Saturday, January 17, 2026

பாட்டு 54) முகம் (சிறுவர் பாடல்)

 

முகம்  (சிறுவர் பாடல்)


கண்ணிரண்டு காதிரண்டு

கண்டு கேட்டு வாழ்வதற்கு


வாயொன்று மூக்கொன்று

உண்பதற்கும் மோப்பதற்கும்


நெற்றியொன்று நாடியொன்று

நல்ல கன்னந் தானிரண்டு


வாயினுள்ளே நாக்குமுண்டு

பற்களுமங் கேயுண்டு


மூக்கிலிரு துளைகளுண்டு

மூச்சுவிடும் வழிகளுண்டு


கண்ணில் மணி தானுண்டு

காண வைக்கப் பங்குண்டு


வெள்ளித் திரையுமங்குண்டு

வீழும் விம்பம் பாரென்று


காதில் குகைபோல் துளையுண்டு

துளையின் வழியே ஒலி சென்று


செவியின் பறையில் அதிர்ந்திட

இசையும் பேச்சும் கேட்டிடுமே


நெற்றி முதல் நாடி வரை

முகத்திலுள்ள உறுப்புகளை


அறிந்து பாட்டாய்ப் பாடிடுவோம்

பாடிப் பாடி மகிழ்ந்திடுவோம்


பாட்டு 53) ஒற்றைப் பனையடி

ஒற்றைப் பனையடி

ஒற்றைப் பனைமரம் இருந்த தெம்மூரிலும்

பாதையில் வழித்தடம் காட்டிடுந் தனிமரம்

வீட்டிலிருந்தெம் மாச்சியின் வீட்டிற்கு

பாதித் தொலைவினில் ஓரமாய் நின்றிடும்


ஆச்சியின் வீட்டுடன் நிற்காது பாதை

கூப்பிடு தூரத்தில் வந்திடுங் கடற்கரை

வெண் மணற்பரப்பினில் கூடிக்காத்திருப்பம்

அலைகள் ஓய்ந்தபின் நீந்திக் களித்திட


எம்மூர்க் கடலிலே அலைகளும் ஓயுமே

மூழ்கிய முருகைக்கல் அணைக்கிப்பாலே

கடல்வற்றும் நேரம் வந்திடும் போது

கல்லணைக்கப்பால் அலைகள் மோதும்


கடலிப்பொழுது இரண்டாய்ப் பிளந்து

குட்டைக்கடலில் எங்கள் நீச்சல்

நீச்சல் முடிந்து வீடு திரும்ப

பாதைக் குறிப்பாய் ஆச்சி வீடு


அதைத் தாண்டிடவே ஒற்றைப்பனையடி

பனையடிப் பேய்க்குப் பலத்த பாட்டடி

பாட்டைத் தணித்து வீட்டினுள் காலடி

எங்கேபோ னாயென்று விழுமினிச் சணலடி


பாட்டு 52) ஊரும் நீரும்

எங்கெங்கும் ஊரிருக்கும்

ஊர்களுக்கும் பேரிருக்கும்

ஊர்களிலே வாழ்விருக்கும்

பலவற்றைக் கண்டிருக்கும்


ஊர்களிலே நீரிருக்கும்

நீர் கொடுக்கக் கிணறிருக்கும்

கிணறின்றேல் குளமிருக்கும்

குளமின்றேல் ஆறிருக்கும்


ஊரினிலே வீடிருக்கும்

வீட்டோடு வளவிருக்கும்

வளவினிலே மரமிருக்கும்

கொடியிருக்கும் பூவிருக்கும்


நீராடிக் களித்திருப்பர்

நீரள்ளிக் குடித்திருப்பர்

நீரினிலே சமைத்திருப்பர்

நீர்பாய்ச்சிப் பயிர் வளர்ப்பர்


நீரற்றும் போயிருக்கும்

எல்லாமே காய்ந்திருக்கும்

ஊர்வளமே தேய்ந்திருக்கும்

மழை வந்து உயிர் கொடுக்கும்


ஆறு அறிவு

தன் மையப்படுத்திச் சிந்திக்கும் மனிதர்களால் பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் ஓரறிவு முதல் ஆறறிவு வரை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.


ஆறறிவுள்ள மனிதனால், ஐந்தறிவு விலங்குகளினதோ அல்லது அதைவிடக் குறைந்த அறிவுள்ள உயிரினங்களின் தகவல் பரிமாற்றத்தை இதுவரை பகுத்தறிய முடியவில்லை. ஆனால் அந்த உயிரினங்கள், மனிதனின் தகவல் தொடர்பாடலைப் புரிந்து வைத்துள்ளதை நாம் பல இடங்களில் காண்கிறோம்.


பேசும் ஆற்றல் கொண்ட கிளி, மைனா ஆகிய பறவைகள் மனிதரின் மொழியை தெரிந்து கொண்டு பேசுகின்றனவே. மனிதரால் மிருகங்களின் ஒரு ஒலியையாவது சரியாகத் தொடர்பாடலில் உபயோகிக்க முடிகிறதா?


நாய்களில், பல வகை நாய்கள், பல்வேறு தேவைகளுக்கு மனிதரால் பயிற்றுவிக்கப்பட்டு பல செயற்கரிய வேலைகளை அவை செய்கின்றனவே.

இந்த நாய்கள் மனிதரின் கட்டளைகளை மிகவும் துல்லியமாகப் புரிந்து கொண்டு தம் பயிற்சித் துறையில் சிறந்து விளங்குகின்றனவே. என்ன வியப்பு!


இதே போல், வேறு விலங்குகளும் பயிற்றப்பட்டு சில சில வேலைகளுக்குப் பயன்படுகின்றன. மேலும், டொல்பின் போன்ற உயிரினங்கள் பயிற்றப்படாமலே சில வியத்தகு செயல்களைச் செய்திருப்பதைச் செய்திகளில் பல தடவை கேள்விப்பட்டிருகிறோம்.


இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, ஆறறிவுள்ள மனிதரா அல்லது ஆறிலும் குறைந்த அறிவுள்ளவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்களா அறிவிற் சிறந்தவை என்ற வினா எழுகிறதே.


ஆறறிவும் ஏழறிவும் மனைதனின் பார்வையிலே தான். மனிதனாக இலாமல் மாற்றி யோசித்தால் அறிவும் திறனும் நன்கு புலப்படும்.


மீண்டும் கூறுவதானால, தன்னை மையப்படுத்திச் சிந்திக்கும் மனிதர்க்குத் தாமே சிறந்தவரென்றும் மற்றவை தம்மை விட அறிவு குறைந்தவையே என்ற எண்ணம் தலை தூக்கியிருப்பதில் வியப்பொன்றுமில்லையே.


பாட்டு 51) கோயிலுக்குப் போனாயா

 கோயிலுக்குப் போனாயா

அமைதியற்ற நெஞ்சுக்கு

அதைத்தேடிக் கோயிலுக்கு

அமைதியாக வழிபடவே

ஆசையுடன் சென்றேனே


கோயிலுள்ளே பூசகராம்

இரைச்சலுடன் இறைவனிடம்

அறிந்திராத ஒலியெழுப்பி

அமைதியினைக் கலைத்துவிட்டு

அமளிதனை வழங்கினாரே


பேர் சொல்லி இறவனிடம்

அர்ச்சிக்கச் சீட்டெடுத்து

பவ்வியமாய் நிற்கையிலே

கோத்திரம் என்னவென்று

கேட்டொருவர் வருகையிலே

எனையறியா ஆண்டவனே

எனக்கு நீ அருளுவியோ


கண்ணை மூடி இறைவனிடம்

நீர் சொரிய வேண்டுகையில்

தன் கண்ணைச் சுழல விடும்

முகத்தை அண்மைப்படுத்துகின்ற

படக்கருவி இயக்கி நிற்கும்

படக்காரன் பார்வையில் நான்

அழுது கெஞ்சி ஆண்டவனை

வழிபடவும் வழியிலையே


தேடிச்சென்ற அமைதியினை

ஓட வைக்கும் அயலிருக்கும்

கோயிலுக்கு நானேனின்று

போகவில்லை என்று இன்னும்

சொல்லவோ நான் போபோபோ


மரியாதைக் கேடு

 

எம் மத்தியில் நிலவும் மரியாதை “ர்” பற்றி முன்னர் ஒரு கட்டுரையில் பார்த்தோம். அதாவது, ஆண்களின் பெயர்கள் “ன்” இல் நிறைவடையும் போது அந்த “ன்” ஐ “ர்” ஆக மாற்றும் ஒரு வேண்டாத பழக்கம்.


கந்தன் => கந்தர்

சம்பந்தன் => சம்பந்தர்


இது ஒரு தேவையற்ற பெயர்ச் சிதைப்பு அத்துடன் இந்தப் பழக்கத்தைத் தமிழும் தமிழரும் கைவிட வேண்டும் என்பதே அந்தக் கட்டுரையின் சாரம்.


இந்த மரியாதை “ர்” தவிர வேறு வகையான மரியாதைக் குறிப்புகளால் தமிழ்  சிதைவடையும் நிலையைச் சற்று நோக்குவோம்.

இஞ்சருங்கோ

தமிழர் குடும்பங்களில் கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் பெயர் சொல்லிக் கூப்பிடுவதைத் தவிர்ப்பதுண்டு. ஒருவரை ஒருவர் அழைக்க ஏதாவது ஒரு முறையைக் கையாள்வார்கள். குழந்தை பெற்றவர்களாக இருந்தால், குழந்தைகளின் முறையால் அப்பா என்றோ அம்மா என்றோ அழைப்பார்கள்.


பல இடங்களில், “இஞ்சர்” என்ற சொல் கணவனால் மனைவிக்குக் கொடுக்கப்படும் பெயர். அது “இங்கே பார்” என்பதன் சுருக்கமான பேச்சுவாக்கு. இந்த “இஞ்சர்” என்பது “இஞ்சரப்பா” என மாற்றம் பெற்று கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அழைப்பர். 


இஞ்சரப்பா = இஞ்சர் அப்பா


இந்த வகையில், இஞ்சர் என்று மனைவியைக் கணவன் அழைப்பார்.

ஆணாதிக்க சமூகத்தில், மேலதிக மரியாதையோடு, மனைவி கணவனை அழைக்க இஞ்சர் என்பதைப் பயன்படுத்தும் போது அது ஒருமையாகத் தொனிப்பதால் அதை மரியாதைப் பன்மைக்குள்ளாக்கி, “இஞ்சருங்கோ” என்று வந்து விடுகிறது.


இந்த “ங்கோ” எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

ஏவல் வினைச் சொற்கள் பன்மை வடிவில் “ங்கள்” விகுதி பெறுவது எங்களுக்குத் தெரியும்.

வா - வாருங்கள்

போ - போங்கள்

நில் - நில்லுங்கள்

கேள் - கேளுங்கள்

இது மருவிக் குறுகும்போது, பேச்சு வழக்கில் “ங்கோ” அல்லது  “ங்க” வடிவைப் பெறுகிறது.

வா - வாருங்கள் - வாருங்கோ - வாங்கோ - வாங்க

போ - போங்கள் - போங்கோ - போங்க

நில் - நில்லுங்கள் - நில்லுங்கோ - நில்லுங்க

கேள் - கேளுங்கள் - கேளுங்கோ - கேளுங்க


இவ்வாறே

இங்கே பார் - இஞ்ச பார் - இஞ்சர்

இங்கே பாருங்கள் - இஞ்ச பாருங்கள் - இஞ்சருங்கள் - இஞ்சருங்கோ

என்னங்க 

என்ன? - என்னங்கோ? - என்னங்க?

சரி - சரியுங்கோ - சரியுங்கோ - சரிங்க


அம்மா என்ன சொன்னீர்கள்? - இது மரியாதைக் குறைவாம்!

அம்மா என்னங்க சொன்னீர்கள்? - இது மரியாதை உயர்வாம்!


இது ஒரு தமிழ்க் கொலையே! 


தேவையற்ற இடங்களில் “ங்கள்” என்ற பன்மை விகுதியைச் சேர்த்தல் என்பது தமிழறிந்தோர் செய்யக்கூடாத செயல்.


எது, என்ன, யார், எங்கே என்பவற்றோடு “ங்க” சேர்த்து உபயோகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.



சில இடங்களில் வினைச் சொற்களில் பிழை நேர்கிறது.

போகிறார்கள் -> போகிறாங்கள் -> போகிறாங்க - இது கொஞ்சம் பரவாயில்லை. 


ஆனால்: போகிறேன் என்பதற்கு “போகிறேனுங்க” என்று சொல்லும்போது பெரும் பிழையே!

அவன் போகிறானுங்க” - இன்னொரு தவறு.


வினைச் சொற்கள் மரியாதை நோக்கில் பன்மை விகுதி பெற்று வருவதும் அது குறுகி, மருவி வருவதும் பரவாயில்லை. ஏனைய சொற்கள் இந்த மரியாதைப் பன்மையைத் தூக்கும்போது தான் மரியாதைக் கேடு வருகிறது.

ஒருத்தங்க

இப்பொழுதெல்லாம் ஒருவர் என்பதை ஒருத்தங்க என்று பரவலாகச் (தமிழக தொலைக் காட்சிகளில் பார்க்கலாம்) சொல்கிறார்கள். அதெப்படி வருகிறது?

ஒருவர் - ஒருத்தர்

இந்த ஒருத்தர் என்பதற்கு மரியாதை சேர்க்கும் முகமாக அதற்குப் பன்மை விகுதி!


அலங்கோலம்!


இலகுவாக ஒருவர் என்று சொல்லக் கூடிய சொல்லை, ஒருத்தர் என்று சொல்லி, அதிலிருந்து ஒருத்தர்கள் ஆகிப் பின்னர் அது மரியாதை “ங்க” சேர்க்கப்பட்டு உருவாகிறது ஒருத்தங்க! மிகக் கொடுமை!

அப்பாங்க

அவர் எனது அப்பா. இந்த வசனத்தைச் சிலர் இப்படிச் சொல்கிறார்கள்.

அவர் எனது அப்பாங்க. சில வேளை “அவருங்க என் அப்பாங்க” என்றும் பேசுகிறார்கள்.


வேறு: அது என்னுடையது - அது என்னுடையதுங்க.


நல்லது -> நல்லதுங்க

போக வேண்டாம் -> போக வேண்டாங்க

கூடாது -> கூடாதுங்க

இப்போ நேரம் பத்து மணி இருக்குமுங்க


தமிழைச் சரியாகக் கற்றறியாதோர் புழங்கும் இத்தகைய சொற்களால் தற்காலிகமாகப் பல சொற்கள் சிதைக்கப்படுவதை முளையிலேயே கிள்ள வேண்டும். இவை நாளாந்த பாவனைச் சொற்கள் என்றும், வட்டார வழக்கென்றும் மக்கள் ஆதரிக்கும்போது, தமிழுக்கான தீங்கு நேர்கிறது.

தூர நோக்கில் இவற்றின் பாதிப்பு பெரியதாக இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.


பல படைப்பாளிகள் கூட, இவற்றைத் தம் படைப்புகளில் உள்வாங்கித் தவறுகளை ஊக்கப்படுத்துவதும் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும்.