Friday, August 10, 2012
உபதேசம்
Tuesday, December 20, 2011
அங்காடித் தெரு
திராணி எனக்கில்லை
திரைக்கதை சாற்றும் உண்மை
திக்கற்றோர் துன்பலை
பல படங்கள் பார்த்து விட்டோம்
சில படங்கள் பதித்து விடும்
முத்திரை குத்தி
காஞ்சிவரம் அங்காடித்தெரு
பறித்ததோ நித்திரையை
நல்லதாய் ஒளிர்கிறது
வல்லரசாய் மிளிர்கிறது
வாய்கிழியக் கூவி விற்று
வக்கணையாய்ப் பதவி பெற்று
வந்ததெல்லாம் சுருட்டிக்கொண்டு
வண்ண வண்ண அரசுகளும்
வால்பிடிக்கும் அமைச்சுகளும்
வதைத்தெடுக்கும் ஊழியரும்
வலையமைப்பாய்த் தொடரும்
அநியாய அட்டூளியம்
அறுதியிட்டு நிற்கையேல்
அலைக்களியும் அப்பாவிச் சனம்
காவலரே கேவலமாய்க்
காசுக்கு வாய் பிளந்தால்
பாதகங்கள் செய்வோரைப்
பார்ப்பதுவும் யாரோ
பாவிகள் முறையீட்டைக்
கேட்பதுவும் யாரோ
உடனடியாய்த் தீர்வு தேட
இதுவொன்றும் மழையில்லை
தீர்வொன்றும் குடையுமில்லை
மனிதர்கள் மாறுவதும்
மனங்களை மாற்றுவதும்
மந்திரத்தால் நடந்துவிடா
மாற்றங்கள் தேவையென்றே
நற்குணங்கள் பிஞ்சிலேயே
போதிக்கத் தொடங்கிவிட்டால்
பாதி மக்கள் திருந்திடுவர்
நயமாக வாழ்ந்திடுவர்
Tuesday, December 13, 2011
பாடகர்கள் ஜெயச்சந்திரன் - மது பாலகிருஸ்ணன்
2. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு
3. மஞ்சள் நிலாவுக்கு
4. ஆடி வெள்ளி தேடி வந்து
5. எங்கெங்கும் அவள் முகம்
6. சித்திரச் செவ்வானம் சிவக்கக் கண்டேன்
7. தவிக்குது தயங்குது ஒரு மனது
8. ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்
போன்ற பல சிறந்த பாடல்களைப் பாடிய ஒரு அதிசயப் பாடகர் ஜெயச்சந்திரன். யேசுதாசிடம் இல்லாத ஒரு கவர்ச்சி அவர் குரலில் உண்டு. மெல்லிய சோகம் இழையோடும் பாடல்களை இவர் பாடும் போது அந்தப் பாடல்கள் பெரும் புகழடைந்திருந்தன.
இப்பொழுதெல்லாம் இவர் பாடல்கள் வருவதில்லை, வயதாகி விட்டது. இப்படிப்பட்ட பாடகருக்குப் பிறகு யார் வருவார் என்று ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடம் தீர்ந்த்து போல் ஒரு உணர்வு இந்தப் பாடலைக் கேட்டால் வரும். அந்தப் பாடல்,அபியும் நானும் படத்தில் உயிரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் பாடல்
வா வா என் தேவதையே - பொன்
வாய் பேசும் தாரகையே
படம் பார்க்கும் போது இது ஜெயச்சந்திரனின் இன்னொரு சிறந்த பாடல் என்று எண்ணிக் கொண்டிருந்தவேளை அதைப் பாடியவர் மது பாலகிருஸ்ணன் என்று அறிந்த போது அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டென்று நம்ப வைத்தது.
ஜெயச்சந்திரன் ரசிகர்களுக்காக இங்கே சில பாடல்கள்
http://mp3.tamilwire.com/p-jayachandran.html
Thursday, August 25, 2011
தாண்டவக்கோனே - கவர்ந்து போனாரே 2
கோடி சுகம் நாடிச் சென்றோம் தாண்டவக்கோனே
ஓடி ஒளிந்தே பறந்தோம் தாண்டவக்கோனே - நம்
தாயகத்தையே துறந்தோம் தாண்டவக்கோனே
பட்டழிந்தோம் கெட்டழிந்தோம் தாண்டவக்கோனே - நாம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம் தாண்டவக்கோனே
கட்டுக் காவல் கலைந்த நாட்டில் தாண்டவக்கோனே - அவர்
தட்டி பிரித்தே நுழைந்தார் தாண்டவக்கோனே
காடு பறி போனதண்ணே தாண்டவக்கோனே - சுடு
காடும் பறி போனதண்ணே தாண்டவக்கோனே
வீடு பறி போனதண்ணே தாண்டவக்கோனே - அட
நாடே பறி போனதண்ணே தாண்டவக்கோனே
ஏர் உழுத ஈர நிலம் தாண்டவக்கோனே - எங்கள்
ஏழை மக்கள் பாச நிலம் தாண்டவக்கோனே
கார் சூழ்ந்த கானகங்கள் தாண்டவக்கோனே - எல்லாம்
வேரோடே போனதண்ணே தாண்டவக்கோனே
மிச்ச சொச்ச சொந்த மெல்லாம் தாண்டவக்கோனே - அங்கே
பச்சைப் புழுவாய்த் துடித்தார் தாண்டவக்கோனே
பட்டி கட்டிக் கமஞ் செய்தார் தாண்டவக்கோனே - இன்று
பட்டிக்குள்ளே அடை பட்டார் தாண்டவக்கோனே
குஞ்சு குரால் பிஞ்செல்லாம் தாண்டவக்கோனே - அங்கே
பஞ்சையாய்ப் போனதண்ணே தாண்டவக்கோனே
கஞ்சிக்கே காவடியாம் தாண்டவக்கோனே - நாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே தாண்டவக்கோனே
வஞ்சகர்கள் காலமெல்லாம் தாண்டவக்கோனே - ஓர்நாள்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே தாண்டவக்கோனே
பொன்விளையும் புஞ்சை எல்லாம் தாண்டவக்கோனே - விரைந்து
வந்தமருங் கையிலோர் நாள் தாண்டவக்கோனே
Friday, August 19, 2011
தண்ணீர் போற்றுதும்
பருகத் தண்ணீர்
பாய்ச்சத் தண்ணீர்
சோறுகறி எல்லாம்
காய்ச்சத் தண்ணீர்
கழுவத் தண்ணீர்
குளிக்கத் தண்ணீர்
நீந்தத் தண்ணீர்
துவைக்கத் தண்ணீர்
பயிர் விளையத் தண்ணீர்
உயிர் வாழத் தண்ணீர்
எத்தனை அதிசயம்
எத்தனை அற்புதம்
பாரீர் பாரீர்
தண்ணீர் பாரீர்
தின்னும் தொண்டை அடைத்தால் -அதை
இழக்க வேண்டும் தண்ணீர்
மேலும் விக்கல் எடுத்தால் - அதை
தடுக்க வேண்டும் தண்ணீர்
பயன்பட மட்டுமா தண்ணீர்
பயப்பட வேண்டாமா
மூழ்கினால் இறப்பு
பேரலையாக அடிப்பு
கொதிநீராக அவிப்பு
எனக் கொல்லவும்
செய்யும் இவ் அப்பு
ஆக்க அழிக்க
மட்டுமா தண்ணீர்
அழகாய் இரசிக்கவும்
அழகு தண்ணீர்
மழையின் அழகு
மனதைக் கவரும்
வெள்ளம் பாய்ந்துள்
மனதை வருடும்
நதியாய்ப் பாய்ந்து
அழகாய் நடக்கும்
குளமாய்க் கடலாய்
மனதை நிறைக்கும்
அலையாய் அடித்து
மனதை வெளுக்கும்
நீர் வீழ்வாய் வீழ்ந்து
மனக் கர்வம் அடக்கும்
வான வில்லாய்த் தோன்றி
விண்ணை அளக்கும்
வண்ணம் கூடத்
தண்ணீர் தானே
திண்மமாய்த் திரவமாய்
வாயுவாய் வடிவெடுத்து
எடுக்கும் வடிவிலெல்லாம்
கொடுக்கும் கொடை தண்ணீர்
இறந்தவர் கடன்தீர்க்க
ஒரு முழுக்கு
கோவிலைத் தொடக்க
குட முழுக்கு
துடக்குக் கழிக்க
ஒரு முழுக்கு
மூடக் கொள்கைக்கும்
இல்லை நீ விலக்கு
தண்ணீர் போல் தாராளம்
யார்க் குண்டு ஏராளம்
ஆதலால் நீவிர்
தண்ணீர் போற்றுதும்
தண்ணீர் போற்றுதும்
-செயபால்
Saturday, July 23, 2011
தமிழ் கற்றோம்
தந்தை தாய் கைப் பிடித்துக்
கலவர முகத்துடனே
நாலு வயதில் வந்தோம்
தமிழ்ப் பள்ளியினை நாடி
வணக்கம் கூறி வரவேற்றார்
வடிவாக ஆசிரியரும்
வணங்கி வரம் பெற்றதுபோல்
கற்றோம் தமிழை நாம்
ஆனா முதல் அகேனம் வரையும்
கானா முதல் னானா வரையும்
காணாத பல எழுத்தும் வாயில்
பூராத புது ஒலியும்
பழகினோம் பார்த்தோம்
எழுதியும் வந்தோம்
மொழி மட்டும் படிக்கவில்லை
தமிழ்ப் பள்ளியில் நாம்
தமிழ்ப் பண்பாடும் பழக்கமும்
வழக்கமும் அறிந்தோம் நாம்
புலம் பெயர்ந்து வந்த நாம்
புறம்பாகத் தேர்ச்சி பெற்றோம்
புலவர் பலர் வளர்த்து விட்ட
என்றும் புதுத் தமிழ் மொழியில்
கற்றது நல் தமிழ்
நம் பெற்றோர்க்குத் தந்தது
நன் மக்கள் எனும் பட்டம்
பெருமையாகப் பேசிக்கொள்வர்
எம் பெற்றோர் எம்மைப் பற்றி
தமிழ் தெரிந்த பிள்ளைகள் எம்
பிள்ளைகள் என்று நாளும்
முழுநேரக் கல்வியோ
புகுந்த மொழி மூலம்
மூச்சு விடுவதுமே
அம்மொழியில் என்றிருக்க
இரண்டரை மணித்துளிகளில்
இனிதாய்க் கற்றுவந்தோம்
தாய் மொழியாம் தமிழ் மொழியை
ஆண்டுகள் பத்து
கடந்து விட்ட இந்நிலையில்
தமிழ் தெரிந்த தமிழராகத்
திரும்பிப் பார்க்கிறோம்
கடந்து வந்த பாதையை நாம்
அன்பான பெற்றோரே
ஆசிரியரே தோழர்களே
அனைவருக்கும் நன்றிகள்
வாழ்த்துகள் வணக்கங்கள்
செயபால் 2010
Saturday, July 16, 2011
தமிழ் கேட்டேன், ஒரு மாணவனாக
அப்பாவிடம் நான் அறிவுரை கேட்டேன்
பள்ளி செல்லும் ஆசையில் கேட்டேன் - தமிழ்ப்
பள்ளி என்ற சொல்லைக் கேட்டேன்
ஆனா ஆவன்னா முதலில் கேட்டேன்
அழகு தமிழில் பாடல் கேட்டேன்
சுவை மிகு கதைகள் நிறையக் கேட்டேன்
முத்தமிழ் மூலம் கலைகள் கேட்டேன்
அவ்வையின் ஆத்திசூடி கேட்டேன்
வள்ளுவன் தந்த திருக்குறள் கேட்டேன்
பாட்டுக்கொரு கவி பாரதி கேட்டேன்
பாரதிதாசன் பாடலும் கேட்டேன்
தொல்காப்பியத்தில் இலக்கணம் கேட்டேன் - பல்
ஆயிரமாண்டுப் பழமை கேட்டேன்
இலக்கியம் இயற்றும் யாப்புக் கேட்டேன்
யாப்பைக் காத்த சங்கம் கேட்டேன்
இன்னும் படிக்கும் ஆவலில் கேட்டேன்
உயர்தர வகுப்பும் உண்டெனக் கேட்டேன்
கற்றது கையளவாமெனக் கேட்டேன்
பென்னம் பெரிய கைகள் கேட்டேன்
விட்டது உலகளவாமெனக் கேட்டேன்
சின்னஞ் சிறிய உலகம் கேட்டேன்
அம்மா அப்பா வாழ்த்துக் கேட்டேன்
ஆசிரியர்கள் ஆசியும் கேட்டேன்
அன்புடன் இப்போ வணக்கம் கேட்பேன்
வாழ்நாள் முழுக்கத் தமிழைக் கேட்பேன்
செயபால் 2011
Saturday, December 04, 2010
ஆயிரத்தில் இரு வார்த்தைகள்
இது யூனியர் விகடனில் வந்திருக்கும் ஒரு செய்தியின் கடைசி வரி. எழுதியவருக்கு பாராட்டுகள். அற்புதமான வரிகள். செய்தி கீழே.
லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..
இந்த ஆறரைக் கோடியில் சில மக்கள் கோடியிற் சிலர் போல் இங்கே செயற் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.
தங்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்ட போலீசாரைப் பார்த்து, "உங்களுக்கு உணர்வே இல்லையா... யாருக்காக யாரை விரட்டுகிறீர்கள்...?" என்றனர் கோபத்துடன்.
- ஆயிரத்தில் ஒரு வார்த்தை
செய்தி கீழே.
கோவையில் தமிழ் உணர்வாளர்கள் ஆவேசம்
Friday, January 29, 2010
கவர்ந்து போனாரே
கோடி சுகம் நாடிச் சென்றோம்
ஓடி ஒளிந்தே பறந்தோம்
தாயகத்தையே துறந்தோம்
பட்டழிந்தோம் கெட்டழிந்தோம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம்
கட்டுக் காவல் கலைந்த நாட்டில்
தட்டி பிரித்தே நுழைந்தார்
காடு பறி போனதண்ணே - சுடு
காடும் பறி போனதண்ணே
வீடு பறி போனதண்ணே -அட
நாடே பறி போனதண்ணே
ஏர் உழுத ஈர நிலம்
ஏழை மக்கள் பாச நிலம்
கார் சூழ்ந்த கானகங்கள்
வேரோடே போனதண்ணே
மிச்ச சொச்ச சொந்தமெல்லாம்
பச்சைப் புழுவாய்த் துடித்தார்
பட்டி கட்டிக் கமஞ் செய்தார்
பட்டிக்குள் அடை பட்டார்
குஞ்சு குரால் பிஞ்செல்லாம்
பஞ்சையாய்ப் போனதண்ணே
கஞ்சிக்கே காவடியாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே
வஞ்சகர்கள் காலமெல்லாம்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே
பொன்விளையும் புஞ்சை எல்லாம்
வந்தமருங் கையிலோர் நாள்
Tuesday, January 19, 2010
முதற் கவிதை
என்று சொன்னாய் எனக்கு
வராத தேனோ அதற்கு
எதற்கு என்மேல் பிணக்கு
ஐந்தோ ஆறாகித் தொடர
கண்ணோர ஆறும் பெருக
எங்கே இருக்கிறாய் நீ
இங்கே இறக்கிறேன் நான்
சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் செய்யாது ஆண்பிள்ளை
வந்தினிச் சொல்லும் பல பொய்யை
வரா திருந்தாலும் பெருங் கவலை
Friday, January 08, 2010
Thursday, January 07, 2010
கனவா காவியமா
கரிகாலன் ஆண்ட தேசம்
புலிக் கொடிகள் பறந்த தேசம்
புலிப் படைகள் கண்ட தேசம்
கனவை நனவாக்கும் ஈழம்
பார்த்துப் பூரித்த தெல்லாம்
மனங் கொண்டோர் சூழ்ச்சியெல்லாம்
வழி பிறழ்ந்து அழித்தவர்கள்
ஈழத்தை உடைத்தவர்கள்
விண்ணுயர்ந்த எழுச்சி எல்லாம்
கண் முன்னே கவிழ்ந்ததுவுங்
புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே
Tuesday, November 17, 2009
என்ன தான் காரணம்
என்ன தான் காரணம்
எம் காலை வாரிவிட
என்ன தான் காரணம்
தமிழக அரசுக்கு
என்ன தான் காரணம்
தமிழனைத் தவிக்க விட
என்ன தான் காரணம்
ஈழ மாந்தர் இன்னுயிரை
இனவரக்கன் குடித்த போது
அழியு முயி ரதை விடவும்
ஆட்சியு மரச கட்டிலும்
உறவுஞ் சொகுசுமே
காத்திடப் போராட
என்ன தான் காரணம்
எம் காலை வாரிவிட
என்ன தான் காரணம்
தன்னை நம்பி வந்தோரை
தவிக்க விட்டுத் தப்பாமல்
தன் மானந் தன் சபதம்
தனக்கென்ற கொள்கை
யெல்லாம் விட்டுவிட்டு
முன்னே வந்த தானைத்
தலைவனெங்கே - அவன்முன்னே
தரங்கெட்ட தலைகள் நீங்களெங்கே
பத்தோடு பதினொன்றாய்ப்
பத்தாம் பசலிகள்
பதுங்கி ஒழித்திருந்தால்
பாதகமேயில்லை ஐயா
பத்துத் தலையிருந்தால்
பத்துத் தண்டவாளத்தில்
பத்து ரயில் மறித்திடும்
பலங்கொண்ட நீயின்று
தவிக்க விட்டதேனையா
தனிக்க விட்டதேனையா
மனச் சாட்சி உறுத்தலையோ
மனதாரப் பொய் பேச
மண்ணுக்குட் போன பின்பும்
மாறாத வடு வந்து
மண்ணாண்ட உன்னையும்
உன்மக்கள் தன்னையும்
மதிப்புக் கெடுத்திடுமே
மானங் கெட்டிடுமே
காலை வாரிக்
கோலை ஓச்சக்
கேவலமாய் இல்லையா
காரணந்தான் என்னையா
Thursday, October 15, 2009
நீரிழிவு
-------
அள்ளினாள் மனைவி
Wednesday, October 14, 2009
கண்ணனின் கீதையும், கண்ணீரில் ஈழமும்
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகும்
இதுவே உலக நியதி
இந்த வரிகள் எல்லாம் எங்களில் பலருக்கு மிகவும் பழக்கமாகி விட்ட கண்ணனின் கீதையின் சாராம்சத்திலிருந்து சில வரிகள்.அனேகமானவர்களின் வீடுகளில் இந்த வாசகங்கள் காணப்படுகின்றன. வெறும் கண்ணன், அருச்சுனன் படமாக வீடுகளின் சுவர்களில் தொங்காமல் பெரும் பிரபஞ்ச உண்மையை உணர்த்தி நிற்கும் அதி உன்னத வார்த்தைகள். இப்போது ஏன் நான் இவற்றை ஊருக்கு உரைக்க வேண்டும்?
ஈழத்தின் துயரங்களைத் தாங்க முடியாது அவதிப்பட்ட நேரங்களில் எங்கோ விறைத்துப் பார்த்து மனத்தினுள்ளேயே குமுறிய நாட்களில் சுவரில் தட்டுப்பட்ட படத்திலிருந்த வாசகங்கள் கவலையைக் குறைக்க உதவி செய்தன. எக் காலமும் பொருந்தும் இத் தத்துவம் எம் மனக் கவலையைப் போக்கும் எனபதில் என்ன சந்தேகம்?
வன்னியின் வதை முகாம்கள் இன்று யாருடையனவோ
அவை நாளை வேறொருவனுடையவையாகி விடும்
நாளை மறுதினம் அவை மற்றொருவனுடையதாகும்
இதை எண்ணும் போது நல்லதும் கெட்டதும் எப்பொழுதும் ஒருவருக்கே சொந்தமாகாது என்பதும் இன்று அழுவோர் நாளை சிரிப்பதும், இன்று கொக்கரிப்போர் நாளை மக்கரித்துப் போவதும் கண் கூடே தெரியும் போது தானகவே அமைதி பிறக்கிறது.
எத்தனை கண் கூடான உதாரணங்களைப் பார்த்து விட்டோம். நமது மண் கூட எத்தனை முறை எத்தனை கைகள் மாறி விட்டது. அத்தனை மாற்றங்களின் போதும், எத்தனை வதை முகாம்கள், சித்திர வதைக் கூடங்கள், துரோகிகள், முதுகில் கத்தி செலுத்துவோர் இருந்திருக்கக் கூடும். யார் யார் வதை பட்டு இருப்பார்கள். யார் யார் கொக்கரித்திருப்பார்கள்.
உலக நாடுகளையே உற்றுப் பார்த்தால் அண்மைக் காலங்களில் ஒரு ஐம்பது ஆண்டுகளாகத் தானே துன்பமில்லாத வாழ்க்கையைப் பல உலக நாடுகள் முன்னெடுத்து நிற்பதைப் பார்க்கிறோம். அதிலும் பல நாடுகளில் மக்கள் துயரம் இன்னமும் காணப்படுகின்றனவே. இவற்றைப் பார்த்துத் தான் நாம், நமக்குங் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடி நம்மைத் தேற்றிக் கொள்கிறோம்.
மன்னராட்சிக் காலங்களில் இன்னும் மோசமான வாழ்ககையைத் தானே அந்தந்த நாடுகளின் ஏதோ ஒரு வகை மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். உதாரணமாக சோழ மன்னராட்சிக் காலத்தில் பாண்டிய, சேர நாடுகளும் அதன் மக்களும் எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கக் கூடும். அதே போல், பாண்டிய, சேர மன்னர்கள் கோலோச்சிய காலங்களில் சோழர் மற்றும் இதர நாட்டு மக்களில் பலர் பல விதத் துன்பங்களில் தானே வாழ்ந்திருப்பர். எல்லாமே ஒரு காலச் சக்கரத்தின் பயணத்தில் கண்ணனின் வாசகங்களை அனுசரித்துச் சென்றவை தானே. காலச் சக்கரம் சில சம்பவங்களை வேகமாகக் கடந்து விடுகிறது, சில சம்பவங்களை மெதுவாகக் கடந்து விடுகின்றது.
உலகின் நாகரீகத்தில் சிறந்து விழங்கிய எகிப்து நாட்டைப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஆண்ட பேரரசர்களைப் பற்றி வாசிக்கும் போது இந்த நிலையில்லாமை மிகத் துல்லியமாக விளங்கி விடும். பெரும் பாலான பேரரசர்கள் 15 – 20 ஆண்டுகளுக்குத் தான் தம் ஆட்சிகளை வெற்றிகரமாக நடாத்தி யிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் பெரும் அழிவுகளுடன் தான் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இவற்றோடு ஒப்பிடும் போது நம் நாடு ஒரு 20 – 25 வருடங்களுக்காவது நல்ல ஆட்சியில் இருந்ததுவே.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது கண்ணனின் கீதை மொழியின் ஆழம் புரிகிறது. இன்று வதம் செய்யும் கொடியவர்களின் அந்தம் தெரிகிறது. வதம் செய்யும் கொடியவர்களின் கொக்கரிப்புக்குத் துணை போகும் மகா கொடியவர்களின் காலம் முடியும் நாள் கண்ணனின் கீதை வழி தெரிகிறதே. இவர்கள் வீழும் போது ஈழம் வாழும். வன்னி நிமிரும். நாளை நமதே.
Monday, July 27, 2009
"தமிழ்" நாடெனும் மாயை - 2
கல்வித்துறையும் தமிழகமும் மிகப் பிரபலமான ஒரு சர்ச்சைப் பொருள். அங்கே என்ன நடக்கிறது? கல்வித் துறை எப்படித் “தமிழ்” நாடெனும் மாயை நாட்டில் இருக்கிறது என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம்.
தாய் மொழியில் ஒரு குழந்தைக்குக் கல்வி அவசியம் என்பதைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரையப்பட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கின்றன. அது தமிழக மற்றும் இதர மாநிலங்களின் செவியிலேற மறுப்பது எல்லோருக்குந் தெரிந்த விடயமே. ஊருக்கு உபதேசம் உனக்கல்லடிப் பெண்ணே என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. இருந்தும் பார்ப்போம். தமிழ் நாட்டில், தமிழ் வழிக் கல்விக் கூடங்கள் அருகி வருவதும், ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் அதிகரித்து வருவதும் இப்போது நாம் கண் கூடாகக் கண்டு வரும் ஓர் அவல நிலை. தம் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களிற் படிப்பதால், தமது நிலை மற்றவர்களை விட ஒரு படி மேல் என்று நினைக்கும் பாமரர்கள் தம் பணத்தை யிழந்து தவிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆங்கில மொழிக் கல்விக் கூடங்களில் கற்பதால் நல்ல கல்வி கிடைக்கிறது என்றும் பலர் நம்புகிறார்கள். பல இடங்களுக்குச் சென்று உத்தியோகம் பார்த்து மேல் நிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தால் பலர் ஆங்கில வழிக் கல்வியை நாடுகிறார்கள். இதில் ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்காக ஆங்கில வழியில் நம் முழுக் கல்வியையும் ஏன் கற்க வேண்டும்? ஆங்கில அறிவை நன்கு வளப்படுத்த ஒரு மேலதிக பயிற்சியாகவே ஆங்கில வழிக் கல்வியை ஆரம்பக் கல்வி யிலிருந்தே கடைப் பிடிக்கிறார்கள்.
இது தவறான ஓர் அணுகு முறை. அரசனை நம்பிப் புருசனைக் கை விட்ட கதை போல் ஆகி விடும் இந்த அணுகு முறை. ஓர் பள்ளியில் பயிலும் 1000 பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் ஓர் உயர் பதவி பெறப்போகுந் தொகையினர் ஒரு 10 பேர் தான். மிகுதி 990 பேரும் ஆங்கில வழிக் கல்வியாற் சாதிக்கப் போவது நிறைய அல்ல. அத்தோடு, தம் தாய் மொழியாம் தமிழில் புலமை யற்றவர்களாக தூய தமிழைத் தெரியாதவர்களாக தமிழைத் தொலைத்த தமிழர்களாக சமுதாயத்தில் வலம் வரப் போகிறார்கள். இத்தகையவர்கள் வாழும் நாடு எப்படித் தமிழ் நாடு ஆகும். இது ஒரு மாயைத் தமிழ் நாடல்லவா? சாதிக்காமல் விட்டவை மிக அதிகமாக இருக்கலாம். எத்தனை யெத்தனை கவிச் சக்கரவர்த்திகளையும், கதாசிரியர்களையும், காவியங்களையும், நீதி நூற்களையும், இசைப் பாடல்களையும் இழந்து விட்டோமோ யார் கண்டது?
தமிழ் மொழிக் கல்வியையோ தமிழ் கற்பதையோ ஆதரிக்கதவர்கள், இன்னொரு வாதத்தையும் நம் மக்கள் முன் வைக்கலாம். அதாவது, நாம் தமிழர்கள், பிறந்து வளரும் சூழல் தமிழ் மக்கள் மத்தியில், இப்படியிருக்கையில் எங்களுக்குத் தமிழ் தானகவே வந்து விடும். அதை ஏன் தனியாகக் கற்க வேண்டும் என்பது தான் அந்த வாதம். ஆனால் தானாக வருந் தமிழ் சரியான தமிழல்லாது ஒரு கொச்சைத் தமிழேயென்பதைப் பலர் புரிந்து கொள்கிறார்களில்லை. தமிழ் கற்றவர்கள் பேசும் தமிழுக்கும் கல்லாதவர்கள் பேசும் தமிழுக்கும் இருக்கும் வேறுபாடு மிக அதிகம் என்பதை நாம் இலகுவில் காண முடியும். ஒரு சிறு உதாரணம். ஊரில் எல்லோரும் பாவிக்கும் சில சொற்களை நான் தவிர்க்கப் பார்த்த போது அந்த முயற்சி ஒரு திருவினையாகியது. “இஞ்ச வா”, “என்ர பந்து” போன்ற சொற்களை நான் சரியாகப் பாவிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தில், இங்கே என்றும் என்னுடைய என்றும் மட்டுமே என் கூட இருப்பவர்கள் மத்தியில் நான் தொடர்ந்து பாவித்து வந்தேன். இந்தப் பாவனை கொஞ்ச நாட்களில் பலரிடம் வந்து விட்டது. இப்படித் தூய தமிழை நாம் மக்கட் தமிழாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. அத்தோடு, 1980 வரையிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ் ஒலிபரப்பாளர்கள் பேசிய தமிழ் நல்ல தமிழ். அதன் மூலம், ஒலிபரப்புத் துறையும், அறிப்புத் துறையும் நல்ல தமிழில் இயங்க வழி கோலியவர்கள் அந்தக் கால அறிவிப்பாளர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
தமிழ் மொழியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாயமாகப் பிள்ளைகளுடன் தூய தமிழிற் தான் பாடம் நடத்த வேண்டும். “ஏன் இண்டைக்குப் பிந்தி வந்தாய்?” என்று கேட்பதை, “இன்றைக்கு” என்று பாவிக்க வேண்டும். இவை ஆசிரியர் பயிற்சியில் முதற் பாடமாகச் சொல்லித் தர வேண்டியது. சமுதாயத்தை உருவாக்குவதில் முதலாவது இடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். இவர்கள் காட்டும் வழியில் தான் நாளைய மக்கள் தோன்றுகிறார்கள். இந்த ஆசிரியர்கள் சரியாகவும் தரமாகவும் தமிழைக் கற்றுக் கொடுத்தால் தமிழ் நாடென்பது மாயை இல்லாமல் உயிர்ப்போடு வாழுமே. இது தமிழ் நாட்டிற்கு மட்டும் பொருந்துவது அல்ல. எங்கெங்கே எல்லாம் தமிழ் அமுலாக்கம் தேவைப் படுமோ அங்கெங்கே யெல்லாம் இந்தக் குறைபாடுகள் இல்லாம பார்த்துக் கொள்ள வேண்டும்.
Thursday, July 23, 2009
"தமிழ்" நாடெனும் மாயை - 1
அரசு:
முதலில் தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்குகிறாதா அல்லது தமிழை இழக்கிறதா என்பதை நோக்குவோம்.
தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். அந்த ஆட்சி மொழி எவ்வளவுக்கு ஆட்சி செய்கிறது என்பது சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய விடயம். ஆட்சி எங்கே தொடங்குகிறது? அது சட்ட சபையுடன் ஆரம்பிக்கிறது. தமிழ் நாடு சட்ட மன்றத்தில் ஓரளவு தூய தமிழில் பேசுகிறார்கள் மன்றும் தமிழில் இயங்குகிறது, மகிழ்ச்சியே. சட்ட மன்றத்திற்கு வெளியே வந்தால்? தமிழ் நாட்டு அரச உயரதிகாரிகளில் 90 வீதமானவர்களுக்குச் சரளமாகத் தமிழில் எழுத, வாசிக்க மற்றும் பேசக் கூடிய புலமை இல்லவேயில்லை. இந்த உயரதிகாரிகளிற் பலர் தமிழ் மொழி மூலம் தமது கல்வியை ஓரளவிற்கேனும் கற்றவர்களோ அல்லது தமிழை ஒரு பாடமாகத் தம் பாடவிதானத்தில் கொண்டவர்களோ அல்லது தமிழில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களோ இல்லை. இன்னும் பார்த்தால், இவர்களிற் பலர் இந்தியாவின் பிற பாகங்களில் இருந்து வந்த பிற மாநிலக்காரர்கள். இவர்கள் தமிழ் மொழிக்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்ப் புலமை குறைந்த தமிழர்களும், தமிழ்ப் புலமையற்ற பிற மாநிலக்காரர்களும் அதிகாரிகளாகப் பதவியேற்று எப்படித் தமிழ் மக்களின் குறை நிறைகளை நிவிர்த்தி செய்ய முடியும்? தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளை, சிக்கல்களை இப்படிப்பட்ட அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள நல்ல தொடர்பு மொழி அவசியமல்லவா?
மொழி புரியாத சிக்கலில் ஏற்படும் விளைவுகள் தான் எல்லோரும் அறிந்ததே. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும் சப்பானும் மோதிக்கொள்ள நேர்ந்தது கூட ஒரு தகவல் தொடர்பின் தவறான புரிதலே என்பது எல்லோருக்குந் தெரியும். இருந்தும், எங்கள் நாடுகளில் யார் மக்களைப் பற்றி அதிகம் பொருட்படுத்துகிறார்கள். அதை விடுவோம். தமிழ் நாட்டு அதிகாரிகளை மீண்டும் பார்ப்போம்.
அதிகாரிகள் ஆங்கிலத்தில், இந்தியில் அல்லது அவர்களது தாய் மொழியில் புலமையுடையவர்களாக இருப்பார்கள். தமிழக மக்களோ தமிழில் கருமம் ஆற்ற நினைப்பார்கள். இந்நிலையில், அதிகாரிகள் அரை குறைக் கொச்சைத் தமிழில் கடமையாற்ற முனைவார்கள். அதிகாரிகளின் கொச்சைத் தமிழைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும் பொது மக்களோ அரை குறைக் கொச்சை ஆங்கிலத்திற்கோ வேறு மொழிக்கோ தாவ முயல்வார்கள். தமிழர் தமிழுடன் ஓரிரு ஆங்கில வார்த்தகளையும் சேர்த்துத் தம் கருமம் பெறுகையில், தமிழில் ஆங்கிலம் கலப்பது தவிர்க்க முடியாததாகின்றது. உதாரணமாக, குமார் சார் என்றும் குமார்ஜி என்றும் தொடங்கி, லெப்ட், ரைட், கலர் போன்ற சொற்களுடன் தமிழர் ஆரம்பிப்பார். இதைப் பார்த்த அரச உத்தியோகத்தர்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுதலான ஆங்கில வார்த்தைகளையோ மற்ற மொழி வார்த்தைகளையோ புகுத்த முனைவார். இவ்வாறு சீரழிவு தொடர்கிறது. அதிகாரியினதும் இவரைப் போன்றவர்களினதும் கொச்சைத் தமிழோ தமிழுக்குப் புது வடிவம் கொடுக்க முனைந்து ஒருவகை நாகரீகத் தமிழாக உருவெடுக்கிறது. தமிழும் புது வடிவம் பெறும். அந்த வடிவத்தை அழகு என்று எண்ணும் அப்பாவித் தமிழரும் அதைப் பின்பற்றித் தமிழின் அழிவில் பங்கு பெறுகிறார்கள். நல்ல தமிழைப் பேசுவோர்கள் நாட்டுக் கட்டைகள் அல்லது பண்டிதர்கள் என்று பழிக்கப்பட்டு இழிவு படுத்தப்படுகிறார்கள்.
ஆங்கிலம் போன்ற வேறு மொழிகளில் கலந்து கொள்ளும் பிற மொழிக்காரர்களின் தூய்மையற்ற பாவனைகள் மூலம் அந்த மொழிகளைப் பிழையாகக் கையாள்கிறார்கள். ஆனால் அம் மொழிகளின் சொந்தக்காரர்கள் தம் மொழித் திறைமையாலும் மொழிப் பற்றாலும் தம் மொழி கொச்சைப் பட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தமிழிலும் தமிழரிலும் காணப்படாத ஒரு குறைபாடு. இது பற்றிப் பின்னர் பார்க்கலாம்.
தமிழ் கொச்சைப் படுத்தப் படும் இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசு, தனது தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்கச் செய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும். முதலில், அரச அதிகாரிகள் நியமனத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளைச் செப்பனிட வேண்டும். தமிழ் நாட்டில் கடமை புரிய வரும் ஒவ்வொருவரும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயமாக்க வேண்டும். மத்திய அரச நியமனமானாலென்ன, மாநில அரச நியமனமானாலென்ன தமிழகத்தில் கடமை புரிவோருக்குத் தமிழிற் தேர்ச்சி இருக்க வேண்டும் என்ற முன் நிபந்தனையை மிகக் கடுமையாக அமுல் படுத்துவதற்கு தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு அதிகாரம் இல்லையென்றால், அந்த அதிகாரத்தைப் போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் 60 களில் இந்தி எதிர்ப்பில் காட்டிய வீராப்பை இத்தகைய விடயங்களிலும், தமிழ் மொழி வழிக் கல்வியையும் தமிழ்க் கல்வியையும் கண்டிப்புடன் அமுலாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும். இப்பொழுதாவது அக்கறையுடன் செயலாற்ற வேண்டும்.
பின்னர், இந்தத் தமிழ் நாடெனும் மாயை கல்வித் துறையில் எப்படிச் செயலாற்றுகிறது என்பதைப் பார்ப்போம்.
Wednesday, May 27, 2009
விஜய ராஜேந்தரின் உருக்கமான பாடல்
ராஜேந்தருக்கு நன்றி.
Monday, May 18, 2009
பேரிடி தான் வீழ்ந்ததோ
பேரிடி தான் வீழ்ந்ததோ
பெருந் துன்பஞ் சூழ்ந்ததோ
சூதர்கள் சூழ்ச்சிகளால்
சுய வுரிமை செத்ததோ
எலி வீடே யானாலும்
தனி வீடே யாமென்னும்
தமிழீழ மண் ணிங்கே
குருதியிலே முழுகியதோ
தன்னிறைமை தன்னையின்று
மனித நேயம் பேசிக் கொண்டு
மனித நேயம் சாகடித்த
மனித ரல்லா நாடரங்கில்
மனித மேமாண் டதின்று
பாண்டவர் படாத பாடா
யூதர்கள் படாத கேடா
காதகர்கள் காரியங்கள்
கவிழ்ந்து விழுங் காலம் வரும்
மாண்ட தொகை மாந்தருயிர்
மீண்டும் எழுந்தே யுயர்
மானமிகு மண்ணில் வர
மாதவம் நாம் செய்திடுவோம்
மறவர்களைச் செதிக்கிடுவோம்
Monday, March 30, 2009
ஈழத் தமிழரும் இனவழிப்பும்
ஆக்கிர மிப்புச் சூழ்ச்சியும்
இனவழிப்புப் போர்வெறியும்
ஈனக்கொலை காரரும்
உன்மத்தக் கயவரும்
ஊளயிடும் நரிகளும்
எக்காளப் படைகளும்
ஏவல் செய் நாய்களும்
ஐந்தாம் படைப் பேய்களும்
ஒற்றுமை மறுக்கவும்
ஓர்மமாய்க் கொல்லவும்
ஔவை சொன்னதல்ல
இஃதிங்கு தினந் தினமே
வலியோரே ஆழ்வதுவும்
எளியோரை அழிப்பதுவும்
புரையோடிய புண்ணாக
புதைந்திருக்கு மனிதத்தில்
பாகுபாடு பார்த்து நிற்கும்
பாவி மனிதன் பாசறையில்
செப்பட்டை அடியுடனும்
செங்குருதி வெறியுடனும்
உச்சக் கட்டச் செயல் வடிவம்
அப்பட்ட அ நாகரீகம்
இனவழிப்பு இனவழிப்பு
சிவப்பு இந்தியர்
சிதைந்து போனதும்
கறுப்பு அடிமைகள்
கண்ணீரில் வாழ்ந்ததும்
கன நூறு வருடக்
கல்லினும் திண்ணிய
கனவான் மார்களின்
கைங்கரியம் அன்றோ
ஏனென்று கேட்க
ஆருமே இல்லாது
கெட்டழிந்து போனதன்றோ
கெட்டழிந்து போனதன்றோ
அன்று தொட்டு
இன்று வரை
தொன்று தொட்ட
தந்திரமாய்த்
தொடர்ந்து வருமழிவரக்கன்
கையிலின்று அகப்பட்டுச்
சின்னா பின்னமாகச்
சிதறி ஓடுது
சன்னமும் குண்டும்
சரமாரியாய் வரவதில்
சிக்கிச் சாகுது
ஈழத் தமிழினம்
வாழத் தவிக்குது
வாழ்ந்த தமிழினம்
வெட்டை வெளியில்
அட்டை போட்டு
அடக்கி அழிக்குது
சிங்கள அரசு
அழிந்து போகுது
அழியாத் தமிழினம்
ஏனென்று கேள்வி கேட்க
ஏராளம் பேருண்டு
கேட்டுக் கொள்வதறற்கு
ஒன்றேனுங் காதுண்டோ
தந்தை மண்ணாம் தமிழகம்
கை கொடுக்கத் துடிக்கையில்
விந்தை மண்ணை ஆளும் கை
விரல் காட்டித் தடுக்குது
புலம் பெயர்ந்த சொந்த பந்தம்
பலம் கொண்டு நித்த நித்தம்
தினந் தோறும் போராட்டம்
நிற்காத ஆர்ப்பாட்டம்
பல வடிவில் செய்து கொண்டு
மன்றிலெங்கும் நீதி கேட்பு
மனுக்களெல்லாம் தள்ளுபடி
இன்று எளியோன்
நாளை வலியோன்
என்று நிலை மாறி விடும்
எம் துயரும் மாறி விடும்
மாறி விடும் அந்நேரம்
நாம் செய்யோம் இனவழிப்பு
செய்திடுவோம் புதிய பூமி
மானிடத்தை உயர்த்திப் பாடி
Wednesday, March 04, 2009
பிடி சாபம்
அரச படையினர் தாயைக் கட்டி வைத்து அவர் கண் முன்னாலாயே 14 வயதுச் சிறுமி மேல் பாலியல் தாக்குதல்.
இதற்கு நீதி கேட்டமைக்காக,அடுத்த நாளே, அதே அரச படை வீணர்களால் அந்தத் தாய் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப் பட்டார். இந்தக் கொடுமையை அந்தப் பெண்ணின் கணவனை அடித்துக் கட்டி வைத்து விட்டு அவர் கண் முன்னே செய்தார்கள்.
சன நாயக நாடொன்றில் இது நடந்தால் நீதி மன்றில் நீதி கிடைக்கும்.
சன நாயகமற்ற நாடென்றால், அங்கும் கூட, தலை போயிருக்கலாம், தண்டனை கிடைத்திருக்கலாம்.
ஆனால் இது நடந்திருப்பதோ சிறீ லங்காவில். இங்கே செய்தவன் சிங்களவன், செத்தவன் தமிழன் என்றால் என்ன தீர்ப்பு?
குறைந்த பட்சம் லங்கா ரத்னா விருது கிடைக்கலாம்.
என்ன கொடுமை இது?
எந்த யுகத்தில் நாம் வாழ்கிறோம்?
5000 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் விட்டோமா?
நாமும் அந்த யுகத்துக்கே போய் எம் தீர்ப்பை வழங்குவோம்.
இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கும், அவர்களுக்குப் பொறுப்பாக இருக்கும் அனைத்து மட்ட உயரதிகாரிகளுக்கும் உயர்ந்த பட்சத் தண்டனையாக எது பொருந்துமோ அது வந்து சேர நம் சக்தியெல்லம் திரட்டிச் சாபமிடுவோம். பிடி சாபம்.
இந்தக் கொடுமையை இன்னும் விசாரிக்காமலிருக்கும் அந்த அரசிற்கும் சாபம். பிடி சாபம். நாசமாய்ப் போவீர்களாக.பிடி சாபம்.
பிடி சாபம்.
செய்தி இங்கு காண்க
சாரம் இதோ:
STF kills mother of raped girl in Batticaloa
[TamilNet, Tuesday, 03 March 2009, 11:04 GMT]
Sri Lankan Special Task Force (STF) commandos who had sexually assaulted a 14-year-old Tamil girl Sunday in Vellaave’li police division, again went to the girl’s house Monday between 8:00 p.m and 9:00 p.m where they assaulted her father first and then severely tortured her mother before killing and dumping her body in the well as punishment for complaining against the STF with Batticaloa police for raping her daughter. The father was held bound while the commandos beat the mother to death, the neighbors said.
Tuesday, February 03, 2009
கலைஞரே காணும்
கலைஞரே காணும்
பொறுத்தது போதும்
பொறுத்தது போதும்
பொங்கியெழு மறத்தமிழா
பொறுத்தம னோகரனை
நொருக்கச் சொன்ன மு.க.
நீர் பொங்குவதெப்போ
பொறுப்பதே உம் பிழைப்போ
பொறுத்துப் பொறுத்துப்
பூத்த கண்ணால்
பூஞ்சிப் பார்த்தும்
புரியவில்லை
மு.க. நிலை - தி.
மு.க. நிலை
வெறுத்துப் போனோம்
வெல வெலத்துப் போனோம்
மு.க., தி.மு.க.
இன்று தமிழீழம்
நாளை தமிழகம்
என்று நிரல்
நீளும் போது
எங்கு போவீர்
என்ன செய்வீர்
மு.க. முழங்காத தமிழா
நாக்கால் வழங்காத பொருளா
கைப்புண்ணுக்குக் கண்ணாடியா
கலைஞருக்கே ஏடெழுதவா
காணும் ஐயா
ஓடலும் சாதலும்
காணும் ஐயா
தமிழன் மாய்தலை
காரும் ஐயா - உம்
பலம் கொண்டு
சேரும் ஐயா
பெருஞ் சிறப்புமக்கு
உம் கதவை நாமும்
உம் காதை ஊரும்
இன்னொரு முறை தேடாது
உம் புகழும் பெயரும்
உருக்குலைய முன்னே
உன்னி எழுந்து விடும்
உத்வேகம் பெற்று விடும்
உம்மால் முடியா விட்டால்
ஒதுங்கி வழி விடும் - உம்
இளைய தலைமுறையை
உசுப்பி அனுப்பிடும்
முன்னால் நின்று கொண்டு
தானும் செய்யான்
தள்ளியும் நில்லான்
என்றெல்லாம் தூற்றமுன்
செய்பவனைச் செய்ய விடும்
வெந்த புண்ணை ஆற விடும்
============================
காணும் = கண்டு கொள்ளும்
காணும் = போதும்
============================
பின்னூட்டச் செருகல்:
உம் மக்களுக்கு மந்திரி
பதவியில்லையா 'எந்திரி'
ஈழ மக்களுக்கு எவ்வொரு
நாதியில்லையா தந்திரி
நீ தந்தியடி தபாலடி
தமிழுலகம் தயாரடி
Tuesday, January 27, 2009
இசை - மொழி – தமிழ் (முழுவதும்)
இசை பற்றிச் சிந்திக்கும் போது அதன் தோற்றமும் வளர்ச்சியும் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?
மனித இனம் சிந்திக்கத் தொடங்கிய பொழுது அவனோடு இருந்த பறவைகளும் மிருகங்களும் இசையின் தோற்றத்திற்கு உதவியிருக்க வேண்டும். தற்போதிருக்கும் கிளி, மைனா, குயில் போன்ற பறவைகள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கலாம். இப் பறவைகள் எழுப்பும் இனிய ஒலியே மனித இசையின் முதல் உந்து சக்தியாக இருந்திருக்கலாம். கிளியின் இனிய கீக்கீச் சத்தமும், குயிலின் இனிய கூக்கூச் சத்தமும், மைனா போன்ற பறவைகளின் இனிய ஒலிகளும் இசைக்குரிய வித்தாக மனித சிந்தனையில் உருவாகியிருக்க வேண்டும். பறவைகளின் ஒலி காதுக்கு இனிமையாகவும் சிந்தைக்கு இதமாகவும் இருப்பதை மனிதன் உணர்ந்த போது, தானும் அது போன்ற ஒலிகளை எழுப்பி மனித இசையைத் தொடக்கி வைத்திருக்க வேண்டும்.
ஓய்வு நேரங்களில் மனிதன் இவ்வகை ஓசைகளை எழுப்பி அதை மெருகூட்டி இசையை வளர்க்கத் தொடங்கியிருக்க வேண்டும். பறவைகளின் சத்தங்கள் இசையாக ஒலித்த போது அதில் செய்திப் பரிமாற்றமும் உணர்ச்சி வெளிப்பாடும் இருந்ததை மனிதன் கவனிக்கத் தவறியிருக்க மாட்டான். மனிதனின் வெவ்வேறு உணர்ச்சிகளும் அவனது ஒலி இசை மூலம் வெளிப்பட்டு இசைக்கு மெருகு சேர்த்தன. மகிழ்ச்சி, துயரம், கோபம், தனிமை போன்ற உணர்ச்சிகளின் இசை வடிவ வெளிப்பாடு இசையில் வகைகளைக் கொண்டுவரத் துணை புரிந்தது.
மனிதனின் கூர்ப்பின் ஒரு கட்டத்தில், அவன் மொழியொன்றைப் பேசத் தொடங்கிய போது, அந்த மொழியின் சொற்களை இசையிற் போட்டு மனித உணர்ச்சிகள் வெளிப்பட்ட போது இசைக்கு ஒரு புது வடிவம் கிடைத்திருந்திருக்கிறது. இசைக் கருவிகளிலிருந்து ஒலிக்கும் இசையாக வெளிப்படும் மனித உணர்ச்சிகள் சொற்களைக் கொண்டு ஒலிக்கும் போது பாடல்கள் இசைக்கத் தொடங்கின. இசைக்காக மொழியில் உருவான பாடல்களும், பாடல்களுக்காக உருவாகும் இசை வடிவங்களும் ஒன்றையொன்று வளர்க்கத் தொடங்கின.
சொற்களும் சொற்றொடர்களும் இசையோடு ஒலிக்க வேண்டுமானால், சொற்றொடர்கள் ஒரு ஒழுங்கில் கோர்க்கப்பட வேண்டுமென்ற கட்டாயம், பாட்டு உருவாக்கத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற அடுத்த கட்ட நிலைக்கு மொழியை எடுத்துச் சென்றது. ஓசை நயம் குன்றாமல் பாடுவதற்கு ஒலி நயத்தோடு கூடிய பாட்டுகள் உருவாகி அவை இசையை மெருகூட்டிய அதே நேரத்தில் மொழியின் வளர்ச்சியில் பாட்டு இயற்றும் துறை உருவாக அவை காரணியாக இருந்தன.
மனிதன் இசைத்தான். அதில் மொழியை இழைத்தான். இசையில் இழைக்கப்பட்ட மொழிக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்து அதன் வளர்ச்சிக்கு அது துணை புரிந்தது. ஒலியாய்த் தொடங்கிய இசை பாட்டாகிப் பல்கிப் பெருகியது.
மனித வளர்ச்சி பல்லாயிரம் வருடங்களூடாகப் பயணிக்கும் போது, மனிதன் பூகோள ரீதியாகப் பிரிந்து பரவத் தொடங்கினான். பிரிந்து பரவிய மனிதன் தான் சென்ற திசைகளில் தன் மொழியையும் திரித்து வழங்கிக் கால ஓட்டத்தில், வெவ்வேறான மொழிகளின் தோற்றத்திற்கும் வித்திட்டான். ஆனால் எல்லா மொழிகளிலும், மனிதனின் இசை வளர்ச்சி தொடர்ந்து கொண்டேயிருந்தது.
இசைக்கும், மொழிக்கும் முடிச்சுப் போடுவது பொருந்தாதென்று சில கருத்துகளும், இசையின் இனிமை மொழிகளில் தங்கியுள்ளது என்பது போன்ற சில கருத்துகளும் இங்கே நிலவுகின்றன. இசையின் இனிமையத் தீர்மானிப்பது இசையக் கேட்போரே. கேட்பவரின் முடிவைத் தீர்மானிப்பது அவர் இது நாள் வரை பழகிய இசை வகையறாக்கள். அவரது இசைப் பரிச்சியம் சாதாரணமாக அவரது தாயின் தாலாட்டில் தாய் மொழியில் தொடங்குகிறது. ஆக, இசைப் பரிச்சியம் தாய் மொழியில் தொடங்குவதையும் அதையே ஒருவர் முதலில் பழக்கப் படுத்தியிருப்பதையும் நாம் இங்கு காண்கிறோம். இதுவே இசை நுகர்வோரின் முடிவைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்கும். தனக்குப் பழக்கமான மொழியில் உரையாடும் போது கிடைக்கும் வசதி பழக்கமல்லாத மொழியில் உரையாடும் நேரங்களில் கிடைப்பதில்லை என்பது எங்களில் பலருக்குப் புரிந்த உண்மை. சொந்த மொழியின் இலகு நடையும் இனிமையும் வசதியும் வந்த மொழியில் கிடைக்க முடியாத ஒன்று. இதுவே சொந்த மொழிப் பாடல்களை நுகர்வதிலும் எற்படும் உணர்வாகும்.
ஒருவரது தாய் மொழியல்லாத மொழியில் இருக்கும் எப்பேர்ப்பட்ட இனிமையான பாட்டும் அவரது தாய் மொழியில் இருக்கும் ஒரு சாதாரணப் பாட்டை விட அவருக்கு இனிமையாக இருக்க முடியாது. ஏனென்றால் அந்தப் பிற மொழிப் பாடலில் அவருள்ளே புகுந்து கொள்வது அப் பாடலின் இனிமையின் ஒரு பகுதியான இசை மட்டுமே. அப் பாடலின் மொழியில் கலந்திருக்கும் கவிச் சுவை அவரைச் சென்றடைவதில்லை. அதனால் அப் பாடலின் முழு இனிமையும் அவருக்குக் கிடைக்காது என்பது வெளிப்படையே.
அந்தப் பாடலின் இசையின் இனிமை அவரைச் சேர்வதற்குக் கூட ஒரு காரணம் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்திய உப கண்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்திய மொழிகளின் அனேகமான எல்லாப் பாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஓசை அடிப்படையிலிருந்து இசைக்கின்றன. ஆகவே, எந்த ஒரு இந்தியப் பாடலின் இசை வடிவமும் எந்த ஒரு இந்தியருக்கும் கேட்கக் கூடியதாக இருப்பது இயற்கையே. இந்த அடிப்படை இசை இந்தியப் பாடல்களிலும், மத்திய கிழக்குப் பகுதிப் பாடல்களிலும் இருப்பதை நாம் காணலாம். அதனால் மத்திய கிழக்குப் பகுதி மக்களின் இசை கூட நமக்குள் தாக்கம் ஏற்படுத்துவது இலகுவே. இதன் அனுபவம் பலருக்கு ஏற்படடிருக்கலாம். ஒரு அன்னிய நாட்டில் தனித்து வசித்த பலர், அரேபிய மொழிப் பாடல்களைக் கேட்கக் கிடைத்திருந்தால் அது ஒரு தனி அனுபவம். இதுவே ஒரு சீன மொழிப் பாடலாக இருந்திருந்தால் அதனால் ஒரு தாக்கத்தை எற்படுத்தியிருக்க முடியாது. இன்னும் அரேபியா - இந்தியா என்பவற்றின் தொடர்பு, வரலாறு சார்ந்த ஒரு துறை. அதை விட்டு விட்டு நம் இசைப் பார்வைக்குத் திரும்புவோம்.
இப்பொழுது, தென்னிந்திய இசையாகப் பலர் படிப்பதும் பயிற்சி எடுத்துக் கொள்வதுமான கர்நாடக இசையைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இந்தக் கர்நாடக இசையில் வடமொழியிலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட பாட்டுகள் மட்டுமே முக்கிய இடம் வகிக்கின்றன. தென்னிந்திய மற்ற மொழிகளை விட தெலுங்கும் வடமொழியும் முதன்மைப் படுத்தப் பட்டிருக்கும் காரணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.
இந்திய வரலாற்றை அறிந்தவர்களுக்கு அந்த வரலாற்றில் வட மொழியின் தாக்கமும் ஆதிக்கமும் வேதங்கள், புராணங்களூடாக வலுப்பெற்றிருப்பதைக் காண முடிந்திருக்கும். வடமொழி மக்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பரந்து வாழ நேர்ந்த காலங்களில், வட மொழியின் தாக்கமும் விரிந்து பரவத் தொடங்கியது. பரந்து கிடந்த பிராந்திய மொழிகளிலும் அம் மொழியினரின் இசை வடிவிலும் வட மொழி கொஞ்சங் கொஞ்சமாகக் கலக்கத் தொடங்கியது. அந்தக் காலத்தின் குருகுலக் கல்வி முறை, வடமொழிப் பாவனையை ஆதரித்துக் காத்த மன்னராட்சி முறை என்பன வடமொழியின் தாக்கம் தடையின்றிப் புகுந்து விளையாட உதவியாக இருந்தன. உள்ளூர் மக்களின் அறியாமையாலும், மன்னர்களின் பொறுப்பற்ற சில செயற்பாடுகளாலும் கலை, கல்வி போன்றவற்றில் முன்னிலையைத் தக்க வைத்த வடமொழியாளர்கள் தம் மொழியின் ஆதிக்கத்தை உறுதியாகவும் வேகமாகவும் உள்ளூரில் வளர்த்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் தம் மொழியின் இருப்பை விரும்பி உள்ளூர் மொழி வளர்ச்சியையும் அதிலிருந்த கலை வடிவங்களையும் தலையெடுக்காமலும் பார்த்துக் கொண்டார்கள். இந்தக் கைங்கரியத்தில் அவர்களுக்குப் பெரிய உதவியாக விளங்கியது அக்கால மக்களின் மதம் பற்றிய நம்பிக்கைகள். இந்த மத நம்பிக்கையையே அடி நாதமாகக் கொண்டது வட மொழியும் அதன் பாடல்களும். இதனால், வடமொழியும் அது சார்ந்த இசைவடிவும் மிக இலகுவில் மதப் பலவீனர்களாக இருந்த பாமரப் பிராந்திய மக்களிடையே திணிக்கப் படக்கூடியனவாக இருந்தன.
மன்னராட்சி நடந்து கொண்டிருந்த கால கட்டங்களில், எல்லா நாடுகளுமே அடிக்கடி வேறு வேறு நாட்டு மன்னர்களின் ஆட்சியின் கீழ் வருவதும் மாறுவதுமாக இருந்தன. இப்படியாக மாறி வரும் மன்னர்கள் தத்தம் மொழியின் பால் ஆதரவாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இவ்வாறாக ஒரு மொழியின் மேல் இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவது இயல்பாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவற்றில் அகப்படாமல் எம்மொழி வந்தாலும் அதற்கெல்லாம் ஈடு கொடுத்து மன்னர்களினதும் மக்களினதும் மத நம்பிக்கையை ஊடகமாக வைத்து வட மொழி தொடர்ந்து ஊடுருவிக் கொண்டேயிருந்தது. இதனாற் சொந்த மொழியில் இசை வளர்ச்சி என்பது சிதைந்து கொண்டே போனது. அவ்வப் பொழுது அந்தந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் நாட்டின் ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காலங்களில் சொந்த மொழியில் இசையின் வளர்ச்சிக்குப் பங்காற்றினாலும் ஒரு முழு வளர்ச்சி என்பது எட்டப்பட முடியாமலேயே இருந்தது.
இந்த ஆட்சிச் சுழலிற் சிக்கியிருந்த தமிழ் அரசுகள் வீழ்வதும் எழுவதுமாக இருந்து வந்தன. எழுந்திருந்த காலங்களில் மதத்தையே ஊடகமாக வைத்துச் சைவத் திருமுறைகளும் வைணவ ஆழ்வார் பாடல்களும் வேறு பல ஆக்கங்களும் தமிழில் இசையோடு அறிமுகமாயின. ஆனாலும் தமிழரசுகள் வீழ்ந்த நேரத்தில் சைவத் திருமுறைகள் அமுக்கப் பட்டதும் பின்னர் ஒரு தடவை அவை குற்றுயிருங் குறையுயிருமாக வெளிக் கொணரப் பட்டதும் நாமெல்லாம் அறிந்ததே.
தமிழ் மண்ணைப் பொறுத்த வரை, இந்தச் சுழற்சிகளின் இறுதிக் கட்டமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோழராட்சி முடிவுக்கு வந்த பின் தமிழ் நாடுகளின் ஆட்சிகள் பெரும் பாலும் அன்னிய மொழி மன்னர்களின் கைகளிலேயே இருந்து வந்தன. சோழராட்சிக்குப் பிறகு வட இந்தியரும், இசுலாமியரும், தெலுங்கு மற்றும் கன்னட மன்னர்களும் தமிழ் நாட்டைப் பல ஆண்டுகளாக ஆண்டு வந்தனர். இந்தக் காலத்தில் தமிழ் நாட்டின் இசையிலிருந்து தமிழ் மிகவும் பலமாகத் தள்ளப்பட்டு வடமொழியும் தெலுங்கும் இசையின் அடிப்படை என்ற நிலைக்கு வந்து கர்னாடக சங்கீதம் என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கான பொதுவான இசையாக நிலை பெற்று விட்டது. தெலுங்குக் கீர்த்தனைகளின் தந்தையென்று விழங்கும் தியாகராச சுவாமிகளும் தெலுங்கு மன்னராட்சியின் போதே தமிழகத்திலிருந்து கொண்டே அந்தக் கீர்த்தனைகளை உருவாக்கி கர்நாடக இசையில் தெலுங்குக்கு ஒரு மிக முக்கிய, நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுத்தார்.
இப்படியாகத் தமிழர் இசையிலிருந்து தமிழ் கழற்றி விடப்பட்டுத் தமிழ்ப் பாடல்களில்லாத கர்நாடக இசையென்ற ஒரு இசையைத் தென்னிந்தியர் அனைவருக்கும் பொதுவான இசை என்ற ஒரு நிலைப்பாட்டைத் தமிழரல்லாத மன்னர்கள் தமிழரிடம் திணித்து விட்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் இசை ஆர்வமுள்ள தமிழரும் கர்நாடக சங்கீதத்தைப் பயின்று பாண்டித்தியமும் பெற்று அதையே மற்றவர்களுக்கும் கற்பித்துக் கர்நாடக சங்கீதத்தை தமிழரின் சங்கீதமாகத் தொடரச் செய்யப் பெரும் பங்கு செலுத்தினார்கள். தவிரவும், இந்த இசைப் பாடல்கள் முழுக்க முழுக்க மத வழிபாட்டுப் பாடல்களாக இருந்த காரணத்தால் அப் பாடல்களுக்கு ஒரு உயர்ந்த புனிதமான இடமும் இலகுவாகக் கிடைத்தது. இந்தப் புனிதப் பட்டமும் சங்கீதம் பயின்ற எல்லோருக்கும் ஊட்டப்பட்டு வந்தமையால் இப்பாடல்களை எதிர்க்கவோ அன்றித் தவிர்த்து மத சார்பற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடவோ அல்லது பயிலவோ யாருக்கும் துணிவு வரவில்லை. பக்தி என்ற பலவீனத்தால் கட்டுண்டு கிடந்த வெகுளிப் பாமர மக்கள் தமிழில் பாடுவதைக் கடவுளுக்கு எதிரான செய்கையென்று எண்ணி அதைப்பற்றிச் சிந்திக்கவே மாட்டார்களே. நாளும் பொழுதும் நாவிலும் காதிலும் விழும் கர்நாடக சங்கீதம் இசை வல்லுனர்களையும் அவர்களைச் சூழ இருந்த இசை இரசிகர்களையும் வசப்படுத்துவது தொடர்ந்து கொண்டே வந்தது.
பக்தியைப் பயன் படுத்தி அல்லது பக்தியால் பயப்படுத்திப் புகுத்தி விட்ட சங்கீதத்தில் இன்னொன்றையும் சேர்த்துக் குழப்பியிருந்தார்கள் ஆதியில் தமிழைத் தள்ளி வைத்த விற்பன்னர்கள். தமிழ் மொழியில் இருக்கும் கடின ஒலிகளும், தமிழ் மொழியில் கிடைக்காத சில ஒலிகளும் தமிழில் இசையை இனிமையாக இசைக்க முடியாமல் செய்யும் பெருந் தடைக் கற்கள் என்ற நச்சுக் கருத்தையும் பரப்பி மக்களை நம்ப வைத்து வந்தனர். இந்தப் பரப்புரை இன்றும் தொடர்வதை நாங்கள் கண் கூடாகக் காண்கிறோம். இந்த அப்பட்டமான பிழையான வாதத்தை இன்னமும் எம் மக்கள் செவி மடுக்கிறார்கள் என்பது ஒரு வேதனையான உண்மை. இந்த அபத்தத்திற்காக, இனிமையும் மொழியும் பற்றிய விளக்கம் முதலில் விளக்கப்பட்டு விட்டது.
இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் பார்க்க வேண்டும். கர்நாடக சங்கீதத்தை வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு புறமிருக்க நாடகங்கள் மூலமும் கிராமிய இசை மூலமும் தமிழரிசை மறு புறத்தில் தானாகவே வளர்ந்து கொண்டிருந்தது. நாடகங்கள் பாட்டுகளால் பாடி நடிக்கப் பட்டுக்கொண்டிருந்த நாள் முதலாகத் தமிழரிசையும் தமிழ் நாடகங்களுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது. பின்னர் இது திரைப்படத் துறைக்குட் புகுந்து திரையிசையாக மிளிர்ந்த போது தமிழின் இனிமை தனித்துத் தெரிந்தது. ஆக திரைப் படப் பாடல்களால் தமிழரிசை இப்பொழுது தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பது எமக்குப் பெருமையே.
சோழராட்சிக்குப் பிறகு அதிகாரம் மிக்க அரசாக தமிழரசுகள் இன்று வரை தலை நிமிர்த்தவில்லை. சிற்றரசுகள் ஆங்காங்கே இருந்தாலும் பெரிதாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதாக ஒன்றும் இருக்கவில்லை. அதனால் அதிகாரத்தினாற் கூடத் தமிழைத் தமிழரின் இசையில் முதன்மைப்படுத்த முடியவில்லை. இருந்தும் பாபநாசம் சிவன் போன்ற இசை அறிஞர்களின் முயற்சியால் தமிழ்ப் பாடல்கள் தோன்றினாலும் அப் பாடல்களுக்கு முறையான மரியாதை தமிழ்ப் பாடல் என்ற காரனத்தால் மறுக்கப் பட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றது.
அண்மைக் காலங்களாக அவ்வப்போது தோன்றும் புரட்சிகரச் சிந்தனையாளர்களினாலும் மொழிப் பற்றுள்ளவர்களின் அயராத முயற்சியிகளாலும் ஒன்றிரண்டு தமிழ்ப் பாடல்கள் இப்பொழுது மேடைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இருந்தும் நமது தாய் மொழியில் பாடுவதும் பயில்வதுமே நமக்கு அவசியம் என்ற நோக்கத்துடன் தமிழ் இசைக் கலைஞர்கள் முழுமூச்சாக முயன்றால் இசைத் தமிழை மெருகூட்டி வளர்த்து நம் எதிர்காலச் சந்ததிக்கு அளிக்க முடியும். தமிழர் மத்தியில் இருக்கும் எண்ணற்ற இசைக் கலைஞர்களும் கவிஞர்களும் இதை உணர்வு பூர்வமாகச் சிந்தித்துச் செயற்படுத்த வேண்டும்.
தமிழர்கள் எப்பொழுதும் ஒரு மதசார்பற்ற நிலையிலிருந்து வழுவாமல் தங்கள் கலையை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே தமிழில் இசையைச் செப்பனிடும் பணியில் பாடலியற்றுவோர்கள் மத சார்பற்ற பாடல்களை இயற்ற வேண்டும். முன்னர் தோன்றிய தமிழ்ப் பாடல்கள் கூட மத சார்பான பாடல்களாக இருப்பது தமிழிலிசை வளர்ச்சிக்குத் துணை செய்வதாக இல்லை. மதத்தைத் தவிர்த்து ஏனைய விடயங்களை மையமாக வைத்துக் கொண்டு பாடல்களை ஆக்கித் தமிழில் பாடல்களை நிறைய உருவாக்க வேண்டும். பல மதத்தைச் சேர்ந்த எல்லாத் தமிழர்களும் இசையைத் தமிழில் முழு மனதோடு பயில நம் புதுத் தமிழிசை உகந்ததாக இருக்க வேண்டும். இசையை முறையாகக் கற்கத் தொடங்குவோருக்கு இசைச் சுர வரிசைகளில் வைத்துப் பாடுவதற்கு தமிழ்ப் பாடல்களையே தமிழர் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். சங்கீதத்தை ஒரு பாடமாகக் கற்கும் போது அது முழுக்க முழுக்கத் தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். பயிலுவோர் பழகும் பாட்டுகளின் பொருளுணர்ந்து கற்க வேண்டும்.
அண்மைக் காலங்களில் பல இசைக் கலைஞர்கள் தமிழில் ஏராளமான பாடல்களைப் பாடி வருகிறார்கள்.இதனால் எமது பாரம்பரிய இசை வடிவங்களில் தமிழ்ப் பாடல்களைப் பாடக் கூடிய நிலையொன்று வந்து கொண்டிருக்கின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் தாய் மொழியில் அப் பிள்ளைகள் முழுக்க முழுக்கக் கற்பதற்கு உதவி செய்ய வேண்டும். முன்னரே குறிப்பிட்டிருப்பது போல, தமிழர் மத்தியில் இன்றைய நாளில் இருக்கும் எண்ணிலடங்காத் தமிழ்க் கலைஞர்கள் இதற்காகத் தங்கள் திறமையைப் உபயோகித்துத் தமிழர் தமிழில் இசை கற்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
இசையால் வசமாகா இதயமெது?
தமிழிசையால் வசமாகா இதயமெது, எது, எது?
வாழ்க தமிழரிசை.
Saturday, January 17, 2009
வாழ்க திருமா
நீதி கேட்டு முழங்குகின்றாய் திருமா
முரசு கொட்டி வாழ்த்துகின்றோம் திருமா
தொல் காப்பியனே தந்தையான திருமா
நல் காப்பியமே உந்தனது நோன்பு
உன் நோன்பு வெல்ல வேண்டும்
உன் உறுதி ஓங்க வேண்டும்
உன் போலத் தலைவன் வேண்டும்
தமிழ் வாழ நீ வேண்டும்
கல்லில் கூட நார் உரிக்கலாம்
மணலில் கூட நார் திரிக்கலாம்
கண்ணை மூடிக் கட்டியோர் முன்
உன்னை நீயும் மாய்க்கலாமோ
பலபேரை வாழவைத்த இந்தியா
தமிழோரை வீழவைப்ப துத்தியா
பிராந்தியத் தலையே இது நீதியா
தலை கால் புரியாத போதையா
அகிம்சைக்கு ஆணிவேரே காந்தியார்
ஆணிவேர் பாய்ந்தவூரே இந்தியா
ஆணிவேர் ஆடியே போகுமா
காந்தியே ஆடியே போவாரா
நீடூழி நீ வாழ்க திருமாவளவா
தமிழ் வாழ நீ வாழ்க அருமைவளவா
உன் சேயை மதித்திடு இந்தியா
உன் மதிப்பைக் காத்திடு இந்தியா
Tuesday, December 16, 2008
பாகுபாடு
பிறப்போடு தொடங்குது இந்தப் பாகுபாடு
பிறந்தது பெண்ணா ஆணா என்று பாரு
பிள்ளை வளர்ப்போடு தொடருது இந்தப் பாகுபாடு
கடைக் குட்டிக்கு எப்பவும் செல்லச் சீரு
பள்ளிப் படிப்போடும் படருது இந்தப் பாகுபாடு
சட்டம்பி செல்வாக்கால் கிடைக்குது ஏத்தம் பாரு
இளமைத் துடிப்போடும் இணைந்திடுமே பாகுபாடு
காதலின் மறு பக்கம் சாதி என்ன என்று பாரு
நல்ல நட்போடும் பகையோடும் பாகுபாடு
சண்டையுஞ் சபையுங் கூடப் பார்க்குஞ் சாதி
வேலைக்குப் போனாலும் பாகுபாடு
பலவடிவில் பார்க்கலாம் வந்து பாரு
இந்த ஊரோ அந்தக் குறிச்சியோ
இன்னாற்றை சொந்தமோ
மறைமுகமாச் சாதி பார்ப்பு
வடக்கோ கிழக்கோ கொஞ்சம் மேலேறித்
தமிழோ சிங்களமோ சைவமோ வேதமோ
பாகுபாட்டு வேதமோ
இதையெல்லாந் தாண்டி வெளிநாடு வந்தாலும்
விதவிதமாத் துரத்துது இந்தப் பாகுபாடு
வந்தவைக்குள் பாகுபாடு அகதியாக வந்ததோ
முறையாக வந்ததோ முறைப்போடு திரும்பினால்
கறுப்போ வெள்ளையோ
வந்த நாட்டார் மத்தியில்
நாம் கறுப்போ வெள்ளையோ
ஊரிலை பார்த்தோமே
சிவலையோ கறுவலோ
அதையுந் தாண்டிப் பாகுபாடு
வெள்ளையோ இல்லையோ
திருப்பி முகத்தி லறையும் பாகுபாடு
பிறப்போடு தொடங்கி
நேற்று வரை தொடர்ந்தோமே
ஈனப் பாகுபாடு
பார்த்தது நாமேயென்ற
கண நேர உறைப்பு
இருந்தாலும் விடுவதில்லை
பார்த்து வந்த பாகுபாடு
மனிதா நீ விட்டுவிடு பாகுபாடு
வெட்கக்கேடு துக்கக்கோடு பாகுபாடு
வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருங் கேடு
உடைத்து நொருக்கி விடு பாகுபாடு
சதி என்ற அடுப்பில்
சமைத்ததுவே சாதி
சம்பாதித்து வந்ததல்ல
சாதியும் மொழியும்
இனமும் நிறமும்
அதனால்
விட்டுவிடு பாகுபாடு இன்றே நீ
பெற்று விடும் பேரெழுச்சி உன் நாடு
Sunday, November 30, 2008
குறையொன்றுமில்லை - ஒளி நாடா ஏ.வி. ரமணன்
கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன்.
சப்த சுவரங்கள் நிகழ்ச்சியில் திரு. ஏ. வி. ரமணன் மூலம் அறிமுகமான குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக கண்ணா என்ற பாடலைப் பற்றிய அனுபவத்தைப் பற்றி இங்கே முன்னர் எழுதியிருந்தேன். அந்த ஒளி நாடாவைக் கண்டு பிடித்து அதை இங்கே வலையேற்றுகிறேன். கண்டு களியுங்கள்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
Wednesday, November 19, 2008
இசை - மொழி – தமிழ் :: பகுதி 6 (கடைசி) – தமிழிலிசை
பக்தியைப் பயன் படுத்தி அல்லது பக்தியால் பயப்படுத்திப் புகுத்தி விட்ட சங்கீதத்தில் இன்னொன்றையும் சேர்த்துக் குழப்பியிருந்தார்கள் ஆதியில் தமிழைத் தள்ளி வைத்த விற்பன்னர்கள். தமிழ் மொழியில் இருக்கும் கடின ஒலிகளும், தமிழ் மொழியில் கிடைக்காத சில ஒலிகளும் தமிழில் இசையை இனிமையாக இசைக்க முடியாமல் செய்யும் பெருந் தடைக் கற்கள் என்ற நச்சுக் கருத்தையும் பரப்பி மக்களை நம்ப வைத்து வந்தனர். இந்தப் பரப்புரை இன்றும் தொடர்வதை நாங்கள் கண் கூடாகக் காண்கிறோம். இந்த அப்பட்டமான பிழையான வாதத்தை இன்னமும் எம் மக்கள் செவி மடுக்கிறார்கள் என்பது ஒரு வேதனையான உண்மை. இந்த அபத்தத்திற்காக, இனிமையும் மொழியும் பற்றிய விளக்கம் முதலில் இனிமை என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டு விட்டது.
இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் பார்க்க வேண்டும். கர்நாடக சங்கீதத்தை வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு புறமிருக்க நாடகங்கள் மூலமும் கிராமிய இசை மூலமும் தமிழரிசை மறு புறத்தில் தானாகவே வளர்ந்து கொண்டிருந்தது. நாடகங்கள் பாட்டுகளால் பாடி நடிக்கப் பட்டுக்கொண்டிருந்த நாள் முதலாகத் தமிழரிசையும் தமிழ் நாடகங்களுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது. பின்னர் இது திரைப்படத் துறைக்குட் புகுந்து திரையிசையாக மிளிர்ந்த போது தமிழின் இனிமை தனித்துத் தெரிந்தது. ஆக திரைப் படப் பாடல்களால் தமிழரிசை இப்பொழுது தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பது எமக்குப் பெருமையே.
சோழராட்சிக்குப் பிறகு அதிகாரம் மிக்க அரசாக தமிழரசுகள் இன்று வரை தலை நிமிர்த்தவில்லை. சிற்றரசுகள் ஆங்காங்கே இருந்தாலும் பெரிதாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதாக ஒன்றும் இருக்கவில்லை. அதனால் அதிகாரத்தினாற் கூடத் தமிழைத் தமிழரின் இசையில் முதன்மைப்படுத்த முடியவில்லை. இருந்தும் பாபநாசம் சிவன் போன்ற இசை அறிஞர்களின் முயற்சியால் தமிழ்ப் பாடல்கள் தோன்றினாலும் அப் பாடல்களுக்கு முறையான மரியாதை தமிழ்ப் பாடல் என்ற காரனத்தால் மறுக்கப் பட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றது.
அண்மைக் காலங்களாக அவ்வப்போது தோன்றும் புரட்சிகரச் சிந்தனையாளர்களினாலும் மொழிப் பற்றுள்ளவர்களின் அயராத முயற்சியிகளாலும் ஒன்றிரண்டு தமிழ்ப் பாடல்கள் இப்பொழுது மேடைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இருந்தும் நமது தாய் மொழியில் பாடுவதும் பயில்வதுமே நமக்கு அவசியம் என்ற நோக்கத்துடன் தமிழ் இசைக் கலைஞர்கள் முழுமூச்சாக முயன்றால் இசைத் தமிழை மெருகூட்டி வளர்த்து நம் எதிர்காலச் சந்ததிக்கு அளிக்க முடியும். தமிழர் மத்தியில் இருக்கும் எண்ணற்ற இசைக் கலைஞர்களும் கவிஞர்களும் இதை உணர்வு பூர்வமாகச் சிந்தித்துச் செயற்படுத்த வேண்டும்.
தமிழர்கள் எப்பொழுதும் ஒரு மதசார்பற்ற நிலையிலிருந்து வழுவாமல் தங்கள் கலையை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே தமிழில் இசையைச் செப்பனிடும் பணியில் பாடலியற்றுவோர்கள் மத சார்பற்ற பாடல்களை இயற்ற வேண்டும். முன்னர் தோன்றிய தமிழ்ப் பாடல்கள் கூட மத சார்பான பாடல்களாக இருப்பது தமிழிலிசை வளர்ச்சிக்குத் துணை செய்வதாக இல்லை. மதத்தைத் தவிர்த்து ஏனைய விடயங்களை மையமாக வைத்துக் கொண்டு பாடல்களை ஆக்கித் தமிழில் பாடல்களை நிறைய உருவாக்க வேண்டும். பல மதத்தைச் சேர்ந்த எல்லாத் தமிழர்களும் இசையைத் தமிழில் முழு மனதோடு பயில நம் புதுத் தமிழிசை உகந்ததாக இருக்க வேண்டும்.
ஆனாலும் இசையை முறையாகக் கற்கத் தொடங்குவோருக்கு இசைச் சுர வரிசைகளில் வைத்துப் பாடுவதற்கு தமிழ்ப் பாடல்களையே தமிழர் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். சங்கீதத்தை ஒரு பாடமாகக் கற்கும் போது அது முழுக்க முழுக்கத் தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். பயிலுவோர் பழகும் பாட்டுகளின் பொருளுணர்ந்து கற்க வேண்டும்.
அண்மைக் காலங்களில் பல இசைக் கலைஞர்கள் தமிழில் ஏராளமான பாடல்களைப் பாடி வருகிறார்கள்.இதனால் எமது பாரம்பரிய இசை வடிவங்களில் தமிழ்ப் பாடல்களைப் பாடக் கூடிய நிலையொன்று வந்து கொண்டிருக்கின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் தாய் மொழியில் அப் பிள்ளைகள் முழுக்க முழுக்கக் கற்பதற்கு உதவி செய்ய வேண்டும். முன்னரே குறிப்பிட்டிருப்பது போல, தமிழர் மத்தியில் இன்றைய நாளில் இருக்கும் எண்ணிலடங்காத் தமிழ்க் கலைஞர்கள் இதற்காகத் தங்கள் திறமையைப் உபயோகித்துத் தமிழர் தமிழில் இசை கற்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
இசையால் வசமாகா இதயமெது?
தமிழிசையால் வசமாகா இதயமெது, எது, எது?
வாழ்க தமிழரிசை.
இத்துடன் இத்தொடர் முடிவுக்கு வருகிறது. உங்கள் கருத்துகளைப் பதிவு செய்வீர்களானால் இக் கட்டுரையில் இருக்கும் தவறுகளைத் திருத்த உதவியாக இருக்கும்.
நன்றி, வணக்கம்.
ஜெயபால்
Monday, November 17, 2008
இசை - மொழி – தமிழ் :: பகுதி 5 – கர்னாடக இசை
தமிழ் மண்ணைப் பொறுத்த வரை, இந்தச் சுழற்சிகளின் இறுதிக் கட்டமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோழராட்சி முடிவுக்கு வந்த பின் தமிழ் நாடுகளின் ஆட்சிகள் பெரும் பாலும் அன்னிய மொழி மன்னர்களின் கைகளிலேயே இருந்து வந்தன. சோழராட்சிக்குப் பிறகு வட இந்தியரும், இசுலாமியரும், தெலுங்கு மற்றும் கன்னட மன்னர்களும் தமிழ் நாட்டைப் பல ஆண்டுகளாக ஆண்டு வந்தனர். இந்தக் காலத்தில் தமிழ் நாட்டின் இசையிலிருந்து தமிழ் மிகவும் பலமாகத் தள்ளப்பட்டு வடமொழியும் தெலுங்கும் இசையின் அடிப்படை என்ற நிலைக்கு வந்து கர்னாடக சங்கீதம் என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கான பொதுவான இசையாக நிலை பெற்று விட்டது. தெலுங்குக் கீர்த்தனைகளின் தந்தையென்று விழங்கும் தியாகராச சுவாமிகளும் தெலுங்கு மன்னராட்சியின் போதே தமிழகத்திலிருந்து கொண்டே அந்தக் கீர்த்தனைகளை உருவாக்கி கர்நாடக இசையில் தெலுங்குக்கு ஒரு மிக முக்கிய, நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுத்தார்.
இப்படியாகத் தமிழர் இசையிலிருந்து தமிழ் கழற்றி விடப்பட்டுத் தமிழ்ப் பாடல்களில்லாத கர்நாடக இசையென்ற ஒரு இசையைத் தென்னிந்தியர் அனைவருக்கும் பொதுவான இசை என்ற ஒரு நிலைப்பாட்டைத் தமிழரல்லாத மன்னர்கள் தமிழரிடம் திணித்து விட்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் இசை ஆர்வமுள்ள தமிழரும் கர்நாடக சங்கீதத்தைப் பயின்று பாண்டித்தியமும் பெற்று அதையே மற்றவர்களுக்கும் கற்பித்துக் கர்நாடக சங்கீதத்தை தமிழரின் சங்கீதமாகத் தொடரச் செய்யப் பெரும் பங்கு செலுத்தினார்கள். தவிரவும், இந்த இசைப் பாடல்கள் முழுக்க முழுக்க மத வழிபாட்டுப் பாடல்களாக இருந்த காரணத்தால் அப் பாடல்களுக்கு ஒரு உயர்ந்த புனிதமான இடமும் இலகுவாகக் கிடைத்தது. இந்தப் புனிதப் பட்டமும் சங்கீதம் பயின்ற எல்லோருக்கும் ஊட்டப்பட்டு வந்தமையால் இப்பாடல்களை எதிர்க்கவோ அன்றித் தவிர்த்து மத சார்பற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடவோ அல்லது பயிலவோ யாருக்கும் துணிவு வரவில்லை. பக்தி என்ற பலவீனத்தால் கட்டுண்டு கிடந்த வெகுளிப் பாமர மக்கள் தமிழில் பாடுவதைக் கடவுளுக்கு எதிரான செய்கையென்று எண்ணி அதைப்பற்றிச் சிந்திக்கவே மாட்டார்களே. நாளும் பொழுதும் நாவிலும் காதிலும் விழும் கர்நாடக சங்கீதம் இசை வல்லுனர்களையும் அவர்களைச் சூழ இருந்த இசை இரசிகர்களையும் வசப்படுத்துவது தொடர்ந்து கொண்டே வந்தது.
Sunday, November 09, 2008
இசை - மொழி – தமிழ் :: பகுதி 4 – பிற மொழி ஊடுருவல்
இப்பொழுது, தென்னிந்திய இசையாகப் பலர் படிப்பதும் பயிற்சி எடுத்துக் கொள்வதுமான கர்நாடக இசையைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இந்தக் கர்நாடக இசையில் வடமொழியிலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட பாட்டுகள்
மட்டுமே முக்கிய இடம் வகிக்கின்றன. தென்னிந்திய மற்ற மொழிகளை விட தெலுங்கும் வடமொழியும் முதன்மைப் படுத்தப் பட்டிருக்கும் காரணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.
இந்திய வரலாற்றை அறிந்தவர்களுக்கு அந்த வரலாற்றில் வட மொழியின் தாக்கமும் ஆதிக்கமும் வேதங்கள், புராணங்களூடாக வலுப்பெற்றிருப்பதைக் காண முடிந்திருக்கும். வடமொழி மக்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பரந்து வாழ நேர்ந்த காலங்களில், வட மொழியின் தாக்கமும் விரிந்து பரவத் தொடங்கியது. பரந்து கிடந்த பிராந்திய மொழிகளிலும் அம் மொழியினரின் இசை வடிவிலும் வட மொழி கொஞ்சங் கொஞ்சமாகக் கலக்கத் தொடங்கியது. அந்தக் காலத்தின் குருகுலக் கல்வி முறை, வடமொழிப் பாவனையை ஆதரித்துக் காத்த மன்னராட்சி முறை என்பன வடமொழியின் தாக்கம் தடையின்றிப் புகுந்து விளையாட உதவியாக இருந்தன. உள்ளூர் மக்களின் அறியாமையாலும், மன்னர்களின் பொறுப்பற்ற சில செயற்பாடுகளாலும் கலை, கல்வி போன்றவற்றில் முன்னிலையைத் தக்க வைத்த வடமொழியாளர்கள் தம் மொழியின் ஆதிக்கத்தை உறுதியாகவும் வேகமாகவும் உள்ளூரில் வளர்த்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் தம் மொழியின் இருப்பை விரும்பி உள்ளூர் மொழி வளர்ச்சியையும் அதிலிருந்த கலை வடிவங்களையும் தலையெடுக்காமலும் பார்த்துக் கொண்டார்கள். இந்தக் கைங்கரியத்தில் அவர்களுக்குப் பெரிய உதவியாக விளங்கியது அக்கால மக்களின் மதம் பற்றிய நம்பிக்கைகள். இந்த மத நம்பிக்கையையே அடி நாதமாகக் கொண்டது வட மொழியும் அதன் பாடல்களும். இதனால், வடமொழியும் அது சார்ந்த இசைவடிவும் மிக இலகுவில் மதப் பலவீனர்களாக இருந்த பாமரப் பிராந்திய மக்களிடையே திணிக்கப் படக்கூடியனவாக இருந்தன.
மன்னராட்சி நடந்து கொண்டிருந்த கால கட்டங்களில், எல்லா நாடுகளுமே அடிக்கடி வேறு வேறு நாட்டு மன்னர்களின் ஆட்சியின் கீழ் வருவதும் மாறுவதுமாக இருந்தன. இப்படியாக மாறி வரும் மன்னர்கள் தத்தம் மொழியின் பால் ஆதரவாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இவ்வாறாக ஒரு மொழியின் மேல் இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவது இயல்பாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவற்றில் அகப்படாமல் எம்மொழி வந்தாலும் அதற்கெல்லாம் ஈடு கொடுத்து மன்னர்களினதும் மக்களினதும் மத நம்பிக்கையை ஊடகமாக வைத்து வட மொழி தொடர்ந்து ஊடுருவிக் கொண்டேயிருந்தது. இதனாற் சொந்த மொழியில் இசை வளர்ச்சி என்பது சிதைந்து கொண்டே போனது. அவ்வப் பொழுது அந்தந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் நாட்டின் ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காலங்களில் சொந்த மொழியில் இசையின் வளர்ச்சிக்குப் பங்காற்றினாலும் ஒரு முழு வளர்ச்சி என்பது எட்டப்பட முடியாமலேயே இருந்தது.
இந்த ஆட்சிச் சுழலிற் சிக்கியிருந்த தமிழ் அரசுகள் வீழ்வதும் எழுவதுமாக இருந்து வந்தன. எழுந்திருந்த காலங்களில் மதத்தையே ஊடகமாக வைத்துச் சைவத் திருமுறைகளும் வைணவ ஆழ்வார் பாடல்களும் வேறு பல ஆக்கங்களும் தமிழில் இசையோடு அறிமுகமாயின. ஆனாலும் தமிழரசுகள் வீழ்ந்த நேரத்தில் சைவத் திருமுறைகள் அமுக்கப் பட்டதும் பின்னர் ஒரு தடவை அவை குற்றுயிருங் குறையுயிருமாக வெளிக் கொணரப் பட்டதும் நாமெல்லாம் அறிந்ததே.
Saturday, November 08, 2008
இசை-மொழி–தமிழ் :: பகுதி 3 - இனிமை
ஒருவரது தாய் மொழியல்லாத மொழியில் இருக்கும் எப்பேர்ப்பட்ட இனிமையான பாட்டும் அவரது தாய் மொழியில் இருக்கும் ஒரு சாதாரணப் பாட்டை விட அவருக்கு இனிமையாக இருக்க முடியாது. ஏனென்றால் அந்தப் பிற மொழிப் பாடலில் அவருள்ளே புகுந்து கொள்வது அப் பாடலின் இனிமையின் ஒரு பகுதியான இசை மட்டுமே. அப் பாடலின் மொழியில் கலந்திருக்கும் கவிச் சுவை அவரைச் சென்றடைவதில்லை. அதனால் அப் பாடலின் முழு இனிமையும் அவருக்குக் கிடைக்காது என்பது வெளிப்படையே.
அந்தப் பாடலின் இசையின் இனிமை அவரைச் சேர்வதற்குக் கூட ஒரு காரணம் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்திய உப கண்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்திய மொழிகளின் அனேகமான எல்லாப் பாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஓசை அடிப்படையிலிருந்து இசைக்கின்றன. ஆகவே, எந்த ஒரு இந்தியப் பாடலின் இசை வடிவமும் எந்த ஒரு இந்தியருக்கும் கேட்கக் கூடியதாக இருப்பது இயற்கையே. இந்த அடிப்படை இசை இந்தியப் பாடல்களிலும், மத்திய கிழக்குப் பகுதிப் பாடல்களிலும் இருப்பதை நாம் காணலாம். அதனால் மத்திய கிழக்குப் பகுதி மக்களின் இசை கூட நமக்குள் தாக்கம் ஏற்படுத்துவது இலகுவே. இதன் அனுபவம் பலருக்கு ஏற்படடிருக்கலாம். ஒரு அன்னிய நாட்டில் தனித்து வசித்த பலர், அரேபிய மொழிப் பாடல்களைக் கேட்கக் கிடைத்திருந்தால் அது ஒரு தனி அனுபவம். இதுவே ஒரு சீன மொழிப் பாடலாக இருந்திருந்தால் அதனால் ஒரு தாக்கத்தை எற்படுத்தியிருக்க முடியாது. இன்னும் அரேபியா - இந்தியா என்பவற்றின் தொடர்பு, வரலாறு சார்ந்த ஒரு துறை. அதை விட்டு விட்டு நம் இசைப் பார்வைக்குத் திரும்புவோம்.