
முதலில் தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்குகிறாதா அல்லது தமிழை இழக்கிறதா என்பதை நோக்குவோம்.
தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். அந்த ஆட்சி மொழி எவ்வளவுக்கு ஆட்சி செய்கிறது என்பது சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய விடயம். ஆட்சி எங்கே தொடங்குகிறது? அது சட்ட சபையுடன் ஆரம்பிக்கிறது. தமிழ் நாடு சட்ட மன்றத்தில் ஓரளவு தூய தமிழில் பேசுகிறார்கள் மன்றும் தமிழில் இயங்குகிறது, மகிழ்ச்சியே. சட்ட மன்றத்திற்கு வெளியே வந்தால்? தமிழ் நாட்டு அரச உயரதிகாரிகளில் 90 வீதமானவர்களுக்குச் சரளமாகத் தமிழில் எழுத, வாசிக்க மற்றும் பேசக் கூடிய புலமை இல்லவேயில்லை. இந்த உயரதிகாரிகளிற் பலர் தமிழ் மொழி மூலம் தமது கல்வியை ஓரளவிற்கேனும் கற்றவர்களோ அல்லது தமிழை ஒரு பாடமாகத் தம் பாடவிதானத்தில் கொண்டவர்களோ அல்லது தமிழில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களோ இல்லை. இன்னும் பார்த்தால், இவர்களிற் பலர் இந்தியா என்ற கூட்டுப் பொங்கல் நிலையால் வந்த பிற மாநிலக்காரர்கள். இவர்கள் தமிழ் மொழிக்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்ப் புலமை குறைந்த தமிழர்களும், தமிழ்ப் புலமையற்ற பிற மாநிலக்காரர்களும் அதிகாரிகளாகப் பதவியேற்று எப்படித் தமிழ் மக்களின் குறை நிறைகளை நிவிர்த்தி செய்ய முடியும்? தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளை, சிக்கல்களை இப்படிப் பட்ட அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள நல்ல தொடர்பு மொழி அவசியமல்லவா?
மேலும் வாசிக்க கீழேயுள்ள தொடுப்புகளை நாடுங்கள்
”தமிழ்” நாடெனும் மாயை - 1
"தமிழ்" நாடெனும் மாயை - 2
Wednesday, August 16, 2006
யாருமே அர்ச்சகராக வேண்டாம்
இப்ப என்னடா என்றால் அந்த அர்ச்சகராகும் தகுதிக்குச் சாதி தேவையில்லை என்ற அறிவிப்பு. பின்னர் அதற்குத் தடை.
எங்கே போகிறது மனித நாகரீக வளர்ச்சி?
அர்ச்சகரே தேவையில்லை.
அதை விட்டு விட்டு ஏதேதோ எல்லாம் செய்துகொண்டு நேரம் சக்தி பணம் என்பவற்றை வீணாக்குகிறார்கள்.
கடவுளை வணங்கு
நடுவில் நிற்கும்
அர்சசகரை அகற்று
Monday, August 14, 2006
எப்படிப் பாடுவீரோ
தேவாலயந் தகர்ந்தது
செஞ்சோலை சிதறியது
சோலையின் தளிர்கள்
கருகின தீய்ந்தன
கயவர்தம் காட்டுக்
கடும்போக்கில்
ஐநாவே ஐயா நாட்டோரே
அனைத்துலகச் சட்டங்கள்
அழித்தோரைச் சாடாவோ
அல்லது
அழித்தவர் குருக்களோ
பாடுவீரோ சரணம்
பலியானது புலிகள் என்று
பாடுவீரோ பல்லவி
பக்கத்திற் சென்று பார்க்கப்
பாதுகாப்பு இல்லை என்று
பாடுவீரோ மங்களம்
பேசுவீர் பேசுவீர்
பேதங்கள் களைவீர்
பேசியதன் செயல்வடிவம்
பேய்வடிவில் பெறுவீர் என்று
பாடுவீரோ
எப்படிப் பாடுவீரோ




